திங்கள், ஆகஸ்ட் 26, 2013

அன்பே அழகானது. – பகுதி 10.



ரஞ்சித் படிக்கும் பள்ளியின் அலுவலகத்துக்கு சென்ற மதன். அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் பிரின்ஸ்பால் மேடத்தை பாக்கனும்ங்க என்றான்.

மேடம் உள்ள பேசிக்கிட்டு இருக்காங்க கொஞ்சம் லேட்டாகும் உட்காருங்க சார்.

மதன் அங்கிருந்த சேரில் அமர்ந்து டேபிளில் இருந்த செய்தித்தாளை எடுத்து புரட்ட தொடங்கினான். ஏய் நீ வாத்தியாராச்சேன்னு பாக்கறன் இல்லன்னா அவ்ளோ தான் என்ற தடித்த கோபமான ஆண் குரல் பிரின்ஸ்பால் அறையில் இருந்து கேட்டது. குழப்பத்தோடு மதன் அறையை பார்க்க உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. குரல்கள் மட்டும் விட்டு விட்டு கேட்டது.

நீ பணக்காரன்னா நான் பயந்துடனும்மா. என்னை எவனும் ஒன்னும் பண்ண முடியாது. யார்க்கிட்ட வேண்ணா என்னப்பத்தி சொல்லு போய்யா என்றது மற்றொரு குரல்.

பியூன்னிடம் கேட்கலாமா என மதன் யோசிக்கும் போதே ஃபாதர் சப்போட் இருக்குதுன்னு இப்படி பண்றான் இந்தாளு என கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த பெண்ணிடம் ப்யூன் சொல்ல நமக்கேன் வம்பு விடுங்க சார் என்றது அந்தப்பெண்.

உம்பொண்ணு ஒழுக்கம்ன்னா எதுக்கு ரெண்டு கல்யாணம் பண்றா என கேட்டார்

ஸ்டீபன் சார், பசங்களுக்கு ஒழுக்கத்த போதிக்கற நீங்களே ஒரு சக லேடி டீச்சர இப்படி பேசலாமா என சிஸ்டர் சில்வியாவின் குரல் ஒலித்தது.

நீங்க சும்மாயிருங்க மேடம். ஒழுக்கம் இல்லாதவங்களப்பத்தி தான் பேசறன்.

மேடம் ரொம்ப தப்பா பேசறாரு. நான் போலிஸ்க்கு போக வேண்டியிருக்கும் என்றது தடித்த குரல்.

போய்யா என்ன ஒன்னும் புடுங்க முடியாது என்றார் ஸ்டீபன்.

அலுவலகத்தில் இருந்த அதே பெண்ணிடம் மீண்டும் ப்யூன், புதுசா வந்த அந்த டீச்சர்க்கிட்ட அசிங்கமா இவரு பேசனத அந்த பொண்ணு அவுங்கப்பாக்கிட்ட சொல்லி நியாயம் கேட்க கூட்டி வந்துயிருக்கு. எவ்ளோ கொச்சையா பேசறான் பாரும்மா. இவன்யெல்லாம் வாத்தியாரு எனச்சொல்ல அந்த பெண் தலையாட்டி கேட்டது. இன்னோன்னு தெரியுமா நேத்து போதையில நம்ம ஸ்கூல்ல ஆறாவது படிக்கற பையனை இவர் ஓட்டிம் போன ஸ்கூட்டி தான் இடிச்சி தள்ளிட்டு நிக்காம போச்சின்னு வாட்ச்மேன் வந்து சொன்னதும் மேடம் அதிர்ச்சியாகிட்டாங்க. அந்த பையனோட அப்பா நம்பர்க்கு போன் பண்ணாங்க. பெருசா அடியில்லன்னு சொன்னப்பிறகு தான் நிம்மதியானாங்க எனச்சொன்னபோது மதன் சடாரென எழுந்தவன் ப்யூனிடம், நேத்து பையனை இடிச்சிட்டு போனது இந்த ஸ்கூல் வாத்தியாரா ?.

ப்யூன் தயங்கி ஆமாம் சார்.

யாரு அது ?.

உள்ளயிருக்காரு சார் என கதவில் பொறுத்தப்பட்டயிருந்த சின்ன கண்ணாடி வழியாக அதோ நிக்கறாரு பாருங்க அவர் தான் என காட்டினார் ப்யூன்.

தடாலென மதன் கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல, யாரு என ஸ்டீபன் திரும்பி பார்க்கம்போதே பளார் பளார் என ஸ்டீபன் கன்னத்தில் அடி விழுந்தது. நிறுத்துங்க நிறுத்துங்க என சிஸ்டர் சில்வியா சத்தம் போட சிஸ்டரின் குரல் கேட்டு டேவிட் உள்ளே ஓடிவந்தார். டேவிட்டை பார்த்து அவரை தடுங்கயென சிஸ்டர் அலற டேவிட் மதனின் கையை பிடித்து இழுத்தார். அவரை உதறி விட்டு கையை மடக்கி ஸ்டீபன் வாய் மீது இன்னும் இரண்டு குத்து சேர்த்துவிட்டான். டேவிட் மதனை இழுத்து கெட்டியாக பிடித்துக்கொள்ள பீரோ பக்கத்தில் ஒடுங்கி உட்கார்ந்தார் ஸ்டீபன்.

ஸ்கூல்ல வந்து ரவுடித்தனம் பண்றிங்களா என சில்வியா குரலை உயர்த்தினார்.

நான் ரவுடித்தனம் பண்ணல. குடிச்சிட்டு வண்டிய ஓட்டிக்கிட்டு போய் என் பையன் மேல மோதி அவன் ஆஸ்பத்திரியில இருக்கான். இவனை எப்படி சும்மா விடச்சொல்றிங்க.

அய்யோ என்ற குரல் அந்த அறையே அதிரும்படி கேட்க அனைவரும் குரல் வந்த பக்கம் திரும்பினர். சுதா மயங்கி ஃசேர் மீது தடுமாறி விழ அவளது அப்பா பதறி போனார். சுதா என முனகியபடி ஓடிப்போய் சுதாவை த}ங்கினான் மதன். ஸ்டீபன், சில்வியா, டேவிட் உட்பட சத்தம் கேட்டு வந்த பிற ஆசிரியர்கள், அலுவலர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றனர். சில்வியா சிஸ்டர் சுதகரித்துக்கொண்டு தண்ணீ கொண்டு வாங்க என்றபடி சுதா அருகில் கலவரத்தோடு வந்தார்.

சுதா சுதா என கன்னத்தை தட்டியபடி இருந்தான் மதன். டம்பளரில் எடுத்து வந்த தண்ணீரை வாங்கி சில்வியா சுதாவின் முகத்தில் தெளித்தார். இரண்டு நிமிடத்துக்கு பின் கண்ணை திறந்த சுதா தன் எதிரே அப்பா பதட்டமாக நின்றிருப்பதும் தன்னை மதன் தாங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் என்னாச்சி என் பையனுக்கு என்னாச்சி என மதனிடம் கேட்டு அழுதாள்.

ஒன்னும்மில்ல. சின்ன அடி தான் என்றான் தயங்கியபடி.

பொய் சொல்லாதிங்க என்னாச்சி என் பையனுக்கு என பெருங்குரலெடுத்து அழ. அசோக் ஆஸ்பிட்டல்ல தான் சேர்த்துயிருக்கு என மதன் சொல்லும்போதே நான் என் பையனை பாக்கனும் என அழுதாள்.

நீ அழுவாத போகலாம் வா என மதன் எழுந்தபடி சுதாவை தூக்கியபோது நீ என்கூட வாம்மா என மதனை முறைத்தபடி சொல்லிவிட்டு சுதாவின் இடது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றார். மதன் கையை விட்டுவிட்டு ஏக்கமாக பார்த்துவிட்டு அழுதபடி சென்றாள். அனைவரும் அதை அமைதியாக பார்த்தபடி நின்றனர். மதன் மனதில் கோபம் வந்தது. அப்படியே ஸ்டீபன் பக்கம் திரும்பியவன் ஸ்டீபனை பார்த்து முறைத்தபடியே நீ பேசனத கேட்டன். இவளைத்தான் நீ பேசனன்னு தெரிஞ்சியிருந்தா அப்பவே உள்ள வந்து அடிச்சியிருப்பன். உன்ன ஒன்னும் பண்ண முடியாதா?. நாய கை, காலை உடைச்சிடுவன் ஜாக்கிரதை. நான் அவளோட புருஷன். அவ ஒழுக்கமானவளா கேட்டயில்ல அவ ஒழுக்கமா இருக்கறதால தான் அவுங்க அப்பாவ கூப்ட்டு வந்துயிருக்கா. கெட்டவளா இருந்தா அடியாளத்தான் கூப்ட்டு வந்துயிருப்பா. நீ இன்னைக்கு தப்பிச்சிட்டா அவ உன்னப்பத்தி எங்கிட்ட ஏதாவது சொன்னா இத விட இரண்டு மடங்கு அடிப்பன் ஜாக்கிரதை என்றதும் ஸ்டீபன் அமைதியாக முறைத்தபடி நின்றார்.

கொஞ்சம் அமைதியா இருங்க சார் என்றார் சில்வியா.

ஸாரி மேடம்.

பையனுக்கு எப்படியிருக்கு ?

பரவாயில்ல மேடம். உடம்பு சரியாக லேட்டாகும் போலயிருக்கு 15 நாளைக்கு லீவு கேட்க வந்தன்.

பரவாயில்ல உடம்பு சரியானதும் அனுப்புங்க.

தேங்ஸ் மேடம்.

நீங்க உட்காருங்க என மதனை பார்த்து சொன்னவர் டேவிட் காபி எடுத்து வாங்க. நீங்க கிளம்புங்க சார் என ஸ்டீபனை பார்த்து சொல்ல ஸ்டீபன் தலை கவிழ்ந்தபடி வெளியே சென்றதும் நான் உங்கள பாக்கலாம்ன்னு வெளியில உட்கார்ந்துயிருந்தப்ப இவர் பேசனத கேட்டன். இவ்வளவு மோசமான ஆள எப்படி நிர்வாகத்தல வச்சியிருக்கிங்க ?.

சர்ச்ல, ஆளும்கட்சியில செல்வாக்கான ஆளு. அவரோட மனைவி நல்லவங்க அதுக்காக இவர் பண்றத பொருத்துக்கிட்டு இருக்க வேண்டியதாச்சி என்றவர் சுதா தான் உங்க மனைவியா ?

ம் என தலையாட்டினான்.

பிரிஞ்சி இருக்கிங்களா ?.

தயக்கத்துடன் எஸ் மேடம்.

எப்பத்தலயிருந்து

மூனு வருஷமா.

மூனு வருஷம்மா என அதிர்ச்சியானவர் இரண்டு பேரும் பிரிஞ்சி இருந்து பையன் லைப்ப வேஸ்ட் பண்றிங்களே நியாயமா ?.

மதன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

உங்களோட பர்சனல் லைப்ல நான் தலையிடகூடாது. ஆனா இதல உங்க பையன் லைப் இருக்கறதால சொல்றன். பிரச்சனைய பேசி தீர்த்துக்குங்க. 

பிரச்சனைக்கு அவதான் காரணம். இப்பக்கூட பாருங்க அவுங்க அப்பா இழுத்துக்கிட்டு போனதும் பின்னாடியே போறா. பையன் மேல அவளுக்கு அக்கறையிருக்கா…

அக்கறையில்லாமலா மயங்கி விழுந்தாங்க என கேட்டதும் மதன் அமைதியாக இருந்தான்.

தாய்க்கு பாசம் இருக்காதா. நீங்க கொஞ்சம் விட்டு கொடுத்து போங்க அதான் லைப்க்கு நல்லது. இதுக்கு மேல நான் தலையிட விரும்பல நல்லது கெட்டது உங்களுக்கும் தெரியும் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா தயங்காம கேளுங்க.

நீங்க கேட்டதே போதும் மேடம்.

நீங்க போய் பையனை பாருங்க. நான் ஈவ்னிங் வந்து பாக்கறன்.

சரி மேடம் வர்றன் எனச்சொல்லிவிட்டு கிளம்பினான். பள்ளி கேட் அருகே வரும்போது பாண்டியனும், பிரபுவும் எதிரே டூவீலரில் வந்தனர். எதிரே நான் வருவதை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு என்னடா ஏதோ சண்டையாம் என்னாச்சி என கேட்டான் பிரபு.

யார் சொன்னது ?

பாண்டியன் ப்ரண்ட் இங்க வேலை பாக்கறாப்பல அவர்தான் போன் பண்ணாரு.

என்ன சண்டை ?

நடந்ததை முழுவதும் சொன்னதும் அவனை சும்மாவா விட்ட என கேட்டான் பிரபு.

நாலு வாங்கு வாங்கியிருக்கன்.

அதிருக்கட்டும் சுதா இங்க வேலை பாக்குதா என ஆச்சர்யப்பட்டவன் அது வேலை பாக்கறது உனக்கு முன்னாடியே தெரியுமா ?

இல்லடா.

ரஞ்சித்க்கு தெரியுமா ?.

தெரியல.

என்னடா ஸ்கூல் திறந்து இரண்டு மாசம்மாச்சி அவன் எப்படியும் பாத்துயிருப்பானே.

எதுவும் சொல்லல என்றேன் சில நொடிகள் அமைதி நிலவியது. சரி கிளம்பலாம் என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆஸ்பிட்டல் போய்ட்டு போகலாம் பாண்டியன் என்றதும் வண்டிகள் ஆஸ்பிட்டலை நோக்கி சென்றது.

வார்டுக்குள் நுழையும் போது வெளியே கீதா, ரேகா, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். அவர்களை நெருங்கியதும் உள்ளப்போய் பாக்க வேண்டியதானே ?.

டாக்டர் செக்கப் பண்ணிக்கிட்டு இருக்காரு சார் என்றான் ஸ்ரீதர்.

டாக்டர் வெளியே வந்தார். மதனை பார்த்ததும் ஒன்னும் பிரச்சனையில்ல. ரெஸ்ட்ல இருக்கட்டும், அதிகம் தொந்தரவு பண்ணாதிங்க எனச்சொல்லிவிட்டு சென்றார். அனைவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். கட்டிலில் படுத்திருந்த ரஞ்சித்தை ஆளாளுக்கு தடவி பார்த்தனர். ரேவதி வலிக்குதா குட்டி என கேட்க அவன் ஆமாம் என லேசாக தலையாட்டினான். சரியாகிடும் செல்லம் என ஆறுதல்படுத்தினாள்.

சாப்பிட்டியா குட்டி என கேட்டாள் மஞ்சு.

ம்.

என்ன சாப்பிட்ட ?

இட்லி.

மதன் தன் அப்பாவை பார்த்து நீங்க வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வாங்க. நான் இருந்து பாத்துக்கறன் என்றான். அவர் அமைதியாக இருந்தார். நீ ஆட்டோ புடிச்சி அனுப்பிட்டு வாடா என மதன் பிரபுவிடம் சொல்ல வாங்கம்மா போகலாம் என்றதும் இருவரும் கிளம்ப சாவி இந்தாம்மா என தந்தான்.

நீ சாப்பிட்டியா ?.

நான் இங்கயே சாப்ட்டுக்கறன்.

மதியத்துக்கு

வேணாம்மா.

இங்க வா என மதனை அறைக்கு வெளியே அழைத்த கலிவரதன் கத்தையாக பணத்தை அவன் கையில் திணித்தவர் செலவப்பாரு என்றவர் வா போகலாம் எனச்சொல்லியபடி மனைவியுடன் நடந்தார். பணத்தோடு அமைதியாக அறைக்குள் வந்தான். கொஞ்ச நேரத்தில் பிரபுவும் உள்ளே வந்தவன் மதியம் எங்கயும் வெளியில போய் சாப்பிட வேணாம்ன்னு சொன்னாங்க. அம்மா சமைச்சி எடுத்து வர்றாங்களாம் சொல்ல சொன்னாங்கடா.

ம்.

சரி கிளம்பலாமா என பாண்டியன் கேட்க அனைவரும் கிளம்பறோம் சார் என விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர். பிரபு மட்டும் நின்றிருந்தான். ஸ்ரீதர்க்கிட்ட சொல்லி பென்டிங் பில்கள வாங்கி வரச்சொல்லு. முக்கியமான பில்கள க்ளியர் பண்ணி அனுப்புடா என்றதும் தலையாட்டிவிட்டு ஏதாவது வேணும்ன்னா கால் பண்ணு எனச்சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் போனதும் ரஞ்சித் பக்கம் திரும்பினேன். அவன் தலையை தடவியபடி வலிக்குதா?.

மெல்லிய குரலில் இல்லப்பா என்றான்.

மாத்திரை போட்டுக்கிட்டியா

ம். தாத்தாவும் பாட்டியும் எங்கப்பா ?.

வீட்டுக்கு போயிருக்காங்க வருவாங்க.

நம்ம வீட்டுக்கா ?

உம் என்றதும் அமைதியானான். ரஞ்சித் என அழைத்ததும் என்னப்பா என கேட்டபடி என் முகத்தை பார்த்தான்.

உங்கம்மா உங்க ஸ்கூல்ல வேலை பாக்கறாங்களா ?.

அவன் முகம் இறுக்கமானது பதில் சொல்லாமல் பார்வையை கீழிறக்கி கொண்டான்.

என்ன வேலை பாக்கறாங்க.

டீச்சரா இருக்காங்கப்பா.

எங்கிட்ட சொல்லவேயில்ல என கேட்டதும் அமைதியாக இருந்தான். அப்போது குட்டிம்மா என அழுதபடி அறைக்குள் தன் அம்மாவுடன் வந்த சுதா தன் ஆசை மகன் கட்டுக்களோடு படுத்திருப்பதை பார்த்து எம்புள்ளய இப்படி பன்னிட்டானே பாவி என கட்டில் மேல் உட்கார்ந்து அழுதாள். தன் அம்மாவை கண்டதும் ரஞ்சித் அழ என் கண்ணுயில்ல அழாதடா என தலையில், கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு அழ அணையை திறந்தது போல் கண்ணில் இருந்து நீர் கொட்டியது. சுதாவின் அம்மா காவேரியும் பேரன் நிலையை கண்டு அழ தொடங்கியவர் கொஞ்ச நேரத்தில் அழாதம்மா என தன் மகளிடம் சொல்லிவிட்டு பேரனின் கை, கால்களை மெல்ல தூக்கி வலிக்குதா செல்லம் என கேட்டார். தேவராஜ் கண்ணில் தேங்கிய நீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி நின்றிருந்தார்.

மதன் அவர்களுக்கு வழிவிட்டு கட்டிலை விட்டு ஓரமாக நின்றிருக்க காவேரி மதன் அருகே சென்று நல்லாயிருக்கிங்களா மாப்ளா?. அங்க என்ன குசலம் விசாரிக்கற. புள்ளய வளக்க துப்புயில்ல அங்கப்போய் நல்லாயிருக்கியாங்கறா என கோபப்பட அமைதியாக இருந்தான் மதன். என்ன செய்வது என தெரியாமல் தயங்கி நின்றாள் காவேரி. தண்ணிம்மா என ரஞ்சித் கேட்டதும் தண்ணீ கேட்கறான் பாருங்க அத்தை என்றதும் காவேரி கட்டிலை நோக்கி நகர்ந்தார்.

தண்ணி குடித்து முடித்தவன் மம்மி என அழைத்தான்.

என்ன குட்டிம்மா ?.

தலையெல்லாம் வலிக்குது மம்மி என அழுதான் அந்த வார்த்தையை கேட்டு மனதளவில் நொறுங்கி போனான் மதன். சற்று நேரத்துக்கு முன் கேட்டபோது வலிக்கலப்பா என்றவன் தற்போது அவன் அம்மாவிடம் வலிக்குது என்றதை கேட்டு கலங்கிய கண்களோடு அறைக்கு வெளியே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் மனம் நிலையில்லாமல் இருந்தது. அவன் மேல எவ்வளவு அன்பு வச்சியிருந்தன். எங்கிட்;ட எதையும் மறைக்கமாட்டான்னு நினைச்சனே என எண்ணியபடி அமர்ந்திருந்தான்.

அப்போது ரமேஷ்சும், ரம்யாவும் ரஞ்சித் இருக்கும் அறையை தேடி வந்தனர். வெளியே மதன் அமர்ந்திருப்பதை பார்த்து வேகவேகமாக அருகில் வந்து நின்றனர். தன் அருகில் நிழலாடுவதை கண்டு தலையை உயர்த்தி வாங்க எனச்சொல்லியபடி எழுந்த மதனிடம் என்னாச்சி என கேட்டான் ரமேஷ்.

மதன் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

இப்ப எப்படிண்ணா இருக்கான் ?.


பரவாயில்லன்னு டாக்டர் சொன்னாரு. இந்த ரூம்ல தான் இருக்கான். உள்ள மாமாவும், அத்தை, சுதா எல்லாம் இருக்காங்க போய் பாருங்க என்றதும் உள்ளே சென்றனர். வெளியவே அமர்ந்தான் மதன்.

மதியம் ஒரு மணியானது நர்ஸ் வந்து இந்த கஞ்சிய தாங்க என தந்துவிட்டு சென்றார். சுதா ஸ்பூனில் கஞ்சியை ரஞ்சித்க்கு ஊட்டிவிட்டாள். கொஞ்ச நேரத்துக்கு பின் மீண்டும் அறைக்கு வந்த நர்ஸ், சாப்பிட்டானா என கேட்டதும் சாப்பிட்டான் என்றாள் சுதா. அவனுக்கான டானிக்கும், மாத்திரையும் தந்துவிட்டு மாத்திரை சாப்பிட்டதும் பையன் தூங்குவான் டிஸ்டப் பண்ணாதிங்க எனச்சொல்லிவிட்டு சென்றார். ரஞ்சித்க்கு மாத்திரை தந்ததும் கொஞ்ச நேரத்தில் தூங்க தொடங்கினான். சுதா அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சுதா என தேவராஜ் அழைத்ததும் என்ன என்பதை போல் பார்த்தாள். நீ அண்ணன், அண்ணியோட போய் சாப்பிட்டுட்டு வாம்மா ?. 

எனக்கு வேணாம்ப்பா. நீங்கயெல்லாம் போய் சாப்பிட்டுட்டு வாங்க.

சாப்பிடாம பட்டினியா இருந்து உடம்ப கெடுத்துக்காத என்ற காவேரியிடம் பசியில்ல வேணாம்மா என சுதா சொல்ல. அடம்பிடிக்காத அண்ணனோட போய் சாப்பிட்டுட்டு வா அதுவரைக்கும் நானும் அப்பாவும் பாத்துக்கறோம் என கட்டாயப்படுத்தினாள் காவேரி. ஒரு ஜீஸ்சாவது சாப்பிடு சுதா என ரம்யாவும் அழைக்க தன் மகனின் கட்டில் மேலிருந்து எழுந்தாள். தேவராஜ் எழுந்து பாத்ரூம்க்குள் சென்றார். உடனே காவேரி தன் மகன் அருகில் வந்து பாத்ரூம் கதவை பார்த்தபடி மெல்லிய குரலில் மாப்பிளையையும் அழைச்சிம்போ.

சரிம்மா என்ற ரமேஷ் வெளியே வர சுதாவும், ரம்யாவும் உடன் வந்தனர். வெளியே கைகட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மதன் அருகில் வந்த ரமேஷ்சிடம், மதிய சாப்பாடு சாப்ட்டானா, மாத்திரை தந்தாச்சா?.

அதெல்லாம் தந்தாச்சி. நீங்க சாப்பிட்டங்களா ?.

ம்.

எங்கண்ணா நீங்க இந்த இடத்தலயிருந்து நகரவேயில்ல. சும்மா சாப்பிட்டன்னு பொய் சொல்லாதிங்க. அவனை நினைச்சி ஃபீல் பண்ணாதிங்க அவனுக்கு ஒன்னும்மில்ல சரியாகிடும்.

இல்ல நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க. அப்பாவும், அம்மா வந்துயிருக்காங்க. காலையில தான் வீட்டுக்கு அனுப்பிவச்சன். அம்மா மதிய சாப்பாடு எடுத்து வர்றன்னு சொல்லியிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க என்றான்.

டைம் ரெண்டாகுது. அவுங்க எப்ப வந்து நீங்க எப்ப சாப்பிடறது. வாங்க போகலம் என ரமேஷ் வற்புறுத்த சுதா அமைதியாக தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரம்யா பின்னால் நின்றிருந்தாள்.

தொடரும்…………

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

அன்பே அழகானது. – பகுதி 9.

படம் வரைந்த கூகுளில் அப்லோட் செய்த ப்ரியாவுக்கு நன்றி.


சுதாவுக்கு இரண்டு புருஷனாம் என மாலதி சக ஆசிரியர்களிடம் கிசுகிசுப்பாக சொல்ல பள்ளியில் ஆசிரியர்கள் மத்தியில் அதுவே பெரும் டாப்பிக்காக இருந்தது. சுதா ஒய்வு அறையில் இல்லாத போது இரண்டு முறை திருமணம் ஆளாளுக்கு தங்களது கற்பனையில் உதித்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

அப்போது உள்ளே வந்த ஸ்டீபன்னிடம் சக ஆசிரியர் ஒருவர் புதுசா வந்துயிருக்கற சுதா டீச்சர்க்கு இரண்டு முறை கல்யாணம்மாச்சாம் சார் என்றார்.

ஆளப்பாத்தா அதிகமா இருக்கும் போல என்றார் நக்கலாக.

இதை கேட்டு ப்ரியா மனதில் வெறுப்பு வந்தது.

நான் சொல்றது சரிதானே ப்ரியா மேடம் என இரண்டு பல் வரிசை தெரியும் படி சிரித்துக்கொண்டே கேட்டார் ஸ்டீபன்.

அப்போது வகுப்பு முடிந்து சுதா உள்ளே வர எல்லோரும் அமைதியானார்கள். ஸ்டீபன் மட்டும் வெளியே செல்லும் போது சுதாவின் உடலை மேலிருந்து கீழ்வரை பார்த்தபடி வெளியே சென்றார். அந்த பார்வையில் அத்தனை விரசம். அதனை உணர்ந்த சுதா ப்ரியா பக்கத்தில் அமர்ந்தபடி ச்சீ இப்படியா கேவலமா நடந்துக்குவாரு என முணுமுணுத்தாள்.

சும்மாயிரு என்றாள் ப்ரியா.

பின்ன அப்படி பாத்தா என்னங்க அர்த்தம்.

யாராவது கேட்டு அவர்க்கிட்ட போட்டு தந்தாங்கன்னா உங்களுக்கு நிறைய குடைச்சல் தருவாரு.

அதுக்காக அவர் பண்றத பொறுத்துக்க சொல்றிங்களா என கேட்டாள் கோபமாக.

அப்பறம் பேசிக்கலாம் சும்மாயிருங்க என ப்ரியா சொன்னதும் அமைதியானாலும் மனதில் கோபம் அனலாய் எரிந்தது.

மாலை வீட்டுக்கு போகும்போது சுதா ப்ரியாவிடம், அவர் பெரியா ஆளா இருக்கட்டும் மேடம் அதுக்காக இப்படி மோசமா பிகேவ் பண்றாரு. கேட்ககூடாதுன்னா என்ன அர்த்தம்.

கேட்டா பிரச்சனை வரும். அவருக்கு நிறைய செல்வாக்குயிருக்கு. அவருக்கு தான் எல்லோரும் சப்போட் பண்ணுவாங்க.

யாராவது ஒருத்தர் கூடவா நியாயம் பேசமாட்டாங்க.

நம்மக்கிட்ட பேசுவாங்க. சபையில பேசமாட்டாங்க. நான் இத பல வருஷமா பாத்துக்கிட்டு இருக்கன்.

அதுக்காக இப்படியே விடச்சொல்றிங்களா.

நாய் கடிக்குதுன்னா நாம திருப்பி கடிக்க முடியாதுயில்ல. அதனால போடான்னு விட்டுட்டு வேலையப்பாருங்க என ப்ரியா சொன்னதை சுதா கேட்டாலும் அவள் மனசு மட்டும் ஆறவில்லை. வண்டியில் வீட்டுக்கு கிளம்பினாள்.

ஒருவாரம் கடந்துயிருக்கும் அன்றைய கடைசி பீரியட் டீச்சர்ஸ்க்கான அறையில் சுதா மட்டும் அமர்ந்து பத்தாம் வகுப்பு புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டு இருந்தாள்.

ஸ்டீபன் உள்ளே வந்தார். சுதா வருவதை பார்த்தாலும் கண்டும் காணாமல் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தார். சுதாவுக்கு எதிர் டேபிளில் அமர்ந்தவர் சுதாவை வெறித்துபார்த்தவர் மேடம் என அழைத்தார்.

சுதா பார்க்க க்ளாஸ் இல்லையா என கேட்டார்.

இரண்டு பீரியட் ப்ரி சார் என வெறுப்பாக பதில் சொல்ல ஸ்டீபன்க்கு கோபம் எட்டிபார்த்தது. புதுசா வந்தவ என்னையே அலட்சியப்படுத்தறாளே என மனதுக்குள் வெம்பியவர்.

ப்ரீ கிடைச்சாலும் இரண்டா கிடைக்குது. வேலை பாத்தாலும் டபுளா வேலை பாக்கறிங்க என டபுள் என்பதை அழுத்தி சொன்னார்.

புரியல சார்.

வீட்ல உங்களுக்கு ‘டபுள் வேலையாம்மே’ என டபுள் மீனிங்கிள் கேட்டார்.

சுதா முறைக்க அதை அலட்சியப்படுத்திய ஸ்டீபன், கல்யாணம் ரெண்டு, வேலை இரண்டு, குழந்தையும் இரண்டுதானா இல்லை இரண்டு இரண்டா என கொச்சையாக கேட்டார்.

அதை கேட்டு சுதா மனம் குமுறி டீசன்டா பேசுங்க சார் என்றாள் கோபமாக.

கோபமா பேசனா. நீ ஒழுக்கமானவளா என நேரடியாக தாக்க சுதாவின் கண்ணில் நீர் முட்டியது.

வாங்க வண்டியில ட்ராப் பண்றன்னு கேட்டதுக்கு ஏதோ ஆம்பளை கையே படாதவ மாதிரி நடந்துக்கிட்ட. இப்பத்தான் உன் யோக்கிதை தெரிஞ்சிடுச்சே. ஆப்பறம்மென்ன உன்கிட்ட போய் டீசன்டா பேசறது என்றார் நக்கலின் உச்சத்தில்.

சுதாவின் கண்ணீல் நீர் தளும்பி வர தன் ஹேன்ட் பேக்கை எடுத்தபடி உங்களை சும்மா விடமாட்டன் என்றாள் ஸ்டீபனை முறைத்தபடி.

உன்னை மாதிரி சவால் விட்டவளுங்க என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட வந்து சரணடைஞ்சாளுங்க. நீ இங்க தானே வேலை பாக்கனும் எங்கிட்ட எப்படி சிக்காம போறன்னு நான் பாத்துக்கறன் என ஆணவத்தின் உச்சத்தில் பேசியதை கேட்டபடி கண்ணீரை துடைத்துக்கொண்டு வேகவேகமாக வெளியே வந்தவள் யாரிடமும் சொல்லாமல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.


மதன் தன் அறையில் விளம்பர டிசைன்களை ஃபைனல் செய்துக்கொண்டு இருந்தான். அப்போது தான் அவனது செல்போன் சத்தம் போட்டது. எடுத்து பார்த்தபோது ஆட்டோ டிரைவர் மணி நம்பரில் இருந்து கால் வந்தது. இவர் எதுக்கு இப்ப போன் பண்றாரு என நினைத்தபடி அட்டன் செய்தபோது மதன் சார் தானே என்றார் பதட்டமான குரலில்.

இருங்க பொறுமையா பேசுங்க மணியன்னே.

சார் ரஞ்சித்த ஒரு டூவீலர் மோதிட்டு போய்டுச்சி சார் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் போய்க்கிட்டு இருக்கு. அசோக் ஆஸ்பிட்டலுக்கு வந்துடுங்க சார் என்றார் பதட்டமான குரலில்.

என்னண்ணா ஆச்சி என மதன் அலற பிரபு, பாண்டியன், மஞ்சு, கீதா, ரேவதி உட்பட அனைவரும் அவன் அறையை நோக்கி ஓடிவர மதன் கதவை திறந்துக்கொண்டு வெளியே வர என்னடா ஆச்சி என பிரபு அவன் தோளை பிடித்துக்கொண்டு கேட்டான். ரஞ்சித்த ஏதோ டூவீலர்காரன் மோதிட்டு போய்ட்டானாம். அசோக் ஆஸ்பிட்டல்க்கு கொண்டும் போறாங்களாம் என சொல்லியபடி தன் டூவீலரை நோக்கி ஓடினான்.

இரு நான் வண்டி ஓட்டறன் என பிரபு வண்டியை எடுத்துக்கொண்டு போக பாண்டியன் நீங்க இருங்க நான் பாத்துட்டு போன் பண்றன் என மஞ்சு, கீதா, ரேவதியிடம் சொல்லிவிட்டு பின்னாடியே கிளம்பினார்.

அசோக் மருத்துவமனை வாசலில் ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தார். பிரபு வண்டியை நிறுத்தும் முன்பே அழுத முகத்தோடு மணியிடம் எங்கண்ணே அவன் என கேட்டபடி ஓட எமர்ஜென்சியில அட்மிட் பண்ணியிருக்கு சார் டாக்டர் பாத்துக்கிட்டு இருக்காரு.

அப்போது ஒரு நர்ஸ் டிரைவர் மணியிடம் பையன் அப்பா, அம்மா வந்துயிருக்காங்களா ?.

நான் தாங்க பையனோட அப்பா.

என் கூட வாந்து ஃபார்ம் பில் பண்ணிதாங்க. அட்மிஷன் பீஸ் ஃபைவ் தவுசன் கட்டுங்க என்றதும் நீ இருடா நான் பாத்துக்கறன் என நர்ஸ்சுடன் போனான்.

பையன் எங்கயிருக்கான், எப்படியிருக்கான், நான் அவனை பார்க்கனும் என பதட்டமாக கேட்டபடி நர்ஸ் பின்னாடி மதன் ஓட. டாக்டர் செக் பண்ணிக்கிட்டு இருக்காரு. உள்ள போக முடியாது வெயிட் பண்ணுங்க என்றார்.

கதவு வழியாக எட்டி எட்டி பார்க்க உள்ளே ரஞ்சித் அம்மாhhhhhhhhh என கத்துவது கேட்டு இவன் அழ தொடங்கினான். பாண்டியன் ஓடி வந்து என்ன சார் அழுதுக்கிட்டு ஒன்னும் ஆயிருக்காது சார் என சமாதானப்படுத்தினான். மதனின் அழுகையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.

உள்ளே ரஞ்சித் அழு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. 20 நிமிடத்துக்கு பின் டாக்டர் வெளியே வந்தவரை ஒதுக்கிவிட்டு உள்ளே ஓடினான். டாக்டர் அதை திரும்பி பார்க்க பையனோட அப்பா சார் என்ற பாண்டியன். காயம் பெருசா சார் என கேட்டான். பெருசா ஒன்னும்மில்ல. அப்பறம்மா வந்து என்னை பாக்க சொல்லுங்க என சொல்லிவிட்டு நடந்தார்.

ரஞ்சித் பெட்டில் தலையில் பெரிய கட்டு, வலது கை, வலது காலிலும் கட்டுப்போடப்பட்டுயிருந்தது. மயக்கத்தில் இருந்தான். மதன் அவன்கிட்டே நெறுங்கி தலையில் கை வைக்க முயல அங்கிருந்த நர்ஸ் தையல் போட்டுயிருக்கு. அதனால கை வைக்காதிங்க டிஸ்டப் பண்ணாதிங்க. மயக்க ஊசி போட்டுயிருக்கறதால நல்லா தூங்குவான் பயப்படாதிங்க எனச்சொல்லிவிட்டு சென்றார்.

கட்டில் மேல் உட்கார்ந்திருந்த மதன் அருகே வந்த பாண்டியன் பயப்படறதுக்கு ஒன்னும்மில்லைன்னு டாக்டர் சொன்னார் சார் என்றான். பிரபுவும் உள்ளே வர அங்கு வந்த இரண்டு கம்பவுண்டர்கள் பையனை வார்டுக்கு மாத்தனும் அங்க வந்து பாருங்க எனச்சொல்லிவிட்டு பையனை ஸ்ட்ரெச்சரில் வைத்து வார்டுக்கு தள்ளிக்கொண்டு சென்றார்கள். மதன் பிரபுவை பார்க்க ஸ்பெஷல் வார்டு போட்டுயிருக்கன் என்றான். கொஞ்சம் அகலமான அறையில் இருந்த பெட்டில் படுக்கவைத்தவர்கள் இன்னும் இரண்டு மணி நேரம்மாகும் மயக்கம் தெளிய என சொல்லிவிட்டு சென்றனர்.

சார் உங்கள டாக்டர் வந்து பாக்க சொன்னாரு என பாண்டியன் சொன்னதும் அவரது பெயரை கேட்டுக்கொண்டு அவரை தேடி சென்றான். டாக்டர், மதனிடம் நல்ல வேளை பையனுக்கு பெருசா அடியில்ல. மோதனதும் கீழ விழுந்து ரோட்ல தேச்சிக்கிட்டு போனதுல கை, கால்யெல்லாம் சிராய்ப்பு, தலையில மட்டும் லேசா அடிப்பட்டுயிருக்கு. சரியாகிடும். பயப்படறமாதிரி ஒன்னும்மில்ல என்றவர். பையனோட அம்மா வரலியா ?.

வரமாட்டாங்க சார்.

மயக்கத்தலயும் அம்மா அம்மான்னு பையன் சொல்லிக்கிட்டு இருந்தான் அம்மா பாசத்துக்கு ஏங்கறான் பாத்துக்குங்க. சின்ன வயசுலயே அவனுக்கு மனவிரக்திய தராதிங்க அது அவன் லைப்ப ஸ்பாயில் பண்ணிடும் என்றவர் ஒன் வீக் ஆஸ்பிட்டல்ல இருக்கட்டும் அதுக்கப்பறம் அழைச்சிக்கிட்டு போங்க என்றதும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தான். அறையை நோக்கி நடந்தபோது பிரபு அறைக்கு வெளியே நின்று, ரஞ்சித்க்கு உடம்பு சரியில்ல ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கு என யாருக்கோ சொல்லிக்கொண்டு இருந்தான். மதன் அருகே வந்ததும் பேச்சை நிறுத்தினான்.

யாரு ?.

உங்க அப்பாக்கிட்ட என்றதும் பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்றான். அறைக்குள் பாண்டியன் பயப்படறமாதிரி ஒன்னும்மில்ல மஞ்சு. மத்தவங்கிட்டயும் சொல்லிடு என சொல்லிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த மதன் பாண்டியனிடம் பேசிட்டு தாங்க என்றார். பேசுங்க சார் என செல்போனை தர ஆபிஸ் நீங்களே பூட்டிடுங்க. நாளைக்கு நீங்களே திறங்க எனச்சொல்லிவிட்டு தர பாண்டியன் செல்போனை வாங்கிக்கொண்டு வெளியே சென்றார்.

பிரபுவும், டிரைவர் மணியும் உள்ளே வந்தனர்.

டிரைவரை பார்த்த மதன், உங்கள நம்பிதாண்ணே பையனை விட்டன்.

இல்ல சார். ஸ்கூல் விட்டு ஓடிவந்தவன் ஃபேக்க ஆட்டோவுல வச்சிட்டு எதிர்லயிருந்து கடையில ஐஸ்கிரிம் வாங்கிவர்றன்னு போய் வாங்கிக்கிட்டு வந்தான். அப்ப ஸ்கூல்லயிருந்து வெளியில வந்த ஒரு ஸ்கூட்டி அவனை மோதிட்டு போய்டுச்சி சார் என்றார்.

ரொம்ப நன்றிண்ணே.

என்ன சார் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு. இது என் கடமை சார்.

பரவாயில்லண்ணே. டைம்மாச்சி வீட்டுக்கு கிளம்புங்க.

தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க சார்.

உங்கமேல என்ன தப்பு. அவன் விளையாட்டா இருந்துட்டான். சின்ன அடியோட போச்சி பாத்துக்கலாம் ஃபீல் பண்ணாதிங்க கிளம்புங்க என்றான். வர்றன் சார் எனச்சொல்லிவிட்டு மணி கிளம்பியதும் அந்த அறையில் பிரபுவும், பாண்டியனும் மட்டும் இருந்தனர்.

பிரபு, அவுங்க ஸ்கூல் பிரின்ஸ்பால் பேசனாங்க. எப்படி இருக்கான்னு கேட்டாங்க ஒன்னும் பெரிய அடியில்லன்னு சொல்லியிருக்கன்.
ம்.

டாக்டர் என்ன சார் சொன்னாரு என பாண்டியன் தான் கேட்டான்.

தரையை பார்த்தபடி அமர்ந்திருந்த மதன், பயப்படற மாதிரி ஒன்னும்மில்லையாம். ஒரு வாரம் ஆஸ்பிட்டல்ல இருக்கட்டும்ன்னு சொல்லியிருக்காரு.

அவ்ளோ தானா என பிரபு சந்தேகத்தோடு கேட்டான்.

அம்மா பாசத்தல புலம்பறான்னு சொன்னாரு.

இப்பவாவுது சொல்றத கேளுடா என பிரபு சொல்ல உங்க பிடிவாதத்த கொஞ்சம் விடுங்க சார் இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்படியே இருப்பிங்க, உங்க பையன் வாழ்க்கையை மனசுல நினைச்சி பாருங்க என்றான் பாண்டியன்.

அவன் சரியாகட்டும் யோசிக்கறன் என்றபோது அவர்கள் முகத்தில் சிறு பிரகாசம். பாண்டியன் நீங்க கிளம்புங்க. நைட்டாகிடுச்சி வீட்ல தனியா இருப்பாங்க.

இருக்கட்டும் சார்.

பராவயில்ல கிளம்புங்க டாக்டர் தான் ஒன்னும்மில்லன்னு சொல்லிட்டாரே. நான் பாத்துக்கறன்.

பாண்டியன் கிளம்பி செல்லவும், பிரபு மனைவி பதட்டத்தோடு உள்ளே வந்தார். என்னண்ணா நீங்க பையனை பாத்துக்கறதில்லயா என சொல்லிவிட்டு வாஞ்சையோடு அவனின் தலையை தடவி விட்டவர். டாக்டர் என்ன சொன்னாருண்ணா ?.

பயப்படறமாதிரி ஒன்னும்மில்லன்னு சொன்னாரும்மா.

தலையில அடிப்பட்டுயிருக்கு ஸ்கேன் எடுத்து பாருங்கண்ணா

டாக்டர் எடுக்கலாம்ன்னு சொல்லியிருக்காரு எனச்சொன்னதை கேட்டு அமைதியாக நின்றவர் தன் கணவரிடம் ஒரு கவரை தந்தார். பிரபு அதை வாங்கி இந்தாடா என்றான்.

என்ன ?.

வாங்கி பாத்துட்டு அப்பறம் பேசு.

அதை வாங்கி பார்த்தபோது உள்ளே நூறு ரூபாய் கட்டு மூன்று இருந்தன. என்னடாயிது.

செலவுக்குண்ணா.

காசு இருக்கும்மா.

இந்த மாசம் ரொம்ப டைட்டா இருக்குன்னு இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஆஸ்பத்திரி செலவுக்கு காசு இருக்காதுன்னு தெரியும் அதான் என இழுத்தது. 

மச்சான்க்கு கல்யாணம் செலவுக்கு காசுயில்லன்னு கடன் கேட்டுக்கிட்டு இருக்கான். நீ என்னடான்னா காசு எடுத்து தர்ற உங்ககிட்ட காசு ஏது ?.

அதவிடுடா.

காசுயேது அதச்சொல்லுங்க முதல்ல.

அவர் ரஞ்சித்துக்கு ஆக்சிடன்டுன்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்காருன்னு சொன்னதும் கவலையாகிடுச்சி. சும்மாவே அதிகமா ஃபில் போடற ஆஸ்பிட்டல். ஏப்படியும் நீங்களும் டைட்டா தான் இருப்பிங்கன்னு தெரிஞ்சிதான் மூனு பவுன் செயின் அடகு வச்சி பணம் வாங்கி வந்தன் என சொன்னபோது என்ன சொல்வது என தெரியாமல் அமைதியானேன்.

ஊருக்கு சொல்லியாச்சாண்ணா.

இவன் தான் சொன்னான்.

எப்போ வர்றாங்களாம்.

மாடு, கன்னுயிருக்கு பாத்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டு காலையில வந்துடுவாங்க என்றான் பிரபு.

உங்களுக்கு நைட் சாப்பாடுண்ணா.

இல்லம்மா முதல்ல அவன் கண் முழிக்கட்டும்.

டாக்டர் தான் ஒன்னும்மில்லன்னு சொல்லிட்டாருயில்ல. நீங்க சாப்பிடுங்க உங்க உடம்ப பாத்துக்கிட்டா தான் அவனை நல்லா பாத்துக்க முடியும்.

நீ இரு நாங்க கேன்டீன் வரை போய்ட்டு வர்றோம் என்ற பிரபு வாடா ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம் என அழைத்தான்.

இரு போகலாம்.

அவன் கண் முழிக்க லேட்டாகும் வா போகலாம் என கட்டாயப்படுத்தி இழுத்து சென்றான். கேன்டீனில் டீ சாப்பிட்டாலும் அது நெஞ்சு குழிக்குள்ளே இருந்தது. அப்போது பிரபு செல்போன் ரிங்கானது. எடுத்தவன் உங்கப்பா கூப்பிடறாரு என்றவன் ஆன் செய்து பேசினான். அசோக் ஹாஸ்பிட்டல்ப்பா என்றான். சரியென அவர் கட் செய்துவிட்டார்.

பஸ் ஸ்டான்ட்ல இருக்காறாம்.

ம்.

காபி சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்ப ரஞ்சித் ஏதோ முனகியபடி இருக்க பிரபு மனைவி தான் காதை கிட்டே கொண்டு சென்று கேட்டது. அவன் என்ன சொல்வான் என்பது மனதுக்கு தெரிந்தது.

அம்மா அம்மாங்கறாண்ணே என்றவள் சில நொடிகள் பொறுத்து அவன் நல்லா வர்றதும், கெட்டு போறதும் உங்ககிட்டதான்னே இருக்குது என்றார்.

பாத்துக்கறன்ம்மா என்றதும் அந்த வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் இருப்பது அவர் முகத்தை பார்த்தபோது தெரிந்தது.

இந்த ரூம் தான் என கம்பவுண்டர் அழைத்து வந்து விட மதனின் அப்பாவும், அம்மாவும் உள்ளே வந்தனர். மதனின் அம்மா கோதை அழுதுக்கொண்டே வந்தவர் பேரனை பார்த்ததும் அய்யோ சாமீ என பெருங்குரலெடுத்து அலறினார். அய்யோ எம் பேரன் இப்படி கிடக்கறானே அந்த அய்யனாருக்கு கண் இல்லையா என அழ தொடங்கினார். நர்ஸ் வந்து அழாதிங்கம்மா எனச்சொல்லிவிட்டு சென்றார்.

அழுகையை அடக்க முடியாமல் முந்தாணியால் வாயை பொத்திக்கொண்டு கோதை அழ, கலிவரதனும் கலங்கி தோள் மீது கிடந்த துண்டால் தன் கண்ணீரை துடைத்தவர் பிரபு பக்கம் திரும்பி என்னப்பாச்சி என கேட்டார். அவன் நடந்ததை சொன்னான். டாக்டரு என்ன சொன்னாரு என கோதை கேட்டதும், பிரச்சனை எதுவும்மில்லன்னு சொன்னாரும்மா. ஒரு வாரத்துக்கு ஆஸ்பத்திரியில இருக்கட்டும்ன்னு சொல்லியிருக்காரு.

எப்ப முழிப்பான். இன்னும் கொஞ்ச நேரத்தல முழிச்சிக்குவான் என்றதும் பேரன் முகத்தை பார்த்தபடி கோதை தரையில் அமர்ந்தார். கலிவரதன், பிரபுவின் மனைவியிடம், எப்படிம்மா இருக்க?, பசங்க எப்படி இருக்காங்க?, என நலம் விசாரித்தார்.

நேரம்மாச்சி. பசங்க தனியா இருக்கபோறாங்க வீட்டுக்கு கிளம்புங்க என்றதும் பிரபுவும், அவன் மனைவியும் பாத்துக்குங்க எனச்சொல்லிவிட்டு மதனிடம் சொல்லிவிட்டு கிளம்பினர். கொஞ்ச நேரத்தில் ரஞ்சித் மயக்கம் தெளிந்தான். அவன் கன்னத்தில் கோதை கை வைத்ததும் ம்மா வலிக்குதும்மா….

தொடரும்………….

சனி, ஆகஸ்ட் 10, 2013

அன்பே அழகானது. – பகுதி – 8.



கோதை முட்டிக்கொண்டு வந்த கண்ணீருடன் ராகுகாலத்தல போகாதடா. ஆறு மணிக்கு மேல போடா எனச்சொல்ல ரஞ்சித்தை இழுத்துக்கொண்டு டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் மதன்.

அவன்தான் சொல்றத கேட்கறதில்லன்னு தெரியும்மில்ல. சும்மா ஒன்னுக்கிடக்க ஒன்னு பேசி எப்பவாவுது வர்றவனை இப்படி பேசி அனுப்பிட்டிங்களே நியாயமா என கண்ணீர் விட்டாள்.

ஏய் அப்படியே போட்டன்னா போடீ உள்ள எனச்சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றார். ராகுகாலத்த போறனே என கோதை புலம்பியபடி உள்ளே வர. அவன் எமனையே எட்டி உதைப்பான் நீ சும்மாயிருடீ என சலிப்பாக சொன்னவரின் மனதில் கொஞ்சம் அச்சம் இருந்தது. கோதை மூக்கை உறிஞ்சியபடி உள்ளே செல்ல. கலிவரதன் விநாயகர் படத்தை பார்த்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரை ஓட்டிக்கொண்டு இருந்த மதனிடம் ஏம்ப்பா தாத்தாக்கிட்ட சண்டை போட்ட.

ஓன்னும்மில்லடா என்றான் கோபமான குரலில். ரஞ்சித் அமைதியானான்.

ஆறேகால்க்கு வீட்டுக்கு வந்திருந்தான். கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்த போது செல்போன் அடித்தது. வேண்டா வெறுப்பாக எடுத்தபோது அவனது அப்பா அழைப்பது தெரிந்தது. அருகில் இருந்த ரஞ்சித்திடம் இந்தா பேசு என செல்போனை தந்தான்.

டீஸ்ப்ளே பார்த்தவன் முகத்தில் ஒரு மலர்ச்சி. ஆன் செய்து தாத்தா என்றான்.

ரஞ்சித்து… ஊருக்கு போயாச்சா

இப்பத்தான் தாத்தா வந்தோம்.

சரி நாளைக்கா பேசறன்.

சரி தாத்தா எனச்சொல்லிவிட்டு செல் லைனை கட் செய்தான்.

மறுநாள் எழுந்து ரஞ்சித்தை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மதன் அலுவலகம் கிளம்பினான். அலுவலகத்தில் அறையில் இருந்த பிரபு நுழைந்ததும் என்னடா நேத்து உன் செல்க்கு ட்ரை பண்ணன் லைன் கிடைக்கல.

ஊருக்கு போயிருந்தன்.

உங்கப்பா என்னச்சொன்னாரு.

எப்பவும் போலத்தான். கடைசியில சண்டை வந்துடுச்சி கிளம்பி வந்துட்டன்.

திருந்தவே மாட்டியாடா நீ.

நீ எதுக்கு கால் பண்ண ?.

சண்டே எங்கயாவது வெளியில போகலாம்ன்னு கால் பண்ணன்.

சண்டேன்னா பொண்டாட்டி, புள்ளயோட போக வேண்டியதானே.

ஆமாம் பெரிய பொண்டாட்டி.

என்ன சண்டை ?.

அவ தம்பிக்கு கல்யாணம். ஐந்து பவுன்ல செயின் போடனம்ன்னு சொல்றா.

சரியா தானே சொல்லியிருக்கு.

மூடூடா.

ஏய்… மச்சானுக்கு கல்யாணம்ன்னா செய்யறதில்லயா.

அதுக்கு அஞ்சி பவுனா.

பின்ன.

டேய், இன்னைக்கு ஒரு பவுன் இருபத்தி ரெண்டாயிரம். கணக்கு போட்டா நகைக்கே ஒரு லட்சத்துக்கு மேலாகுது. அதுக்கப்பறம் செலவு வேறயிருக்கு.

உனக்கு பொண்ணு தந்தப்ப ஐம்பது பவுன் போட்டாங்கயில்ல.

பொண்ண தந்தான் நகை போட்டான். அத அவதான் போட்டுக்கிட்டு இருக்கா. எனக்கு அரை பவுன்ல ஒரு மோதிரம் போட்டானுங்க அவ்ளோ தான்.

மச்சானுக்கு தானே செய்யற செய். பின்னாடி பெருசா செய்வான்.

கிழிச்சான்.

மச்சானை நம்பி கடல்லயே குதிக்கலாம் காப்பாத்துவான்னு சொல்லுவாங்கடா.

அது அப்போ. இப்ப அப்படியே செத்துப்போடன்னு விட்டுடுவானுங்க.

சரி இதுக்கு எதுக்கு என்ன கூப்ட்ட.

கோபத்தல அவள செமயா திட்டிட்டு வந்துட்டன். பயங்கர டென்ஷன் சரக்கு அடிக்க போகலாமேன்னு உன்னை கூப்டன்.

நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டன் என சொன்னதும் முறைத்தான். முறைக்காத மச்சான் கல்யாணத்துக்கு என்ன செய்யறதா உத்தேசம்.

நீ தான் சொல்லனும்.

நான் ஒரு ஆயிரம் ரூபா வைப்பன் என்றதும் மீண்டும் முறைத்தவன் நீ வைக்கறதப்பத்தி கேட்கல. என்னப்பத்தி கேட்டன்.

அவன் உன் ஒய்ப்போட தம்பி. உன்னோட மச்சான். நீ தான் அதிகமா செய்யனும். என்னை எதுக்கு முறைக்கற. 

அவ அஞ்சு பவுன்ல உறுதியா இருக்கா.

வீட்ல சண்டை வரக்கூடாதுன்னா செய். இல்லன்னா சாகற வரைக்கும் உன் வீட்டுக்காரம்மா சொல்லிக்காட்டும். பிரச்சனை வரும்.

நைட்டே சோபாவுல படுக்க விட்டுட்டா.

என்னடா சொல்ற.

ஆமான்டா. காலையில எழுந்த எதுவும் செய்யாம உம்முன்னு உட்கார்ந்துயிருக்கா. பேசவேயில்ல. நான் கிளம்பி வந்துட்டன்.

இப்ப நீ தான் உதவி செய்யனும்.

நான் என்ன பண்ணனும் என சந்தேகத்தோடு கேட்டதும்

எனக்கு ஒரு லட்சம் வேணும்.

விளையாடறியா இருந்தத கீதாவோட அம்மா ஆப்ரேஷனுக்கு தந்தாச்சி. இந்த மாசம் சம்பளம், ஆபிஸ் செலவுக்கே பென்டிங் ஃபில்ங்க கிளியரானா தான்.

அது தெரியாதா எனக்கு.

அப்பறம்மென்ன.

வெளியில எங்கயாவது வட்டிக்கு வாங்கித்தாடா.

விளையாடறியா.

உனக்கு இது விளையாட்டா தெரியுதா ?.

பின்ன என்னடா. நீயும் சம்பாதிக்கற, அதுவும் வேலைக்கு போகுது. உன் சம்பளத்தலயே செலவு சரியாகிடும். அதோட சம்பளத்த என்ன பண்ற. 

இந்த வருஷம் பெரியவனோட பீஸ் 45 ஆயிரம், சின்னவனுக்கு 42 ஆயிரம். தம்பி வீடு கட்டறன்னு வந்தான் அவனுக்கு நகைய அடகு வச்சி தந்தன். இப்ப இவ என் தம்பிக்கு கல்யாணம்கிறா. அதனால தான் கடன் கேட்கறன். மூனு மாசத்தல தந்துடற மாதிரி வாங்கிதாடா.

மூனு மாசத்தல எப்படி திருப்பி தருவ.

ஆபிஸ் லோன் தான்.

பணம் இல்லாம செலவுகள எப்படிடா சமாளிக்கறதுன்னு தெரியாம நொந்துப்போய் உட்கார்ந்துயிருக்கன். இதல நீ வேற லோன் கேட்டு டென்ஷன் பண்ணாத. நீ நேரா வீட்டுக்கு போ. அம்பது பவுன் வாங்கியாந்தயில்ல. உன் தம்பிக்கு வச்சது போக மீதியிருக்குள்ள அத எடுத்தும்போய் பேங்க்ல வச்சி தேவையானத வாங்கி செலவப்பாரு.

நான் மீதி நகைய கேட்டாதுக்கு நகை எடுத்துக்குங்க நான் எங்க அம்மா வீட்டுக்கு போறன்னு மிரட்டறாடா. அதனால தான் கடன் கேட்கறன் என்றான் பரிதாபமாக. 

கொஞ்சம் யோசித்துவிட்டு இங்க வட்டிக்கு கேட்டா 5 பைசா, 7 பைசாங்கறான். நீ பாக்யராஜ்க்கு போன் பண்ணி நான் சொன்னன்னு கேளு அவன் ஊர்ல ரெடிப்பண்ணி தருவான். மூனு மாசத்துக்கப்பறம் வட்டியோட திருப்பி தந்துடு. அப்பறம் ஆபிஸ நம்பி வாங்காத. நிறைய செலவு இருக்கு. அதனால மூனு மாசத்துக்கப்பறம் நீ கேட்கற லோன் கிடைக்காது.

எவ்ளோ தருவ.

முடிஞ்சா ஐம்பதாயிரம் தர்றதுக்கு பாக்கறன்.

கீதா கேட்டப்ப அதிகமா தந்த. 

அது வேற பிரச்சனை. இது வேற பிரச்சனை. ரெண்டுத்தயும் போட்டு கொழப்பிக்காம அவனுக்கு கால் பண்ணு என்றதும் பாக்யராஜ்க்கு கால் பண்ணான்.

அப்போது சார் என அழைத்தபடி மஞ்சு உள்ளே வர. நான் கூப்பிடறன் என்றதும் திறந்த கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாள். பாக்யராஜ்யிடம் பேசியவன் ஐந்து நிமிடத்துக்கப்பறம் ரெடி பண்ணிட்டு போன் பண்றன்னு சொன்னான்டா.

கவலைப்படாத தர்றன்னு சொல்லிட்டானா தருவான். எப்ப கல்யாணம்?.

இன்னும் இருபது நாள்யிருக்கு.

இன்டர்காமில் மஞ்சுவிடம் உள்ளே வா என்றதும் உள்ளே வந்தவளிடம் என்ன என கேட்டதும். கணபதி பிரிண்டர்ஸ்சல இருந்து போஸ்டர், நோட்டீஸ் பிரின்ட் செய்ததுக்கான ஃபில் அனுப்பனாங்க சார். அவசரமாம் அமௌண்ட் வேணும்ன்னு கேட்கறாங்க சார்.

மாச கடைசியில தானே தருவோம்.

ஏதோ அவசரமாம்.

எவ்ளோ ?

42 ஆயிரம் சார்.

ஒரு நிமிடம் யோசித்தவன் கணபதி பிரிண்ட்ஸ் ஓனர் துரைக்கு போன் செய்தான். எதிர் முனையில் போன் எடுத்து ஹலோ என்றதும் வணக்கம் சார் மதன் பேசறன்.

சொல்லு மதனு.

பணம் வேணும்ன்னு கேட்டுயிருந்திங்களாம். மாச கடைசியில தானே தருவோம். என்ன திடீர்ன்னு கேட்டுயிருக்கிங்க ?.

ஏண்டா இந்த தொழிலை செய்யறோம்னு வேதனையா இருக்கு மதனு. அம்மாவாசைக்கு அம்மாவாசை அமைச்சரை மாத்தறாங்க. இப்ப புதுசா வந்துயிருக்கற மினிஸ்டர், தேர்தல் வருது நிதி தாங்கன்னு உயிர எடுக்கறாங்க. பிரிண்டர்கள்க்கிட்ட பெருசா எதிர்பாக்கறாறாம். சங்கத்தல கூட்டம் போட்டு சின்ன பிரிண்டர்ங்க 10 ஆயிரமும், பெரிய பிரிண்டர்ங்க 50 ஆயிரம் தரனம்ன்னு பிக்ஸ் பண்ணியிருக்காங்க. தரலன்னா பிரச்சனை செய்வாங்க. பணம் புரட்டனன் அதுக்குள்ள வேலை பாக்கறவனுங்க நாலு பேர் வந்து  பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும் அட்வான்ஸ் வேணும்ன்னு வந்து நின்னானுங்க தந்துவிட்டுட்டன். அதான் பென்டிங் பில்கள கலெக்ட் பண்றன்.

எங்க ஸ்டாப்போட அம்மாவுக்கு ஆப்ரேஷன். இருந்த அமெண்ட்ட அங்க தந்துட்டோம். எங்களுக்கும் பென்டிங் பில் வரல. அட்மிஷன் முடிஞ்சதும் தர்றன்னு சொல்றாங்க. ரொம்ப டைட் பொசிஷன்ல இருக்கோம் சார்.

ஏதாவது கொஞ்சம் ஏற்பாடு பண்ணேன் மதனு.

சற்று யோசித்த மதன் 25 தர்றன் அட்ஜஸ் பண்ணிக்குங்க. மீதி பில் அடுத்த மாசம் தர்றன் என்றதும் சரி செய்ப்பா என்றார். போனை வைத்த மதன் அக்கவுண்ட்ல எவ்ளோ இருக்கும் மஞ்சு.

இருபதாயிரம் இருக்கு சார்.

ஹேண்ட் கேஸ்.

டூ தவுசன் இருக்கு சார்.

நீ ஸ்ரீதரை லைன்ல புடிச்சி நமக்கு வர வேண்டிய ஃபில்ல ஏதாவது ஒன்ன வாங்கி கலெக்ஷன் போடச்சொல்லு. கணபதி பிரிண்டர்க்கு டூவென்ட்டி பைவ் தவுசன்க்கு செக் தர்றன் அனுப்பிடு. இரண்டு நாளைக்கு அப்பறம் கலெக்ஷனாகற மாதிரி டேட் போட்டு அனுப்பு.

ஓ.கே சார் எனச்சொல்லிவிட்டு மஞ்சு போனதும் என்னடாயிது இந்த மாசம் செலவுங்க லைன் கட்டிக்கிட்டு வருது. வருமானம் ஒன்னயும் காணோம். சம்பளம் எப்படி போடறதுன்னு தெரியல.

அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்கு விடுடா பாத்துக்கலாம்.

இப்பதாண்டா பாட்னர் மாதிரி பேசற என்றேன் சிரித்தபடி.


லஞ்ச் ஹவரில் ரஞ்சித் தனியாக அமர்ந்து டிபன் பாக்ஸ் திறந்து சாப்பிட தயாரானான்.

மம்மி இவன் தான் ரஞ்சித். என் க்ளோஸ் ப்ரண்ட் என சஞ்சய் அறிமுகப்படுத்தினான்.

ஹலோ ஆன்ட்டி.

எங்கப்பா தனியா சாப்பிடற உங்கம்மா வரலயா?

எங்கம்மா வரமாட்டாங்க என சோகமாக சொன்னான்.

வேலைக்கு போறாங்களா ?.

ரஞ்சித் அமைதியாக இருந்ததும் சஞ்சய் அம்மா ஏதோ புரிந்தவளாக சரிடா குட்டி தள்ளி உட்காரு சஞ்சய்யும் உட்காரட்டும் இரண்டு பேரும் சாப்பிடுங்க என்றார்.

ரஞ்சித் இட்லியை சக்கரையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சஞ்சய்யின் அம்மா அவனுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டுயிருந்தார்கள். அதை ரஞ்சித் கொஞ்சம் ஏக்கமாகவே பார்த்தான். சாப்பாடு ஊட்டிவிட்டுவிட்டு சஞ்சய் அம்மா செல்லும் போது அவன் மனம் கலங்கியது. வகுப்பிலும் உம்மென இருந்தான்.

பள்ளிவிட்டதும் ஆட்டோ டிரைவர் மணி அலுவலக வாசலில் இறக்கிவிட்டார். ரஞ்சித் இறங்கி உள்ளே போனபோது மஞ்சு தான் ஹாய் டார்லிங் கம் கம் என குதுகலமாக அழைத்தாள்.

டாடி எங்க மஞ்சு என்றபடி தோளில் இருந்த ஃபேக்கை கழட்டி டேபிள்க்கு கீழே வைத்தான்.

வெளியில போயிருக்காரு வந்துடுவாரு என்றாள்.

ஸ்ரீதரை பார்த்ததும் ஹாய் அங்கிள் என்றான்.

ஸ்கூல் எப்படிடா இருக்கு

சூப்பர் அங்கிள்.

ஸ்கூல்ல எத்தனை உனக்கு கேர்ள் ப்ரண்ட் உனக்கு ?.

ஏய் சின்னப்பையன்கிட்ட என்ன கேள்வியிது. சார் வரட்டும் சொல்றன் என்றாள் மஞ்சு.

ஹேய் சும்மா கேட்டன்ப்பா என்ற ஸ்ரீதர் ரஞ்சித்திடம் நீ என்னடா டல்லாயிருக்கற ?.

நத்திங் அங்கிள்.

சும்மா சொல்லாதடா.

ஸ்கூல் விட்டு வர்றான்யில்ல அதுவாயிருக்கும்ப்பா என்ற மஞ்சுவிடம் ஸ்கூல் விட்டா பசங்க ஜாலியா தான் வருவாங்க தெரிஞ்சிக்க என்ற ஸ்ரீதர் ரஞ்சித்தையே பார்த்தான். அவன் எதுவும் சொல்லாமல் கம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டு இருந்தான்.


கேம் விளையாடறியாடா என மஞ்சு தான் கேட்டாள்.

வேணாம் எனச்சொல்லிவிட்டு எழுந்து அவனது அப்பாவின் அறைக்குள் சென்றவன் சேர் மீது படுத்துக்கொண்டான். இதை பார்த்த ஸ்ரீதர் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று பாஸ், ரஞ்சித் டல்லா இருக்கான் உங்க ரூம்ல படுத்துயிருக்கான் என சொல்லும் போதே செல் லைன் கட்டானது.

சிறிது நேரத்தில் மதனும், பிரபுவும் பைக்கில் வந்து இறங்கிய வேகத்தில் வேகவேகமாக அறைக்குள் நுழைந்தனர் இருவரும். ரஞ்சித் அருகே சென்ற மதன் அவனது நெத்தியில் கை வைத்து பார்த்தபோது உடம்பு ஜில்லென இருந்தபின்பே பாதி டென்ஷன் குறைந்தது முகத்தில் தெரிந்தது.

அதை கண்ட பிரபு என்னடா என தலை அசைப்பிலேயே கேட்டான்.

ஒன்னும்மில்ல என்றவன் மெல்ல ரஞ்சித் ரஞ்சித் என குரல் தந்ததும் எழுந்து உட்கார்ந்தான்.

என்னடா படுத்துட்ட. கேம் விளையாட வேண்டியதானே ?.

சும்மா தான் டாடி என்றவன் அருகில் மதன் அமர இன்னோரு நாற்காலியில் பிரபு அமர்ந்தான். ஸ்ரீதர் உள்ளே வர எல்லாருக்கும் காபி சொல்லிட்டு வா.

சரிங்க பாஸ்.

பசங்க ஏதாவது சொன்னானுங்களா ?.

இல்ல டாடி.

மிஸ் அடிச்சாங்களா ?

இல்ல.

அப்பறம் ஏன் டல்லாயிருக்கற.

அமைதியாக இருந்தாவனையே மதனும், பிரபுவும் பார்த்தபடி இருந்தனர். உள்ளே வந்த ஸ்ரீதர் அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்து தயங்கி அப்படியே நின்றான். பிரபு அவனை பார்த்ததும் சொல்லிட்டன் என்றான். 

என்னாச்சிடா என மகனின் தலையை பாசத்துடன் தடவியபடி கேட்டதும் ரஞ்சித் அப்படியே தன் அப்பாவின் மடிமேலே படுத்துக்கொண்டான். மதன் முகத்தில் குழப்ப ரேகைகள் பரவியது.

காபி கப்களை எடுத்துக்கொண்டு மஞ்சு உள்ளே வந்து தர அதை வாங்கி டேபிள் மேல் வைத்த மதன், ரஞ்சித் காபி சாப்பிட்டுட்டு படுத்துக்கடா என எழுப்பினான். எழுந்தவன் காபி டம்பளரை கையில் எடுத்தவன் தலை குனிந்தபடி மதியம் என் ப்ரண்ட் சஞ்சய்யோட அம்மா வந்து அவனுக்கு சாப்பாடு ஊட்டனாங்கப்பா. அவுங்க எங்கிட்ட உங்கம்மா வரலியான்னு கேட்டாங்கப்பா என்றான் அழும் குரலில். அவனது குரலில் இருந்த ஏக்கம், பாசம் மதனை நிலை குலைய வைத்தது.


என்ன சுதா மேடம் க்ளாஸ் போகலயா என கேட்டபடி கையில் இருந்த புத்தகத்தை டேபிள் மீது வைத்துவிட்டு அமர்ந்தாள் மாலதி.

சிக்ஸ்த் டூ நயன்த் க்ளாஸ் ஸ்டூடன்டுகள எய்ட்ஸ் வழிப்புணர்வு பேரணிக்கு என்.சி.சி சார் அழைச்சிம் போயிருக்காறாம். அதனால ரெண்டு பீரியட் ப்ரி.

கூட யார் யார் போயிருக்காங்க.

பிரின்ஸ்பால், ஸ்டீபன் சார், ப்ரியா மேடம், பீ.டி சார் எல்லாரும் போயிருக்காங்க.

ஓஹோ.

சரி புதுசா வண்டி வாங்கனதுக்கு ப்ரியா டீச்சரை மட்டும் வீட்டுக்கு அழைச்சிம் போய் ட்ரீட் தந்துயிருக்கிங்க. எனக்கெல்லாம் கிடையாதா?.

ட்ரீட் எல்லாம் தரல. வீட்டுக்கு வந்தாங்க அம்மா சுவீட் தந்தாங்க அவ்ளோ தான்.

என்னை எப்போ அழைச்சிம் போகபோறிங்க.

நீங்க எப்போ வேணும்ன்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம் மேடம்.

உங்களைப்பத்தி சொல்லவே மாட்டின்கிறிங்க.

என்னை பத்தி சொல்றதுக்கு என்னயிருக்கு. வீட்ல நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணீ, குழந்தை அவ்ளோ தான்.

இதைத்தான் முன்னாடியே சொன்னிங்களே.

வேறயென்ன ?.

உங்களுக்கு என்ன வயசு ?.

35.

மாலதி தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாகிடுச்சி தானே.

இரண்டு முறை கல்யாணம்மாச்சி என சுதா சாதாரணமாக சொல்ல மாலதி அதிர்ச்சியாகிவிட்டாள்.

தொடரும்…………….