வியாழன், மார்ச் 05, 2015

இரண்டாவது முறையாக பாடலை வியாபாரம் செய்கிறார் இளையராஜா.



இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்கள் அவரது இசையில் வந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. பாடல்களுக்காக படங்கள் ஓடியது என்றால் அது அவரது இசையால் உருவான பாடல்களுக்கு தான். மனதுக்கு இதம் தரும் இசையென்றால் அது இளையராஜா இசைதான் என உறுதியாக சொல்லலாம். எழுத்தாளர் சாருநிவேதா ஒருமுறை சினிமா விமர்சன பத்திரிக்கை ஒன்றில் எழுதியதாக நினைவு, இளையராஜாவும் ஒரு காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர் என கிழிகிழியென கிழித்திருந்தார். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த இசை மேதை தான் இசையமைத்த பாடல்கள் அவரது அனுமதியில்லாமல் சிடி, டிவிடி போட்டு கம்பெனிகள் விற்பனை செய்ய முடியாதபடி நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார். என் அனுமதியில்லாமல் என் பாடல்களை யாரும் பயன்படுத்தக்கூடாது அதாவது விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை என அறிவித்துள்ளார்.

இது விவாதத்துக்கு வைக்க வேண்டிய விவகாரம். ஏனோ யாரும் அதுப்பற்றி பேசவில்லை.

எனக்கு ஒரு பேருந்து தேவைப்படுகிறது நான் பேருந்து உற்பத்தியாளரிடம்மிருந்து எனக்கு விருபப்பட்ட மாடலில் வாங்குகிறேன். பயணிகள் பயணத்துக்காக பேருந்து இயக்கி சம்பாதிக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்தை நிறுத்திவிடுகிறேன். இப்போது இந்த பேருந்து யாருக்கு சொந்தம்?. உற்பத்தியாளருக்கா ? பணம் போட்டு வாங்கியவருக்கா ?.

இப்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள இளையராஜாவிடம் இதே கேள்வியை கேட்கவிரும்புகிறேன்.

முதல் படமான அன்னக்கிளியில் இருந்து இப்போது ஆயிரமாவுது படம் எனச்சொல்லப்படும் ஷமிதாப் வரை இசையமைத்தார். இந்த ஆயிரம் படங்களும் யாரோ ஒரு தயாரிப்பாளருடையது. தயாரிப்பளார் இளையராஜாவை படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறார். இயக்குநர் கேட்டுக்கொண்டபடி கதைக்கு ஏற்றாற்போல் பாடலாசிரியர்கள் பாடல் எழுதி தருகிறார், அந்த பாடலுக்கு இளையராஜா மெட்டமைக்கிறார். ஒரு பாடகர் பாடுகிறார் பாடல் உருவாகிவிட்டது. அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் நடிகர், நடிகையர், நடனமாடுபவர்கள் ஆடுகிறார்கள் படம் தயாராகி திரைக்கு வருகிறது. ரசிர்கள் பார்க்கிறார்கள் அதை கொண்டாடுகிறார்கள் அல்லது குப்புறதள்ளுகிறார்கள்.

இப்போது அந்த பாடல் யாருக்கு சொந்தம், காசு வாங்கிக்கொண்டு எழுதி தந்த பாடலாசிரியருக்கா?, இசையமைத்த இசையமைப்பாளருக்கா?, பாடியவருக்கா?, நடித்தவருக்கா?, கதை கருவை சொன்ன இயக்குநருக்கா? பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர்கள் செய்த வேலைக்கு பணம் தந்த தயாரிப்பாளருக்கா ?. யாருக்கு சொந்தம் ?.


பாடலை நான் எழுதினேன் என பாடலாசிரியரும், இசையமைத்தேன் அதனால் எனக்கே சொன்தம் என இசையமைப்பாளரும், இந்த பாடலை நான் தான் பாடினேன் என பாடகரோ, இந்த பாடலை நான் தான் படமாக்கினேன் என இயக்குநரும், நான் தான் நடித்தேன் என நடிகர்களும் உரிமை கொண்டாடலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை அந்த பாடல் தயாரிப்பாளருக்கே சொந்தம்.  

பாடலாசிரியரியர், இசையமைப்பாளர், பாடகர் யாராக இருக்கட்டும் தங்களது கற்பனையில் உருவான பாடல் வரிகள், இசைகளை விற்பனை செய்துவிட்டனர். பணம் தந்து வாங்கிய தயாரிப்பாளர் அதை மக்களுக்கு தந்து காசாக்கியுள்ளார். அப்படியிருக்க அந்த பாடல்கள், இசையின் உரிமை தயாரிப்பாளரை தானே சேரும்.

இது படைப்பாளியின் அறிவு சம்மந்தப்பட்டது. அதை பொருளோடு சேர்ப்பது தவறு அறிவை திருடுவது நியாயம்தானா என கேட்கலாம். தயாரிப்பாளர் இசையமைப்பாளர், கவிஞரின் திறமையை திருடவில்லை. காசு கொடுத்து வாங்கிதான் பயன்படுத்துகிறார். படைப்பாளி தன் அறிவை காசுக்கு விற்று விட்டார். அதாவது படைப்பை விற்பனை செய்துவிட்டார். விற்ற பொருள் மீது எப்படி உரிமை கொண்டாட முடியும். ஒரு பொருளை வாங்கியவன் அதை விற்பான் அல்லது அடகு கூட வைப்பான். அது வாங்கியவன் செயல். விற்றபின் எனது படைப்பு என எப்படி உரிமை கொண்டாட  முடியும்.

இளையராஜா இலவசமாக யாருக்காவுது பாடல்கள் இசையமைத்து தந்திருந்து அதை இளையராஜா அனுமதியில்லாமல் தயாரிப்பாளர் விற்றிருந்தால் அது தவறு. அந்த இசை மீது தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் கிடையாது. இளையராஜா காசுக்கு தான் இசையமைத்தார். அப்படியிருக்க அந்த பாடல் என்னுடையது என் அனுமதியில்லாமல் கம்பெனிகள் அதை பயன்படுத்தகூடாது என எப்படி சொல்லலாம்.

நீங்கள் என்ன சொன்னாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாது. படைப்பாளிக்கே படைப்பின் முழு உரிமை என்கிறிர்களா ?. உங்கள் வழிக்கே வருகிறேன். ஆயிரம் படங்கள்……….. ஆராயிரம் பாடல்கள் என கணக்கு வைத்துக்கொள்வோம். இந்த ஆராயிரம் பாடல்களை கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கைஅமரன், பழனிபாரதி, முத்துக்குமார், விவேகா என ஏதோ ஒரு பாடலாசிரியர் எழுதியிருப்பார். அந்த பாடல் வரிகளுக்கு தான் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர். அப்படியிருக்க எழுதிய அந்த படைப்பாளிக்கு அந்த பாடலில் உரிமையில்லையா?. அவர்களது படைப்புக்கு தானே இளையராஜா இசையமைத்துள்ளார். அப்போது அந்த வரிகள் அந்த படைப்பாளிக்கும் உரிமைதானே. அவர்களுக்கு இளையராஜா என்ன செய்துள்ளார் ?.


இதில் மிக முக்கியமான கேள்வி, இளையராஜா தான் இசையமைத்து தந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் நான் இந்த பாடல்களை ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு விற்கபோகிறேன் என அனுமதி வாங்கியுள்ளரா ? வாங்கியிருந்தால் அவரை பாராட்டுகிறேன். வாங்கவில்லையென்றால் முதலில் அனுமதி வாங்கட்டும். ஏன் எனில் இளையராஜா பிழைப்புக்காக இசையமைப்பாளர் ஆனவர். தன் பிழைப்புக்காக இசையை உருவாக்கி விற்றுவிட்டார். வாங்கியவர் தான் உரிமை கொண்டாட முடியும்…. தயாரிப்பாளருக்கே சொந்தம். 

5 கருத்துகள்:

  1. பாடலின் வெற்றியீல் பாடலாசிர்யர்களின் பங்கு முக்கியமானதே!!

    பதிலளிநீக்கு
  2. padhivittamaikku nandri, surendran

    பதிலளிநீக்கு
  3. சரியான கேள்வி.

    தமிழ்ப் பாடல்கள் அனைத்துமே டி ராஜேந்தர் தவிர பலரால் உருவாக்கப்படுபவை.இதில் ஒரு இசை அமைப்பாளர் தனக்கென சொந்தம் கொண்டாடுவது முரண். பீல்டில் இருந்தபோதுதான் இவர் போட்ட ஆட்டம் தாங்கமுடியவில்லை என்றால் பீல்ட் அவுட் ஆகியும் இவர் இன்னும் திருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
  4. \\பாடல்களுக்காக படங்கள் ஓடியது என்றால் அது அவரது இசையால் உருவான பாடல்களுக்கு தான். மனதுக்கு இதம் தரும் இசையென்றால் அது இளையராஜா இசைதான் என உறுதியாக சொல்லலாம்.\\
    உங்களுடைய மெயின் விஷயத்துக்குள் போவதற்கு முன்னால் இந்தக் கேள்விகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சிவாஜி எம்ஜிஆர் படப்பாடல்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விஸ்வநாதன்-ராம மூர்த்தி என்றிருந்தார்களே அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? கண்ணதாசன் கண்ணதாசன் என்று ஒரு கவிஞர் இருந்தாரே அவரது பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிஎம்எஸ், பி.சுசீலா இவர்களெல்லாம் யார் என்று தெரியுமா?
    ஏன் ராஜ்பிரியன் நீங்கள் வேறு யாருடைய பாடல்களையும் இதுவரைக் கேட்டதே இல்லையா? எலந்தப்பயம் என்ற ஒரு பாடலுக்காகவே பணமா பாசமா என்ற படம் ஓடியது தெரியாதா உங்களுக்கு? சங்கராபரணம் போன்ற படங்கள் எதற்கு ஓடிற்றாம்? 'மல்லிகை என் மன்னன் விரும்பும்' பாடலுக்கான முக்கியத்துவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?
    இ.ராவைப் புகழவேண்டும் என்பதற்காக எதையாவது அடித்துவிட்டுப் போவது முறை தானா?
    இவர் நடைபோடுவதற்குப் பாதை போட்டுத்தந்த பல இசை மேதைகளைப் போகிறபோக்கில் அவமானப்படுத்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு