வியாழன், பிப்ரவரி 28, 2013

ஜெ வின் தேர்தல் முகமும் தந்திரங்களும்.



விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கு தடைப்போட அதில் நடந்த ‘யுத்தத்தில்’ தான் இஸ்லாமியர்களின் நண்பன் என காட்டிக்கொண்டார்.

யுத்தம் என ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், பிரபாகரன் தீவிரவாதி, தமிழீழம் என பேசுவது தவறு என வர்ணித்த ஜெ இன்று தமிழீழத்துக்கு ஆதரவாகவும், படுகொலை செய்யப்பட்ட பிரபாகனின் இளைய மகனுக்காக மனம் நொந்தேன் என அறிக்கை விடுகிறார்.

காவிரி நிதிநீர் ஆணைய தீர்ப்பை அரசிதழில் வெளிவந்ததும் தன்னால் மட்டும்மே அது நடைபெற்றது என விளம்பரப்படுத்திக்கொண்டு வருகிறார். 31 மாவட்ட விவசாயிகளுக்கு நஸ்டயீடு அறிவித்துள்ளார்.

தரம் தாழ்ந்து ஜெவை ஆதரித்த வை.கோ வை சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து துரத்தினார். அதே ஜெயலலிதா, மது ஒழிப்புக்காக வை.கோ நடைப்பயணம் வருவதை கண்டு தன் வாகனத்தை நிறுத்தி இறங்கி நலம் விசாரித்தார்.

விலைவாசி உயர்வால் தமிழகம் முழுவதும்மே பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். விலைவாசியை குறைத்தால் எல்லா தரப்பு மக்களும்மே பயன்பெறுவார்கள். ஆனால் அப்படி செய்யாமல் குறைந்த விலை சாப்பாடு போட்டு அடிதட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் அமெரிக்க கம்பெனிகளை அனுமதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரிகிளிண்டனுடனுக்கு வாக்குறுதி தந்தார் ஜெ. வணிகர்கள் பிரச்சனை பெருசானதும் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக காட்ட சென்னையில் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியதாக அதிகாரிகள் மூலம் தடை போட்டுள்ளார்.இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதுயெல்லாம் தன்னை சேவகியாக நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறார் முதல்வராக உள்ள ஜெ.

அதேபோல் ஆட்சியின் குறைகளாக சுட்டிக்காட்டுப்படும் 18 மணி நேர மின்சார வெட்டு, விலைவாசி உயர்வு, அமைச்சர்கள் செய்யும் ஊழல் என எதைப்பற்றி எழுதினாலும், எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை வெளியிட்டாலும் வழக்கு போட்டு சம்மந்தப்பட்ட செய்தித்தாள், மீடியா நிர்வாகத்தை மிரட்ட தொடங்கியுள்ளார். குறைகளை சுட்டிக்காட்ட கூடாது என்பதே இதன் நோக்கம்.

இதற்கெல்லாம் காரணம் ?. 2014 பாராளமன்ற தேர்தல். 

தமிழகத்தில் உள்ள 39 தொகுதி, பாண்டிச்சேரியில் உள்ள  1 தொகுதி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என எண்ணுகிறார். அதற்காக என்னன்ன செய்ய வேண்டும்மோ அதனையெல்லாம் செய்ய நினைக்கிறார். தன் பிடிவாத குணத்தை விட்டு இறங்கி வருகிறார், அவரின் ‘கொள்கைகளை’ மாற்றிக்கொள்கிறார். அவர் எதிரியாக நினைக்கும் அரசு ஊழியர்களுடன் கை குலுக்குகிறார். வலிமையான கூட்டணி அமைக்க முயல்கிறார்.

நாற்பதுக்கும் நாற்பது பெற்றால் பிரதமராகி விடுவாரா ?, பிரதமராகத்தான் ஜெ இதனை செய்கிறாறா ? என கேட்டால் இல்லை என ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.

பின் எதற்காக ?. 

ஜெ தன்னை பாப்பாத்தி என தன்னை பிரகடனப்படுத்தியவராக இருந்தாலும் வடஇந்திய அரசியலில் ஜெ வால் ஜொலிக்க முடியாது. காரணம் அவர் தென்னிந்தியர், தேசிய அரசியலுக்கான தகுதியுடைய தலைவி கிடையாது, யாராலும் சுலபமாக சந்திக்க முடியாத, அவசர கோலத்தில் முடிவு எடுக்கும் விவேகி. தன்னால் பிரதமராக முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

பின் ஏன் அவர் நாற்பதுக்கும் நாற்பது ஆசைப்படுகிறார்?. என் யூகம் சரியாக இருக்கும் என்றால் ஒன்றே ஒன்றுத்தான் அது பெங்களுரூவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு. 91-96 ஆட்சி காலத்தில் ஜெ அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்பதை ஆதாரங்களுடன் 1996ல் திமுக ஆட்சியின் போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு அத்தனை வலிமையாக உள்ளது என்பதை நன்கறிந்துள்ளார் ஜெ. அதனால் தான் அந்த வழக்கை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டு அது எடுபடாமல் போனதால் மத்திய அரசை கவிழ்த்தார். 2001ல் முதல்வாரன பின் எவ்வளவோ முயன்றும் திமுக போட்ட முட்டுக்கட்டைகளால் அவரால் வழக்கை நீர்த்து போக செய்ய முடியவில்லை. அந்த வழக்கு மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதாவை மிரட்டுகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் பலப்பலலலலலலலலலலலலல  வாய்தாக்கள், இழுத்தடிப்புக்கள், நீதிபதிகள் மீது சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் எழுப்புவவது, உச்ச நீதிமன்ற கண்டனங்கள் என வாங்கியும் அசராமல் திரும்ப திரும்ப ‘நீதியின் கதவை உடைக்க உதைக்கிறார்கள்’ ஜெ வின் வழக்கறிஞர்கள். ஆனால் கதவு உடைந்தபாடில்லை. அந்த வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. பாராளமன்ற தேர்தல் வரை வழக்கை இழுத்தடிக்க நினைக்கிறார்.

வரும் பாராளமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. 40க்கும் 40 வென்றால் மைனாரிட்டி பாராளமன்றம் அமையும் போது 40 எம்.பிக்களை வைத்துள்ள தான் மத்திய அரசில் அசைக்க முடியாத சக்தியாக மாற முடியும் அதைக்கொண்டு பிரதமரை தேர்வு செய்யும் நபராக இருந்து சொத்து குவிப்பு வழக்கை முடித்துக்கொள்வது. அப்படியில்லை எனில் தன் சகாவான பி.ஜே.பி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் வெல்லும் எம்.பிக்களை மோடியை ஆதரிக்க வைத்து தன் மீதான வழக்கை ‘நல்லபடியாக’ முடித்துக்கொள்வார். 

அந்த திட்டத்திற்காகத்தான் அவர் எம்.பி தேர்தலில் இத்தனை கவனம் செலுத்துகிறார். இதில் வெல்ல ஜெ எந்த அளவுக்கும் இறங்குவார். முதலில் குறிப்பிட்டதைப்போன்று மக்கள் மனதில் இடம் பிடிக்க முயன்று முடியாமல் போனால் அரசு மீதான அதிருப்தியை போக்கிக்கொள்ள கடைசி கட்ட ஆயுதமாக பூரண மதுவிலக்கு கொண்டு வந்து தாய்மார்கள் வாக்கை பெறவும் முயல்வார்.

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

மாலத்தீவில் நடக்கும் இந்திய சீன அதிகார யுத்தம்.



மாலத்தீவில் தன் அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது இந்தியா. முகமது நசீத். மாலத்தீவின் முன்னால் அதிபர். இந்தியாவின் தீவிர ஆதரவாளர். மாலத்தீவு அதிபர் ஆட்சி முறையை கொண்ட இஸ்லாமிய நாடு. மொத்த மக்கள் தொகையே 3 லட்சத்து 20 ஆயிரம் தான். 1965ல் ஆங்கிலேயரிடம்மிருந்து விடுதலைப்பெற்ற மாலத்தீவு 1968 குடியரசாகி தேர்தல் மூலம் நாடாளமன்றத்தை நடத்தி வருகிறது. மொத்த நாடாள மன்ற உறுப்பினர்கள் 50 பேர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல். 

இப்ராஹீம் நாசீர் மாலத்தீவின் முதல் அதிபர். 1975ல் நாட்டின் பிரதமரான அஹ்மத் சகி அதிபர் இப்ராஹீம் நாசீர்க்கு எதிர்ப்பாக நாட்டில் கிளர்ச்சி செய்ய முயன்றார் என கைது செய்யப்பட்டார். 1978 நசீரின் அமைச்சரவை சகாவான அப்துல் கயூம் அதிபராக்கப்பட்டார். அவர் ஆட்சியில் நாடு படு மோசமானது. சர்வாதிகாரம். ஒரு கட்சி ஆட்சி முறை. எதிர்ப்பவர்கள் அரசப்படைகளால் தண்டிக்கப்படுவது அதாவது கொன்றுவிடுவது. அவர் தொடர்ந்து 30 ஆண்டுகள் அதிபராக இருந்தார். முப்பது ஆண்டில் நாட்டில் திரும்பிய பக்கம்மெல்லாம் ஊழல். இந்த அரசை இந்திய அரசும் ஆதரித்தது. இவரது ஆட்சியை கவிழ்க்க போராளி குழுக்கள் முயன்ற போது இந்திய இராணுவம் போய் தடுத்தது. புரட்சியை ஆதரித்தது இந்தியா என்பது குறிப்பிடதக்கது. 

2006ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. சட்டத்திருத்தம் மூலம் அதுவரை அங்கீகரிக்படாத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கப்பட்டன. 2008ல் தேர்தல் நடைபெற்றது. மலாத்தீவு ஜனநாயக கட்சி வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. வெற்றியும் பெற்றது. முகமது நசீத் அதிபராக பதவியேற்றார். கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட்டது. 

2010 ஜீன் மாதத்தில் திடீரென நசீத்தின் அமைச்சரவை சகாக்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்கள். எதிர்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார்கள். எதிர்கட்சி தலைவர் அப்துல்லா மற்றொரு அரசியல் கட்சி தலைவரான கஸிம் இருவர் எம்.பிக்களுக்கு லஞ்சம் தந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்கள். இதனை உச்சநீதிமன்றம் கண்டித்தது. 

ஜீலையில் ராஜினாமா செய்தவர்களை மீண்டும் அழைத்து அமைச்சராக்கினார் நசீம். இதனை நாடாளமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது. 2011 டிசம்பரில் அதிபருக்கு எதிராக நாட்டில் எதிர்கட்சிகள் போராட்டம் செய்தனர். போராட்டத்துக்கு எதிராக இராணுவம், காவல்துறை களம்மிறங்கியது. போராடியவர்களை கைது செய்தது. இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த மாலத்தீவு நாட்டின் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கைது செய்யச்சொல்லி தன் அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டார். 

இதற்கு கடும் கண்டனம் எழுந்து, நாட்டில் பெரும் போராட்டங்கள் எல்லாம் வெடித்தன. இதனால் 2012 பிப்ரவரி 7ந்தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் நசீத். அதோடு, துப்பாக்கி முனையில் என் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது என அறிவித்தார். இது உலக நாடுகளில் பெரும் பிரச்சனையானது. அடுத்த அதிபராக மொஹபத் வாஹீத் பொறுப்பேற்றுக்கொண்டார். 

தலைமை குற்றவியல் நீதிபதியை கைது செய்வதற்க்கு எதிர்ப்பான வழக்கு மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் நசீத் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது அவர் இந்தியாவின் அதிகார மையங்களை காண வந்ததால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. நாடு திரும்பியபோது அவரை கைது செய்யச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இந்திய தூதரகத்தில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார். 


அவர் குறிப்பாக இந்திய தூதகரத்தில் வந்து அடைக்கலம் கோராவும், இந்தியா அடைக்கலம் தரக்காரணம். சீனா மற்றும் இந்தியாவுக்கான போட்டி இதில் அடங்கியுள்ளது. தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவானது. முந்தைய அதிபரான நசீர் இந்தியாவுக்கு சாதமாக இருந்தார். மலாத்தீவில் உள்ள சர்வதேச விமான நிலைய பராமரிப்பு பணியை இந்தியாவின் ஜி.எம்.ஆர் என்ற நிறுவனம் 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை தன் ஆட்சிக்காலத்தில் அதிபராக இருந்த நசீத் தந்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்தியாவுடான இன்னும் சில ஒப்பந்தங்களை ரத்து செய்ய சீனா ராஜதந்திரிகளின் சொல்லை தற்போதைய மாலத்தீவின் புதிய அரசு முயல்கிறது. இந்திய நிறுவனத்துக்கு தந்த விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்தது புதிய அரசு. இதனை எதிர்த்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை பெற்றுள்ளது அந்நிறுவனம். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அந்த விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தை சீனாவுக்கு தர முடிவு செய்துள்ளது. இது இந்தியாவை கடும் கோபப்படுத்தியுள்ளது. 

இந்தியா – சீனா போட்டியில் தன் ஆதரவாளரை காப்பாற்ற முயல்கிறது இந்தியா. அதில் இந்தியா வெற்றி பெறுமா என்பது போக போகத்தான் தெரியும். 

இத்தாலியில் இருந்து மீண்டும் ஒரு ஊழல் பூகம்பம்.

மாடல் விமானம்.


30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இத்தாலியின் பெயர் இந்தியாவில் ஊழல் விவகாரத்தில் செய்தியாகியுள்ளது. இந்திய அரசு ஜனாதிபதி, பிரதமர், இராணுவ தளபதி என மிக மிக முக்கிய இந்திய அரசின் பிரமுகர்கள் பயணம் செய்ய விமானங்கள் வாங்க முடிவு செய்தது. அதற்கான உலகலாவிய டெண்டர் பாதுகாப்பு பிரிவால் விடப்பட்டது. டெண்டரில் விதிமுறைகளுக்கு உட்பட்டுயிருந்த ரஷ்யா, இத்தாலி, அமெரிக்காவை சேர்ந்த 3 நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில் இத்தாலியின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசும் ஒரு பங்குதாரார். 12 விமானங்களுக்கான மதிப்பு 3546 கோடி. இதில் 10 பர்சன்ட் விமானத்தை வாங்க முடிவு செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளது.

கடந்த 2012 பிப்ரவரி மாதம்மே லஞ்சம் தந்து ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் என இத்தாலிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது. இது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய போது அந்த செய்தி ஆதாரமற்றது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிவித்தது இந்திய அரசு.

இத்தாலிய அரசு மக்களை ஏமாற்ற விரும்பாமல் மூடி மறைக்காமல், பத்திரிக்கை செய்தியின் விரிவான விசாரணை நடத்தியது. அதில் ஒப்பந்தம் பெற 370 கோடி என டீல் பேசப்பட்டுள்ளது. அதில் 200 கோடி தரப்பட்டுவிட்டது என்பதை கண்டறிந்தது. 2013 பிப்ரவரி மாதம் லஞ்சம் தந்ததாக அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் கியுசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் புரோக்கராக செயல்பட்டு பணத்தை ‘கை’ மாற்றிவிட்டவர் லண்டனில் குடியிருக்கும் கிறிஸ்டியன் மைக்கல். இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது இத்தாலிய புலனாய்வுத்துறை. நீதிமன்றத்தில் இவர்கள் யாருக்கு லஞ்சம் தந்தார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளது.

