செவ்வாய், டிசம்பர் 30, 2014

மோடி : குனிவார் - குனிவார் - குனிந்துக்கொண்டே இருப்பார்.

இதற்கு மேல் குனிய முடியவில்லை இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இல்லையென்றால் இன்னும் குனிந்திருப்பார். ஒரு நாட்டின் பிரதமர் குனிந்து வணங்குகிறார் என்றால் வணக்கத்துக்குரியவர் எவ்வளவு பெரிய நபராக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மை தான் அந்த பெண்மணி மோடிக்கு மிக உயர்ந்த நபர் தான். மோடியை பிரதமராக்க ஓடி ஓடி உழைத்த ஒரு பெரும் நிறுவன தலைவரின் மனைவியாச்சே அவர்.

ஒரு அடிமை போல் மோடி வளைந்து வணக்கம் வைக்கப்பட்ட நபர் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மனைவி ப்ரித்தி. அதானி இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இன்றைய நிலையில் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் யார் என்றால் அது கவுதம் அதானி தான். அதன்பின் தான் காவி கும்பலே வரும். மோடியுடன் நிழல் போல் இருக்கும் அதானி, மோடி குஜராத்தின் முதல்வரானது முதல் அவருடன் நெருக்கமாக உள்ளார். நெருக்கம் ஏற்பட்டது முதல் அதானியின் வளர்ச்சி அதிவேக ரயில் வேகத்தில் தொடங்கியது.

ஷேர் மார்க்கெட்டில் விளையாடிக்கொண்டு இருந்த அதானி, படிப்படியாக நிலக்கரி இறக்குமதி, மின் உற்பத்தி என களம்மிறங்கியது. அதானி குழுமம் குஜராத்தின் முந்த்ரா பகுதியில் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்த்து. அதனால் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது.

குஜராத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, மோடி அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு வாரிக் கொடுக்கிறார். தொழில் தொடங்கப் போவதாகக் கூறி இந்த நிலத்தைப் பெற்ற அதானி குழுமம், அந்த நிலத்தின் பெரும்பகுதியை பிளாட்டு போட்டு விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை இலாபமாகச் சுருட்டிக் கொண்டது.

அதானி மட்டுமல்ல, மேற்குவங்கம் சிங்கூரில் விவசாயிகளால் அடித்து துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, தனது மாநிலத்தில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க விவசாய நிலங்களை அபகரித்துக் கொடுத்தார். வாசிங் பவுடர் தயாரிக்கும் நிர்மா கம்பெனிக்கு சிறப்பு பொருளாதார மண்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் பறித்து தந்தார். மாருதி தனது புதிய கார் தொழிற்சாலைக்கான  இடத்தை குஜராத் விவசாயிகளிடம் இருந்து பறித்து தந்தது மோடி தான். இதேபோன்று எஸ்ஸார், எல் அண்ட் டி., போர்டு இந்தியா, ஏ.பி.எல், டொரண்ட் பவர் ஜெனரேஷன், ரிலையன்ஸ் உள்ளிட்டுப் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளின் நிலங்கள் சகாய விலையில் மோடி அரசால் தரப்பட்டன. நிலத்தை சகாய விலைக்கு பெற்ற நிறுவனங்கள் அதில் பாதியை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாற்றி ஆயிரக்கணக்கான கோடி லாபமடைந்துள்ளார்கள். இந்த கார்ப்பரேட் கம்பெனிகளை குஜராத்துக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்கு வகித்தவர் கவுதம் அதானி.குஜராத் அரசுக்கு பலாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி ள்ளார்கள் என அறிக்கை தந்து ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இந்திய தணிக்கை துறை.

இதே குஜராத்தில் விவசாயிகள் தமது நிலத்தில் 45 மீட்டர் ஆழத்திற்கு மேல் கிணறு தோண்டினாலோ, ஆழ்துளை கிணற்றில் போர்வெல் போட அரசின் அனுமதி பெற வேண்டும். எடுக்கப்படும் நிலத்தடி நீரை எப்படி எடுத்தோம் என அரசுக்குக் கணக்கு காட்ட வேண்டும். தவறினால், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் அளிக்க வகை செய்யும் சட்டமொன்றை நிறைவேற்றியது மோடி அரசு. இதே மோடி அரசு தான் பெரும் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்ச தங்கு தடையில்லை என ஒப்பந்தம் போட்டுள்ளது.

குஜராத்தில் மட்டும் இவ்வளவு சுரண்டிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சுலபமாக சுரண்ட வேண்டுமானால் மோடி நினைத்தால் முடியும் என்பதாலே மோடியை பிரதமராக்க துடித்தன. கார்ப்பரேட் கும்பல்கள் காவிகளோடு கைகோர்த்து மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என “கோயாபல்ஸ்“ வகை பிரச்சாரம் செய்யப்பட்டு பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து மோடி பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

மோடி இந்தியா தூய்மையாக வேண்டும், லஞ்சம் லாவண்யம் ஒழிய வேண்டும் என பேசுகிறாறே தவிர அதற்காக கண் துடைப்பு திட்டங்களை தான் செய்கிறார் அதை உற்று நோக்கினால், ஆய்வு செய்தால் தெரியும்.




பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக வெளிநாட்டு பயணம் செய்ததை விட கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பயணம் செல்வது அதிகரித்து வருகிறது. சமீபத்திய பயணம், ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் ஜீ8 மாநாட்டுக்கு செல்வதாக பயணம் மேற்க்கொண்டார். அவரோடு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தலைமையில் வர்த்தக குழுவும் சென்றது. பயணத்தின் இடையே குயின்ஸ்லாந்து மாகாண அரசின் பிரதமர் கேம்ப்பெல் நியூமேனை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவின் கர்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தோண்டிடும் நிலக்கரியில் மூன்றில் இரண்டுபங்கினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதாகக் கூறுகிறது அதானிகுழுமம். இதற்கான நிதியாதாரத்தை இந்திய பாரத வங்கி வழங்கவுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல 62 ஆயிரம் கோடியை தூக்கி தரவுள்ளது இந்த பொதுத்துறை வங்கி. வர்த்தக ரீதியாக இந்த திட்டம் லாபகரமானதல்ல, வெற்றி பெறும் சாத்தியம் குறைவு என சிட்டி குழுமம், மார்கன் ஸ்டேன்லி, ஜே.பி. மார்கன், எச்எஸ்பிசி, பார்க்லேய்ஸ், சேஸ்-மன்ஹாட்டன், கோல்ட்மேன் சாச்சே, டட்ச் வங்கி, ஸ்காட்லாந்து ராயல்வங்கி, கிரெடிட் அக்ரிகோல் ஆகிய சர்வதேச பெரும் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இத்திட்டத்திற்காக கடன் அளிக்க மறுத்துள்ளன.  ஆஸ்திரேலியாவின் எரிசக்தித் துறை அமைச்சரும் இந்தியாவின் எரிசக்தியை தீர்க்கும் அளவுக்கு சிறந்த திட்டமல்ல எனக்குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல தரப்பும் ஜகா வாங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்துக்கு, ஏற்கனவே 72,732 கோடி ரூபாய் பல வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் வாங்கி கட்டாமல் உள்ள ஒரு குழுமத்துக்கு மேலும் 6,200 கோடி ரூபாய் கடன் தர ஒப்பந்தம் போட்டுள்ளது எஸ்.பி.ஐ என்கிற பொதுத்துறை வங்கி. வெளிநாட்டில் செயல்படுத்தப்படவுள்ள ஓர் திட்டத்திற்கு இதற்கு முன்னெப்போதும் எந்த ஒரு இந்திய வங்கியாலும் இவ்வளவு பெரிய அளவில் தொகை கடன் வழங்கப்பட்டதில்லை. இதுப்பற்றி கேள்வி கேட்டால் குதர்க்கமாக பதில் சொல்கிறார்கள் எஸ்.பி.ஐ தலைமை நிர்வாகமும், இந்திய நிதி அமைச்சரும்.

அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனத்துக்கும் அவசர சட்டங்கள் மூலம் சலுகைகள் வழங்குகிறார். 

கவுதம்அதானி

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு அவசர சட்டம் மூலம் அனுமதி. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நிலக்கரி சுரங்கள் ஏலமுறையில் விடவேண்டும் என்பதை அவசர சட்டம் இயற்றி தடை செய்து பெரும் நிறுவனங்களுக்க சாதகமாக விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.  

2014 ஜனவரியில் பெரும் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது, 80 சதவித விவசாயிகளின் அனுமதி பெற வேண்டும், நகர்புறங்களுக்கு மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கும், கிராமப்புறங்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக விலை உயர்த்தி வாங்க என்ற சட்டம் அமலுக்கு வந்தது. அதனை மோடி அரசாங்கம் டிசம்பரில் அவசர சட்டம் மூலம் மாற்றி அமைத்துள்ளது. விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்கிறது புதிய சட்டம்.

இதேவரிசையில் அடுத்ததாக இரும்புதாது உள்ள பகுதிகள், பாக்சைட் உள்ள பகுதிகளை ஏலம் விடாமல் விரும்பியவர்களுக்கு தரும் வகையில் விதிமுறைகளில் அவசர சட்டம் மூலம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது மோடி சர்க்கார். தமிழகத்தில் 110 விதியின் கீழ் ஆட்சி என்றால், மத்தியில் அவசர சட்டம் மூலம் ஆட்சி நடக்கிறது.

மோடி வந்தால் இந்தியாவில் பொன்மழை பெய்யும், வறுமை ஒழியும், ஒவ்வொரு இந்தியனும் பணக்காரனாக்கி விடுவான், அமெரிக்காவே அவரிடம் மண்டியிடும் என பேசியவர்கள் இதற்கு நேர்மையாக பதில் சொல்வீர்களா ?.

மோடி இன்னும் குனிவார், கும்பிடுவார் அவரின் ஒவ்வொரு செய்கையும் கார்ப்பரேட்களுக்காக தானே தவிர ஏழை மக்களுக்காக அல்ல என்பது போகப்போக புரியும்.

செவ்வாய், டிசம்பர் 23, 2014

தனியார் மயமாகும் மின்வாரியம். ஆகட்டும்....... ஆகட்டும்......




அரசு நிறுவனங்கள் தனியார் மயமாவதை என் வலைப்பக்கத்தில் நானே சிலமுறை கண்டித்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் மின்வாரியத்தை தனியார் மயமாக்க மத்தியரசு சட்டம் கொண்டு வருகிறது என அறிவித்ததை அறிந்ததும் எனக்கு பெரும் சந்தோஷம். ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக பெரும் சந்தேஷமடைகிறேன். என்நிலைப்பாடு மாறுவதற்க்கு காரணம் மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் இதற்கு காரணம்.

1990க்கு முன்புவரை அதாவது நரசிம்மராவ் பிரதமராவதற்க்கு முன்பு வரை இந்தியாவில் 90 சதவித மின் உற்பத்தியை மத்திய, மாநில அரசு நிறுவனங்களே செய்தன. உலக மயமாக்களுக்கு பின் இந்திய அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க தொடங்கின.

மின்சாரதுறையை இரண்டாக மத்திய அரசின் திட்டப்படி மாநில அரசுகள் பிரித்தின. ஒவ்வொரு மாநிலமும் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தை தனித்தனியாக்கியது. மின்சார விற்பனை பிரிவை அரசு தன்னகத்தே வைத்துக்கொண்டன. மின் உற்பத்தியில் மட்டும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டன. அந்த மின்சாரத்தை அவர்கள் குறிப்பிடும் விலைக்கு மின்சார விநியோகப்பிரிவு வாங்கியது.

மின்சாரத்தை வாங்கும் விலையை வைத்து மின் கட்டணத்தை நிர்ணயிக்க மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட்டது. இது தன்னிச்சையான அமைப்பு என்றாலும் இது அரசின் காலுக்கு கீழ் தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன உத்தரவிடுகிறார்களோ அதை தான் இந்த ஆணையம் கேட்கும். மக்களிடம் கருத்து கேட்பது என்பது சும்மா கண்துடைப்புக்காக.

அரசு நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விலையை விட 800 மடங்கு அதிக விலை வைத்து தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்கின்றன. அதைதான் நமது மின்சார விற்பனை பிரிவு வாங்கி மின்விநியோகத்தை செய்து வருகிறது. இதில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கொள்ளையடிக்கிறார்கள்……. மக்கள் தலையில் வரி சுமை, மின் கட்டணம் உயர்வு என சுமை கூடுகிறது. இது ஒருபுறம்மிருக்கட்டும். விவகாரத்துக்கு வருவோம்.

