செவ்வாய், டிசம்பர் 13, 2016

வாருங்கள் சின்னம்மா.......... நாளை உங்களுக்கும் இதுதான்..........





 கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவா?. என்ன அநியாயம்மிது என பொதுமக்கள் தான் கொதிக்கிறார்களளே தவிர அதிமுகவின் எந்த எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, கட்சியின் மா.செக்கள் கொதித்துள்ளார் என கேட்டால் ஒருவரும் கொதிக்கவில்லை, ஏன் முனுமுனுக்க கூடயில்லை. அவர்கள் தான் பொறுப்பில் உள்ளார்கள் என்றால் கட்சியின் அடிமட்ட கிளை கழக உறுப்பினர் கூட எதிர்த்து முனுமுனுக்கவில்லை. 

எப்போதும், தலைமைக்கு எதிராக முனுமுனுக்ககூடாது என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது கட்சி அதிமுக. கட்சியினரை தொண்டர்களாக வைத்திருக்காமல் அடிமையாக வைத்திருக்கும் கட்சி எதுவென்றால் அது அக்கட்சி தான். அடிமைகள் கூட ஒருக்கட்டத்தில் குரல் எழுப்புவார்கள். எம்.ஜி.ஆர் இறந்தபோது அப்படித்தான் குரல் எழுப்பினார்கள். 

அடிமைகள் எப்வோதாவுது கேள்வி கேட்பார்கள், கொத்தடிமைகள் அதுக்கூட கேட்கமாட்டார்கள். அதனால் அடிமைகளை விட கொத்தடிமைகள் தான் சரியென தான் பதவிக்கு வந்ததும் அதிமுகவினரை கொத்தடிமைகளாக உருவாக்கினார்.

அதிமுக உருவானபோது அதிமுக வுக்கு என கொள்கை, கோட்பாடு என ஏதாவுது இருந்ததா எனக்கேட்டால் எந்த ஒரு வெங்காயமும் கிடையாது. கருணாநிதி எதிர்ப்பு, சினிமா பிரபலம் இதை மட்டும்மே வைத்துக்கொண்டு பதவிக்கு வந்த ராமச்சந்திரனுக்கு, பூணுல் கும்பல் சாதி ரீதியாக, மத ரீதியாக பெரும் பலமாக இருந்து அவரை தாங்கி பிடித்து தொடர்ந்து பதவியில் உட்கார வைத்தது. 

கருணாநிதி எதிர்ப்பு என்பது நீண்ட ஆண்டுகளுக்கு எடுபடாது என நினைத்தே கட்சியினரை அடிமையாக வைத்துக்கொள்ள விரும்பினார் எம்.ஜி.ஆர். அதனால் தான் கட்சியினர் ஒவ்வொருவரையும் அவர் படத்தை கைகளில் பச்சைக்குத்திக்கொள்ள வைத்தார். கட்சியினரை காலில் விழத்தான் சொன்னார், இவர்கள் அப்படியே படுத்துவிட்டார்கள். நிர்வாக திறமையற்ற, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ராமச்சந்திரன் தமிழகத்துக்கு என எதையும் செய்யவில்லை. இலவசத்தை ஊக்கு வித்து செருப்பு, பல்பொடி, துணி என தந்து அரசு பணத்தில் வல்லள் பெயர் எடுத்தார். அந்த ராமச்சந்திரன் மறைவின் போது, அந்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தான் மெரினா கடற்கரையில் சமாதி கட்டினார்கள். அதை காட்டியே 28 ஆண்டுகள் அந்தகட்சியின் பொது செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. 

கட்சியினரை எம்.ஜி.ஆர் அடிமையாக நடத்தினார் என்றால், அவர்களை கொத்தடிமையாக மாற்றினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆராவுது தன் பெயரை கையில் பச்சை குத்திக்கொள்ளத்தான் சொன்னார். ஜெயலலிதா, திமுகக்காரன் உட்பட நம் எதிரிகட்சியினரின் நல்லது, கெட்டதுகளில் கூட கலந்துக்கொள்ள கூடாது என வெளிப்டையாக அறிவித்தார். அதை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை, அப்படியே நடந்துக்கொண்டர்கள். மீறி கலந்துக்கொண்டவர்களின் பதவியை பறித்தார் ஜெயலலிதா. 

ஒருவருக்கு பதவி தருவது, பின் பிடுங்குவது, எதற்கு தந்தார்கள், எதனால் பிடுங்கினார்கள் என சம்மந்தப்பட்டவருக்கே தெரியாது. அந்த இடத்தில் எங்கேயோ உள்ள ஒருவனை தூக்கி வந்து பதவியில் உட்காரவைப்பது. இதை பார்க்கும் போது அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிடைக்கிறது என நினைக்கலாம். உண்மையில் இதனை நுணுக்கமாக பார்க்க வேண்டும், அரசியல் தெரிகிறதோ, தெரியவில்லையோ கட்சியின் அடிமட்டத்தில் உள்ள ஒருவருக்கு பதவி தந்தால் அவன் விசுவாச கொத்தடிமையாக இருப்பார், எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார் என்பதாலே அப்படிப்பட்டவர்களுக்கு பதவிகள் தந்தார்கள். இது கட்சியில் மட்டும்மல்ல ஆட்சியிலும் எதிரொலித்தது. யார் அதிகமாக ஜால்ரா அடிப்பது என்பது உயர் அதிகாரிகளுக்குள்ளயே போட்டி ஏற்பட்டதை கடந்த காலங்களில் கண்டோம். கொத்தடிமைகள் அழுதது, காலில் விழுந்தது போன்ற பணிவெல்லாம் எதற்காக பதவிக்காக. 

 அதனால் தான், அம்மா அம்மா என பாடிய வாய்கள் ஜெ அடக்கம் செய்த சுவடு காயும்முன், சின்னம்மாவே எல்லாம் என அவர் போட்டோவை சட்டையின் மேல்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஜெ படத்தை தூக்கி வீசினார்கள். நீங்கள் தான் கட்சியை, எங்களை காப்பாற்ற வேண்டும் என கதற தொடங்கிவிட்டார்கள்.

எல்லாம் எதற்காக ?. 

பதவி, பணத்துக்காக. தங்களிடம் உள்ள பதவியை, பணத்தை, அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள அந்த பதவிக்கு சசிகலாவல்ல, ஜெயா வீட்டு வேலைக்காரர் வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். 

ராமச்சந்திரன் மறைவுக்கு பின், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் என கட்சியினர் புகழ் பாடுவதை ஜெ விரும்பவில்லை என்பது கடந்த கால வரலாறு. எம்.ஜி.ஆர் என்கிற பெயரை தன்னை நிலை நிறுத்தவும், ஓட்டு வாங்கவும் பயன்படுத்திய ஜெ, மற்றப்படி அவரை நிராகரிக்கவே செய்தார். எங்கும் நான், நான், எனது அரசு என பேசியதும், திட்டங்களுக்கு தன் பெயரை வைத்துக்கொண்டது அதற்காக தான். இதனை உணர்ந்தே மாண்புமிகுக்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை எம்.ஜி.ஆர் பெயரைக்கூட சொல்லாமல் ஜெயலலிதா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தார்கள், கார் டயரை நக்கினார்கள், பறக்கும் விமானத்தை கும்பிட்டார்கள். இத்தனையும் செய்தது பதவிக்காக. அந்த பதவியை வைத்து பணத்தை சம்பாதிக்க, பணம் இருந்தால் எல்லாம்மே நம் வசம் என நம்பினார்கள், செய்தார்கள். 

கட்சியினரிடம்மிருந்து எம்.ஜி.ஆர் புகழை மறைக்கும் வகையில் தான், தான் இறந்தபின் தன் உடலை எம்.ஜி.ஆர் சமாதி அருகே புதைக்க வைத்துவிட்டார் ஜெ. எம்.ஜி.ஆரை காண செல்லும் முன் தன்னை வணங்கி விட்டுத்தான் போக வேண்டும் என்கிற ஜெ வின் விருப்பத்தை சசிகலா நிறைவேற்றியுள்ளார். தனக்கு அரசியல் வாழ்வளித்த எம்.ஜி.ஆரை மறக்க வைக்கலாம் என ஜெ நினைத்தார். ஆனால், கட்சியினர் அவரையே தூக்கி எறிந்துவிட்டார்கள். கட்சியை நடத்துவதில், தொண்டர்களை அடிமைப்படுத்துவதில், கட்சியை வளர்த்ததில் ராமச்சந்திரனை ஜெயலலிதா மிஞ்சினார் என்றால் கட்சி  அடிமைகளின் விசுவாசத்தை பெறுவதில் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் தோற்றுவிட்டார்.

நாளை சசிகலாவுக்கு அடுத்து யார் பதவிக்கு வருகிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அடிமைகளுக்கு விடுதலை முக்கியம்......... கொத்தடிமைகளுக்கு சோறு ( பதவி, பணம் ) தான் முக்கியம்.

செவ்வாய், டிசம்பர் 06, 2016

தயக்கத்தை உடை......... தலைநிமிர்....... பகுதி 2



டந்த வார பகுதியில் பகுதி - 1 கீழ்க்கண்ட கேள்விகளோடு அந்த கட்டுரையை முடித்திருந்தேன்.

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?, பொறியியல் படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை சந்திப்பதற்கான காரணம் என்ன?, படித்த இளைஞர்களை எதை வைத்து நகரம் –கிராமம் என பிரிக்கிறார்கள்?. கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி ?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?. இந்த கேள்விக்கான பதிலை பார்த்துவிடுவோம்..........

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?,

புற்றீசல் போல் இன்று கிராமத்துக்கு கிராமம் கல்லூரிகள் பெருகிவிட்டன. பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதற்கும் இறங்கு முகம் என்றதும் இப்போது, கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. நகரம் – கிராமம் என நீக்கமற நிறைந்துள்ள கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, நகர்ப்புறத்தில் உள்ள இளைஞர்கள் மேற்படிப்புக்கு எது சிறந்தது என விசாரித்து போய் சேர்க்கிறார்கள், சேர்க்கப்படுகிறார்கள். அதற்கு பல வாய்ப்புகள் அவர்கள் முன்வுள்ளது. கிராமப்புறத்திலோ, நமக்கு பக்கத்திலேயே காலேஜ் வந்துடுச்சி என அங்கே சேர்க்கப்படுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் இயல்பிலேயே இருக்கும் உஷார் தன்மை அவர்களை கல்லூரிகளில் அதிகம் கற்க வைக்கிறது. கிராமப்புற மாணவர்களிடம் இருக்கும் நம்பகத்தன்மை அவர்களை கல்லூரியில் எது கற்று தந்தாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறது. வாத்தியார் பொய் சொல்லமாட்டார் என கிராமப்புறங்களில் ஓர் நம்பிக்கை. நகர்ப்புற கல்லூரிகள், தங்களது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை திறமையானவர்களை கண்டறிந்து தேர்வு செய்கிறது, கிராமப்புறத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கல்லூரிகள் திறமை குறைந்தவர்களை வைத்து பாடம் நடத்துகிறது.

இங்குயிருந்து தான் அதிகரிக்கிறது கிராமப்புற இளைஞர்களின் தயக்கம். இயல்பிலேயே தயக்கத்தோடு கல்லூரிக்கு வருபவனிடம் தயக்கத்தை, பயத்தை உடைக்கும் இடமாக கல்லூரிகள் இருப்பதில்லை. இங்கும் அவனை அழுத்தியே வைத்திருப்பது. அவன் படித்து முடித்ததும் வேலைக்கு எனச்செல்லும் போது அந்த தயக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை ஏன் சந்திக்கிறார்கள் ?,

பெரும் நிறுவனத்தின் நேர்காணல்க்கு ஒரு நகர்ப்புற இளைஞனும், கிராமப்புற இளைஞனும் செல்லும்போது, நகர்ப்புற இளைஞனின் நடை, நுனி நாக்கு ஆங்கிலம் போன்றவற்றை கவனிக்கும் கிராமப்புற இளைஞன் நிலை குலைந்து போகிறான். நகர்ப்புற இளைஞனை காணும்போதே இவுங்களோட நாம எங்க போட்டிப்போடறது என மனதுக்குள் போராட தொடங்கிவிடுகிறார்கள். அந்த போராட்டம் தரும் பதட்டம் நேர்காணல் நடத்துபவரின் முன் வெளிப்பட்டுவிடுகிறது. இதுதான் அவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. பெரும் நிறுவனங்களில் முண்டாசுப்பட்டி போன்ற கிராமங்களில் இருந்து படித்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போகுவதன் காரணம். அதோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், எனக்கு அ, ஆ கற்றவன் தான் வேண்டும். அது கற்காதவனை நான் ஏன் எடுக்க வேண்டும் என நினைக்கிறது.

படித்த இளைஞர்களை எதை வைத்து இவன் நகரம் – அவன் கிராமம் என பிரிக்கிறார்கள்?.

நடை, உடை, பேச்சு தான் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவுக்குள் பேன்ட் – சண்டை நுழைந்து, இன்று தமிழகத்தில் வேட்டி அணிந்தால் கிறுக்கனாக பார்க்கும் நிலை தான் இருக்கிறது. 2 நூற்றாண்டாக நாம் பேன்ட்-சட்டை அணிந்தாலும் நகர்ப்புறவாசிகள் அணியும் அந்த பேன்ட் சட்டைக்கும், கிராமப்புற பின்னணியில் வாழ்பவர்கள் போடும் பேன்ட் – சட்டைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. பேன்ட் – சட்டை போட்டால் செருப்போ, சூவோ போடவேண்டும் என தெரியாத பாமர மக்கள் அதிகம் உள்ளது கிராமப்புறத்தில் தான். அப்படிப்பட்ட கிராமப்புற பின்னணியை கொண்டவர் கல்லூரிக்குள் நுழைந்தாலும், மேற்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு மெட்ரோ நகரங்களுக்குள் நுழைந்தாலும் அவனது ஆடை நேர்த்தி அவனை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

அதற்கடுத்து ஒருவருடைய பேச்சு. என்னதான் பெரிய படிப்பு படித்தாலும் நகர்புற இளைஞர்களின் மொழி உச்சரிப்புக்கும், கிராமப்புற இளைஞர்கள் மொழி உச்சரிப்புக்கும் பலமடங்கு வித்தியாசம் உண்டு. இதுதான் நகர்ப்புறம் – கிராமப்புறம் என அடையாளப்படுத்துகின்றன.
 

கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?.

பயம், தயக்கம் என்பது நகரம் – கிராமம் என இருதரப்புக்கும் இருக்கும். நகர்ப்புற இளையோர்கள் அதை அணுகுவதற்கு சிறு வயதில் இருந்தே, பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் வழியாக பழகிக்கொள்கிறார்கள். அந்த வாய்ப்பு கிராமப்புற இளையோர்களுக்கு குறைவு. முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போல, கிராமப்புற இளைஞன் இப்போதுதான் மேலே வருகிறான். எங்கே தவறு நடந்துவிடும்மோ என்ற பயத்திலேயே பயணம் செய்கிறான். நகர்ப்புற இளைஞன் தவறு நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என செயல்படுகிறான் அவ்வளவு தான்.

தவறு என்பது திருத்தமுடியாததல்ல, தவறு செய்தால் தான் கற்றுக்கொள்ள முடியும். இதை கிராமப்புற இளையோர் அறிந்துக்கொண்டாலே வெகுவேகமாக நகர்ப்புற இளைஞர்களோடு போட்டிபோட முடியும்.

நகர்ப்புற இளைஞர்கள் சறுக்கினால் சோர்ந்துபோய்விடுவார்கள். கிராமப்புற இளைஞன் சறுக்கினால் கவலைப்படமாட்டான். அதற்கு உதாரணம் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ளது அந்த குக்கிராமம். 34 வயதான அந்த இளைஞனை 5 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். கல்லூரிக்கு சென்றும் சரியாக படிப்பு வரவில்லையென படிப்பை விட்டுவிட்டு பெங்களுருக்கு கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றார். வேலை கத்துக்கொண்டுவந்தபோது, ஒரு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு அங்கிருந்து பைக்கில் வந்துக்கொண்டு இருந்தார். இரவு பயணம் ஊருக்கு மிக அருகில் வரும்போது எதிரே வந்த ஒரு லாரி மோதிவிட்டு போய்விட்டது. உடலெல்லாம் காயம், அதோடு அவரது இடது கால் முட்டிக்கு மேல் கட்டாகி துண்டாகி கீழே விழுந்தது. வலியால் கத்தி கூச்சல் போட்டும் இரவு நேரம் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. அந்த வலியிலும், இரவில் தனது கால் கட்டானதை தேடி எடுத்து தன் அருகே வைத்துக்கொண்டார். கீழே விழுந்த தனது செல்போனை தேடி எடுத்து ஊரில் உள்ள குடும்பத்தார்க்கு போன் செய்து வரச்சொல்ல அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் நீண்ட நேரமானதால் காலை ஒன்று சேர்க்க முடியவில்லை. 6 மாதத்துக்கு மேலானது அவரது உடல் சீராக. ஒத்த காலை வைத்துக்கொண்டு என்ன செய்வது, உறவினர்கள் ஒதுக்கினார்கள் கலங்கவில்லை. ஒற்றைக்காலோடு மீண்டும் பெங்களுரூ பயணம், ஒற்றை காலோடு வேலை செய்ய கற்றுக்கொண்டார். வேலை, வேலை.......... ஊரில் வீடு கட்டினார். ஒரு தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார், தம்பியை படிக்கவைத்தார். இவரின் தன்னம்பிக்கையை பார்த்து பட்டதாரி பெண் காதலிக்க, ஒருகால்யில்லையே என தயங்கியவரை விடாப்பிடியாக காதலிக்க வைத்து திருமணம் செய்துக்கொண்டார். இதுதான் கிராமப்புற இளைஞனின் தன்னம்பிக்கை. மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள் கிராமப்புற இளைஞர்கள். அவர்களால் சாதிக்க முடியும். அதற்கு ஊக்கசக்தி தான் தேவை.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கற்றோர் ஊக்குவித்தால் போதும் பெரும் சாதனைகளை செய்வார்கள் கிராமப்புற இளையோர்களும்.

'ஆணவம்' மறைந்தது. நிம்மதியாக உறங்குகள்...




தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ந்தேதி மறைந்தார். சர்வாதிகரிகளை மிஞ்சிய சர்வாதிகாரி ஜெ மறைந்தார் என எழுதலாம் என நினைத்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம். இறந்தவர்களை பற்றி தூற்றக்கூடாது என்பது தமிழக மரபு. அதனால் அதிகமாக எழுதவில்லை. அதற்காக அவரை புனிதராக்குவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் இப்போதுள்ள முதலமைச்சர்களில், இதற்கு முன்பு இருந்தவர்கள், இனி முதலமைச்சராக இருக்கபோகிறவர்கள் ஜெ போல் ஆணவமாக இருந்ததுயில்லை. 

அவர் மீதான நீதிமன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தையே தன் காலுக்கு கீழ் வைத்திருந்தவர். நீதியை நிலைநாட்டக்கூட ஜெயாவை எதிர்க்க முடியாமல் முனுககூட முடியாதவர்களாக தான் இருந்தார்கள் பல நீதிமான்கள். நீதிமன்றம் என்பது அதிகாரம் இருந்தால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தலாம் என இந்திய அரசியல்வாதிகளுக்கு காட்டியவர். 

சட்டங்களை, விதிகளை துச்சம்மென தூக்கி எறிந்தார். எதிர்கேள்வி வரும்போதுயெல்லாம் என்னை கையை பிடித்து இழுத்தார், சேலையை உருவினார், நான் பெண் என்பதால் எதிர்க்கிறார்கள் என பதில் தந்து எதிர் குரல்களை அடைத்தார். 

தன் அதிகாரத்தை பயன்படுத்தி பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்குகளாக பாய்ச்சினார், ஆள் வைத்து அடித்தார், ஆசிட் வீசினார். 

சட்டமன்றத்தை நாடக கொட்டையாக மாற்றியவர். அங்கு அவர் மட்டும்மே எல்லா வேடங்களையும் ஏற்றிருந்தார். சட்டமன்ற விதிகளை தன் ரோமமாக நினைத்தவர். அவர் செய்த சட்டவிதி சிதைவுகளை சரிச்செய்ய இன்னும் பலப்பல ஆண்டுகள் ஆகும்.  

உயர் அதிகாரிகளை பந்தாடுவதாக இருக்கட்டும், அதிகாரத்தில் உள்ள ஆண்களை காலில் விழவைப்பதாக இருக்கட்டும், ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் சாலை பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாகட்டும், எஸ்மா, டெஸ்மா மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையை விட்டு துரத்துவதாகட்டும், அவர்களை கைது செய்வது போன்ற முட்டாள்தனமான முரட்டு தனத்தை தைரியம் என பாராட்டி புலங்காகிதம் அடைவதே அவரின் விசுவாசிகளின் வேலை. 

எம்.ஜி.ஆர்க்கு பின் கட்சியில் தனக்கு நம்பகமானவர்களை அவர் உருவாக்கவில்லை. அதற்கு பதில் அடிமைகளை உருவாக்கினார். அந்த அடிமைகளை ஏவல் நாயாக பயன்படுத்தினார். அவர்களையே உயர்த்தி வைத்தார். இந்த அடிமை முறை தமிழகத்தில் அதிமுகவை பார்த்து அனைத்து கட்சிகளுக்கும் பரவியது. இந்த அரசியல் அடிமைத்தனம் போக இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை. 

அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், அதை பாதுகாக்கலாம், அதை வைத்து யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என இளைய தலைமுறைக்கு கற்று தந்தவர். இப்படி ஒரு சமூகத்தை தன் சுயநலத்துக்காக ஜோக்கராக்கியவர் இன்று மரணம் அடைந்திருக்கிறார்.
அவரின் மரணத்திலும் ஏகப்பட்ட மர்மங்கள். இதை அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஏன் இப்போது முதல்வராக வீற்றிருக்கும் பன்னீர்செல்வம், 31 அமைச்சர்கள் உட்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. எதனால் அவருக்கு மரணம் வந்தது என்பது கட்சியினருக்கோ, பொதுமக்களுக்கோ தெரியவில்லை. இது எத்தனை பெரிய அநியாயம். யாரும் இதுப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. அதற்கு பதில் அவரை புனிதராக்கும் பணியை தான் செவ்வனே செய்கிறார்கள். 

மறைந்தபின் அவரை புகழக்கூடாதா என கேட்கிறார்கள். நல்லதை புகழட்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், தனிப்பட்ட முறையிலும் அவரால் பயன்பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள் புகழ்கிறார்கள். அந்த கருத்துக்களை நிச்சயம் வரவேற்கிறேன். எனக்கு கூட தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் ஜெவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர் நமக்கு நம்பகமானவர் என தெரிந்தால் அவர்களை எப்போதும், எங்கும் அவர் கைவிட்டதில்லை, உதவிக்கு பதில் உதவி செய்து தன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்வார். அதற்காக அவரது ஆணவ ஆட்சியை, அதிகார திமிறை விமர்சிக்காமல் இருப்பது என்பது இன்னும் பல தலைவர்களை நாம் அந்த தன்மையில் உருவாக்கவே வைக்கும், அது தமிழகத்தை சவக்குழியில் தள்ளிவிடும், ஜாக்கிரதை.   

புதன், நவம்பர் 09, 2016

தயக்கத்தை உடை………… தலைநிமிர்…………………..




23 வயது இளைஞன் அவன், பி.எஸ்.சி கம்பயூட்டர் சைன்ஸ் படித்துள்ளான். சில மாதங்களுக்கு முன்பு, அண்ணே வேலை தேடறன் சரியா கிடைக்கல. உங்களுக்கு நிறையப்பேரை தெரியும், ஏதாவது ஒருயிடத்தல சொல்லி எனக்கொரு வேலை வாங்கி தாங்கண்ணே என வந்து நின்றான். 

நானும் சிலயிடங்களில் வேலைக்கு சொல்ல என் படிப்புக்கு ஏத்த வேலையில்லண்ணா, நல்ல வேலையா பார்த்து சொல்லுங்கண்ணா என்றான். சரியென மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மருந்து விற்பனை நிறுவனத்தில் நண்பர்கள் வேலை செய்ய அவர்கள் மூலமாக விற்பனை பிரதிநிதி வேலைக்கான நேர்காணல்க்கு அனுப்பிவைத்தேன். 80 சதவிதம் வேலை உறுதி, 22 ஆயிரம் சம்பளம் எனச்சொல்ல அதற்கான நேர்காணல்க்கு அவனை அனுப்பிவைத்தேன். போன வேகத்தில் சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பி வந்தான். கம்மி சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை இங்கயே சொல்லுங்கண்ணா என்றான். என்னடா என கேட்டும் சரியான பதில்யில்லை.

நேர்காணல் நடத்தியவர் உடன் பணிபுரிந்த எனது நண்பரிடம் விவகாரத்தை கேட்டபோது, ஒரு கேள்வி கேட்கறோம், பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும், அதவிட்டுட்டு தயங்கி தயங்கி, தலையை கீழ தொங்கப்போட்டுக்கிட்டு நிக்கறான், சரியாவே பேச வரல, இப்படிப்பட்டவன் எப்படி டாக்டர்கள்கிட்ட பேசி கம்பெனி பொருட்களை சிபாரிசு பண்ண வைப்பான், அதான் போடான்னு சொல்லிட்டன் என்றுள்ளான். 

இது அந்த இளைஞனின் தவறல்ல. கிராமபுற சூழ்நிலையில் பிறந்து, படித்துவிட்டு வரும் 99 சதவித இளைஞர்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு தான் கல்லூரி படிப்பை முடிக்கிறார்கள். கீழ்நிலை கல்வி மாணவர்கள் மட்டும்மல்ல உயர்கல்வி படித்து முடிக்கும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். நகர் புறத்தில் பயிலும் பிள்ளைகள் பரவாயில்லை, தயக்கத்தை அதிகமாகவே உடைத்துள்ளார்கள்.
எதனால் உள்ளுரிலேயே வேலை கேட்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டு, அவனிடம் பேச தொடங்கியபோது தான் கவனித்தேன். அவன் என்னிடம்மே அவ்வளவு பயத்தோடும், தயக்கத்தோடும் பேசினான்.
தம்பீ, தயங்காதே. என்ன பார்த்து எதுக்கு பயப்படற, தயங்கி தயங்கி பேசற, முதல்ல சேர் நுனியில உட்கார்றதுக்கு பதிலா நல்லா உட்கார். நீ என்ன கடனா வாங்க வந்துயிருக்கற. படிச்சியிருக்கற. வேலை ஏதாவுது இருந்தா சொல்லிவிடச்சொல்ற அவ்வளவு தானே இதுக்கு எதுக்கு தயங்கிக்கிட்டு என்றதும், இல்லண்ணா நீங்க பெரிய ஆளுங்களோட பழங்கறிங்க, அதான். 

நான் தொழில் நிமித்தமா பலதரப்பட்டவங்களோட பழகறன், அவ்வளவு தான். அதுக்கு நீ எதுக்கு பயந்து பயந்து பேசற, எங்கிட்ட எதுக்கு தயங்கனும் என கேட்டதும் அமைதியாக இருந்தான்.

உனக்கிருக்கற தயக்கம், இப்ப வரைக்கும் எனக்கும் உண்டு. நீ வந்து என்கிட்ட நிக்கற. 15 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு என்ன படிக்கனும்ன்னு கூட தெரியாது, வழிகாட்ட ஆள்கிடையாது. எதைப்பார்த்தாலும் பயம். அப்படியிருந்தவன் தான். இந்த பயம் தொடர்ச்சியா இருந்தா நம்மை முடக்கிடும். பயத்தை, தயக்கத்தை முதல்ல விட்டுடு. பயமும், தயக்கமும் இருந்தா சாதிக்க முடியாது, தெளிவான முடிவு எடுக்க முடியாது. பயத்தோட வேலை செய்யறப்ப வேலையை நடக்காது. அப்படிப்பட்ட இளைஞர்களை எந்த நிறுவனமும் விரும்பாது. 

நீ நேர்காணல்க்கு போறப்ப நேர்காணல் நடத்தறவரை நேர்கொண்ட பார்வையா பார்த்து பேசு. அவுங்க கேள்வி கேட்டதும் நீ சொல்றதை தயக்கமில்லாம சொல்லு. உனக்கு தெரியாததை தெரியாது, ஆனா தெரிசிக்குவன்னு சொல்லு. இங்க யாரும் பிறக்கும் போதே எல்லாம் கத்துக்கிட்டு வந்தவங்கயில்ல. அதுக்காக மக்கு சாம்பிராணியா போய் நிக்காத. பொது அறிவ வளர்த்துக்க. தினமும் செய்தித்தாள்களை படி. நீ நேர்காணல்க்கு போகும் நிறுவனத்தைப்பத்தி, அந்த நிறுவனத்தின் பணிகளைப்பத்தி கொஞ்சமாவுது தெரிஞ்சிக்க. ஒரு வேலைய முழு ஈடுப்பாட்டோட செய்தா தான் அதில் வெற்றி பெற முடியும். விருப்பம்மில்லாம வேலை செய்தா அந்த நிறுவனத்துக்கும் இழப்பு, உன் வாழ்க்கைக்கும் இழப்பு. 

டவுன்ல இருக்கற பசங்களோட போட்டி போட முடியலண்ணா ?. 

நகரத்தில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து வந்தவங்கயில்ல. அவுங்க தாத்தா கிராமத்தில் ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், பையனை படிக்க வச்சார். அந்த பையன் நகரத்துக்கு வேலைக்கு வந்தான். அந்த பையன் தன் மகனை நகரத்தில் படிக்க வச்சான். அதனால் அவனுக்கு பறந்துப்பட்ட உலகத்தை தெரிஞ்சி வச்சிக்கறான், தயக்கத்தோட நிக்காம, தைரியமா எதையும் எதிர்கொள்றான். 

உன் தாத்தா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தார், உங்கப்பா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், உன்ன படிக்கவச்சியிருக்கார். என்ன அந்த நகர வாழ்க்கை வாழும் தந்தையைப்போல உன் தந்தை கிடையாது. அதனால உனக்கு பறந்துப்பட்ட உலகம் அறிய முடியாம போச்சி. அவ்வளவு தான். அதுக்காக அவனோட எந்த விதத்திலும் நீ குறைந்தவனில்லை. 

அவன் படிச்ச அதே படிப்பதான் நீயும் படிச்சியிருக்கற. அவன் படிக்கறப்பயிருந்து தன்னோட தகுதிகளை வளர்த்துக்கிட்டான், அதுக்கான வாய்ப்புகள் இருந்தது. உனக்கில்ல, அவ்வளவுதான். இப்ப கத்துக்க. மோதிப்பார். மோதாமலே என்னால முடியாதுன்னு சொல்லாத. அத சோம்பேறி சொல்றது. 

நீ தைரியமா சவால்களை எதிர்க்கொள், அதற்கு தகுந்தார்போல் உன்னை தயார் படுத்திக்க என்ன உதவி வேணும்ன்னாலும் கேளு செய்யறன் என்றேன். கேட்டுக்கொண்டு போனவன் அதன்பின் வரவில்லை. அடுத்த சில நாட்களில் அவன் ஊரில் இல்லை. அவனை நானும் மறந்துபோயிருந்தேன். 

இரண்டு மாதத்துக்கு பின் இப்போது இனிப்பு பாக்ஸ்சோடு வந்து சந்தித்து வேலைக்கு சேர்ந்துட்டன், முதல் மாத சம்பளம் வாங்கனன், நீங்க சொன்னமாதிரி என்னை மாத்திக்கிட்டன், வேலை கிடைச்சிடுச்சி. அதான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தன் என்றான். 

வாழ்த்துக்கள்டா………… நகர வாழ்க்கைக்கு போற கிராமத்தை மறந்துடாத என்றேன். யோசித்தபடியே சென்றான்.

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

ஜெ வை பற்றி கேள்வி கேட்காதே……விசுவாசத்தல தீயை வைக்க.






 மாலன் நாராயணன். ஒருக்காலத்தில் பிரபல பத்திரிக்கையாளர். அவரது பத்திரிக்கை அனுபவம் தான் என்னுடைய வயதே. நான் நிருபராக பணிணை தொடங்கிய 14 ஆண்டுகளுக்கு முன்பு சில பிரபல பத்திரிக்கையாளர்களை பிரமிப்பாக பார்த்ததுண்டு. அதில் மாலனும் ஒருவர். 

இன்று?. அதிமுகவின் அடிமைகளில் அவரும் ஒருவர். இதை அழுத்தம் திருத்தமாக சொல்லக்காரணம், சொத்து குவிப்பு வழக்கில் ஜெவுக்கு, தண்டனை தரப்பட்டபோது அதிமுககாரர்களை விட அதிககமாக முகநூலில் துக்கம் அனுசரித்தார், கணக்கு குமாரசாமி, ஜெவை விடுதலை செய்தபோது அதிகம் கொண்டாடியவரும் அவரே. 

அப்படிப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர் தான் தனது முகநூலில் ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். ஜெ உடல் நலம் பற்றி கலைஞர் எழுப்பிய கேள்விக்கு, மாலன் தனது முகநூலில், அவரது (ஜெ) தனிப்பட்ட உடல் சார்ந்த விஷயம், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என கேட்ககூடாது. மத்தியஅமைச்சர் முரசொலிமாறன் மருத்துமனையில் இருந்தபோது, அவர் சிகிச்சை பற்றிய தகவல்களை மக்களுக்கு தந்தீர்களா என கேட்கும் பதிவது.

மாலன் சார் மட்டும்மல்ல, முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேயகட்ஜீவும், பொங்கியுள்ளார். எதையாவுது சொல்லி அடிக்கடி அடிவாங்கற கைப்புள்ள அவர் என்பதால் அவர் பற்றி இங்கு பேசவில்லை. மாலன் அவர்கள் எழுதிய விவகாரத்தை மட்டும் பேசுவோம். 

ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கையாளர் என்ன கேட்க வேண்டும். கடந்த 10 தினங்களாக முதல்வர் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை ஏன் தலைமைசெயலாளர் செய்யவில்லை? கவர்னர் ஏன் அவரை சென்று சந்திக்கவில்லை?, வதந்திகளுக்கு ஏன் அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை?, மத்தியரசு ஏன் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது என கேட்க வேண்டும். கவர்னர் சந்தித்துவிட்டு வந்தபின்னும் உப்பு சப்பில்லாத அறிக்கை ஒன்றை தந்துள்ளது கவர்னர் இல்லாம். இதுப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்பி மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். இதுதான் பத்திரிக்கையாளனுக்கு அழகு, தொழில் நெறியும் கூட. 

இந்த கேள்விகளை கூட ஏன் கேட்கசொல்லப்படுகிறது. ?

 தமிழக முதல்வராகவுள்ள ஜெ கடந்த செப்டம்பர் 22ந்தேதி இரவு மருத்துவமனையில் காய்ச்சல், நீர்சத்து குறைபாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டார் என அறிவித்தது அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம். மறுநாள் வந்துவிடுவார் என்றார்கள், வரவில்லை. வதந்திகள் பரவ பரவ தான் அப்போல்லோ நிர்வாகம், முதல்வர் நன்றாக உள்ளார் இட்லி சாப்பிட்டார், சாம்பார் குடித்தார் என நான்கு வரி அல்லது 8 வரியில் ஒரு விளக்க குறிப்பு செய்தியாக தந்தது அவ்வளவு தான். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார், நுரையீரல் பிரச்சனை, சக்கரை அதிகம் என வெவ்வேறு தகவல் வர வர இல்லையில்லை முதல்வர் காவிரிக்காக கூட்டம் நடத்தினார், உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை நடத்தினார், அமைச்சரை சந்தித்தார் என விதம் விதமாக அரசு செய்திக்குறிப்பு வருகிறதே தவிர. அப்படி ஏதாவது நடந்ததா என்பது பெரும் கேள்விக்குறியே. அதனால் தான் கலைஞர் உட்பட பல தலைவர்கள், ஜெ உடலுக்கு என்ன என கேள்வி எழுப்பினார்கள். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் முதல்வர் உள்ளார். மரபுப்படி கவர்னர் போய் சந்தித்து விளக்க வேண்டும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கலைஞர் கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டார் என்பதை விட மரபை நினைவூட்டினார். இதைக்கூட கேட்ககூடாது என்கிறார்கள் ஜெவின், நடுநிலை பத்திரிக்கை பக்தர்கள்

ஜனநாயக நாட்டில், தங்களை ஆள்பவருக்கு என்ன நேர்ந்தது என அறிந்துக்கொள்ள கூட மக்களுக்கு அதிகாரம்மில்லையா என்ன ?. அப்பறம் என்ன வெங்காயத்துக்கு ஜனநாயகம். 

மற்ற நேரங்களில் தான் கிராபிக்ஸ், மார்பிங் போட்டோக்களை அரசின் சார்பில் தந்தபோது கேள்வி கேட்காமல் பிரச்சுரிக்க வேண்டிய கட்டாயம், பிரச்சுரித்தீர்கள். இப்போது அந்த மூலவருக்கு என்னவானது என்கிற குழப்பம் அதிமுக தொண்டர்கள் மட்டும்மல்ல எதிர்கட்சிகள், பொதுமக்களிடமும் கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் போட்டோவை தாங்கள், வீடியோவை, வெளியிடுங்கள் என கேட்கிறார்கள். நியாயமாக இந்த நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை, ஆதாரங்களை தரவேண்டியது கட்டாயம். 

மாலன், தினமணி வைத்தி, தந்தி பாண்டே, அதிமுக ஆதரவு பத்திரிக்கை, மீடியாக்கள் கேள்வி கேட்காமல் இருக்கலாம். அவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு பின்னால் பல தேவைகள் உள்ளது. மக்களுக்கு அப்படியல்லவே. 


போயஸ்கார்டன் என்பது மர்மங்கள் நிறைந்த அரசியல் தலைவரின் இல்லம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஜெயாவை நோக்கி கேள்வி கேட்டால் பிடிக்காது என்பதும் தெரியும். இருந்தும் மக்கள் கேள்வி கேட்க காரணம், தன்னை ஆளும் முதல்வர் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளாரா என எதிர்பார்க்கிறார்கள். இதை விளக்க மாநில அரசு தான் மறுக்கிறது என்றால் மத்தியரசு என்ன செய்துக்கொண்டு உள்ளது? என்பதே அரசு மரபு அறிந்தவர்கள் கேள்வி. 

மக்களின் மற்றொரு பயம். நேரடியான உறவுகள் என ஜெயாவுக்கு யாரும்மில்லை. அவரது அண்ணன் பிள்ளைகள் உள்ளார்கள், அவர்களை கார்டன் பக்கம் கூட சேர்ப்பதில்லை. ஜெவை சுற்றி இருப்பது மன்னார்குடி சசிகலா கும்பல் தான். இந்த சசிகலா 30 வருடங்களாக ஜெயாவின் நிழலாக தொடர்ந்தாலும், சில நேரங்களில் எனக்கும், அவருக்கும் எந்த சம்மந்தமும்மில்லை என ஜெ வால் துரத்தியடிக்கப்பட்டவர். அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஆனால், என்ன காரணம்மோ மீண்டும் அவர்களை திரும்ப அழைத்துக்கொள்கிறார். ஜெவுக்கு பின் கட்சியை கைப்பற்ற சசிகலா துடிக்கிறார் என்பது இலைமறை காயாக அதிமுக நிர்வாகிகள் மத்தியில் உள்ள ஒரு பேச்சு. இதை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் அந்த தொண்டர்கள் தனது தலைவிக்கு என்னவானதோ என பதறுகிறார்கள். என்ன அவர்களால் எங்கள் தலைவிக்கு என்னவானது என வெளிப்படையாக கேட்க முடியாது. அதனால் அமைதியாக மனதுக்குள் குழம்பிக்கொண்டு உள்ளார்கள். அதனால் மற்றவர்கள் கேட்கிறார்கள். இதைத்தான் கேட்ககூடாது என்கிறார்கள் ஜெ பக்தர்கள்.

இவைகளை காணும்போது, ஜெவுக்கு லட்சக்கணக்கான அடிமைகள் காரணத்தோடு இருக்க ஜெவே ‘யாருக்கோ’, எதற்கோ அடிமையாக இருக்கிறார் போல. அதனால் தான் அவர் பற்றிய விவகாரம் வெளியே வரமறுக்கின்றன. அதனால் ஜெவின் நடுநிலை அடிமைகள், அவர் யாருக்கு அடிமையாக உள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டு பின் எதையும் கேள்வி கேட்காதே என மற்றவர்களுக்கு புத்தி சொல்லட்டும்............

புதன், செப்டம்பர் 21, 2016

தவறான பாதையில் திமுக.......??????






உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்கவே திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தினோம் என தமிழ்மாநில காங்கிரஸ், கொங்கு ஈஸ்வரப்பன் போன்றோர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்து கருத்து சொல்லும் போது, திமுக மீண்டும் தவறு இழைக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.  

தமிழகத்தில் வாக்குவங்கியுள்ள கட்சிகள் என்றால் அது திமுகவும், அதிமுகவும் தான். ஒட்டுமொத்தமாக 80 சதவித வாக்குகளை இந்த இரண்டு கட்சிகளும்மே வைத்துள்ளன. காங்கிரஸ்க்கு தென்தமிழகத்தில் ஓரளவு செல்வாக்குள்ளது, பாமக, தேமுதிகவுக்கு வடதமிழகத்தில் செல்வாக்குள்ளது. மத்தப்படி எந்த கட்சிக்கும் தமிழகத்தில் நான் அறிந்தவரை செல்வாக்கு கிடையாது. இந்த 20 சதவித வாக்குகளை தான் காங்கிரஸ், பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் பிரித்து வைத்துக்கொண்டு குதிக்கின்றன. 

இவர்களால் தனித்து நின்று ஒரு பேரூராட்சி தலைவர் பதவியைக்கூட பிடிக்க முடியாது என்பதே எதார்த்தம். இதை தெரிந்துக்கொண்டு தான் ஜெ, இந்த கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் ஒதுக்கி டேமேஜ் செய்வார். ஆனால் திமுகவிலோ, வாரி வழங்கிவிடுகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்குவதை முதலில் திமுக நிறுத்த வேண்டும். கட்சிகளின் பலம் அறிந்து சீட் வழங்க வேண்டும். ஒரு சீட்க்கு தகுதியில்லாத கட்சிகளுக்கு 10 சீட் தருவது, 10 சீட்க்கு மட்டும்மே தகுதியுள்ள கட்சிக்கு 50 சீட் வாரி வழங்குவது மக்களிடையே கேலியாக பார்க்கப்படுவதோடு, திமுக பலவீனமான கட்சி என்கிற முத்திரையை மக்கள் குத்துகிறார்கள். 

மக்களின் எண்ணம்மே அடிமட்ட கட்சியினரிடம் எதிரொலிக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்கிற மாயையை 2016 சட்டமன்ற தேர்தலில் உருவாக்காமல் இருந்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. கட்சிக்காரனே சோர்ந்துவிட்டான். ஆனால் அவர்களின் உண்மையான பலம் என்ன என்பது பின்பு வெட்டவெளிச்சமானது.  

திமுகவிடம் தங்களது பலத்தை மீறி சீட் பெறும் கட்சிகள் அதை எதிர்த்து நிற்கும் கட்சிகளிடம் பறிக்கொடுக்கிறார்கள். 

இதுதான் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது. 2016ல் திமுக அதிக இடங்களில் நின்றிருந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்திருக்கும், ஆனால் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது.  மிரட்டி சீட் வாங்கும் கட்சிகளை திமுகவும் ஒதுக்கிவைக்க வேண்டும். தனித்தே திமுக நிற்கலாம்.  அனால் அந்த ரிஸ்க்கை எடுக்க ஏனோ தயங்கிக்கொண்டே இருக்கிறது அன்று முதல் இன்று வரை. 

என்னால் தனித்து தேர்தலை சந்திக்க முடியும் என திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக கூட நிரூபித்துவிட்டது. ஆனால் இன்னமும் திமுகவுக்கு அந்த தைரியம் ஏன் வரவில்லை என்பது ஆச்சர்யமாகவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி என்கிற கூடாரத்தை உருவாக்குவதால் திமுக தன் பலத்தை இழந்தே வந்துயிருக்கிறது. நேரடியாக நான் மக்களை சந்தித்த 7 பொது தேர்தல்களில் பெரும்பான்மையானவரின் கருத்து ஜெ போல தைரியம் வருமா என்பது தான். அந்த பொம்பளை தனிச்சி நிக்குதுய்யா, இவுங்க ஒன்னும்மில்லாத கட்சிக்குயெல்லாம் சீட்ட வாரி வழங்கிட்டு நிக்கறாங்க, அதுக்கு காரணம், பயம் தானே என்றவர்கள் அநேகம் பேர்.

கடந்த தேர்தலில் மூன்றாவது அணி என உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக, தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் லட்டர் பேடு அமைப்புகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. தனித்து நின்ற பாமகவை விட குறைவாகவே இந்த மூன்றாவது அணி வாக்கு வாங்கியது. அப்படியிருக்க செல்லாத இந்த கட்சிகளில் சிலவற்றை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் தர வேண்டியிருக்கும். அதோடு, வரப்போகும் நாடாளமன்ற தேர்தலில் சீட் பெறவே இப்போதே உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி சேருகிறார்கள். ஒன்னும்மில்லாத கட்சிகளை திமுக தன்னோடு இணைத்துக்கொண்டால் திமுகவின் அடிமட்ட தொண்டன் தான் விரக்தியடைவான் என்பதை தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அடுத்த நாடாளமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளும், சட்டமன்ற தேர்தலுக்கு 5 ஆண்டுகளும் முழுமையாகவுள்ளன. இப்போதிலிருந்தே திமுக வலிமை குன்றிய பகுதிகளில் கட்சியை வளர்க்க திட்டமிட வேண்டும். தனது சொந்த நலனுக்காக அதாவது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள, குற்றவழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, சம்பாதிக்க கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை முதலில் களையெடுக்க வேண்டும். கட்சி வெற்றிக்காக பாடுபடுபவர்கள் தான் கட்சிக்கு முக்கியம். பணம் இருப்பவனுக்கு தான் பதவி என்கிற கொள்கையை விட்டுவிட்டு தொண்டர் பலம் உள்ளவனுக்கும், கட்சிக்காக களத்தில் வேலை செய்பவனுக்கும் பதவி வழங்க வேண்டும். 

இளைஞரணி மட்டும்மல்ல கட்சி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற அணிகளை ஊக்குவிக்க வேண்டும். புதுப்புது இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கும் கட்சி பதவி வழங்க வேண்டும், தேர்தல் களத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களை நுழைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு அவர்களை வரவைக்க வேண்டும். அதோடு, கட்சி வரலாறு தெரிந்தவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும், இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு பதவி தர வேண்டும். இணையத்தில் பணியாற்றினால் கட்சி வெற்றி பெரும் என கீபோர்டு வீரர்களை தட்டி வைத்து நீ மட்டும்மல்ல கட்சி நாட்டில் படிக்காத மக்களும் உள்ளார்கள்  என்பதை நிரூபிக்க களத்திலும் பணியாற்ற வைக்க வேண்டும். இதை செய்தாலே அதிமுக போல் திமுகவாலும் தனித்து தேர்தலை சந்திக்க முடியும். 

அதைவிட்டுவிட்டு கூட்டணி சேர்வது என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு என்பதை திமுக தலைமை மறக்ககூடாது.

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

ராம்குமார் நல்லவனா? கெட்டவனா ?.




சென்னையில் படுகொலை செய்யப்பட்ட விப்ரோ நிறுவன பணியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது, மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக அலறியது. சில நாள் இடைவெளிக்கு பின் ஒரு வீடியோ பதிவு என மெல்ல மெல்ல தகவல்களை பரப்பிய காவல்துறை பின்னர் ஒருநாள் இரவு கழுத்தறுப்பட்ட நிலையில் ராம்குமார் என்கிற இளைஞனை காட்டி இவன் தான் கொலைக்காரன். ஒரு தலைக்காதலால் கொலை செய்தான் என்றது. மீடியாக்களும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்தியது, குற்றவாளி எனச்சொல்லி தீர்ப்பு எழுதியது. 

தமிழக மீடியாக்களுக்கு புலனாய்வு என்பது அத்துப்போய் பலகாலமாகிவிட்டது. காவல்துறை சொல்வதை எந்த காலத்திலும் அப்படியே நம்பக்கூடாது என்கிற பாடத்தை கூட படிக்காமல் வந்ததோடு மைக்கை தூக்கிக்கொண்டு காவல்துறை சொல்வதை தாங்கள் கண்டுபிடித்தது போல் ஒப்பிக்கிறார்கள்.

ராம்குமார் எதனால் கழுத்தை அறுத்துக்கொண்டான் என்கிற கேள்வியை எழுப்பவேயில்லை. அவன் தான் கொலைக்காரன் என்பதற்கான வலுவான காரணத்தை இதுவரை காவல்துறை தரப்பில் சொல்லவேயில்லை. அதுப்பற்றி எந்த மீடியாவும் கேள்வி எழுப்பவில்லை. அவசர அவசரமாக இந்த வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை இருந்தது, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வரான ஜெவும் அதற்கு உதவியாக இருந்தார்.
ராம்குமார் சிறைக்குள் போனதும் இப்போது மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துக்கொண்டான் என்கிறது சிறைத்துறை. இதை பாமரன் கூட நம்பவில்லை. இதற்கு நிச்சயமாக முறையான விசாரணை வேண்டும். கொலைகார அரசாங்கத்திடம் அதை கேட்பது முட்டாள்தனம்.

ராம்குமார் தவறு செய்திருந்தால், அதை நிறுபிக்க வேண்டியது காவல்துறை கடமை, தண்டனை தருவது நீதித்துறை கடமை. ஆனால் ராம்குமார்க்கு காவல்துறையே தண்டனை தந்து நீதிபரிபாலனை விவகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த தண்டனை வழியாக தெரிவது என்னவென்றால் ராம்குமார் இறந்துவிட்டான் இந்த வழக்கு முடிந்தது, இனி யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது என்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மக்களுக்கு விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. அதிகாரவர்க்கத்துக்கு இந்த கேள்விக்கான பதில்கள் தெரியும். அதை எந்த காலத்திலும் யாரும் பதில் சொல்லப்போவதில்லை. ஏன் எனில் பேய்கள் அரசாள்கின்றன.

புதன், ஆகஸ்ட் 24, 2016

ஒலிம்பிக் பதக்கம்- நாம் வெட்கப்பட வேண்டும்……



2016 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலபதக்கம் வாங்கிய சாக்ஷி மாலிக்குக்கும், இறகு பந்து விளையாட்டில் வெள்ளி பதக்கம் வாங்கிய சிந்துவுக்கும் வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவல்ல. பதக்கம் வாங்கினார்கள் என்றதும் கொண்டாடி தீர்க்கும் இந்தியர்களுக்கான பதிவு.
2016 ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள 120 கோடி இந்தியர்களின் சார்பில் மல்யுத்தம், இறகுபந்து ஒட்டப்பந்தயம், நீச்சல், ஜிம்னாஸ்டிக் போன்ற பல விளையாட்டுகளில் கலந்துக்கொள்ள 118 வீரர்கள் பிரேசில் சென்றனர். ஆகஸ்ட் 5ந்தேதி தொடங்கிய போட்டியில் இந்தியா பதக்கம் வாங்கியதா எனக்கேட்டால் கிரவுண்ட்க்கு போகும்போதே அவுட்டாகி வந்துவிடுகிறார்கள் நமது வீரர்கள்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். விளையாடாமலே தோல்வியை சந்திக்கும் நாடு எதுவென்றால் அது இந்தியா தான். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்குகிறது இந்தியா. அந்த தொகையில் இருந்து ஒரு சதவிதத்தை ஒதுக்கி முருகேசன் பாத்திரகடையில் பதக்கங்களை வாங்கியிருந்தால் கூட வீட்டுக்கு நாலு தங்க பதக்கங்களை தந்துயிருக்கலாம். அப்படி தந்துயிருந்தால் வெள்ளி பதக்கம் வாங்கியதையும், வெண்கலப்பதக்கம் வாங்கியதை நினைத்து நாடே கொண்டாடி கொண்டுயிருக்காது.

இரண்டு பதக்கம் வாங்கியதை நினைத்து ஆஹா, ஓஹோ என கொண்டாடி தீர்க்கும்  இந்தியர்கள், நம்மை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடான அமெரிக்கா 120க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது. நம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட சீனா கூட பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நம்மை விட குறைந்த மக்கள் தொகை நாடும் அதிக பதக்கம் வாங்குகிறது, நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் அதிகமாக பதக்கம் வாங்கிறது நாமே அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பதக்க பட்டியலில் 64 இடத்தில் இருந்த்தை நினைத்து நாம் முதலில் நாம் வெட்கப்பட வேண்டும்.

இது ஏதோ இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும்மல்ல ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கிய காலத்தில் இருந்தே இதுதான் நடக்கிறது. பதக்க பட்டியலில் இந்தியாவின் பெயரை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டியதாக இருக்கிறது.

எங்கே இதன் வீழ்ச்சி என்றால், வீரர்கள் தேர்விலேயே தோல்வியை சந்தித்து விடுகிறது. திறமையான வீரன் மேலே வரமுடிவதில்லை. காரணம், அவன் மேல்சாதிக்காரனாக இருப்பதில்லை. திறமையானவனாக இருந்தாலும் கீழ்சாதிக்காரன் கீழே கிடக்கவேண்டும், திறமையில்லாத மேல்சாதி தற்குறிகள் எல்லாம் மேலே வரவேண்டும் என நினைத்து வீரர்களை தேர்வு செய்வதால் தொடக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது தோல்வி.

அதுமட்டும்மல்ல, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் தரப்படுவதில்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவென கல்லூரியில் படிப்பவனிடம்மே கேட்டுப்பாருங்கள் கிரிக்கெட் என்பான். இது அவர்கள் மீது மட்டும் குற்றம்மல்ல. ஊடகம், சமூகமும், அரசு மீது தான் குற்றம்சாட்ட வேண்டும்.  

கிரிக்கெட் விளையாட்டுக்கு பக்கம் பக்கமாய் செய்தி போடும் செய்தித்தாள்கள், நேரடி ஒளிப்பரப்பு செய்யும் தொலைக்காட்சிகள் மற்ற விளையாட்டுக்களை கண்டுக்கொள்வதில்லை. மக்கள் பார்க்கும் விளையாட்டுக்கு மட்டும்மே நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் எனச்சொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு வரி சலுகை, பொருள் சலுகை, இடச்சலுகை என வாரி வழங்கும் இந்திய ஒன்றிய அரசுகளும் அவைகளை நோக்கும் சமூகமும் கிரிக்கெட் மீது பைத்தியமாய் திரிகிறார்கள். விளையாடும் போது தேசப்பற்று வேறு பொங்கி வழிகிறது. கிரிக்கெட்க்கு இந்த சமூகமும், அரசும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் முக்கியத்தவத்தில் 10 சதவிதம் மற்ற விளையாட்டுகளுக்கு தந்தால் போதும் கோப்பை வெல்லவில்லை என்றாலும் இத்தனை விளையாட்டுகள் உள்ளது என்பதாவுது மக்களுக்கு தெரியும்.

இத்தனை விளையாட்டில் கலந்துக்கொண்ட நமது வீரர்கள் ஒரு தங்க பதக்கம் கூட வாங்காமல் வருகிறார்களே, திறமையற்ற அவர்களை ஏன் அனுப்பினீர்கள் என மக்களாவுது அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்களா என்றால் கிடையாது. நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்கிறார்கள். பதக்க பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் இந்த நாடு அடுத்த ஆண்டு பதக்க பட்டியலில் பெயர் வரவில்லை என்றால் அந்த நாட்டு விளையாட்டு துறை அமைச்சரின் பதவி பறிக்கப்படும். அது சர்வாதிகார நாடாக இருந்தாலும், ஜனநாயாக நாடாக இருந்தாலும் இதுதான் நடக்கும். ஏன் எனில் அங்குயெல்லாம் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள். இங்கு மக்கள் மட்டும்மல்ல நாட்டின் நான்காவுது தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியாவும் நவ துவாரங்களை மூடிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பதக்கம் வாங்கியவர்களுக்கு அரசாங்கம் தரும் பண மதிப்பையும், பொருள் மதிப்பையும் பக்கம்பக்கம்மாய் எழுதியும், மணிக்கணக்கில் ஒளிப்பரப்பியும் சந்தோஷப்படுத்துகிறார்கள். விளையாட்டு வீர்ர்களை ஊக்குவிக்கவே இப்படி பணமும், பொருளும், பதவியும் தருகிறோம் என்பார்கள் அதிகார வர்க்கத்தினர். உண்மை அதுவல்ல, மக்களை திசை திருப்பவே அப்படி செய்கிறார்கள். தங்களை நோக்கி மக்கள் வெகுண்டெழுந்து கேள்வி கேட்க்க்கூடாது என்பதற்காகவே திசை திருப்புகிறார்கள். இதற்கு மீடியா உலகமும் துணை போகிறது.  

இதுப்பற்றி ஆட்டு மந்தையான மக்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. விளையாடும் வீரர்களை பார்த்து முஷ்டியை மடக்கி, பல்லை கடித்துக்கொண்டு ஜெயிக்கனும் ஜெய்ஹிந்த் என கத்திவிட்டு நகர்ந்துவிடுவதே வேலையாக இருக்கிறது.


ஒலிம்பிக்கில் சாதனை புரிய வேண்டும் என்கிற வேட்கை வீரர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இருக்கவேண்டும். இல்லையேல் நாளை ஒலிம்பிக்கில் விளையாட போவதே சாதனையாக பார்க்கப்படும்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

ஜெ மீதான பயத்தை உடைத்த சசிகலாபுஷ்பா.






அதிரடி....... அதிரடி......... என தலைப்பு கொடுத்து எது எதற்கோ செய்தி போடுகிறார்கள் என் சக தோழர்கள். உண்மையான அதிரடி இதுதான். அதிமுக தலைமை பற்றி நன்கறிந்த அதே கட்சியை சேர்ந்த நாடாளமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பா, உலகம்மே உற்று நோக்கும் இந்திய நாடாளமன்றத்தில் பேசியபேச்சு, அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவின் இமேஜ்சை சரித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மீடியாக்கள் வேண்டுமானால் நாம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என எண்ணி செய்தியை திரிக்கலாம். ஆனால், தமிழகத்தை தாண்டி எண்ணற்ற ஊடகங்கள் உள்ளன. இந்தியாவை தாண்டி பிரபலமான வெளிநாட்டு ஏடுகளும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளன என்பதை மறந்துவிடுகிறார்கள். சரி விவகாரத்துக்கு வருவோம்.

தூத்துக்குடியில் பிறந்து, திருமணமாகி, சென்னையில் வாழ்க்கை நடத்தியவர் சசிகலாபுஷ்பா. அதிமுகவில் பதவியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடனான நெருக்கத்தால் அதிமுகவில் இணைந்து, கட்சி பதவி, தூத்துக்குடி மேயர் பதவி என வலம் வந்தர் மாநிலங்களவை எம்.பியாகி அதிமுகவின் மாநிலங்களவை கொறடா என முக்கிய பதவியும் வகித்தவர். ஓரிரு மாதங்களுக்கு முன்பு, தனது ஆண் தோழருடனான அந்தரங்க பேச்சு ஆடியோ, திமுகவின் முக்கிய எம்.பியான திருச்சிசிவாவுடனான ஜோடி புகைப்படம் என சர்ச்சை ரவுண்ட் கட்டியதில் இருந்து சசிகலாபுஷ்பாவுக்கு இறங்கு முகம். இறுதியாக கடந்த வாரம், டெல்லி விமான நிலையத்தில் சென்னை வர காத்திருந்தபோது, திமுக எம்.பி திருச்சி சிவா கன்னத்தில், அதிமுகவை சேர்ந்த சசிகலாபுஷ்பா அறைய தேசிய அளவிலான விவாதமாக மாறியது. உடனடியாக இரு எம்.பிகளையும் அவர்களது கட்சி தலைமை அழைத்து விசாரித்தது. 

விசாரணை எப்படி நடந்தது என்பதை இந்தியாவின் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கூறியது, எம்.பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி என் கன்னத்தில் அடித்தார் எங்கள் கட்சி தலைவி. அவர் மட்டும்மல்ல அங்கு சிலரும் தாக்கினார்கள். நாயை போல் அடைத்து வைத்திருந்தார்கள். என் குடும்பத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை என நாடாளமன்றத்தில் கதறினார். இதை கேட்ட இந்திய நாடாளமன்ற உறுப்பினர்கள் மட்டும்மல்ல, நேரடி ஒளிப்பரப்பில் கேட்டுக்கொண்டுயிருந்த தமிழகம் தவிர்ந்து இந்தியா முழுவதும்முள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. 


தமிழக மக்கள் அதிர்ச்சியடையவில்லை, சசிகலாபுஷ்பாவை நினைத்து பரிதாபப்பட்டனர். காரணம், ஜெ கட்சி நிர்வாகிகளை அடிப்பார் என்பது இலை மறை காயாக மக்கள் அறிந்தது தான். அதனால் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் பரிதாப்படகாரணம், ஜெவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் இன்று வரை தமிழகம் கண்டுக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மீடியாக்கள், மடாதிபதிகள் என எல்லா மட்டத்திலும் பயத்தை உருவாக்கி வைத்துள்ளார் ஜெ. அந்த பயத்தை வைத்தே கட்சியையும், ஆட்சியையும் நடத்துகிறார். அந்த கட்டமைக்கப்பட்ட பய பிம்பத்தை தான் உடைத்திருக்கிறார் சசிகலாபுஷ்பா. 

நாடாளமன்றத்தில் ஜெ மீது குற்றம்சாட்டி தான் பேசினால் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பது சசிகலாபுஷ்பா அறியாமல் பேசியிருக்க 100 சதவிதம் வாய்ப்பில்லை. காரணம், முதல்வரான தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி தந்தார் என்ற ஒரே காரணத்துக்காக என்னை கவர்னர் சென்னாரெட்டி என் கையை பிடித்து இழுத்தார் என்றவர் ஜெ. ஜெவை விட நான் அழகு எனச்சொன்ன ஒரே காரணத்துக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் அடிக்க வைத்தது, தனது ஆடிட்டர் தாக்கப்பட்டது, தனது தோழி சசிகலாநடராஜன் வாழ்வில் புகுந்ததால் இளம்பெண் செரினா வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது, வளர்ப்பு மகனை கஞ்சா வழக்கில் கசக்கி எடுத்தது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் ஓடஓட விரட்டி செருப்பால் அடிக்க வைத்தது, மணிசங்கர்அய்யரை சென்னை விமானநிலையம் முதல் பாண்டிச்சேரி வரை அடிக்க விரட்டியது, ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமிக்கு தரப்பட்ட அர்ச்சனை தமிழகம் மட்டும்மல்ல இந்தியாவே அறிந்தது தான், சசிகலாபுஷ்பா அறியாமல் இருப்பாரா என்ன. அறிந்துயிருப்பார். அப்படியிருந்தும் பேசியிருக்கிறார்.

என் யூகம், சசிகலா பின்னால் பெரும் பாதுகாப்பு அரண் உள்ளது. அவர்கள் தந்த தைரியம் தான் இவ்வளவு தைரியமாக நாடாளமன்றத்தில் சசிகலாபுஷ்பா வெடித்துள்ளார். சசிகலாபுஷ்பாவுக்கு பின்னால், கார்னட் மணல் வைகுண்டராஜன் உள்ளார் என்கிறது ஒரு தரப்பு, திமுக கனிமொழி உள்ளார் என்கிறது இன்னொரு தரப்பு. இன்னும் சிலரோ, காங்கிரஸ் சப்போட் உள்ளது என்கிறது. யார் இருந்தாலும் ஜெ கவலைப்படமாட்டார். தன்னை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை ஜெ காட்டியே தீருவார். அவர்கள் எத்தனை பெரிய அதிகார மையத்தின் உதவியுடன் இருந்தாலும் கவலைப்படமாட்டார். இந்திய அதிகாரத்தின் உச்சமான ஜனாதிபதியே காஞ்சி சங்கரமடம் வந்தால் பம்முவார்கள். அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்து பிதுக்கி எடுத்தவர் ஜெ. 

இப்படி மற்றவர்களை பழிவாங்குவதற்கு மற்றொரு காரணம், இந்த பயத்தை வைத்து தான் எல்லாரையும் அடக்கி ஒடுக்கி வருகிறார். அந்த பயம் போனால், கட்சியும், ஆட்சியும் தன் கைவிட்டு போய்விடும், தன்னை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதை உணர்ந்ததால் தான் எதிர்ப்பவன் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் நசுக்கி இதோப்பார் என்னை எதிர்த்தால் இதுதான் நிலைமை என எல்லா தரப்புக்கும் காட்டி பயத்துடன் வைத்திருக்க விரும்புவார். அதனால் நிச்சயம் சசிகலாபுஷ்பா எச்சிரிக்கையுடன் இருப்பது நல்லது.


அதிமுகவில் அடிஉதை என்பது புதியதல்ல. அதிமுகவை தொடங்கிய நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், முதல்வரான பின், தன்னை எதிர்க்கும் கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை அடித்து உதைக்க, வெளியே தன்னை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க சமீபத்தில் மறைந்த ஜேப்பியார் தலைமையில் பெரும் அடியாள் படையே ராமாவரம் தோட்டத்தில் வைத்திருந்தார் என்பது தமிழக மூத்தோர்கள் அறிந்தது. அதிமுகவை ஜெ கைப்பற்றியது போல. அடி உதை வழக்கத்தையும் ஜெ பின்பற்றுகிறார். முன்னவர் எதிர்ப்பவர்களை மிரட்டி பணிய வைப்பதோடு சரி. பின்னவர் எதிர்ப்பவர்களின் உயிரை எடுக்கவும் தயங்கமாட்டார். அவ்வளவு தான் வித்தியாசம்.