திங்கள், பிப்ரவரி 28, 2011

உலக அரங்கில் மரியாதையை இழக்கும் இந்தியா.


அமெரிக்காவில் கல்வி கற்க போன இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டிரான்ஸ்மீட்டர் கட்டப்பட்டு மிருகங்களை போல அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என நம் தேசத்தின் வட இந்திய மீடியாக்களும், வட மாநில அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் தினம் தினம் குரல் கொடுத்து பரபரப்பை கிளப்பிவுடன் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா அரசை மென்மையாக கண்டித்தார். அமெரிக்கா கூலாக, சட்டத்திற்க்கு புறம்மாக விசா பெற்று அமெரிக்காவில் தங்கி படிப்பவர்கள் கால்களிலேயே டிரான்ஸ் மீட்டர் பொருத்தியுள்ளோம். படிக்கும் இளைஞர்கள் என்பதாலே அவர்களை கைது செய்து, நாடு கடத்தாமல் கண்காணிப்பில் வைத்துள்ளோம். இது எங்களது நாட்டு பாதுகாப்புக்காக நாங்கள் செய்யும் நடைமுறை என பதிலாளித்து விட்டார்கள்.

அமெரிக்கா பாதுகாப்பு காரணம் காட்டி இந்தியர்களை அவமானப்படுத்துவது முதல் முறையல்ல. கணக்கிலடங்காத வகையில் இந்தியாவின் முகத்தில் கறியை பூசி விட்டது. ஆனால் நம் ஆட்சியாளர்கள் கொஞ்சமா தானே பட்டுயிருக்கு என துடைத்துக்கொண்டு அடுத்த வேலை பார்க்க போய்விடுகிறார்கள். நம்மையும் அப்படியே இருக்க சொல்கிறார்கள். ஆனால் வட இந்தியாவில் அரசியல் கட்சியின் அமைப்புகள், வட இந்திய மீடியாக்கள் இந்தியர்களை அவமானப்படுத்தி விட்டார்கள் என அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


இது யாரால் ஏற்பட்டது. இந்தியாவில் படிக்க சரியான வசதியில்லை, வாய்ப்பில்லை என காரணம் காட்டி அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் படிக்க போனவர்களால் ஏற்பட்டது. அமெரிக்காவில் மட்டும் தான் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு இருப்பதை போல அங்கு போய் படிக்க பணக்கார, மேல் தட்டு வகுப்பை சார்ந்தவர்கள் குவிவது எந்த விதத்தில் நியாயம். அமெரிக்காவை விட படிப்பிற்க்கு ஏற்ற நாடு இந்தியா. இந்தியாவை விட அதிகமான போலி பல்கலைகழங்கள் அமெரிக்காவில் உள்ளன. அந்த போலி பல்கலை கழகங்களின் பிரச்சாரத்தை நம்பி போய் அங்கு படிக்க சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவிற்கு படிக்க போக மற்றொரு காரணம், படித்து முடித்தவுடன் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கிரின் கார்டு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணதில் தான் அங்கு போய் படிக்க குவிகிறார்கள். தற்போது அமெரிக்காவில் படித்து வரும் மாணவ சமுதாயத்தில் 100க்கு 70 சதவிதம் அதன் பகட்டை ரசிக்க, அங்கே செட்டில் ஆக வேண்டும் என போய் இருப்பவர்கள். மீதி 30 சதவிதத்தை சார்ந்தவர்கள் படிக்க போய் இருப்பவர்கள் என வைத்துக்கொண்டாலும் அவர்களில் படித்து முடித்து இந்தியா திரும்புவர்களின் எண்ணிக்கை 5 சதவிதம் கூட தாண்டாது. இவர்களுக்காக இந்திய மக்கள் ஏன் கவலைப்பட வேண்டும். இவர்களின் படிப்பு இந்தியாவுக்காக பயன்படும் என்றால் நாம் முண்டியடித்து போய் உதவி செய்யலாம் சின்ன துரும்பு அளவுக்கு கூட உதவி செய்ய தயாராக இல்லாத இவர்களுக்காக நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்.

இந்தியாவில் இருந்து வெளிநாடு போன இவர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை போல நாடகம் நடத்தும் வட இந்திய மீடியாக்களுக்கு ஒரு கேள்வி, வட மாநிலத்தை சார்ந்த மாணவர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டால் உடனே குதிக்கிறிர்கள். அந்திய தேசம் போய் வேலை செய்யும் போது சரியான விசா இல்லை என காரணம் காட்டி அந்நாட்டு காவல்துறையால் சிறைகளில் தள்ளப்பட்டுள்ள தமிழர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறையும், இந்திய தூதரகங்களும் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இப்படி வேலைக்கு சென்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களால் இந்தியாவின் மானம் போகவில்லையா?. அதுப்பற்றி நீங்கள் கூட ஏன் கேள்வி கேட்கவில்லை. சரியான விசா இல்லாமல் படிக்க போய் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளவர்களால் மானம் போனது என குதிப்பது என்ன நியாயம்.

