திங்கள், செப்டம்பர் 20, 2010

மலராத மறுமலர்ச்சி திமுக.





அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 15ந்தேதி அண்ணாவின் பூமியான காஞ்சிபுரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாநாடு நடத்தியது. தமிழகம் முழுவதிலிரும்மிருந்து மதிமுக தொண்டர்கள் காஞ்சிபுரம் வந்திருந்தனர். பிரமாண்ட பொதுக்கூட்டம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கு திரண்ட கூட்டத்தை கண்டு நடுநிலையாளர்கள் அதிர்ந்து போயினர். காரணம் இன்றைய சூழ்நிலையில் நேற்று முளைத்த கட்சிகள் முதல் சாதாரண ஜாதி, லட்டர் பேட் கட்சிகள் கூட பொதுக்கூட்டம் என்றால் குறைந்தது 3 ஆயிரம் பேரையாவது திரட்டுகிறார்கள்.

ஆனால் கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆன கட்சி, மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி சுகம் பெற்ற கட்சியின் ஒரு மிக முக்கிய கூட்டத்திற்க்கு வந்திருந்த கூட்டம் வெறும் 15 ஆயிரத்துக்குள் தான் என்பது வேதனைப்பட வேண்டிய விவகாரமாகியிருக்கிறது.
1994ல் மதிமுக என்ற கட்சி உருவானபோது நடத்திய முதல் கூட்டத்தில் கூடிய கூட்டம் திமுகவை அசைத்து பார்ப்பவையாகயிருந்தது. அந்த கூட்டம் எங்கே போனது? எதனால் இந்த சரிவு?.

உள்ளுர் வரலாறு முதல் உலக வரலாறு வரை விரல் நுனியில் வைத்திருப்பவர் வை.கோ. மாற்றான் தோட்டத்தின் மல்லிகையும் மணக்கும் என்பதை போல வை.கோ வை எதிரியாக நினைத்த திமுகவின் தீவிர தொண்டன் கூட வை.கோ பேச்சு என்றால் மயங்குவான். அந்தளவுக்கு பேச்சு மன்னன்.

கறுப்பு துண்டை இழுத்துவிட்டுக்கொண்டு அவர் பேசும் அனல் பேச்சு மயக்க வைக்கும். விடுதலை புலிகளை ஆதரித்து பேசினார் என பொடா சட்டத்தில் 19 மாதம் சிறையில் துன்பப்பட்ட வை.கோவை வெளியே வர வைத்த திமுக தலைவர் கலைஞர், 2004 ஆம் ஆண்டு பாராளமன்ற பொது தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 4 இடங்களை தந்து தமிழகம் முழுவதும் புழல் வேக பிரச்சாரத்தி;ற்க்கு இந்த புலி தலைவரை அனுப்பிவைத்தார்.

ஊர் தோறும் பவனி சென்று அப்போதைய முதல்வாரன ஜெயலலிதாவை, அவரால் பொடா சட்டத்தில் தள்ளப்பட்டு சிறையில் தான் பட்ட துன்பத்தை பொதுமக்களிடம் விளக்கினார். ஜெயலலிதா தமிழக மக்களை அழிக்க வந்த சாத்தான் என வர்ணித்து பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40என வென்றது. 

அந்த வெற்றியில் குறிப்பிட தக்க பங்கு வை.கோவின் பேச்சை சாரும். அந்த வெற்றியின் போதை குறைவதற்க்குள் அடுத்து வந்த 2006 சட்டமன்ற தேர்தலில் வை.கோ அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். கலைஞர் மதிமுகவை அழிக்க பார்க்கிறார். அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறேன் என காரணம் சொன்னார்.

பக்கத்து வீட்டுக்காரன் புகார் தந்தாலே அவனை ஜென்ம விரோதியாக பார்க்கும் இந்த உலகில் 19 மாதம் பொடா சிறை வாசம் ஜெயலலிதாவால் அனுபவித்தவர் அந்த நினைவுகள் நீங்கும் முன்பே மறப்போம், மன்னிப்போம் எனச்சொல்லிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததையும், ஜெவுடன் ஜாலியாக சிரித்து பேசியதையும் அதற்க்கு அவர் தந்த விளக்கத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் எண்ணம் தேர்தல் முடிவில் தெரிந்தது. அதிமுக கூட்டணியில் 36 இடங்களில் நின்ற மதிமுகாவால் 6 இடங்களில் தான் வெல்ல முடிந்தது. அப்போதே புரிந்து போனது மதிமுகவின் சரிவு. 

தோல்வியிலும் தன்னை மாற்றிக்கொள்ளாத வை.கோ, எங்கு எதனால் இந்த சரிவு என ஆராயாமல் தன் விவேகத்தை நம்பாமல் முன்பை விட அதிகமான கோபத்தோடு களமிறங்கினார். அரசியல்வாதிக்கு தேவை விவேகம் தானே தவிர வேகமும், கோபமும்மல்ல என்பதை அரசியல் கட்சி தலைவரான பின்பும் புரிந்துக்கொள்ள தவறிவிட்டார்.

எதிர் கட்சிகள் மீதான விமர்சனம் என்பதை தாண்டி தனிப்பட்ட தாக்குதல்களை அதிகமாக வைத்ததை அவரின் பேச்சை ரசிக்கும் நடுநிலையாளர்கள் மட்டுமல்ல அவரின் கட்சியினரால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் அதிமுகவின் பேச்சாளர் போல் பேசியதை அவரின் கட்சி மேல் மட்ட தலைவர்கள் உட்பட யாரும் ரசிக்கவில்லை.

வை.கோவின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடம் தொண்டர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியவர்களை ஒதுக்கினார் வை.கோ. இந்த ஒதுக்கலை அறிந்து திமுக விரித்த வலையில் விழுந்தனர் வை.கோவுக்கு இடதும் வலதுமாகயிருந்த செஞ்சி.ராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன், ராமகிருஷ்ணன் போன்றோர். ஆந்த வலையில் விழுந்தவர்களை தக்க வைக்கும் திறன்யில்லாமல் போய்விட்டது வை.கோவுக்கு. இது மதிமுகவின் அடித்தளத்தையே இல்லாமல் செய்துவிட்டது.

1992ன் இறுதியில் திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல பாக்கிறார் என உளவுத்துறை கிளப்பி விட்ட தகவலால் திமுக தலைமையால் வெளியேற்றபட்ட வை.கோவை பல மா.செகள் ஆதரித்தனர். அப்போது திமுகவில் கலைஞர் கருணாநிதியின் தளபதிகளாகயிருந்த செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன் போன்றோர் மிக முக்கியமானவர்கள். மதிமுக வளர இவர்கள் எந்தளவுக்கு பாடுபட்டார்கள் என்பது மற்றவர்களை விட வை.கேவுக்கு தெரியும். ஆனால் தன்னால் தான் கட்சி தனக்கு பின்னால் தான் தொண்டர்கள் என தப்பு கணக்கு போட்டு அவர்களை வெளியே விட்டார் இன்று அதன் பலனை அறுவடை செய்கிறார். 



2009 பாராளமன்ற தேர்தலின் போது ஈழ போர் பற்றி பேச முடியாத கூட்டணியில் மாட்டிக்கொண்டு அவரின் கருத்தை வெளிப்படையாக சொல்லக்கூட முடியாத, போராட முடியாத இடத்திற்க்கு போய்விட்டார். வை.கோவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரின் பேச்சாற்றல் என்றால் அவர் கட்சி அதன் பின் உயிர்ப்போடுயிருந்தது அவர் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைபுலிகளை கட்சி கொள்கையாகவே வைத்து ஆதரித்ததால் தான்.

அதனால் தான் தமிழகத்தில் இருந்த ஈழ உணர்வாளர்கள் அவர் பின்னால் அணி திரண்டனர். ஆனால் அதைக்கூட சரியாக கடை பிடிக்க முடியவில்லை என்ற கருத்து தற்போது மதிமுக தொண்டர்களிடையே நிலவுவது வேதனைக்குரியது. காஞ்சிபுரம் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வை.கோ, ஈழம் தொடர்பான கருத்துகளில் அடக்கியே வாசித்தது அவர்களை மனம் நோக வைத்துள்ளது.

முதலில் அதிமுகவில் தன் பேச்சை அடகு வைத்தவர். தற்போது கட்சியின் கொள்கைகளையும் அடகு வைத்துவிட்டார். இதனால் மதிமுக பெற்ற பலன், கட்சி தளபதிகள். முக்கியஸ்தர்கள், கட்சியின் அங்கீகாரம் போன்றவை பறிபோனது தான். 

வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்றதை போல இந்த முறையும் சீட் வாங்க வேண்டும் அதற்க்கு தன் கட்சியின் பலத்தை காட்டினால் தான் சரியாக வரும் என முடிவு செய்தே கட்சி மாநாட்டை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.

வரும் தேர்தலில் மதிமுகவுக்கு அதிமுக தலைமை 20 சீட் தந்தாலே அதிகம். கருணாநிதி மதிமுகவை அழிக்க பார்த்தார் என குற்றம் சாட்டினார். ஆனால் ஜெவோ, வை.கோவின் கோபத்தை வைத்து அந்த கட்சியை காலி டப்பாவாக மாற்றி விட்டார். இனி அவரின் எண்ணம் போல் தான் மதிமுக செயல்பட்டாக வேண்டிய நிலைமை என்பது கவலைக்குரியது.

தமிழக வரலாற்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மலராமல் போய்விட்டது பரிதாபத்திற்க்குரியது.

வியாழன், செப்டம்பர் 16, 2010

சிறைக்கம்பிக்குள் கலைஞர்கள்.

சிறை என்றால் கொடூரமானவர்களின் கொட்டடி, திருந்தாதவர்களை திருத்தும் இடம் என அனைவரும் எண்ணிக்கொண்டுருப்பார்கள். ஒருவிதத்தில் அதுவும் உண்மை தான். ஆனால் சிறைபட்டவர்கள் எல்லோரும் தவறு செய்யவே பிறக்கிறோம் என எண்ணி பிறந்தவர்கள்யில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தவர்கள் தான் அதிகம்.

அவர்கள் யாரையும் கொலைகாரர்களாகவே, ரவுடிகளாகவோ பார்ப்பதில்லை வேலூர் மத்திய சிறை நிர்வாகம். மனிதர்களாக பார்த்து அவர்களை அடிக்காமல்,
உதைக்காமல் நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது. அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல கவிஞர்களை, ஓவியர்களை, படிப்பாளிகளை, தொழில் கலைஞர்களை உருவாக்கிவருகிறது.

157 ஏக்கர் பரப்பளவில் 150 ஆண்டுகள் பழமையான வேலூர் மத்திய சிறையில் தான் இந்த ஆச்சர்யம். சிறைவளாகத்துக்குள் ஒரு குற்றவாளி வருகிறான் என்றால் அவனிடம் கேட்கப்படும் முதல் கேள்வி கையெழுத்து போட தெரியுமா? என்ன படிச்சிருக்க? என்ற கேள்வி தான்.

படிக்கலயா? சரி, நாளையிலயிருந்து ஸ்கூல் போகணும். 10வது படிச்சியிருக்கியா மேல ஏதாவது ஒரு டிகிரி படி என சிறைக்கு வருபவர்களுக்கு கல்வி பற்றி போதித்ததன் விளைவு... தற்போது இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக எம்.பி.ஏ 6 பேர், பி.சி.ஏ செகன்ட் இயர் 13 பேர், சி.எப்.என் என்கிற 6 மாத கோர்ஸ் 13 நபர்கள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக முதலாமாண்டில் எம்.பி.ஏ 6 பேர், எம்.ஏ தமிழ் 3 பேர், பி.ஏ வரலாறு 25 பேர். தமிழ்நாடு ஸ்டேட் போர்டு மூலமாக 8வது 40 பேர், 10வது 04 பேர், ஆக்சிலியம் காலேஜ் மூலமாக சி.ஐ.எம்.எஸ்ங்கற சர்டிப்கெட் கோர்ஸ் 5 பேர், டி.டீ.பி ஆப்ரேட்டர்க்கான பட்டயப்பயிற்சி 10 பேர் என கல்வி கற்று வருகிறார்கள் கைதிகள்.

இவர்களுக்கு கற்றுதர ஊரிஸ், அக்சீலியம் கல்லூரிகளின் பேராசிரியர்கள் சிறைக்கே வந்து பாடம் எடுக்கிறார்கள். 8வது முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு டிகிரி முடித்த கைதிகள் பாடம் எடுக்கின்றனர். இந்த சிறை கல்விக் கூடத்திற்க்கு எம்.சி.ஏ படிக்கும் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளன் தான் மாஸ்டர்.

இவர் தன்னுடன், பாபு, சென்னையன், அசோக், மோகன், சொக்கலிங்கம் என டிகிரி படித்தவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு பாடம் எடுக்கிறார். கொலை வழக்கில் தண்டனை பெற்ற மயிலாடுதுறை செந்தில்குமாரும், எம்.எஸ்.சி, எம்.எட், எம்.பி.எல் முடித்து எம்.பி.ஏ படிக்கும் ஆயுள் தண்டனை கைதி அருர் சென்னாமூர்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்க அவரும் இவர்களின் ஆர்வத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நவயுகத்தில் கம்யூட்டரின் அவசியம் பற்றியும், உலகமே கம்ப்யூட்டர் மையமாகி வருவது பற்றியும் அறிந்து... அதற்கு ஏற்றாற்போல் இண்டர்நெட் இல்லாத கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் சிறையில் செயல்படுகிறது.

கற்பதில் மட்டுமல்ல... கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்கள். சிறையில் நடக்கும் பொங்கல் விழா, தீபாவளி விழா மற்றும் கலை விழாக்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது இவர்கள் எழுதி தள்ளும் கவிதைகள் தான். கவி ரசம் சொட்டும்,

அருமையான மனிதாபிமான, ஐக்கூ கவிதைகளை எழுதி குவிக்கிறார்கள்.

உலக பொது மறையான திருக்குறளின் 1330 குறளை எப்படி மாற்றி, மாற்றி கேட்டாலும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றலை சிறைக்கு வந்து கற்றுள்ளார் முனுசாமி. கவிஞர்கள் மட்டுமல்ல ரவிவர்மாக்களும் இருக்கிறார்கள்.

ஒவியம் வரைவது, சிலைகள் செய்வதிலும் தங்களது கை திறனை காட்டும் இவர்கள் வரைவதற்கோ, சிலை செய்வதற்கோ எந்த விதமான பொருட்களும் சிறையில் கிடைக்காத நிலையில் குளிக்க தரும் சோப்பில் வேஸ்டாகவும் துகள்களை சேர்த்து வைத்து விநாயகர் சிலை, அம்மன் சிலை, தாய்மையை போற்றும் பெண்மையின் சிலைகளை தத்ருபமாக வடித்துள்ளார் 52 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நாகேந்திரன் என்ற இளைஞர். சிலைகள் மட்டுமல்ல பல வகையான ஒவியங்களை வரைந்து பார்ப்பவர்களை அதன் பால் ஈர்த்து விடுகிறார்.

யாரை பார்த்தாலும் அவர்களை அப்படியே அச்சு அசலாக வரையும் அவரின் திறமை அவருக்கே சிறைக்கு வந்தபின் தான் தெரிந்துள்ளது. மரம் போன்ற ஒரே ஓவியத்தில் இந்திய தலைவர்கள் முகங்களை காட்சியமைத்து தன் தூரிகை திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

வேலூர் ரோட்டரி க்ளப் மூலமாக 10 தையல் மிஷின்களை இலவசமா பெற்று, லயன்ஸ் க்ளப் மூலமாக தையல் பயிற்சி தந்துவருகிறார்கள். தற்போது 50 பேருக்கும் மேல் தையல் கற்றுக்கொண்டு எல்லா விதமான ஆடைகளையும் தைக்கும் கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள்.

சுலபமான வேலை என்பதால் பல கைதிகள் தையல் கற்றுக்கொண்டு வித்தியாசமான டிசைன்களை உருவாக்கி தைக்கிறார்கள் இந்த கைதி உடையில் உள்ள இந்த தையல் கலைஞர்கள். தற்போது ஆர்வமுள்ள கைதிகளை 30 பிரிவுகளாக பிரித்து தையல் கலைஞர்களாக உருவாக்கிவருகிறார்கள்.

அதுமட்டுமல்ல வேலூர் சிறையில் உள்ள கைதிகளின் காலணி தயாரிக்கும் கை திறனை கண்டு தீயணைப்பு துறை, காவல்துறை, வனத்துறையில் புதுசாக சேர்பவர்களுக்கு புது சூ ( காலணி ) தர 50 ஆயிரம் ஷீ க்கான ஆர்டர் இவர்களிடம் தந்துள்ளது அரசு. இங்கு பணி செய்யும் கைதிக்கு தோராயமாக மாதத்திற்கு 2000 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

அந்த பணத்தை கொண்டு வழக்கு செலவு, பசங்க படிப்பு செலவுக்கு என பயன்படுத்திக்கொள்கிறார்கள். விடுதலையாகி போகிறவர்கள் புதுசாக வாழ ஒரு தொழிலை கற்று தந்த சந்தோஷத்தில் மேலும் ஊக்கமடைந்து காலணி தயாரிப்பு பிரிவின் டெக்னிக்கல் பிரிவு இன்சார்ஜ்ஜாக பணியாற்றுகிறார்கள் பாஸ்கர், கோபிநாதன், குமார் ஆகியோர்.


மெழுகு வத்தி தயாரிக்க, மருத்துவமனைகளுக்கு பேண்டேஜ் தயாரிக்க, புக்ஸ் பைண்டிங் செய்ய, ஆபிஸ் ஃபேடுங்க செய்வதில் தங்களது கை வண்ணத்தை இதற்கான தொழிலை கற்ற கைதி கலைஞர்கள் காட்ட அதில் ஈர்த்து போன அரசு அரசு அலுவலக ஃபேட் தயாரித்து வழங்க 5லட்சம் ஃபேட் க்கு ஆர்டர் தந்துள்ளது.


இதுமட்டுமில்லை சுற்று சூழலை காக்க தங்களால் ஆனா முயற்சியாக வேலூர் ரோட்டாரி க்ளப் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி சிறையில் நட முயற்சியெடுத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை தற்போது நட்டுள்ளனர் இயற்கையின் மீது காதல் கொண்ட கைதிகள்.


இதுப்பற்றி வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சேகரிடம் பேசியபோது, பிறக்கும் போது எல்லாருமே நல்லவர்கள் தான். வளர்ப்பு, சூழ்நிலைகள் தான் ஒருத்தரை குற்றவாளியாக மாத்துது. சிறை தண்டனை பெற்று உள்ளே வந்து அவுங்க செய்ததை நினைத்து தினம் தினம் அழும் போது மனிதனா பிறந்த எனக்கெல்லாம் ரொம்ப கஸ்டம்.


அப்படி சிறை தண்டனை பெற்று பல ஆண்டுகளா உள்ள இருக்கறவங்க மனம் உடைஞ்சி வாழ்க்கைய வெறுத்துவிட கூடாதுன்னு தான் அவுங்களுக்கு எதில் இன்ட்ரஸ்டோ அதில் அவர்களை ஈடுபடுத்துகிறோம். அப்படி ஈடுபடுத்தும் போது தான் பல கலைஞர்கள் தங்களோட திறமை தங்களுக்கே தெரியாம தெரிஞ்சிக்கிட்டாங்க.

அப்படி திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கறோம். தன்னோட கலையை ஒருத்தர் பாராட்டும் போது அவனுக்கு கிடைக்கிற சந்தோஷம் அளவிட முடியாதது. இதனால அவன் இன்னும் சாதனை புரிய துடிக்கிறான். சாதிக்க துடிப்பவர்களுக்குள்ள போட்டிகள் நடத்தி பரிசுகள் தருகிறோம்.


வேலை செய்றவங்களுக்கான கூலியும் தருறோம். அதை அவுங்க குடும்பத்தார் யாராவது பாக்க வர்றப்ப பணத்தை தந்து பசங்கள படிக்க வைன்னு சொல்லும் போது அவுங்க முகத்துல ஒரு சின்ன சந்தோசம் தெரியுமே அது தாங்க எங்களுக்கும் சந்தோஷம்.

ஒரு கைதியோட மனசை மாற்றி அவனை ஒரு மனிதனா மாற்றி திருத்தி அனுப்புகிறவனை வேதனைப்படுத்துவது இந்த சமுகம் தான். ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்து சிறைக்கு வந்தவனை ஜெயிலுக்கு போனவன், ஜெயிலுக்கு போனவன்னு பேசும் போதும், அவனுக்கு எந்த வேலையும் தராம சமுகம் புறக்கணிக்கும் போது மீண்டும் தப்பு பண்ண தூண்டுகிறது.

தமிழ்நாட்டிலேயே வேலூர் சிறைய கல்வியில், ஒழுக்கத்தில், சுற்றுச்சூழலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்து இலக்கியத்தில், கல்வியில், ஓவியத்தில், தொழிலில் கலைஞர்கள் உருவாக்குவது தான் எங்களோட குறிக்கோள் அது விரைவில் நிறைவேறும் என்று நம்கிறோம் என்கிறார்.

திருத்த முடியாதவர்களை எங்களால் திருத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கைதிகளை கலைஞர்களாக உருவாக்கும் முயற்சசியில் உள்ள வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.


-ராஜ்ப்ரியன்

நன்றி - நக்கீரன் இணையதளம் நந்தவனம் பகுதியில் வெளிவந்தது.

காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்

- ராஜ்ப்ரியன்

      கடந்த ஒரு வாரமாக தினசரி செய்திதாள்களை புரட்டியபோது தினமும் குறைந்தது 3 புகைப்படங்களாவது கண்ணில் பட்டது. அந்த படத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் பூக்கள் நிரம்பிய தட்டுகளோடு எதிரும் புதிருமாக வரிசையில் நின்றுகொண்டு நடுவில் நடந்து வருபவர்களுக்கு மலர் தூவிக்கொண்டிருந்தனர்.

வேறு சில படங்களில் அதேபோல் வேறு பள்ளி
மாணவ-மாணவிகள் சிலருக்கு பாதபூஜை செய்துக்கொண்டிருந்தார்கள்.

மலர் தூவி பாத பூஜை செய்யும் அளவுக்கு அந்த மிக முக்கியமானவர்கள் யார் என படத்தை உற்று உற்று பார்த்தபோதும்
சம்பந்தப்பட்ட வி.ஐ.பிகள் யாரென்றே தெரியவில்லை. புகைப்படத்திற்கான செய்திகளை படித்தபோது தான் தெரிந்தது;அவர்கள் ஆசிரியர் பெருமக்களாம். 


      செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினம். ஆசிரியர்களை பெருமைப்படுத்த மாணவ-மாணவிகள் தங்களது அன்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் எனச்செய்தி தெரிவித்தது ஆச்சர்யமாக இருந்தது.

நமக்கு தெரிந்த சில ஆசிரியர்களிடம் இதுபற்றி
கேட்டபோது, ஆசிரியர் தினத்துக்கு இந்த மாதிரி விழா எடுக்கச்சொன்னாங்க. பசங்க வீட்டிலிருந்து பணத்தை வாங்கி வந்து இந்த
மாதிரி விழா எடுத்தாங்க. இது நடந்தது எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் என்றார்கள். 

      மாணவ சமுதாயத்துக்காக என்ன செய்துவிட்டது இந்த தனியார் பள்ளிகள்.   எல்.கே.ஜி சேர்க்க க்யூவில் நிற்க வைத்து பணத்தை பிடுங்க தொடங்கி வகுப்பில் சேர்த்த பின் யூனிபார்ம், நோட்-புக், ஸ்பெஷல் க்ளாஸ் என மாதாமாதம் பணத்தை கறப்பதோடு கட்டிட நிதி, அந்த நிதி, இந்த நிதியென ஆண்டுக்கு ஆண்டு பணத்தை கறக்கிறார்கள்.

கூடவே லீவு போட்டால்
அபராதம், மதிய நேரத்தில் பள்ளியில் உள்ள பிள்ளைக்கு மதிய உணவு ஊட்ட வந்தால் அபராதம் என்று பணத்தை பிடுங்க புது புது வழிகளை உருவாக்குகிறார்கள். 

      பள்ளி நிர்வாகங்களுக்கு சலித்தவர்களில்லை இந்த ஆசிரியர்களும். வகுப்பில் பாடம் நடத்தாமல் வீட்டுக்கு டியூசன் வா என வரவைத்து மாதம் 200ரூபாய்க்கு குறையாமல் பீஸ் பிடுங்குகிறார்கள். பிராக்டிக்கல் மார்க் வேண்டுமா என் வீட்டுக்கு வந்து துணி துவை, வீடு பெருக்கு, காய்கறி வாங்கிவா, எச்சில் பாத்திரங்களை துலக்குவது என தங்களிடம் படிக்கும்
பிள்ளைகளை வேலை வாங்குகிறார்கள். 

      சம்பள உயர்வு, போனஸ், அரியர்ஸ் என செய்யும் வேலையை காட்டிலும் அதிகமாகவே அரசாங்கம் கொட்டி தந்தாலும் பேப்பர் திருத்த பணம் தா, மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுக்க பணம் தா என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்து ஊர்வலம் போகிறார்கள். வேலை நாட்களில் இப்படி பள்ளிக்கு போகாமல் தெருவுக்கு வந்து போராட்டங்கள் செய்கிறோமே மாணவர்களின் படிப்பு என்னவாவது என எந்த ஆசிரியராவது கவலைப்படுகிறார்களா?. 

      அதுமட்டுமா பள்ளியறையை படுக்கையறையாக மாற்றி சல்லாபம் புரிந்து மாட்டிக்கொண்ட ஆசிரியர்கள், மாணவிகளை சீரழித்து மாட்டிய ஆசிரியர்கள் தண்டனை எதுவும் பெறாமல் தொடர்ந்து பணிபுரிகிறார்கள். இவர்கள் மாணவ செல்வங்களுக்கு எதை கற்று தந்திருப்பார்கள். பதவிக்கும், பணத்துக்கும், சுகத்துக்கும் அலைபவர்களாக இருக்கும் இவர்களை போன்றவர் களுக்கு தான் சிறந்த ஆசிரிர்களுக்கான விருதே தரப்படுகிறது. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம் அந்தளவுக்கு அத்தனை கோல்மால்கள். 

      இப்படி தப்பு செய்வதையே நோக்கமாக கொண்ட பல ஆசிரியர்கள் தற்போது  தங்களது வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்களுக்கு பாதபூஜை செய், மலர் தூவு, காலில் விழு என நிர்பந்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
அரசியல்வாதிகள் பதவி சுகம் வேண்டியும், இருக்கும் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும் தான் தனது தலைவன் கால்களில் விழுகிறார்கள். பின் காலை வாருகிறார்கள். அந்த பழக்கத்தை நீங்கள் ஏன் வளரும் மாணவ செல்வங்களுக்கு கற்று தருகிறீர்கள்.
பிள்ளைகளை படிக்க தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். உங்கள் கால்களை கழுவி பொட்டு வைத்து, மலர் தூவி, காலில் விழ அனுப்பவில்லை. மரியாதை தரும் அளவுக்கு நீங்கள் சாதனையாளர்களும் அல்ல. மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல. அது ஒருவரின் செயல் பாடுகளை வைத்து மற்றவர்கள் தருவது. கேட்டு வாங்குவது என்பது பிச்சை எடுப்பதற்கு சமம். 

      வருங்கால தலைவர்களை உருவாக்க நீங்கள் என்ன செய்திர்கள்.  யாரோ எழுதி வைத்ததை படித்து விளக்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லி தருகிறீர்கள். மாணவர்களும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பாஸ் செய்கிறார்கள்.

இதுவா கற்று தரும் முறை. நீங்கள் கற்று தந்த லட்சணத்தை சமீபத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி
விவரம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு வெளிவரும் மாணவ-மாணவிகளில் 70 சதவீத மாணவர்களுக்கு  ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. கல்லூரியில் நுழைந்ததும் சிரமப்படுகின்றனர். 

      கணக்கு பாடத்தில்; 40 சதவித மாணவ-மாணவிகள் தோல்வியை தழுவுகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 30 சதவிதமானவர்கள் பார்டர் மதிப்பெண்ணில் வெற்றி பெற்றவர்கள் என குறிப்பிடுகிறது அந்த புள்ளி விபரம். பள்ளி படிப்பை முடித்து வெளியே வரும் 60 சதவிகித மாணவர்களுக்கு உலகத்தை பற்றி, நாட்டை பற்றி, அரசியலைப்பற்றி, ஏன் தாங்கள் படித்த படிப்பு பற்றிக்கூட எதுவும் தெரிவதில்லை. அப்பறம் என்ன நீங்கள் கற்று தந்தீர்கள். 

      கற்று தருவது என்பது புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை மட்டுமல்ல. உலகத்தை, நாட்டை, மக்களை, அரசியலை, அவர்களை சுற்றி நடப்பவற்றை கற்று தர வேண்டும். அப்போது தான் அந்த மாணவன் சிறந்த மனிதனாக உருவாகுவான்.
அவனுக்கு எதிராக பிரச்சனை நடக்கும் போது போராட முன் வருவான். தவறு செய்வதை தட்டி கேட்பான். அவர்களுக்கு போராட கற்று தர வேண்டும். அதை கற்று தருபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். 

      தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்கள் அப்படி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கிராமங்களில், நகரங்களில் உள்ள சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாணவர்கள் நலனுக்காக தங்களது வாழ்வையே அர்பணித்தவர்கள். 

தங்களது ஊதியத்தின் பாதியை மாணவர்களுக்காக செலவு செய்கிறார்கள். இலவசமாக மாலை நேரங்களில் வீட்டுக்கு வரவைத்து பாடம் நடத்துகிறார்கள். ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். சமுதாயத்தை பற்றி அவர்களுக்கு கற்று தருகிறார்கள். வாழ்க்கை பாடத்தை புரியவைக்கிறார்கள். 

      மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, இப்படி ஆசிரியராக செயல்பட்டு காட்டியவர் தான் மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன். அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்க்கு குடியரசு தலைவர் பதவி தேடி வந்தது. அவரைப்போல மற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவரின் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக அறிவித்தார்கள். 

      அந்த நன்நாளில் சாதிக்க தூண்டுபவர்களின் கால்களை கழுவினால் சிறப்பாக இருக்கும். கல்வி என்ற பெயரில் பண கொள்ளை நடத்தி தங்களது வாழ்வை சுகபோகமாக மாற்றிக் கொள்ளும் நிர்வாகிகளின் கால்களையும், அதற்கு ஒத்து ஊதும் ஆசிரியர்களின் கால்களை கழுவினால் அந்த மாணவனுக்கு படிப்பு வராது இவர்களை போன்ற கீழ் தரமான புத்தி தான் வரும். 

      ஆசிரிய பெருமக்களே, இனி வரும் ஆசிரியர்கள் தினத்தில் ஒரு மாணவன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த தகுதி தனக்குயிருக்கிறதா என ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அதன் பின் முடிவு எடுங்கள்! 

நன்றி - நக்கீரன் இணையத்தளத்தில்வுள்ள நந்தவனம் பகுதியில் வெளியானது.