செவ்வாய், ஜூலை 01, 2014

கட்டிட விபத்தும் - பலப்பல கேள்விகளும்.






ஒரு விபத்து நடந்தால் தான் நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த பாடத்தை நாம் சரியாக படிப்பதில்லை என்பதே நிஜம். சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் லேசான மழைக்கே இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் அதற்குள் சிக்கினர். இதுவரை 28 பேர் இறந்துள்ளதாக அதீகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக இடிபாடுகளை அகற்றினால் தான் இறந்தது எவ்வளவு தொழிலாளர்கள். காயம்பட்டது எவ்வளவு பேர் என்பது தெரியவரும். 

கட்டிடம் இடிப்பட்டு தொழிலாளர்கள் சிக்கினார்கள் என்றதும் மாநில முதல்வர் ஜெ சம்பவயிடத்துக்கு வந்து பார்வையிட்டுவிட்டு இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி அளித்துவிட்டு போனார். சீமாந்திரா மாநில தொழிலாளர்கள் அதிகமாக அதில் சிக்கி இறந்துள்ளனர் என கேள்விப்பட்ட சீமாந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு, சம்வயிடத்துக்கு வந்து பார்வையிட்டுவிட்டு 5 லட்ச ரூபாய் நிதி தந்துள்ளார். உடனே தமிழக முதல்வர் என்னை விட நீ அதிகமா தர்றியா இப்போ பார் உன்னை விட அதிகமா நான் தர்றன் என முடிவு செய்து இறந்தவர்க்கு 7 லட்சம் பிக்ஸ் செய்துள்ளார். இப்படி பிணத்தை வைத்து அரசியல் செய்துக்கொண்டுயிருக்கிறார்கள். 

இவர்கள் அரசியல் ஒருபுறம்மிருக்கட்டும். வெளிப்படையாக, மிக வெளிப்படையாக இந்த கட்டிடம் இடிந்து விழுந்த்தில் விதிமுறைகள் மீறப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் இதை எதையும் ஆட்சியாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை, மனித உரிமை பேசுபவர்கள், அரசியல் கட்சிகள் உட்பட எதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் இதுப்பற்றி பேச மறுக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சி தலைவராக உள்ள எம்.எல்.ஏவும், நடிகருமான சரத்குமார், மின்னல் தாக்கி இந்த கட்டிடம் நொறுங்கி விழுந்துள்ளது என ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். 

ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியாவும் அரசாங்கத்துக்கு நோகாத படி மயிலிறகால் வருடுவது போல இந்த செய்தியை வெளியிடுகின்றன. இவர்களுக்கு இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது தெரியவில்லையா?, அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை என்பது தெரியாதா ?, இதுப்போன்ற கட்டிட்டங்கள் இன்னும் எத்தனை எத்தனை உள்ளன. அவற்றில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?, விதிமுறையை மீறுபவர்கள், மீற அனுமதிக்கும் அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன?, இதுப்பற்றி கேள்வி கேட்டுள்ளதா என்றால் இல்லை. இல்லவேயில்லை. 

ஏரிக்கரையின் கால்வாய் பகுதியில் இந்த 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு 11 மாடி கட்டிடம் ஒரே நேரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஓரு கட்டிடம் தான் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு காரணம் இடி விழுந்தது என விவகாரத்தை திசை திருப்புகிறார்கள்.
ஏரிக்கரை அருகே சாதாரண வீடு கட்டவே அனுமதியில்லை. அப்படியிருக்க 11 அடுக்கு மாடி வீடு கட்ட அனுமதி தந்தது எப்படி ?, 


சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அனுமதி தந்ததன் பின்னணியென்ன ?. இதற்கு அனுமதி தந்துள்ள நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சரான வைத்தியலிங்கத்துக்கு இதில் என்ன தொடர்பு ?. விதிமுறைகளை மீறி அனுமதி தந்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன ?.

விதிமுறைகளை மீறி லஞ்சம் தந்து அனுமதி பெற்ற கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் மட்டும் போதுமா?, தரமற்ற வகையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு நொறுங்கியுள்ளது. இதற்கு முன் இவர்கள் கட்டிய கட்டிடங்களின் தரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதா அரசாங்கம் ?

சென்னையின் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் ஆராயப்படுகிறதா?, ஆராயப்படவில்லையெனில் ஏன் ஆராயப்படவில்லை ?, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன ? விதிமுறைகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன ?

கட்டிட இடிபாடுகளில் எவ்வளவு சீமாந்திரா பகுதி தொழிலாளர்கள் சிக்கினார்கள், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இதுவரை தெரியாத நிலையில் அவசர அவசரமாக இறந்தவர்களுக்கு 5 லட்சம் சந்திரபாபு நாயுடு அறிவிக்க வேண்டிய அவசியம்மென்ன ?.


இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டும் கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனியின் உண்மையான முதலாளி யார் ?

இப்படி பல கேள்விகள் இதில் விடைதெரியால் தொங்கி நிற்கின்றன. யார் இதற்கு பதில் சொல்வது. சொல்ல வேண்டியவர்கள் மவுனமாக இருப்பது எதனால் ?. விசாரணை நடத்தாமலே அதிகாரிகள் தவறு செய்யவில்லை என முதல்வர் ஜெவே பேசுவது எதனால் ? அவர்களை காப்பாற்ற துடிப்பதுயேன் ?.

ஏழை தொழிலாளர்களின் உயிர் என்றால் சாதாரணமா ?. அவர்கள் மனிதர்கள் இல்லையா?, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை எப்படி மறக்கிறீர்கள் ?. 

எப்படியே கட்டிடம் விழுந்துடுச்சி அவுங்க தலையெழுத்து செத்துப்போய்ட்டாங்க. இனிமே பேசனா வந்துடவா போறாங்க. தர்ற நஷ்டயீடு வாங்கிக்கிட்டு போகட்டும் என சொல்லும் மனநிலை நம்மிடம் வந்துவிட்டது. இன்று மற்றவர்களுக்காக குரல் கொடுக்க நாம் தயங்கினால் நாளை நம் பிரச்சனைக்காக யாரும் குரல் தரமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.

1 கருத்து:

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

    பதிலளிநீக்கு