அதில் இந்திய விமான்படையின் தலைமை தளபதியாக அப்போது இருந்த எஸ்.பி.தியாகிக்கு அவரது உறவினர்கள் ஜீலி, தோக்ஸா, சந்தீப்தியாகி மூலம் தரப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 200 கோடி தரப்பட்டு விட்டன என 64 பக்க குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இப்போதும் இந்திய அரசு, இத்தாலிய அரசு தகவல்கள் எதுவும் தரவில்லை என்கிறது. எஸ்.பி. தியாகி பொய்யான குற்றச்சாட்டு என்கிறார். எதிர்கட்சிகள், மீடீயாக்களின் நெருக்கடியில் மத்தியரசு சி.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்றை விசாரணை விபரங்களை கேட்டு இத்தாலிக்கு அனுப்பியுள்ளது.

முன்பு போபர்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆயுதம் வாங்கியபோது கமிஷன் கைமாறியுள்ளது என செய்தி வந்தபோது இந்தியாவில் பெரும் சலசலப்பு எழுந்தது. அப்போதும் இதேபோல் தான் இந்திய அரசு சொன்னது. முழுமையான விசாரணையில் உண்மை வெளிவந்தது.

ஓட்டாவியோ குவ்ரோச்சி இந்த பெயர் இந்திய அரசியல் தெரிந்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியாவை ஆளும் இத்தாலியில் பிறந்த சோனியாவின் உறவினர், நண்பர் என அறியப்பட்டவர். சோனியாவின் கணவர் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது 1984ல் இராணுவத்துக்காக இத்தாலியை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம்மிருந்து பீரங்கிகள் வாங்கியதில் 64 கோடி லஞ்சம் வாங்கியதாக ராஜிவ்காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்து. இதனை எழுப்பியவர் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் வி.பி.சிங் அவர்கள். அதோடு சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு பன்னாட்டு வானொலி ஊழல் நடந்ததை செய்தியாக வெளியிட்டது. இந்தியாவின் சி.பி.ஐ இவ்வழக்கை விசாரிக்க தொடங்கியது. இதனால் 1989ல் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் புறக்கணித்தனர். லஞ்சம் வாங்கிய பணத்தை ராஜிவ்காந்தி சுவிஸ் வங்கியில் போட்டு வைத்த ஆதாரங்கள் எல்லாம் வெளியாகின. ராஜிவ்காந்தி மறைந்தும் போனார்.

ஆனால் வழக்கு மட்டும் முடிக்கப்படவில்லை. இதில் புரோக்கராக செயல்பட்ட ஒட்டாவியோ குவ்ரோச்சி சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு, அவரது வங்கி கணக்குகள், பாஸ்போட் போன்றவை முடக்கப்பட்டன. பின் அவர் சிறையில் இருந்து வெளிவந்து வழக்கு நடக்கும்போதே தன்னுடைய இத்தாலி நாட்டுக்கு போய்விட்டார். சட்ட அமைச்சக ஆசியுடன் வங்கி கணக்கை ரிலிஸ் செய்துக்கொண்டார். தற்போது அந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு கடலின் ஆழத்துக்கு போய்விட்டன.

இப்போது ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இப்போதும் விற்ற நாடான இத்தாலி தான் கண்டறிந்துள்ளதே தவிர வாங்கிய நாடான இந்தியா அப்படி நடைபெறவேயில்லை என சாதித்தது. உண்மைகள் வெளிவரத்தொடங்கியப்பின் சமாளிக்க தொடங்கியுள்ளது. ஆக காலவெள்ளத்தில் இந்த வழக்கும் காற்றில் கரையும் கரும்புகையை போக கரையும்மே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஏன் எனில் இங்கு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் - அதிகாரிகள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல. அதனால் ஒருவருக்கொருவர் விட்டுதரப்போவதில்லை.

வாழ்க அதிகார வர்கத்துக்கான அரசாங்கம்.

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

விநோதினி கொலையும் உண்மைகளும்.


இந்த கட்டுரையை படிக்கும்போது பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவானது போல தோன்றும். கட்டுரையை படித்துவிட்டு யோசித்து பாருங்கள் உண்மை விளங்கும்.

கடந்த நவம்பர் மாதம் 14ந்தேதி சொந்தவூரில் தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்ப பேருந்து நிலையம் வந்த காரைக்காலை சேர்ந்த 23 வயது விநோதினி என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை குறிவைத்து திராவகம் வீசப்பட அதில்; முகம் கருகி பார்வைகள் பறிப்போய் அலங்கோலமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண் கடந்த பிப்ரவரி 13ந்தேதி மருத்துவமனையில் தனது உயிரை விட்டுள்ளாள்.

திராவகம் வீசிய கொடியவன் 24 வயதான கட்டிட மேஸ்திரி சுரேஷ் சிறை கம்பிகளுக்குள் உள்ளான். அவனை தூக்கில் போட வேண்டும் என பல தரப்பில் இருந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதாவது கட்டிட வேலை செய்யும் சுரேஷ் என்ற அந்த இளைஞன் ஒரு தலையாக விநோதினியை காதலித்துள்ளான். அந்தப்பெண் இவனை காதலிக்காததால் வெறியில் இப்படி செய்துள்ளான் என்றார்கள். நடந்தது கொடூர சம்பவம் எதனால் நடந்தது என்ற விவாதத்தில் அனைத்து தரப்பினரும் அந்த பெண்ணும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் செய்த தவறை மறைத்தும், திரித்தும் விட்டார்கள்.

காரைக்கால் பகுதியை சேர்ந்த சில முகநூல் செயல்பாட்டாளர்கள், இன்னும் சிலர் தங்களது பக்கங்களில், விநோதினியை படிக்க வைத்தது, அந்த குடும்பத்துக்கு தேவையானதை செய்து தந்தது எல்லாம் சுரேஷ். சுரேஷ்க்கு விநோதினியை திருமணம் செய்து வைப்பதாக அந்தப்பெண்ணின் தந்தை பலமுறை உறுதி தந்துள்ளார். அந்தப்பெண்ணும் உணர்ந்து அவனுடன் பழகியுள்ளார். படித்து முடித்ததும் அந்த பெண் தனக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை கிடைத்ததும் சுரேஷ்சை கை கழுவியுள்ளாள் என எழுதியுள்ளார்கள். 

ஒரு வேலை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதில் குற்றவாளியாக அந்தப்பெண்ணும், அவரது குடும்பத்தாரும் உள்ளாகிறார்கள். அதனால் விநோதினியின்  பெற்றோரையும் இதில் தண்டிக்க வேண்டும். காரணம், அந்த பெண் மீது கொண்ட காதலை அந்த பெண்ணின் பெற்றோர்கள் ஆசை வார்த்தை கூறி பயன்படுத்திக்கொண்டு கடைசியில் அவனை ஏமாற்றியுள்ளார்கள். ஏமாந்தவன் தன்னை ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் எடுக்க கூடாதா தவறான முடிவை எடுத்து அந்தப்பெண்ணையும் அழித்துவிட்டான், தன் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிக்கொண்டான். 

இதில் சிலர் கேட்கலாம், யாரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த பெண் முடிவு செய்ய வேண்டிய உரிமையாச்சே என்று. நிச்சயம் அது அவரது தனிப்பட்ட விருப்பம் தான். ஆனால் அதை முன்பே அந்த இளைஞனிடம் கூறியிருக்கலாம்மே?. வசதி வாய்ப்பு வருவதற்கு முன் அவனை திருமணம் செய்துக்கொள்வதாகவும், வாய்ப்புகள் வந்தப்பின் அவனை புறந்தள்ளி அந்தப்பெண்ணும் ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். 

அவன் புகார் தந்துயிருக்கலாம்மே என கேட்கலாம். வழக்கு விவகாரங்களில் பெண்கள் சொல்வதையெல்லாம் உண்மை என நம்புவதால் தான் இந்த பிரச்சனை. 

அதோடு இன்றுக்கூட செய்தித்தாள்களாகட்டும், மீடியாவாகட்டும் ஆசிட் வீச்சுக்கு ஆளான விநோதினியை மட்டுமே சுற்றி சுற்றி வந்தனவே தவிர.......... ஆசிட் வீசியவன் பக்கம் உள்ள நியாயத்தை அல்லது அவன் தரப்பின் குரலை கேட்கவேயில்லை. இது தான் தவறுக்கு வழி வகுக்கிறது. தவறு செய்பவர்களை தைரியம் பெற வைக்கிறது.

தவறு செய்த பெண்ணுக்கு தண்டனை தந்தான் எனச்சொல்லவரவில்லை. ஏமாந்த ஒரு இளைஞன் என்ன செய்வான், சம்மந்தப்பட்ட பெண்ணை மிரட்டுவான். ஆனால் இவன் தவறான சேர்க்கையால் அந்த பெண் மீது திராவகம் வீசியுள்ளான். இதற்கு சினிமாவும் ஒரு காரணம். 

அவன் செய்த தவறுக்கு தண்டனை தரலாம் மாற்றுக்கருத்துயில்லை. அதற்காக அவனுக்கு மரணதண்டனை தருவது என்பது கொலைக்கு கொலை செய்வது போன்றது. இந்த விவகாரத்தில் விவாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. உணர்ச்சி வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுப்பது என்பது தவறுக்கு துணை போவது போல. 

எதையும் யோசிப்போம்.......... முடிவு எடுப்போம்.

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

மகாகும்பமேளாவும் உயிர் பலிகளும்.



இந்து மதத்தில் கொண்டாடப்படும் விழா கும்பமேளா. அசுரர்களுக்கும் - தேவர்குளுக்கும் நடக்கும் யுத்தத்தில் தேவர்களுக்காக உருவாக்கப்பட்ட அமிர்தம் கொண்டு செல்லும் வழியில் ஆற்றில் விழுந்ததாகவும் அந்த அமுதம் விழுந்த ஆற்றில் குளித்தால் மனிதனின் அக புற பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை.

இந்தியாவில் அலகாபத், நாசிக், அரித்துவார், உஜ்ஜையின் போன்ற நகரங்கள் வழியாக ஓடும் ஆற்றில் அமிர்த துளிகள் சிந்தியதாக ஒரு நம்பிக்கை. இந்துக்கள் தங்களது பாவங்களை போக்கிக்கொள்ள இந்த நகரங்களில் ஓடும் ஆற்றில் இறங்கி நீராடுகிறார்கள். 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாகும்பமேளா என்ற விழா பெரிய அளவில் நடக்கும். 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை மகாமஹம் நடக்கிறது. உலகத்தின் அத்தனை பகுதிகளில் இருந்தும் இந்து மத சாமியார்கள், சந்நியாசிகள் என இங்கு வருகை புரிவார்கள். இந்து சமயத்தை சார்ந்த ஆத்திகர்கள் இங்கு வந்து நீராடுவர்.

2013 ல் அலகாபாத்தில் உள்ள திரிவேணிசங்கமத்தில் தை 1 ந்தேதி மகாகும்பமேளா தொடங்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து நீராடி செல்கின்றனர். வரும் மார்ச் 13ந்தேதி வரை மகாகும்பமேளா நடைபெறவுள்ளது. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள், சந்நியாசிகள், கார்ப்பரேட் சாமியார்கள் முதல் குட்டி சாமியார்கள் வரை தங்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலம் தான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அரை கும்பமேளாவாக இருக்கட்டும் அல்லது முழு கும்பமேளாவாக இருக்கட்டும் கும்பமேளா நடைபெறும் போதுயெல்லாம் பெரிய விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.

10ந்தேதி இரவு அலகாபாத்தில் நடந்த மகாகும்பமேளாவில் தள்ளு முள்ளும், போலிஸ் தடியடி நடத்தியதில் குறுகிய பாலத்தில் பக்தர்கள் முண்டியடித்து ஓடியதன் விளைவாக 31 பேர் பலியாகியுள்ளனர். பாவத்தை கழுவ போய் தங்களது உயிரை விட்டுள்ளார்கள். இது இப்போது மட்டுமல்ல இதற்கு முன் கும்பமேளா நடந்தபோதும் நடந்துள்ளது.


ஓவ்வொரு முறையும் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி தருவதோடு முடிந்துவிடுகிறது அதன் விவகாரம். மக்களின் உயிர் சார்ந்த விஷயமாக யாரும் பார்ப்பதில்லை. மக்கள் இறப்பது செய்திகளாவே போய்விடுகின்றன. மீடியாக்களும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே பார்க்கின்றன. தலைவர்கள் இறந்தால் மட்டுமே விசாரணை கமிஷன், பாதுகாப்பு அறிக்கை போன்றவை கேட்கப்படும் போலும்.

மக்களின் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டு. அதாவது ஒரு சினிமா ரசிகனுக்கும் - நடிகைக்கும் உள்ள ‘உறவை’ போல. பக்தி என்பது மக்களின் நம்பிக்கை சார்ந்தது. கடவுள் என்பவர் ஒருவர் இருக்கலாம், நாம் வேண்டுவதை செய்து தரலாம் என்ற நம்பிக்கை தானே தவிர அது உண்மையாகாது.

கங்கையில் நீராடினால் தன் பாவங்கள் போகும் என எண்ணுவது நம்பிக்கை. அது நிகழ்வில் உண்மையாகாது. ஆனாலும் மக்களின் நம்பிக்கையை புறந்தல்லாமல் நம்பிக்கையோடு வருபவர்களுக்கு தேவையானதை செய்து தந்து வழியனுப்ப வேண்டும்மே தவிர அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களது உயிரோடு விளையாடுவது என்பது மோசமானது, மன்னிக்க முடியாத குற்றம். அதைத்தான் மகாகும்பமேளா நடத்துபவர்களும், அரசுகளும் செய்கிறது.

இந்து மத சொல்படி கூறுவதுயென்றால் பாவங்களை கழுவ வரும்மிடத்தில் அந்த பக்தர்களை ஏதோ ஒரு விபத்தில் தள்ளி அவர்கள் இறக்க காரணமாகி அவர்களும் பாவக்காரர்களாக மாறுகிறார்கள்.

நீங்கள் ( அரசுகள் ) மக்களை கொன்ற பாவத்தை கழுவ கங்கைக்கு போய் குளிப்பதை விட அந்த மக்களின் பாதுகாப்புக்கு அதிக நேரத்தை செலவிடுங்கள் அதுவே உங்கள் பாவத்தை போக்கிவிடும்.

திங்கள், பிப்ரவரி 11, 2013

மகளிடம் மதகுரு வெறிச்செயல்.


சவுதி அரேபியா இந்த நாட்டைப்பற்றி நினைவில் இல்லாதவர்களுக்கு ஒரு சம்பவம் மிக சமீபத்தில் வேலைக்காக இலங்கையில் இருந்து சவுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட 15 வயதேயான தமிழ் பேசும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரிஸானா என்ற சிறுமி ஒரு குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றார் என 2005ல் மரண தண்டனை விதிக்கப்பட்டு சவுதிசிறையில் அடைப்பட்டு கிடந்தவள். 2013ல் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி ரிஸானாவை மக்கள் மத்தியில் தலைவெட்டி கொன்ற நாடு.

அந்த நாட்டில் இஸ்லாமிய நெறிகளை மற்றவர்களுக்கு கற்று தரும் இமாம் அதாவது ஆசிரியர் பீடத்தில் இருப்பவர் மதகுரு ஷேக் பைஹான் அல் கம்தி. சவுதி அரேபியாவின் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் தோன்றி மதம் பற்றிய பாடம் நடத்துவார். தன் இஸ்லாமிய மத கொள்கைகள் பற்றி அனல் பறக்க விவாதிப்பார், பேசுவார். பெண்கள் படுக்கைக்கு மட்டுமே என்ற வாதம் உடையவர்.

இவரது ஐந்து வயது மகள் குழந்தை லாமியா அல் கம்தி 2011 டிசம்பர் 25ந்தேதி மண்டை உடைந்து, கை விரல் நகம் பிய்க்கப்பட்டு, பெண் உறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில், தன் தந்தை செய்த காம செயல்களைப்பற்றி அதுப்பற்றி தெரியாமலே வெளிப்படுத்தியுள்ளாள் அக்குழந்தை. மருத்துவ அறிக்கையும் பாலியல் வல்லுறுவில் ஈடுபட்டது உறுதி செய்து அறிக்கை தந்தது.

இதன் அடிப்படையில் அந்த மதகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளான். கடந்த 2012 அக்டோபர் 22 ந்தேதி குழந்தை லாமியா மரணித்துவிட்டால். இந்த வழக்கு விசாரணையின் போது மதகுரு குருதிப்பணம் தருகிறேன் என்றானாம். குழந்தையின் தாய் அதை பெற்றுக்கொள்ள சம்மதித்ததால் அந்த மதகுரு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் தந்துவிட்டு 2013 பிப்ரவரி 3ந்தேதி விடுதலையாகி வந்துள்ளான்.

அதுயென்ன குருதிப்பணம்?.

இஸ்லாம் மார்க்கத்தில் ஷரியத் விதிமுறைகளை பழமைவாதிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதாவது, பெண்கள் படிக்ககூடாது, பர்தா அணியாமல் வெளியே செல்லக்கூடாது, பிற ஆண்களிடம் முகத்தை காட்டகூடாது, பொழுதுபோக்கு சினிமா, நடனம், பாடல் போன்றவை இஸ்லாத்துக்கு எதிரானவை. இஸ்லாமிய ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம், வேண்டும்போது மணமுறிவு செய்துவிடலாம், சிறார் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் போன்ற பலப்பல பெண் அடிமைத்தனத்தை உள்ளடக்கிய கட்டுப்பாடுகளை கொண்டது ஷரியத். அதை சட்டம் என அழைக்கிறார்கள். இந்த சட்டப்படித்தான் சவுதி அரேபியா அரசாங்கம் செயல்படுகிறது.

இந்த சட்டத்தின் படி ஒரு இஸ்லாமியர் கொலை செய்துவிட்டு கொலையானவரின் உறவினருக்கு பணம் தந்து அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் கொலை குற்றவாளி மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார். பணத்தை ஏற்கவில்லையெனில் தண்டனை தரப்படும். இதற்கு பெயர் குருதிப்பணம். இதனைத்தான் மார்க்கத்தை கற்று தரும் மத போதகர் தன் பச்சிளம் மகளை பாலியல் வல்லுறுவில் ஈடுபடுத்தி கொன்றுவிட்டு குருதிப்பணம் தந்துவிட்டு விடுதலையாகியுள்ளார்.

பிற்போக்கு தனங்களை தங்களிடம் கொண்டுள்ள சவுதி அரசுக்கு ஒத்து ஊதும் இஸ்லாத்தை சார்ந்த பலர் இதனை ஆதரிப்பவர்களாக உள்ளார்கள். அதனால் தான் ரிஸானா மரண தண்டனையின் போது சவுதிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் இப்போது மவுனமாக இருந்து தங்களது ஆதரவை சவுதிக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளி, பிப்ரவரி 01, 2013

போராளி ? தீவிரவாதி ?.

ஹமாஸ் தீவிரவாதிகள்


விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படுபவர்கள் தீவிரவாதிகள்ள, அமெரிக்காவை எதிர்த்து போராடும் போராளிகள் அவர்களை எப்படி தீவிரவாதிகளாக காட்டலாம் என தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு இஸ்லாமிய இயக்க தோழர் கேள்வி எழுப்புகிறார். அதேபோன்றே அவரைப்போன்ற சில இஸ்லாமிய தோழர்கள் கேள்வி கேட்கிறார்கள். 

போராளிகள் என்பவர்கள் யார் ?. 

இலங்கையில் ஈழ பகுதியில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக, அரசப்படைகளை எதிர்த்து போராடியவர்கள் விடுதலைப்புலிகள். ஆரசாங்கத்துக்கு தங்களது எதிர்ப்புகளை காட்ட அவர்கள் இராணுவம், துணை இராணுவம், எல்லை பாதுகாப்பு படை வீரர்களை தான் கொன்றுள்ளார்கள். அதில் அவர்கள் கொல்லப்பட்டும் உள்ளார்கள். உலகில் உள்ள போராளிகள் இயக்கங்களின் குறி அரசப்படைகள் தான். மக்கள் உயிரல்ல. 99 சதவிதம் போராளி குழுக்கள் மக்களை கொன்றதில்லை. தீவிரவாதிகள் நோக்கம் அரசப்படைகளள்ள பொது மக்கள். உலகில் உள்ள எல்லா தீவிரவாதிகளின் குறியும் பொதுமக்கள் தான். மக்கள் பகுதியில் நடக்கும் எல்லா வெடிகுண்டுகளுக்கு பின்னாடி இருப்பது தீவிரவாதம். இது தான் தீவிரவாதத்துக்கும், போராளிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு. 

விஸ்வரூபம் பட விவகாரத்துக்கு வருவோம். விஸ்வரூபம் படத்தின் கதை மற்றும் பிற மொழிகளில் படத்தை பார்த்த நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில், படத்தில் காட்டப்படுவது இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் பற்றி தான். அதாவது படத்தில் காட்டப்படுவது தாலிபான்கள் பற்றி. 

தாலிபான்கள் யார்?

ஆயிலுக்காக, இயற்கை வளத்துக்காக ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்ரமித்தபோது, ரஷ்யாவின் இராணுவத்தை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது முகாஜிதின்கள் இயக்கம். இந்த இயக்கத்துக்கு இளைஞர்களை இழுக்க சவுதிஅரேபியாவின் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிற்போக்குவதத்தை தூக்கி பிடிக்கும் இஸ்லாமிய பிரிவை சார்ந்தவர்களை அமெரிக்கா பயன்படுத்தியது. அவர்கள் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த பழங்குடி மக்களை மதத்தின் பெயரில் தங்கள் பக்கம் இழுத்து மூளை சலவை செய்து முஹாஜின்களாக்கினார்கள். 

பணம், ஆயுதம் தந்தது தந்தது கிருத்துவ அமெரிக்கா என்றால், ஆள் சேர்த்தது, மத பயிற்சி தந்தது இஸ்லாமிய அரச குடும்பத்தின் சவுதிஅரேபியா அரசு. அவர்களுக்கு பயிற்சி தந்து, பாதுகாப்பு தந்தது இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் அரசு.  ஆப்கானிஸ்தானில் மதத்தை முன்னிருத்தி இளைஞர்களை இழுத்து அவர்களுக்கு பயிற்சி தந்து தீவிரவாதிகளாக்கியது இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் என்பது உலகறிந்த உண்மை. ரஷ்ய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டதும் அந்தயிடத்தில் அமெரிக்கா படைகள் உட்கார்ந்து சுரண்ட தொடங்கியது.  அரச அதிகாரத்தை பெற அமெரிக்கா ஆசிபெற்ற முகாஜிதின்கள் தங்களுக்குள் பிரதேசவாரியாக நான்கு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டதோடு தன் இன மக்களை குண்டு வைத்து கொன்றனர். 

இவர்களை அடக்க தாலிபான்கள் என்ற அணியை அமெரிக்கா ஊக்குவித்தது. அவர்களின் வளர்ச்சி வேகவேகமாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க எவ்வளவோ முயன்றது. அது முடியவில்லை. தாலிபான் ஆட்சியும் ஆப்கானில் சில ஆண்டுகள் நடந்தன. இவர்களுக்கு பண உதவி செய்தன பல இஸ்லாமிய நாடுகள். மற்றொரு தீவிரவாத குழுவான அல்கயிதா தலைவர் பின்லேடன் திட்டப்படி அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டது. ஒசாமாவை அமெரிக்கா கொல்ல முயன்றது ஒசாமா தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானில் அடைக்கலம் புகுந்தார். தாலிபான்கள் அவரை பாதுகாத்தனர். அமெரிக்கா தாலிபான்களை வேட்டையாட ஆப்கானிஸ்தான் மீது அதிகாரபூர்வமாக படை எடுத்தது. தாலிபான்கள் அரசை கவிழ்த்துவிட்டு அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையரசு உருவாக்கப்பட்டது. 

பின்லேடன் கொல்லப்பட்ட பின்பும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் - அமெரிக்காவுக்கும் தினம் தினம் மோதல் நடக்கிறது. இதில் தாலிபான் - அமெரிக்காவின் மோதலை மையமாக கொண்டு விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டது. 

படத்தில் குரான் ஓதுவது போல காட்டியுள்ளார் என்கிறார்கள் படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய தலைவர்கள். தாலிபான்கள் என்ன கிருத்துவர்களா பைபிள் படிப்பது போல் காட்டுவதற்க்கு. இல்லை பகவத்கீதையை காட்ட அவர்கள் என்ன இந்துவா. தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் குரானை காட்டியுள்ளார். தொழுகை நடத்திவிட்டு ஒருவன் குண்டு வைக்க போகிறான் என காட்டியுள்ளதில் என்ன தவறு. கடவுள் நம்பிக்கையுள்ளவன் நல்லது செய்ய போனாலும், தவறு செய்ய போனாலும் கடவுளை வேண்டுவான் அதைத்தான் காட்டியுள்ளார். இதை எவ்வாறு தவறு என கூறமுடியும். இதில் எங்கே மதத்தை புன்படுத்துவது போல் கருத்துள்ளது என்பதை காட்ட முடியும்மா ?. 

இந்து மதத்தில் எப்படி தீவிர இந்துத்துவா மனம் கொண்டவர்கள் இருக்கறிhர்களோ அப்படித்தான் இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய, பௌத்த மதத்திலும் உள்ளார்கள். அவர்கள் தீவிரவாத பாதையை நாடுகிறார்கள். அவர்கள் அரசப்படைகளை எதிர்த்து போராடும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. மக்களை கொல்லும் போது அவர்கள் தீவிரவாதிகளாகிறார்கள். 

அதேபோல் தாலிபான் தலைவனை கதாநாயகன் சந்திக்கும் போது, தலைவன் தமிழ் பேசுகிறான் அவனிடம் கதாநாயகன் அதுப்பற்றி கேட்கும் போது, கோவை, மதுரையில் ஓராண்டு இருந்தேன் என்கிறானாம். சரி சொல்லிவிட்டு போகட்டும். இதனால் முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். தீவிரவாதி எங்குயிருந்தால் என்ன?. படத்தில் என்ன அங்குள்ள முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்ற சொல்கிறார்?. 

மக்களுக்கு எதிரானவர்களை அடையாளப்படுத்தும் போது அதை எதிர்ப்பவர்கள் மக்களின் எதிரிகளாகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே.