வெள்ளி, மே 15, 2015

ஜெ “வாங்கிய“ தீர்ப்பு.




ஜெயலலிதா மீதான வழக்குகளில் வித்தியாசமான தீர்ப்பு தருவது உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கமாகிவிட்டது.

அந்த வரிசையில் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் குழப்பமான தீர்ப்பை தந்துள்ளது. 

முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கு 18 ஆண்டாக நடந்துவந்தது. 2014ல் ஆவணங்கள் அடிப்படையில் கர்நாடகா கீழ்நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கல் டி குன்ஹாவால் ஆவணங்கள் அடிப்படையில் மிக தெளிவாக, விவரமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெ, சசிகலா, இளவரசி, சுதகாரன் நால்வரும் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி அபராதம் என தீர்ப்பளித்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஜாமீன் பெற கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் முறையிட்டபோது, அரசு தரப்பிடம் கருத்து கேட்டபின் ஜாமீன் தர முடியாது என நிரகாரித்தது உயர்நீதிமன்றம். அங்கிருந்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். இங்கிருந்து தான் ஆரம்பமானது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சிகள். 

முதல்வர் பதவியை பறிக்கொடுத்துவிட்டு சிறைக்கு சென்ற குற்றவாளிகள் ஜாமீன் கேட்கிறார்கள். இந்த வழக்கில் கொஞ்சம் கூட அடிப்படையை கடைப்பிடிக்கவில்லை. குற்றவாளிகள் தரப்பின் மனுவை ஏற்றுக்கொண்டு ஜாமீன் வழங்குகிறது நாட்டின் தலையாய நீதிமன்றம். இதை ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர் அமைப்புகள் எதிர்ப்பு காட்டினர். எந்த அதிகார அமைப்பும் இதை கண்டுக்கொள்ளவில்லை.
ஜாமீன் தந்ததோடு நிறுத்தாமல் 3 மாதத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்மென கெடு விதிக்கிறார்கள். அதன்படி கர்நாடகா நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி தலைமையில் விசாரணை ஆரம்பமாகிறது. 

அந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகிறார். இவருக்கு மேல்முறையீட்டில் ஆஜராக அதிகாரம்மில்லை என்கிறது சட்டம். இதை கர்நாடகா அரசு, திமுக பொது செயலாளர் அன்பழகன் மனுக்கள் தெரிவிக்கின்றன. சட்டம் அறிந்த நீதிபதி, எனக்கு 3 மாசம் தான் டைம் அதுக்குள்ள இதை விசாரிச்சி முடிச்சி தீர்ப்பு தரனும் என தெரிந்தே தவறு செய்கிறார். தவறை மறைக்க எனக்கு 3 மாசம் தான் டைம்மிருக்கு என கிளிப்பிள்ளை போல் இதை சொல்லிக்கொண்டே பவானிசிங்கின் “வாதங்களை“ பெற்றுக்கொள்கிறார்.

பவானிசிங் நியமன விவகாரம் உச்சநீதிமன்றம் செல்கிறது, இரண்டு நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் பவானிசிங் நியமனம் செல்லாது என்கிறார் ஒரு நீதிபதி, மற்றொரு நீதிபதி பவனிசிங்கை ஏற்கிறார். முரண்பட்ட தீர்ப்பால் விவகாரம் 3 பேர் கொண்ட பெஞ்ச்க்கு மாற்றப்படுகிறது. 

உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தத்து, அவசரம் அவசரமாக தத்து 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கிறார். இரண்டு சிட்டிங்கில் அந்த பெஞ்ச் விசாரித்து முடித்து பவானிசிங் நியமனம் செல்லாது, அவரது வாதத்தை ஏற்ககூடாது, தீர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும் என தீர்ப்பளிக்கிறது. மே 11ந்தேதி மேல்முறையீட்டு மனுவின் மீது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கிவிட்டார். 

தீர்ப்பில் எத்தனை எத்தனை குளறுபடிகள் என்பதை பலரும் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார்கள். ( தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில பல கருத்துக்களை படிக்கும்போது அவர் எப்போது அதிமுக உறுப்பினர் ஆனார் என கேட்க தோன்றும் ) பாமரன் வரை இது வாங்கப்பட்ட தீர்ப்பு என வெளிப்படையாக பேசும் அளவுக்கு நீதித்துறையை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள் நீதி வழங்குபவர்கள்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீது ஊழல் புரிந்ததுக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதனை விசாரணை செய்ய வேண்டும் என்கிறார் முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜீ. நீதிபதி குமாரசாமி, தப்பு தப்பாக தீர்ப்பு எழுதியவர் மீதும் வீடு ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டு உள்ளன என்கின்றனர். அரசு வழக்கறிஞர் என மோசடி செய்து உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் பவானிசிங் எப்படிப்பட்டவர் என்பதை அவர் வாதாடிய காலங்களில் மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். இந்த நீதியை வாங்க பிரதமர் மோடி அரசு உதவி உள்ளது என்பதை இலைமறை காயாக அந்த கட்சியினரின் பேட்டிகளே சொல்லாமல் சொல்கிறது. 

இப்போது நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டதா........ வாங்கப்பட்டதா என்று.............

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நான் நன்றாக இருக்கிறேனா பார் என்பார். அதையேத்தான் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டால் சரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக