பெயர் – சக்திமுருகன், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான், படிப்பு வரவில்லை என அவனது அப்பா அவனை கடையில் சேர்த்துவிட்டாராம். இப்போது அவனது வயது 21. திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமம். (ஊர் பெயர், தொகுதி பெயர் சொன்னான் இங்கே பதிவிட விரும்பவில்லை) ஒருக்கடையில் முடிவெட்டும் வேலை செய்கிறான். முகச்சவரம் செய்துக்கொள்ள புதியதாக அந்த கடைக்கு சென்றேன். வேலை செய்தபடியே பேசினான். அவன் சொன்ன அரசியல், சமூக – இளைஞர்கள் மனநிலையை கேட்டு ஆச்சர்யமாகி அவனுடன் பேசுவதை நீட்டிக்க சவரம் செய்தபின் முடியும் வெட்டுடா என்றேன். அவனும் வழுக்கை தலையில் உள்ள முடியை எண்ணியெண்ணி வெட்டியபடி சுமார் ஒன்னரை மணி நேரம் பேசினான், அவன் பேசுவதை கேட்டு ஆச்சயர்யமாக இருந்தது.
யாருக்குடா தம்பி ஓட்டு போட்ட?
ரெட்டையிலைக்கு
உன் வயசு பசங்கயெல்லாம் விஜய்க்கு போட்டுயிருக்காங்க, நீ ஏன்டா போடல?
என் ஓனர் அதிமுக ஆட்சிக்கு வந்துடும், அதுக்கு போடுடான்னு சொன்னாரு போட்டுட்டன்.
என் மனதில் என்ன இப்படியொரு அப்பாவியா இருக்கான் என நினைத்துக்கொண்டியிருந்தபோது, நான் மட்டும் தான் இரட்டை இலைக்கு. எங்கப்பாவெல்லாம் கழுத்து நெறிச்சிப்போட்டால்கூட சூரியன் தான் போடுவாரு. எங்கப்பாட்டிக்கூட சூரியனுக்கு தான் போடும், இப்பவும் அதுக்குதான் போட்டாங்க.
அப்போ நீ மட்டும் இரட்டை இலைக்கு போடற?
என் ஓனர் நல்லவர், அவர் சொன்னாரு போட்டன். அந்த பதில் சுவாரஸ்யத்தை தர தொடர்ந்து பேசத்தொடங்கியபின் அவன் மட்டுமே அடுத்த ஒரு மணிநேரத்துக்குமேல் இன்றைய அரசியல் பேசினான்.
சோசியல் மீடியா வீடியோக்கள் எந்தளவுக்கு நடிகர் விஜய்யை தூக்கிப்பிடித்தது, அது ஒவ்வொருவரின் மனதை எந்தளவுக்கு மாற்றியது என்பதை அவன் சிம்பளாக ஒவ்வொரு விஷயமாக சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.
நடிகர் விஜய்க்கான வெற்றி என்பது சினிமா மோகத்தில் வந்தது என்பதில் நான் உறுதியாக இருப்பதற்கு காரணம் நாம் அவர்களை கவனித்ததாலே. அதை அந்த இளைஞனின் பேச்சில் தெரியவந்தது. சினிமா ஹீரோ போலவே அரசியல் களத்தில் விஜய் செயல்படுவார், அவர் முதலமைச்சரானால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என இளைஞர்கள் அப்படியே நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தப்பட்ச சுய அறிவும், பகுத்தறிவும் இல்லாமல் இளையோர்கள் உட்பட பலரும் நம்பியுள்ளார்கள், இப்போதும் நம்புகிறார்கள் என்பது தெரிந்து அதிர்ச்சியாக இருந்தது.
