வியாழன், மே 07, 2026

பாசிசம்னா என்னன்னு இப்போ தெரியுதா விஜய் அங்கிள்.

 

காங்கிரஸ் இல்லா இந்தியா என்பது பாஜகவின் நீண்டகால திட்டம். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்தை தீவிரமாக செயலாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக. வடமாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எரியப்பட்டுவிட்டது. தனித்து அக்கட்சியால் ஒருமாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கமுடியாது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்றால் அக்கட்சியை தென்மாநில மக்கள் ஓரளவு நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவே. அதிலும் காங்கிரஸ் பாரம்பரிய வழக்கப்படி தொடர்ந்து துரோகங்கள் செய்வதை நிறுத்தவில்லை.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் நடந்தபோதே காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள் என திமுகவுக்கு நெருக்கடி தந்துவந்தது ஒன்றியத்தை ஆளும் பாஜக. ஜெ இறந்தபின் எதிர்கட்சியாக வலிமையாக இருந்த திமுகவிடம் எங்களோடு கூட்டணி கூட வேண்டாம், காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள், அதிமுக உடைத்துதருகிறோம் நீங்கள் ஆட்சியமையுங்கள் என ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியது பாஜகவும் பாஜக அதிமுக அணியும். திமுக அதனை செய்யாது என மறுத்துவிட்டார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின்பும் காங்கிரஸ்சை கழட்டிவிட்டால் நிதிகளை தருகிறோம் எனச்சொன்னது பாஜக. முதலமைச்சர் ஸ்டாலின் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆளுநர் வழியாக தமிழ்நாடு அரசுக்கு தரப்பட்ட பெரிய பெரிய நெருக்கடிகளை தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அத்தனை நெருக்கடிகளை சட்டத்தின் உதவியோடும், அரசியல் ரீதியாகவும் அடித்து நொருக்கி களத்தில் செயல்பட்டு தமிழ்நாட்டை பொருளாதாரத்தில், கல்வியில், சுகாதாரத்தில், தொழில்வளர்ச்சியில், பெண்கள் முன்னேற்றத்தில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக்கி காட்டினார். பாஜகவை எதிர்த்து நின்ற ஸ்டாலினை தான் மக்கள் தோற்கடித்துள்ளனர்.

தேர்தல் களத்தில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது. இதனை புதியதாக அதிகாரத்துக்கு வரும் தற்குறிகள் புரிந்துக்கொள்ளவில்லை, அவர்கள் புரிந்துக்கொள்ளவும்மாட்டார்கள். அதெல்லாம் ஒருபுறம்மிருக்கட்டும்.

அரசியல் சாசனப்படி நாடாளுமன்றமோ – சட்டமன்றமோ – உள்ளாட்சி அமைப்புகளோ எதுவாக இருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அதிகார நாற்காலியில் அமரப்பார்கள். ஒருவேலை தொங்கு சட்டசபை அமைந்தால் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்றுள்ள கட்சியை ஆளுநர் என்பவர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பதவியேற்றபின் ஆளுநர் குறிப்பிடும் நாளில் தங்களுக்கு ஆதரவு இருப்பதை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தவேண்டும், இதுதான் நடைமுறை.

இந்த தேர்தலில் நடிகர் விஜய் கட்சியிடம் 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சியமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை.  இரண்டாவது அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள திமுக எதிர்கட்சியாக செயல்படுகிறோம் என அறிவித்துவிட்டது. மூன்றாவதாக அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அதிமுக, விஜய் கட்சிக்கு ஆதரவில்லை எனச்சொல்லிவிட்டது. திமுகவுடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு 5 எம்.எல்.ஏக்களுடன் ஓடிப்போய் தவெகவுடன் துண்டுப்போட்டு உட்கார்ந்துக்கொண்டது காங்கிரஸ், விஜய்யும் ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக விசிக, இடதுசாரிகள், பாமக போன்றவை விஜய்யுடன் கைகோர்க்க பின்வாசல் வழியாக பேசுகிறார்கள், கூட்டணி ஆட்சிக்கு அடிப்போடுகிறார்கள். தொங்கு சட்டசபை அமைந்தால் இதுயெல்லாம் நடக்கும்தான். குதிரை பேரங்களும் நடக்கச்செய்யும்.

