சனி, மே 26, 2012

எண்ணெய் விலை உயர்வு காரணமென்ன?.




இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயை தாண்டி விடும். சர்வ தேச சந்தையை இந்தியாவில் திறந்தபின் வாகன கொள்முதல் இந்தியாவில் அதிகமாகிவிட்டது. இதனால் டூவீலர், கார் போன்ற வாகனங்கள் இந்தியாவில் பெருக்க தொடங்கியுள்ளன. 

இந்தியாவில் ஒரு வீட்டுக்கு மூன்று டூவீலர் என்பது சர்வசாதாரணம். தற்போது நடுத்தர குடும்பவாசிகள் கார் இருந்தால் தான் மரியாதை என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். இவர்களின் மன ஓட்டத்தை அறிந்தே குறைந்த விலை கார்கள் இப்போது சந்தைக்கு வந்துள்ளன. இப்படி வாகன பெருக்கத்தால், பெட்ரோல், டீசல் தேவை அதிகமாகிவிட்டது. வளைகுடா நாடுகளில் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனை தான் நமது அரசாங்கமும், பன்னாட்டு முதலாளிகளும் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

மக்கள் வாகனங்களை வாங்கி அழகு பார்க்கபோவதில்லை. ஓட்டித்தான் ஆகவேண்டும். வாகனம் ஓட வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் போட்டுத்தான் ஆக வேண்டும். இதனை யோசித்தே நாம் என்ன விலை சொன்னாலும் வாங்குவான் மங்குனி மக்கள் என்பதை உணர்ந்தே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே போகின்றன எண்ணெய் நிறுவனங்கள். 

பெட்ரோல் விலையை ஏத்த போகிறார்களாம் என்ற அறிவிப்பு வந்ததும் பங்க் வாசலில் க்யூ கட்டி நின்று டேங்க்கை நிரப்பிக்கொண்டு பறக்கும் என்றுமே தெருவுக்கு வந்து நமது எதிர்ப்பை காட்டுவதில்லை. இதனால் அரசாங்கம் தாறுமாறாக விலையேற்றத்தை அனுமதிக்கிறது. 

குற்றம் நம்மிடமே உள்ளது, பெட்ரோல் விலை உயரும் போதுயெல்லாம் எதிர்கட்சிகள் பந்த் செய்கின்றன. மக்களையும் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றன. மக்களாகிய நாம் அதை கண்டுக்கொள்கிறோமா என்றால் இல்லை. இல்லவேயில்லை. அதனால் தான், அரசை ஆள்பவர்கள் மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டார்கள் என உணர்ந்தே விலையேற்றம் என்ற ஆயுதத்தால் அடிக்கிறான். நாமும் வாங்கிக்கொண்டுயிருக்கிறோம். 

இந்த விலையேற்றத்துக்கு பின்னால் அமெரிக்காவின் பொருளாதார விளையாட்டும் உள்ளது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயரும் போதுயெல்லாம் உலக நாடுகளில் பொருட்களின் விலை உயரும். குறிப்பாக கச்சாபொருட்களின் விலை. குடந்த வாரத்தில் 55 ரூபாயாக இருந்த டாலார் மதிப்பு 56 ரூபாயாக ஏறியதும் நம் நாட்டில் உடனடியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது என்ற காரணமும் கூறப்பட்டது. 

எங்கோ இடி இடிக்க இங்கு மழை பெய்ய காரணமென்ன?. சர்வதேச சந்தையில் நாம் டாலரை தந்தே இந்தியா பொருட்களை கொள்முதல் செய்கிறது. இந்தியா மட்டுமல்ல 99 சதவித நாடுகள் ஏற்றுமதி - இறக்குமதிக்கு டாலரைத்தான் தருகின்றன. இதனால் அமெரிக்க ஒன்றியத்தின் பொருளாதாரம் விழுந்தாலும் எழுந்துவிடுகிறது. டாலர் மதிப்பு ஏற ஏற இந்தியாவில் விலையேறத்தான் செய்யும். இதனை தடுக்க ஒரே வழி சீனா முன்மொழியும் வழி. 

சர்வதேச சந்தையில் ஏற்றுமதி இறக்குமதிக்கு டாலருக்கு பதில் தங்கத்தை கொண்டு வியாபாரம் செய்யலாம். இல்லையென்றால் உலக நாடுகளுக்கு என பொதுவான ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வரலாம் என்கிறது. இது சாத்தியமானால் ஒரளவு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும். ஆனால் இதனை நம் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள். காரணம், அமெரிக்க விசுவாசம். பண வெறி. 

அதனால் மக்கள் எழுச்சி பெற்று அரசாங்கத்துக்கும், இதுபோன்ற மோசடிக்கு எதிராக போராடாத வரை எண்ணெய் விலை மட்டுமல்ல எல்லா விலையும் ஏறும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.  

1 கருத்து:

  1. சர்வதேச சந்தையில் ஏற்றுமதி இறக்குமதிக்கு டாலருக்கு பதில் தங்கத்தை கொண்டு வியாபாரம் செய்யலாம். இல்லையென்றால் உலக நாடுகளுக்கு என பொதுவான ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வரலாம் என்கிறது. இது சாத்தியமானால் ஒரளவு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும். ஆனால் இதனை நம் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள். காரணம், அமெரிக்க விசுவாசம். பண வெறி. // நிறைய செய்திகளை தெளிவு படுத்தும் பதிவு நீங்கள் சொல்வது போல் அனுபவித்துதான் ஆகவேண்டும் .

    பதிலளிநீக்கு