விஜய் கட்சியினரின் செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் வருவதைப்பார்த்து சிரிக்கிறோம், கேள்வி எழுப்புகிறோம். அதை நம்ப பெரும் பெரும் இளைஞர் கூட்டமும், அடித்தட்டு மக்கள் கூட்டமும் இருக்கிறது. அது சோசியல் மீடியாக்களில் வரும் வீடியோக்கள், இன்ப்ளுயஸியர்சின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து எதார்த்தத்தை பேசுகிறோம், பெரும்பான்மை மக்கள் அப்படியல்ல.
வாப்பாவின் இந்த பதிவை படித்துவிட்டு இதை படியுங்கள் புரியும்.
நாம் அரசியல் குறித்து முகநூல், எக்ஸ் தளத்தில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். ஸ்நாப்ஷாட், இன்ஸ்டா வீடியோக்கள் இளைஞர்கள், சிறுபிள்ளைகளின் வாழ்வியலில் கலந்து அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவன் சொன்னபோது அதிர்ச்சியாகயிருந்தது. வளவளவென எழுதுவதை படிக்க ஜென் ஸி, ஆல்பா தலைமுறைக்கு நேரம்மில்லை. யாரே வெளியிடும் ஒரு நிமிட வீடியோவை பார்த்துவிட்டு சமூகத்தை புரிந்துக்கொண்டதாக நினைக்கிறார்கள். அந்த தம்பி உட்பட. இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தை சத்தம்மில்லாமல் பக்காவாக செய்துள்ளது விஜய் டீம்.
மாஸ் சினிமா கதை, திரைக்கதையை சமூகத்தில் டிஜிட்டல் தளம் வழியாக உருவாக்கியிருக்கிறது விஜய் டீம்.
கதையின் ஹீரோ விஜய். வில்லன் – திமுக (ஸ்டாலின்) தமிழ்நாடு அரசு.
முதலில் தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் விவகாரங்கள், ஊழல், காவல்துறை அராஜகம் இவைகளை அதிகமாக மக்கள் மன்றத்திடம், குறிப்பாக இளைஞர்களிடம் வீடியோ வழியாக கொண்டு சென்றுள்ளார்கள். திமுகவை கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். நாட்டில் நடக்கும் எல்லா தப்புக்கும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகளே காரணம். அவர்களிடம் பெரும் பணம் இருப்பதால் அவர்களின் தவறை யாரும் தட்டுக்கேட்கவில்லை. திமுக என்கிற வில்லனை அழிக்க ஹீரோ வருவான். அதுதான் உங்கள் விஜய். அவருக்கு ஓட்டுப்போட்டு முதலமைச்சர் பதவியை தந்தால் அவர் தவறுகளை தடுத்துவிடுவார், மக்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த திரைக்கதையில் மோடியை எல்லாம் அவர்கள் தொடவேயில்லை. அவர்களின் டார்கெட் முழுக்க திமுக, ஸ்டாலின் மட்டுமே. அது அவர்களே எதிர்பாராத வகையில் பெரியதாக எடுப்பட்டுவிட்டது என அவன் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.
நகர்புறத்தில் வேலை செய்யும் அந்த கிராமப்புற இளைஞனின் மனநிலையே இப்படியென்றால் நகர்புற இளைஞர்களின் மனநிலை எப்படியிருக்கும். வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி, யூடியூப் கதைகளை நம்பும் எல்லா வயதுடைய தற்குறிகள் அனைத்தையும் நம்பியுள்ளார்கள். விஜய் மனைவி சங்கீதா, நடிகை த்ரிஷா குறித்தெல்லாம் கூட சொன்னான்.
அந்த இளைஞன் சொன்னது, சமூக ஆய்வுக்குறியதாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதுயெல்லாம் இனி இதுப்போன்றவர்களிடம் அதிகமாக உரையாடவேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதிலும் இந்த 2கே கிட்ஸ், ஜென் ஸி, ஆல்ஃபா தலைமுறையோடு அரசியல், சமூகம், வாழ்க்கை, சினிமா என அனைத்து குறித்தும் நெருக்கமாக ஒரு நண்பனைப்போல் பேசி தெரிந்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.