இந்திய அரசே, மாணவர்களுக்காக குரல் கொடுப்பது சரியென்றால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுப்பது நியாயமாக இருக்குமே பின் ஏன் செய்வதில்லை. அட தூதரகங்கள் கூட ஒரு சிறு துறும்பு அளவுக்கு கூட தமிழர்களுக்கு உதவி செய்வதில்லையே ஏன்?. குரல் கொடுப்பது என்றால் அனைவருக்கும் குரல் கொடுக்க வேண்டும் ஆனால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆளும் நீங்கள் அதை செய்வதில்லையே ஏன்?. வட இந்தியர்களுக்கு மட்டும் தான் மானம், மரியாதை உள்ளது தமிழனுக்கு இல்லையா?.

இந்தியாவை ஆளும் அதிகார வர்க்கமே-வட இந்திய மீடியாக்களே, தென் தமிழக மீனவன் மீன் பிடிக்க போகிறவனை தினமும் சுட்டுக்கொல்வதும், நடு கடலில் நிர்வாணமாக சித்தரவதை செய்யும் சிங்கள ராணுவத்தை கண்டிக்க துப்புயில்லை, ஈழத்தமிழன் சுட்டுக்கொல்லப்பட்டபோது பாதுகாப்பு காரணம் காட்டி சிங்களனுக்கு ஆயுத உதவி செய்தவர்களே, வெளிநாட்டு சிறைகளில் துயரப்படும் தொழிலாள தமிழர்களை கண்டும் காணாமல் விட்டு வைத்துள்ள அரசே மானத்தை பற்றி பேசாதே. 



ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மற்றொரு கண்ணில் வெண்ணையும் வைக்கும் நீங்கள் மானம் போய்விட்டது என அமெரிக்காவிடம் போய் குதிக்காதிர்கள். மானம், மரியாதை, மனித உரிமை என்பது எல்லாருக்குமே உண்டு. என்று இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் நம் மக்களே என எண்ணி குரல் கொடுக்கிறிர்களோ அன்று பேசுங்கள் மானம், மரியாதை, மனித உரிமை பற்றி அதுவரை பேசாதீர்கள்.

திங்கள், பிப்ரவரி 07, 2011

மக்கள் பொங்கினால் நாடு தாங்காது. – எகிப்து.


எகிப்து வரலாற்று அறிஞர்கள் அள்ள அள்ள குறையாத பொக்கிஷ நாடு. எகிப்தியர்களின் கட்டிட கலையை இன்றளவும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கிறார்கள் உலக கட்டிட பொறியாளர்கள். உலக சுற்றுல பயணிகளின் சொர்க்கம் எகிப்து. உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் பிரமிடுகள், சகாரா பாலைவனம், உலகின் நீளமான நைல் நதி என உலகின் பல அதி முக்கிய தலங்களை தன்னுள் வைத்துள்ள நாடு எகிப்து.

உலக பந்தில் ஆசிய கண்டத்திற்க்கு மிக அருகில் உள்ள இஸ்லாமிய நாடு. மத கட்டுப்பாடுகளை ஓரளவு தவிர்த்துள்ள நாடு. அதற்க்கு பதில் ராணுவ கட்டுப்பாடுகள் அதிகம். எகிப்து வெளி தோற்றத்துக்கு குடியரசு நாடு என அறிவித்து இருந்தாலும் நடப்பது ராணுவ ஆட்சி. இதனால் தான் இன்று எகிப்து பற்றி எரிகிறது. மக்கள் தெருக்களில் இறங்கி இராணுவத்தோடு மோதுகிறார்கள். அவர்கள் போராடுவது சுதந்திரத்திற்காக அல்ல. தங்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்பதற்காக.

1922ல் எகிப்து சுதந்திரம் அடைந்தது. அது மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1951ல் இளம் இராணுவ சிப்பாய்கள் செய்த புரட்சியின் காரணமாக மன்னர் பரூக்கின் முடியாட்சி கலைக்கப்பட்டு குடியாட்சி பிரகடணம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் மூலம் நாடு ஆளப்பட்டன.


1981ல் தேர்தல் மூலம் அன்வர் எல் சதாக் என்பவர் குடியரசு தலைவரானார். அவர் மர்ம மனிதர்களால் சுடப்பட்டு இறந்த பின், விமான படை தளபதியாக இருந்து அரசியல்வாதியான முகமது ஹாசினி முபாரக் என்பவர் 1982ல் குடியரசு தலைவராக பதவியேற்றார். புதவிக்கு வந்தவர் முதலில் செய்த காரியம் எதிர்க்கட்சிகளை தடை செய்தது. மக்கள் செல்வாக்க உள்ள அமைப்பு, கட்சிகளை, மனிதர்களை சிறைக்கு அனுப்பினார். உலக நாடுகள் கண்டனம் எழுப்பும். புpடித்தவர்களை வெளியே அனுப்புவார் கொஞ்ச நாளில் மீண்டும் உள்ளே அனுப்புவார். இப்படி உள்ளே வெளியே விiளாயாடினார்.

அதிகமாக கண்டனம் வந்தால் தேர்தல் நடத்துவார் அவரே மீண்டும் குடியரசு தலைவராவார். ஆப்படி தொடர்ந்து குடியரசு தலைவராகும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றவரும்மில்லை, இராணுவ செல்வாக்கு, மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு பெற்றவர்.

மக்களின் வளர்ச்சிக்காக ஒரு பணியும் செய்யவில்லை என்பதால் கடந்த 40 ஆண்டுகளில் எகிப்தின் பொருளாதாரம் பாதாளத்தில் விழுந்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, விவாசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை, விலைவாசி விண்ணை முட்டுகிறது. பசி, பட்டினி, பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என ஏழைகளை தற்கொலையை நோக்கி தள்ளியது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.

சூயஸ் கல்வாய் நுழைவாயில் எகிப்தில் தான் உள்ளது. உலகின் பாதி கப்பல்கள் இதை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட நாட்டு மக்கள் 70 சதவிதம் வாழ வழியில்லாமல் வறுமைகயில் உள்ளார்கள். எகிப்து பொருளாதாரம் பின் தங்கி போக வைக்க ஆட்சியாளர்கள் முன்னின்று பணி செய்தனர். இதனால் அவர்களின் தனிப்பட்ட பொருளாதாரம் உயர்ந்தது. பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களானார்கள்.

இதனால் 1985 முதல் அடிக்கடி நாட்டில் போராட்டம் நடைபெற்றது, மக்களும் கலந்து கொண்டனர். ஆனால், அதை ஆட்சியாளர்கள் அடக்கியே  வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் நிலையை கண்டு இளைஞர்கள் கொதித்துப்போயிருந்தனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்த அவர்களை ஒண்றினைத்தது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக இணைய தளங்கள். நாட்டின் நிலைப்பற்றி, மக்களின் வறுமை பற்றி வலை தளங்கள் மூலம் விவாதிக்க ஆரம்பித்தது. விளைவு, 2011 ஜனவரி 25ந்தேதி கோபத்தின் நாளாக அறிவித்து எகிப்து முழுவதும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராடினர்.


விவசாயிகள், சிறு வியாபாரிகள், எதிர்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் என தானாகவே தெருக்களுக்கு வந்தனர். இன்று எகிப்தின் தலைநகரம் கொய்ரோ உட்பட எல்லா நகர வீதிகளும் பற்றி எரிகின்றன. எகிப்து ராணுவம், காவல்துறை மக்களை நோக்கி சுடுகின்றன. மக்கள் திருப்பி தாக்க இதுவரை அரசு தரப்பில் 500 பேரும், பொதுமக்கள் தரப்பில் 2000 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களது குழந்தை குட்டிகளோடு தெருக்களில் அரசின் ராணுவத்தை எதிர்த்து நிற்ப்பதை கண்டு ராணுவமும், அரசம் அரண்டு விட்டது. மக்களின் எழுச்சியை தடுக்க முடியாமல் எகிப்தின் குடியரசு தலைவர் தேர்தல் அறிவித்துள்ளார். அதை மக்கள் ஓரளவு நம்பி மாற்றத்துக்கு காத்திருக்கின்றனர்.


மக்கள் பொருமைசாலிகள் பொருமைக்கு ஒரு எல்லையுண்டு. மக்கள்  பொங்கினால் நாடு தாங்காது என்பதை எகிப்து மக்கள் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியுள்ளார்கள். மக்களுக்காக தான் நாடும், அதிகாரங்களும் என்பதை ஆட்சியாளர்கள் புாிந்துக்கொண்டால் சாி.