தவெக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கு பேச பேரங்கள் ஒத்துவராததால் அதுவும் பாதியில் நிற்கிறது.

காங்கிரஸ்சுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் பாஜக தனது கோபத்தைக்காட்டும் என்பது அரசியல் புரிந்தோர் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ்சை தனித்துவிடச்செய்வதோடு அந்தகட்சியை காலி பெருங்காய டப்பாவாக மாற்றிக்கொண்டு வருவதை பாஜகவின் சமகால அரசியல் ஆட்டத்தில் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். நிலைமை அப்படியிருக்க பெரிய பலமே இல்லாத காங்கிரஸ் ஆதரவை தவெக ஏற்றுக்கொண்டது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. இன்னும் அவருக்கு அரசியலே தெரியவில்லை.

முதல்முறையாக முதலமைச்சராக வந்த வாய்ப்பை சினிமா தனமாகவே இன்னும் அனுகுகிறார் நடிகர் விஜய். அவர் மீதான அதிருப்தியை ஒதுக்கிவிட்டு இதனைப்பாருங்கள். ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்கிற கடிதத்தை தருவதற்காக ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் நடிகர் விஜய்யின் வீடியோவை பாருங்கள் நான் சொல்வது புரியும்.

 

11 இடங்களை நான்கு, ஐந்து கட்சிகளிடம்மிருந்து ஆதரவு வாங்கி ஆட்சியமைப்பது என்பது தலைமேல் தொங்கும் கத்திப்போன்றது. தேர்ந்த கட்சியாலே அதனை சிறப்பாக செய்யமுடியாது. அப்படியிருக்க அரசியல் அரிச்சுவடி தெரியாத, அரசு நிர்வாகம் செய்யத்தெரியாத, ஒருமாநிலத்தை ஆட்சிச்செய்ய தனது அதிகாரம் குறித்து தெரியாத   விஜய்க்கு தனக்கு பக்கபலமாக ஒருபெரிய கட்சி இருக்கவேண்டும் என்பதை நோக்கி காய்களை நகர்த்தி சில விட்டுக்கொடுத்தல்களை செய்திருக்கவேண்டும். காரணம், விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அல்லது கடந்தகாலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசின் ஆதரவு பலமாக தேவை. இவர் ஸ்டாலினல்ல அதிகாரத்திலுள்ள பாஜகவை எதிர்த்து நின்று ஆட்சி செய்ய.

பதவியேற்கவிடாமல் கவர்னரை வைத்து சத்தம்மில்லாமல் ஆட்டமாடிக்கொண்டு இருக்கிறத ஒன்றியத்தை ஆளும் பாஜக. அதுக்குறித்து தற்குறிகள் தவிர அனைவருக்கும் தெரிகிறது. அதுக்குறித்து வாய்திறக்கவில்லை. இப்போதுவரை நாங்கள் அதிக எம்.எல்.ஏ சீட்களை பெற்றுள்ளோம், சட்டப்படி எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள் என இப்போதுவரை விஜய்யால் அல்லது அந்த கட்சியால் வாய் திறந்து பேசமுடியவில்லை. இதிலேயே அவரின் வீரம், அவருக்கு ஓட்டுப்போட்ட தற்குறிகளுக்கு தெரிந்துயிருக்கும். புரியாததுப்போல் நடிப்பார்கள்.

புதிய கல்வி (மும்மொழி) கொள்கையை அமல்படுத்தச்சொல்லி மத்தியரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தவரை அதை எதிர்த்து 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. விஜய் ஆட்சியமைக்கப்போகிறார் என்றதும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. 20 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, ஆனால் அதுக்குறித்து எதுவும் சொல்லவில்லையே என அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள், விஜய் மீது வெறுப்பு உருவாகியுள்ளது. பதவியேற்கும் முன்பே விஜய்யின் தைரியம் ஏலனமாக பார்க்கப்படுகிறது. இவனெல்லாம் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துட்டால் பாஜக குட்டிக்கரணம் போடச்சொன்னாலும் போடுவான் போலயே என நினைக்கிறார்கள்.

விஜய்யின் காக்கும் கடவுளாக கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பம் சரிகிறதே என நேற்று நள்ளிரவு முதல் ஒருதகவலை பரப்பிக்கொண்டு இருக்கிறது ஒரு கும்பல். அதாவது திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்கப்போகிறார்கள், விஜய்யை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள், அப்படியாயின் அவரின் பலத்தை பாருங்கள் என பரப்புகிறது. வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என நினைப்பதுப்போல ஆங்கில ஊடங்களில்தான் இப்படியொரு செய்தி வெளியாக செய்தார்கள். இதன்பின்னால் இருப்பது யார்? விஜய்யை இயக்கிக்கொண்டு இருப்பவர்கள்.

பாஜகவை விடுங்கள், ஆளுநர் தன்னை ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து முனுமுனுப்பு கூட விஜய்யிடம்மிருந்தோ அவரது கட்சியிடம்மிருந்தோ இதுவரை வரவில்லை. இதுதான் பாசிசம் விஜய்.

இப்போது நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்றாலும் நீங்கள் தீயசக்தி எனச்சொன்ன திமுகவும், ஜனநாயக சக்திகளும் தான் குரல் கொடுக்கவேண்டும். உங்களுக்காக ஸ்டாலின் குரல் கொடுப்பாரா என பயப்படவேண்டாம், உங்களுக்காக இல்லையென்றாலும் பாசிசத்துக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார்.

ஏன் எனில் அவர் ஸ்டாலின், திமுகவின் தலைவர்.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்...

 

பெங்களுருவை சேர்ந்த கிரண் என்கிற சப்ட்வேர் இன்ஜினியரை அவனது காதலி பிரேமா, நாற்காலியில் கட்டிப்போட்டு அவன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் புகை வருவதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல்போய்வுள்ளது. பிரேமாவை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பி.டி.எஸ்.எம் செய்தோம், அப்படி நடந்துவிட்டது எனச்சொன்னதை காவல்துறை நம்பவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக பார்க்கிறது பெங்களுரூ காவல்துறை.

இப்படி தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. (தமிழ்நாடா என அதிர்ச்சியடைய வேண்டாம் ஒசூர் சம்மந்தமான புகார் ஒன்று இணையத்திலேயே உள்ளது.) அதனை குற்றம்சாட்டப்பட்டவர் பி.டி.எஸ்.எம் எனச்சொல்ல காவல்துறை அதனை திட்டமிட்ட கொலையாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.

அதுயென்ன BDSM?

இது கலவியில் ஒருவகை சிற்றின்ப விளையாட்டு.

B - Bondage : Use of physical restraints (ropes, handcuffs) to limit movement.

D - Discipline : Rules-based interaction involving a dominant partner and a submissive partner.

S - Sadism : Deriving pleasure from inflicting

M - Masochism : masochism pain or intense sensation.

நீங்கள் தமிழ்படுத்தி படித்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து எளிமையாக சொல்லவேண்டும் என்றால் உணவில் ஒருவருக்கு இட்லி பிடிக்கும், இன்னொருவருக்கு தோசை, மற்றவருக்கு பூரி, சிலருக்கு பரோட்டா, மிகச்சிலருக்கு உப்புமா பிடிக்கும். இப்படித்தான் கலவியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் பிடிக்கும். தம்பதிகளில் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. டுபாகூர் செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களை தாண்டி உண்மையான செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களின் விளக்கங்கள் மூலம் அதுக்குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த பி.டி.எஸ்.எம் குறித்த பயிற்சி வகுப்புகள் சென்னை, பெங்களுரூவில் நடப்பதாக இணைய நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் ஆச்சர்யத்துடன் வெளியிட்ட விளம்பரத்தை கண்டேன். அந்த விளம்பரத்தில் பி.டி.எஸ்.எம் பாதுகாப்பாக செய்வது குறித்த பயிற்சி எனச்சொல்லியிருந்தார்கள். எனக்கு பி.டி.எஸ்.எம் குறித்தெல்லாம் அதிர்ச்சியெல்லாம் இல்லை. பலஆண்டுகளுக்கு முன்பே நாராயணரெட்டி போன்ற மருத்துவர்களின்  கட்டுரைகள் வழியாக இதுப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதன்பின் கோவில் சிற்பங்கள், தண்டராம்பட்டு, தானிப்பாடியில் உள்ள கலவி குளத்தின் சிற்பங்களில் பார்த்துள்ளேன். நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரை நேரிலும் பார்த்துள்ளேன். இப்போது பி.டி.எஸ்.எம் க்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுமட்டும்மல்ல மாஸ்ட்ரூபேட் செய்யவும் பயிற்சி தருகிறார்கள் என்கிற விளம்பரத்தையும் பார்த்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. இந்த 2கே தலைமுறை எல்லாவற்றிலும் தெளிவு என நினைக்கிறோம். ஆனால் அதிலும் 100க்கு 10 பேராவது அம்மாஞ்சியாக அதாவது இணையருக்கு முத்தம் தந்தால்போதும் குழந்தை பிறந்துவிடும் கேட்டகிரியாகவே இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.

மரணித்த அந்த இளைஞனின் அப்பா தன் மகன் குறித்து சொன்னதாக எழுதியிருந்தார்கள்.தன் மகன் நல்லவன், அவனுக்கு பெண்களிடம் பேசுவதே தெரியாது எனச்சொல்லியிருந்தார். உலகத்தில் 90 சதவித பெற்றோர்கள் என் பிள்ளைகள் அப்பாவி என நினைக்கிறார்கள், நம்புகிறார்கள், வாதாடுவார்கள். தன் பிள்ளைகளின் தவறுகள் தெரியாதவரை.

உலகம் முழுவதும்மே பி.டி.எஸ்.எம் விரும்பும் கேட்டகிரி மனிதர்கள் குறிப்பிட்ட சதவிதம் இருக்கிறார்கள். உணவே ஆளுக்கு ஆள் மாறுப்படும்போது கலவி மாறுப்படாதா என்ன? மறுப்படும். சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இணையருக்குள் நடக்கும் கலவி தவறில்லை. அதிலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அப்படி நஞ்சாகி ரத்த காவு வாங்கியபின்பே விவகாரம் வெளியே வருகிறது.

வெள்ளி, ஏப்ரல் 17, 2026

கார்ப்பரேட் கம்பெனிகளும்........ இளசுகளை சீரழிக்கும் அதன் உளவியல் விதிகளும்.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்படும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தார்கள், மதமாற்றம் செய்ய முயன்றார்கள் என தரப்பட்ட புகாரின் அடிப்படையில் 7 டீம் லீடர்களையும், ஊழியர்களின் புகார்களை விசாரிக்காத எச்.ஆர் என்கிற மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ஒரு பெண்மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

இதில் கவனிக்கவேண்டியது சம்மந்தப்பட்ட 6 பேரும் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். இங்குதான் சந்தேகம் வருகிறது. காரணம், கார்ப்பரேட் அலுவலகத்தில் மதப்பிரச்சாரம் என்பதெல்லாம் காமெடிக்கானது. இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்களின் பின்னணியை பார்த்தாலே தெரிந்துவிடும். சங்கிகளை விட மோசமான சங்கிகள் அவர்கள். இந்தியாவில் 90 சதவித நிறுவனங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுடையது. அந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் கோலோச்சுகிறார்கள். இந்த சங்கிகள் திறமையான பிறமதத்தவரை வேலைக்கு எடுத்தாலும் முதலாளிகள் என்ன வழியோ அந்த வழியவே இவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதாவது முதலாளிகளின் விருப்பத்தின்படியே உணவு, உடை கூட இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டினில் அசைவ உணவு வெளியில் இருந்துக்கூட எடுத்துவந்து சாப்பிடகூடாது என சிலநிறுவனங்கள் பாலிஸியாகவே வைத்துள்ளன. இப்படி யார் செய்வார்கள் என யோசித்துப்பாருங்கள்? அப்படியிருக்க மதப்பிரச்சாரம் செய்தார்கள் என்பதை ஏற்கமுடியாது.

அதேநேரத்தில் பாலியல் குற்றத்தை புறந்தள்ளமுடியாது. ஊழியர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் நிறுவன தலைமை பீடங்கள் இப்போதுயெல்லாம் கண் மூடிக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களில் எச்.ஆர்கள், சாதாரண ஊழியர்களுக்கு பதில் டிப்பார்ட்மென்ட் ஹெட்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள், புகார்களை நியாயமாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு.

கார்ப்பரேட் பணி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கடியானதோ அதே அளவுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்குகிறது. அது இன்று நேற்றல்ல ஐ.டி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெறத்துவங்கியபோதிலிருந்தே அதைச்சார்ந்து பாலியல் பிரச்சனைகள் எழத்துவங்கியுள்ளன, அது கடந்தகாலத்தில் உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அதுக்குறித்து பலசெய்திகள் வெளியாகும், இப்போது அதுக்குறித்து யாரும் எங்கும் எந்த தளத்திலும் பேசுவதில்லை. தற்போதைய சூழலில் பார்ட்டி, ட்ரக்ஸ், செக்ஸ் போன்றவற்றை சமூகம் நார்மலைஸ் செய்துவருகிறது, கார்ப்பரேட், மெட்ரோ சிட்டிகளில் இது சர்வே சாதாரணம் என இதுக்குறித்து பெரும்பாலும் எந்த ஊடகமும் பேசுவதில்லை. புகாராகி வெளிவந்தபின்பும் பத்தோடு ஒன்றாக பேசுகிறது.

கார்ப்பரேட் நிறுவனம் மட்டும்மல்ல பெரும்பாலும் எந்த இடத்திலும் சக ஊழியர்கள் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு தருகிறார்கள் என எந்த பெண் ஊழியரும் எச்.ஆர் உட்பட எங்கும் புகார் தந்துவிடமுடியாத சூழ்நிலையே பெரும்பாலும் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் திறமைக்குதான் மரியாதை என்பார்கள், சமத்துவம் பேசுகிறார்கள். உண்மையில் அது ஆணாதிக்க உலகமாகவே உள்ளது. டீம் லீடர்கள், எச்.ஆர்கள் என வேலை வாங்கும் இடத்திலுள்ள உயரதிகாரிகள் டீம் சேர்ந்துக்கொண்டு பெண் ஊழியர்களை பாலியல் தொந்தரவு தருவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது. சில பெண்கள் நேரடியாகவே அதனை எதிர்த்து கேட்டுவிட்டு போங்கடா நீங்களும் உங்க வேலையும் என உதறியவர்கள் உண்டு. பலர் தங்களுடைய குடும்ப சூழ்நிலையால் சகித்துக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு, சிலர் இதனையே அட்வான்டேஜ்ஜாக எடுத்துக்கொண்டு அட்ஜஸ் செய்துக்கொண்டு உயர்கிறவர்களும் உண்டு. இதில் புகார் தெரிவிப்பவர்களை, மசியாதவர்களை டார்கெட் செய்து வெளியேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது ஐடி உலகம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வார இறுதி நாட்களில் வாரவிடுமுறை, மாதவிடுமுறை, ஆண்டு விடுமுறை என விதவிதமாக சம்பளத்தோடு விடுமுறை தந்து சுற்றுலா அனுப்புவார்கள். இதெல்லாம் தப்பில்லை என மூளைச்சலவை செய்யப்பட்டு ட்ரக்ஸ்க்கு, பார்ட்டிகளுக்கு அடிமையாக்கினார்கள். இதன்பின்னால் பெரிய உளவியல் பாடம் இருக்கிறது. காலப்போக்கில் நிறுவனத்தின் லாபம் பாதிக்கிறதே என ஐடி நிறுவனங்கள் உட்பட பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை ட்ரிப் அனுப்புவதை மெல்லமெல்ல குறைத்தது. ஆனால் அதனை பார்த்து, கேள்விப்பட்ட பெரும்பாலான இளசுகள் அதனை விடத்தாயாரில்லை, நீங்கள் இன்ஸ்டாவில் பாருங்கள் என்னடா இப்படியெல்லாமா பார்ட்டிக்கு பெயர் வைப்பிங்க என இருக்கிறது. பலபல ஆஃபர்கள் தந்து பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் ஒன்றுமட்டும் நீக்கமறவுள்ளது. அதாவது, பெண்களுக்கு என்ட்ரீ ப்ரீ அல்லது மிகமிக குறைந்த கட்டணம். யுவாதிகளுக்கு சரக்கு ப்ரீயாக தருவதாகவும் விளம்பரம் செய்கிறார்கள்.

நகரம் விட்டு நகரம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு சென்று விடுதியில் தங்கி வேலை செய்யும் இளைஞனுக்கும் – இளைஞிக்கு பெரிய சுதந்திரம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். தங்களை இனி கட்டுப்படுத்த குடும்பத்தார் இல்லை, என்ன செய்கிறாய் எனக்கேட்க கண்காணிக்க யாரும்மில்லை. கையில் மாதாமாதம் தேவைக்கு அதிகமான சம்பளம் வருகிறது நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். இந்த மிடில் க்ளாஸில் இருந்துவருபவர்களைத்தான் அனைவரும் டார்க்கெட் செய்கிறார்கள்.

குட்டி கோவா என கொண்டாடப்பட்டும் பாண்டிச்சேரிக்கு கல்லூரி, ஐடி இளசுகள் என படையெடுத்து வந்து வாராவாரம் குவிகிறார்கள். பார்ட்டி, டான்ஸ் என விதவிதமாக நடக்கிறது. எல்லாமே கிடைக்கிறது, எல்லாமுமே. சில மாதங்களுக்கு முன்பு பப் ஒன்றில் தகராறு நடந்து மரணம் நடக்கிறது. அதன் விசாரணையின்போது, பிரபல கல்லூரி விடுதியில் இருந்தும், பெங்களுரு ஐ.டியில் பணியாற்றும் பையன்கள் பாண்டிச்சேரிக்கு வந்து பார்ட்டி செய்து புகாரில் சிக்கியபின்பே குடும்பத்தாருக்கே தெரிந்தது. ஏலகிரியில் ஒரு ஐ.டி பெண் விடுதி அறையில் இறந்து கிடந்தபின்பே குடும்பத்தாருக்கு தெரிந்தது. வேலூரில் ஒரு கார் விபத்தில் சிக்கியபோதே தன் மகள் நண்பர்களோடு சென்னையில் இருந்து ஏலகிரி ட்ரிப் போனது ஐதராபாத்தில் இருந்த பெற்றோர்களுக்கு தெரிந்தது. இப்படி பலவற்றை சொல்லமுடியும்.

நாம் வீட்டுக்கு தெரியாமல் செய்கிறோம்………… செல்கிறோம். இங்கே நம்மை யாருக்கு தெரியும், நாம் செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் 2கே கிட்ஸ், ஜென் ஸி தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்களேயே ஏமாற்றிக்கொள்கிறார்கள். குடும்பத்தார், நண்பர்கள் அவர்கள் மீது வைக்கும் அதீத நம்பிக்கையை, அவநம்பிக்கையாக்கும்போது அதன்பின் அவர்கள் மீது யாருக்கும் எக்காலகத்திலும் நம்பிக்கை வராது. அதை அவர்கள் உணரும்போது அவர்கள் எடுக்கும் முடிவு என்பது விபரீதமாகவே இருக்கிறது. நான் சமீபத்தில் அப்படி இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை பார்த்து வேதனை மட்டுமே படமுடிந்தது.

தங்களின் லாப வெறிக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி இளசுகளின் வாழ்க்கையை சீரழிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் விசாரணை கமிட்டியில் வெளிநபர்கள், நிறுவனத்தில் சங்கம் அமைக்கும் உரிமை, அரசின் சட்டவிதிகள் கடைப்பிடிக்காதவரை இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.