மின் தடை, மின் கட்டணம் உயர்வு என மக்கள் வெதும்பும் வேலையிலும் மின்சார வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் மக்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.


சரியாக இரண்டு ஆண்டுக்கு முன்பு நகரத்தில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளரை சந்தித்த நண்பர், சார் என்னோட வீட்டு மனையின் குறுக்கே மின்சார கம்பி செல்கிறது. அதை மாற்ற வேண்டும் அப்போது தான் வீடு கட்ட முடியும் என கோரிக்கை மனு தருகிறார். அதை வாங்காமலே அதெல்லாம் மாத்தவே முடியாது என்கிறார். மாத்தவே முடியாதா விதிமுறையென்ன என அந்த பகுதி மின்விநியோக ஊழியர் உட்பட மின்வாரியத்தில் சாதாரண நிலையில் இருந்து உயர்நிலையில் இருப்பவர் வரை இதில் பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் அடக்கம் உதவுங்க. வீடு கட்ட முடியாம கஸ்டப்படறன் என தன் நிலையை சொன்னபோது, 70 ஆயிரம் தாங்க, ஒரு லட்சம் தந்துடுங்க மாத்திடலாம் என அசால்டாக சொல்ல அதிர்ச்சியானார். அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிடறன். உங்களுக்கு என்னவோ அதை செய்யறன் என பேசி பார்த்தும் பணத்த என்கிட்ட தாங்க நான் அரசுக்கு கட்டிக்கறன் ஒவ்வொருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விதிமுறைகள் என்ன என்பது பற்றி வாய் திறக்கவில்லை.

அவ்வளவு செலவாகும்மா?, யாரை நம்பி இவ்வளவு பணம் தருவது? அரசுக்கு கட்டினால் நாளை பணி முடியவில்லை என்றாலும் போராடி பணத்தை பெறலாம் இவர்களிடம் தந்தால் என யோசிக்க மின்வாரியத்தை சேர்ந்தவர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து எங்கே வேண்ணாலும் போ அதை மாற்றவே முடியாது என மறைமுகமாக மிரட்டினர். சோர்ந்து போகாமல் ஒரு வருடாமாக அலைந்தார்.

ஒருவருடத்துக்கு பின் நட்பு அடிப்படையில் அதிகார வர்க்கத்தில் அதி முக்கியமானவரை பிடித்தார் அதிகாரிகள் கொஞ்சம் இறங்கி வந்து இழுத்தடித்தார்கள்……….. அதற்குள் 8 மாதங்கள் ஓடியது……….. நீண்ட போராட்டத்துக்கு பின் 1.86 லட்ச ரூபாய் அரசுக்கு கட்ட வேண்டும். கட்டினால் மாற்றலாம் என நோட்டீஸ் தந்தனர் அதிகாரிகள். அதை வாங்கி பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே போன நண்பர் அதையும் தயார் செய்து கட்டினார். பணம் கட்டியபின்பும் 3 மாதம் இழுத்தடித்தார்கள். கடைசியாக அந்த லைனை மாற்றிவிட்டு குறிப்பிட்ட அதிகாரி உட்பட அனைவரும் வெட்கம்மே இல்லாமல் தலையை சொறிந்து வாங்கிக்கொண்டு போனார்கள் நண்பரிடம்.

அந்த லைனை மாற்றும்போது நண்பர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, ஒரு கம்பம் நடுரோட்டில் அமைந்துயிருந்த்து. அந்த ஏரியா முழுக்க முழுக்க நடுத்தர மக்கள் (ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிகம்) வசிக்கும் பகுதி. இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்லும் ரோட்டின் நடுவே மின் கம்பம் இருப்பதால் ஆட்டோ போவதில் கூட பெரும் சிக்கலாக இருந்தது. என் லைனை மாற்றும் போது இந்த கம்பத்தலயிருந்து தான் மாத்தறிங்க அதனால இந்த கம்பத்தை புடுங்கி சாலையோரம்மா தள்ளி நடுங்க என கோரிக்கை வைத்தார். இத்தனைக்கும் அந்த ரோட்டுக்கும் அவரது மனை உள்ள பகுதிக்கும் எந்த சம்மந்தமும்மில்லை.

அதற்கு அங்கிருந்த அதிகாரி உட்பட பணியாளர்கள் (8 பேர்) சொன்னது, சார் உங்க மனை மேல போற லைனை மாத்திட்டோம். அதோட விடுங்க நீங்க எதுக்கு இதப்பத்தி பேசறிங்க. இத மாத்தனம்ன்னு வருவாங்க அப்பா நாங்க கொஞ்சம் (பணம்) பார்ப்போம்மில்ல என்றார்கள் சிரித்துக்கொண்டே. இது 100 சதவிதம் உண்மை. அது மட்டுமல்ல லைனை மாற்றியபோது ஒரு வீட்டுக்கள் இருந்த கம்பம் டம்மியாக்கப்பட்டது. அதை மின்வாரியம் பிடுங்கி எடுத்துச்செல்ல வேண்டும். அந்த வீட்டுக்காரரிடம் 10 ஆயிரம் தந்தா தான் புடுங்கிம்போவோம் என்றார்கள் நண்பர்கள் கண் முன்னாலே இது நடந்தது. எத்தனை அக்கிரமம். இவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் என்ன தானதர்மத்துக்காகவா வேலை செய்கிறார்கள்.

இதுமட்டுமல்ல, இன்னோரு சம்பவம், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் போது மின்கம்பங்ளை சாலை ஓரத்தில் தள்ளி நடுங்கள் எனச்சொல்ல அதன்படி காலியாக தனியார் இடத்தில் மாற்றி நட்டுவிட்டு போய்விட்டார்கள். அதிலும் ஒழுக்கம் கிடையாது. காலி இடங்கள் வீடுகளாக, நிறுவன கட்டிடங்களாக மாறியது. ஒருவர் தான் கட்டிய கட்டிடத்துக்கு மின் இணைப்புக்காக போனபோது, லைன் பில்டிங்க ஒட்டி வருது ரூல்ஸ்படி அது தப்பு. அதனால கனெக்ஷன் தர முடியாது எனச்சொல்ல சார் பட்டா இடத்தல நீங்க கம்பத்த நட்டுட்டு இப்படி பேசனா என்ன அர்த்தம் என கேட்க பதிலுக்கு அவமானமான பதில் தான் வந்துள்ளது.  

நண்பரிடம் மின்வாரிய இடைநிலை ஊழியர் ஒருவர் நான் மாற்றி தருகிறேன் என அதிகாரிகளுக்கு தர வேண்டும் என சுளையாக ஒரு தொகையை வாங்கி சென்றுள்ளார். அரசுக்கு நீங்கள் 20 ஆயிரம் கட்ட வேண்டும் அதுக்கு தயார் பண்ணிடுங்க எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளார். இப்படி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் பணம் பார்க்கிறார்கள் அதே ஊழியர்கள். (இப்படி பல சம்பவங்கள் உள்ளன. எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டுக்கூட எழுதலாம் அந்தளவுக்கு தகவல்கள் உள்ளன.)


இதுதான் மின்வாரியத்தில் மேலிருந்து, கீழ்வரை உள்ள நிலை. ஒருகாலத்தில் ஏனோதானோவென மின்கம்பத்தை நட்டுவிட்டு சென்றனர் மின் ஊழியர்கள். அது மின்சாரம் பார்க்காத கால கட்டம் என ஏற்றுக்கொள்ளலாம். இப்போதும் ஒழுக்கம்மில்லாமல் மின்கம்பம் நடுவது எந்த விதத்தில் நியாயம்?, ஒரு பிரச்சனையை உருவாக்கி அதை தீர்க்க தம்மிடம் வரும்போது பணத்தை வாங்குவது தான் மின்சார வாரியத்தில் பணியாற்றுபவர்களின் தற்போதைய நடைமுறையாக உள்ளது. மின்சார பிரச்சனை என்பதால் மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. மக்கள் மின்சார அலுவலகத்தை தேடி செல்கிறார்கள். அதில் சிலர் நேர்மையாக இருக்கலாம். சிலர் மனசாட்சிக்கு பயந்து பணம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்து தருகிறார்கள். அவர்கள் வெகு குறைவாக உள்ளார்கள். மீதியுள்ள 90 சதவித ஊழியர்கள் அப்படியல்ல என்பதே எதார்த்தம்.

மின்வாரிய ஊழியர்கள் மட்டுமல்ல வருவாய்துறை, காவல்துறை போன்றவை மக்களை பணம் காய்க்கும் மரமாக தான் பார்க்கிறார்கள். மக்கள் என்ன ஒவ்வொரு வீட்டிலும் பணம் அச்சடிக்கும் இயந்திரமா வைத்துள்ளார்கள். அச்சடித்து கொண்டு வந்து பிச்சை போட?

மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளே, ஊழியர்களே, தொழிலாளர்களே நிகழ்கால சாட்சியாக நம் கண் முன்னால் நடந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்  கேட்டுக்கொள்ளுங்கள். பி.எஸ்.என்.எல் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. நீங்கள் அறியாததல்ல. தொலைபேசி வசதி பரவலாக வந்தபோது அங்கு பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் செய்த அலம்பல் கொஞ்ச நஞ்சமல்ல. தீபாவளி, பொங்கல் வந்தால் இவர்களுக்கு “பிச்சை“போட வேண்டும். லைன்ல க்ராஸ் டாக் வருது, ஓர்க் ஆகல என புகார் சொல்ல சென்றால் கலெக்டரை சந்தித்து விடலாம் இவர்களை சந்திக்க முடியாது. வாரக்கணக்கில் காக்கவைத்து பின் வந்து சரி செய்துவிட்டு 500 தா, 1000ம் தா என பிடுங்கி செல்வார்கள். பணம் வாங்க வேண்டும் என்பதற்காகவே தொலைபேசி லைனில் கோளாறை உருவாக்குவார்கள். எதிர்த்து கேட்டால் நாங்கள் அரசு ஊழியனாக்கும் என்பார்கள்.

2002க்கு பின் நிலவரம் அப்படியே தலைகீழ். தொலைதொடர்பு துறை தனியார் மயமானதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், மக்கள் ஆதரவு கேட்டார்கள் ஒரு சதவிதம் கூட கிடைக்கவில்லை. தனியார் மயமானதை தடுக்க முடியவில்லை. இன்று உயர்அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை தெருவில் இறங்கி வெய்யிலில் சார் எங்க நிறுவன சிம்கார்டு வாங்குங்க, டேட்டா கார்டு வாங்குங்க என சிம்கார்டு விற்கிறார்கள், விளம்பர  நோட்டீஸ் தருகிறார்கள். இவர்களை பார்த்து பொதுமக்கள் எந்த விதத்திலும் பரிதாபம் கொள்ளவில்லை.


உங்கள் நிலையும் அதுதான். 

வெள்ளி, டிசம்பர் 19, 2014

அமெரிக்காவிடம் சிக்குகிறதா க்யூபா ?


அமெரிக்காவின் காலுக்கு கீழ் இருக்கும் குட்டியுண்டு நாடு என்றாலும் க்யூபா அமெரிக்காவின் கண்ணில் விழுந்து அகற்ற முடியாத தூசு. அமெரிக்காவின் கண்ணை உருத்திக்கொண்டே இருந்தது………… இருக்கிறது………. இனிமேல் இருக்கும்மா என்பது தான் இப்போது பெரும் கேள்வி.

காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் – க்யூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கும் இடையே 18 மாதங்கள் நடந்த ரகசிய பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்து பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

1959 ஜனவரி 1க்கு முன்பு வரை க்யூபா காலணி ஆதிக்க நாடாக அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு பின் அமெரிக்க ஏகாதியபத்திய கம்பெனிகளால் பொம்மை ஆட்சி க்யூபாவில் நடந்தது. க்யூபாவில் 90 சதவிதம் கரும்பு பயிர். கரும்பு தோட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கம்பெனிகள் வசம். க்யூபாவின் தொலைதொடர்பு, போக்குவரத்து துறை, பாதுகாப்பு, மின்துறை என அனைத்தும் அமெரிக்க கம்பெனிகள் வசம்மிருந்த்து. அவர்கள் சொல்வது தான் சட்டம். அதிபராக, அமைச்சராக இருந்த்து என்னவோ க்யூபாவை சார்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் குசு விடக்கூட அமெரிக்காவின் கம்பெனிகளை கேட்க வேண்டும். இதனை எதிர்த்து போராடி க்யூபாவை சுதந்திர நாடாக்கியவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேராவும்.

அமெரிக்காவின் பொம்மை ஆட்சிக்கும், அமெரிக்காவுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவை விட அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ தான் தீவிரமாக எதிர்த்தார். அந்த ரவுல் காஸ்ட்ரோ தான் இப்போது க்யூபாவின் அதிபர். அவர் தான் அமெரிக்காவுடன் கை குலுக்கியுள்ளார்.

க்யூபாவை சுதந்திர நாடாக பிடல் அறிவித்தபின் க்யூபாவில் இருந்த அமெரிக்க கம்பெனிகளின் சொத்துக்களை நாட்டுடமையாக்கினார். நஷ்டயீடு வழங்கினார். மக்களுக்கு நிலங்களை பிரித்து தந்தார். கம்யூனிசத்தை நோக்கி க்யூபா நடைபோட்டதும் அமெரிக்கா அலறியது. முதலாளித்துவ நாடுகளுக்கு முதலாளியான தனக்கு கீழ் ஒரு சின்ன நாடு கம்யூனிசத்தை நோக்கி நடைபோடுவது அதற்கு பிடிக்கவில்லை. மறைமுகமாக அல்ல நேரடியாகவே க்யூபாவை மிரட்டியது முதலாளித்துவ அமெரிக்கா அரசாங்கம்.

பிடல் அமெரிக்காவுக்கு நேர் எதிரான கம்யூனிச நாடான ரஷ்யாவின் தலைமையை ஏற்றார். க்யூபாவுக்கு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. ரஷ்யாவின் உதவியுடன் தடைகளில் இருந்து தன்னை காத்துக்கொண்ட க்யூபாவின் நிலை 19990க்கு பின் தலைகீழாக மாறியது.

முதலாளித்துவ நாடுகள் அமெரிக்கா தலைமையில் கூடி ரஷ்யாவை சிதைத்தபின் இந்தியா போன்ற பல நாடுகள் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக்கொண்டன. ஆனால் சிறிய நாடான க்யூபா அதை செய்யவில்லை. அமெரிக்காவின் தலைமையை ஏற்காமல் இயங்க முடிவு செய்தது.

இன்றைய காலக்கட்டத்தில் விவசாயம், மருத்துவம், கல்வியறிவு, பிறப்பு-இறப்பு விகிதாச்சாரம் போன்றவற்றில் முன்னிலை வகிப்பது க்யூபாதான். இதில் என்ன பெரிய ஆச்சர்யம் என கேட்கலாம். க்யூபா மீது பொருளாதார தடைகள் உள்ளது. அமெரிக்காவை பகைத்துக்கொண்டு எந்த நாடாவது க்யூபாவுக்கு உதவும்மா ? யோசித்து பாருங்கள்.

அந்த நிலையிலும் முன்னிலை வகிக்கிறது க்யூபா.

இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ க்யூபா அதிபராக இருந்த இப்போதும் நாட்டை கண் போல் பாதுகாக்கும் பிடலை கொலை செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகள் தான். அதிகாரபூர்வமாக 70க்கும் மேற்பட்ட முறை அவரை கொல்ல முயன்று தோற்றுள்ளது சி.ஐ.ஏ. அதன் சரித்திரத்தில் மிகப்பெரிய தோல்வி இது.

இன்றும் கம்யூனிசத்துக்கு ஆதரவாக க்யூபாவின் அதிகாரபூர்வ ஏட்டில் கட்டுரைகள் எழுதி வருகிறார் பிடல்காஸ்ட்ரோ. ஆனால் அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ முதலாளிகளின் பாதுகாவலரான அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளார். இத்தனை ஆண்டுகள் யாரை எதிர்த்ததோ அந்த நாட்டுடன் கை கோர்த்துள்ளது க்யூபா.

இதுவரை போராடியதல்ல போராட்டம். இனி க்யூபா போராட போவதுதான் உண்மையான போராட்டம். இதில் தாக்கு பிடிக்குமா இல்லை முதலாளிகளுக்கு சாதகமான நாடுகளின் பட்டியலில் இணைக்கப்படும்மா என்பது போகபோக தெரிந்துவிடும்.