வியாழன், ஜூலை 16, 2015

எது முடியாதே அதுவே மக்களின் எதிர்பார்ப்பு. இதுவே பலருக்கு பிழைப்பு






காந்தி, பெரியார், காமராஜர், கக்கன், பிரபாகரன் போன்றவர்களின் பிறந்தநாள்கள், இறந்தநாள் வந்துவிட்டால் இணையதளம் முழுக்க ஒரே அலம்பல்கள். காந்தி போன்ற தலைவர் வேண்டும், பெரியார் போன்ற சமூக சீர்த்திருத்தவாதி வேண்டும், காமராஜர் போன்ற நேர்மையாளர் வேண்டும் என கை விரல் தேயும் அளவுக்கு கீ போர்டில் அடித்து தங்களது கருத்தை பதிவு செய்கிறார்கள். 

இப்படி கேட்பவன் எவன் ஒருவனும், நான் காந்திஜியின் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பேன், பெரியாரின் ஒரு சில கொள்கைகளையாவது என்னளவில் நடைமுறை படுத்துவேன் என சொல்வதில்லை. காமராஜர் போன்ற தலைவர் வேண்டும் என எழுதுபவன், பேசுபவன் அவர்களை பின்பற்ற மாட்டான். ஆனால் அடுத்தவன் பின்பற்ற வேண்டும் அதுவும் அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

அந்தகாலக்கட்டத்தில் அடக்கி ஆண்ட ஆங்கிலேயேனை எதிர்த்து தெருவுக்கு வந்தபோது காந்தியும், பெரியாரும், பகத்சிங்கும் பதுங்கிவிடவில்லை. தெருவுக்கு வந்து கொடி பிடித்தார்கள், அடிவாங்கினார்கள், சிறை சென்றார்கள், சித்தரவதைகளை அனுபவித்தார்கள். மக்கள் அவர்கள் பின்னால் அணி வகுத்து நின்றார்கள். அன்று மக்கள் 90 சதவிதம் நேர்மையுடன் இருந்தார்கள். அதனால் 90 சதவித தலைவர்கள் நேர்மையுடன் இருந்தார்கள்.

இன்று தெரு குழாயில் தண்ணீர் வரவில்லை என போராடும் போது அங்கு போலிஸ் வந்தால் இவன் தான் மறியலுக்கு வரச்சொன்னான் என முன் நிற்பவனை போட்டுக்கொடுத்துவிட்டு ஓடுவது யார்?. இன்று 10 சதவித மக்கள் தான் நேர்மையுடன் வாழ்கிறார்கள். இதனால் அரசியல்வாதிகள் 99 சதவிதம் கரைபடிந்துப்போய் இருக்கிறார்கள். 

கேள்வி கேட்கும் நாம் நேர்மையாக இருந்தால் அவர்கள் நம்மை கண்டு பயப்படுவார்கள். ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை. நான் நேர்மையாக இருக்கமாட்டேன், ஆனால் நீ நேர்மையாக இருக்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்??????????.

உலகத்தை புரட்டி போட்டாலும் நேற்றைய காந்தி போல, பெரியார் போல, காமராஜர் போல, கக்கன் போல ஒருவரும் வரப்போவதில்லை. 

மனதுக்குள் சாதிவெறி, மதவெறி கொண்டு அலைந்த கூட்டம் திட்டமிட்டு மோடி வந்தால் நாடு சுபிட்சமாகும், பால் ரோட்டில் ஓடும், தேன் கால்வாயில் ஓடும் வேண்டுமளவுக்கு பிடித்துக்கொள்ளலாம், பேங்க் அக்கவுண்ட்டில் உழைக்காமலே லட்சங்களில் பேலன்ஸ் இருக்கும் என பரப்பி பதவிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் நடப்பதுயென்ன என்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 

மக்கள் எதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். பேசுபவர்கள், எழுதுபவர்கள் அதை சொல்ல மாட்டார்கள் ஏன் எனில் காந்தி, பெரியார், காமராஜார் பற்றி எழுதுவது, பேசுவது எல்லாம் அவர்களை போல் நீங்கள் மாற வேண்டும் என்பதற்காகல்ல. அவர்கள் வியாபாரிகள். பெரியார், காமராஜரை வியாபார பிம்பங்களாக்கி உள்ளார்கள். புரிந்துக்கொள்ளுங்கள்.

சமூகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் உங்களில் இருந்து தான் அது உருவாக வேண்டும். ஒருவரால் எந்த மாற்றத்தையும் இங்கு கொண்டு வந்துவிட முடியாது. ஒவ்வொருவராக மாற வேண்டும் அப்படி மாறினால் மாற்றம் நிச்சயம் வரும்.
முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்…….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக