வெள்ளி, மே 08, 2026

பக்கா கமர்ஷியல் சினிமாவான முதலமைச்சர் பதவி.

 

பெயர் – சக்திமுருகன், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான், படிப்பு வரவில்லை என அவனது அப்பா அவனை கடையில் சேர்த்துவிட்டாராம். இப்போது அவனது வயது 21. திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமம். (ஊர் பெயர், தொகுதி பெயர் சொன்னான் இங்கே பதிவிட விரும்பவில்லை) ஒருக்கடையில் முடிவெட்டும் வேலை செய்கிறான். முகச்சவரம் செய்துக்கொள்ள புதியதாக அந்த கடைக்கு சென்றேன். வேலை செய்தபடியே பேசினான். அவன் சொன்ன அரசியல், சமூக – இளைஞர்கள் மனநிலையை கேட்டு ஆச்சர்யமாகி அவனுடன் பேசுவதை நீட்டிக்க சவரம் செய்தபின் முடியும் வெட்டுடா என்றேன். அவனும் வழுக்கை தலையில் உள்ள முடியை எண்ணியெண்ணி வெட்டியபடி சுமார் ஒன்னரை மணி நேரம் பேசினான், அவன் பேசுவதை கேட்டு ஆச்சயர்யமாக இருந்தது.

யாருக்குடா தம்பி ஓட்டு போட்ட?

ரெட்டையிலைக்கு

உன் வயசு பசங்கயெல்லாம் விஜய்க்கு போட்டுயிருக்காங்க, நீ ஏன்டா போடல?

என் ஓனர் அதிமுக ஆட்சிக்கு வந்துடும், அதுக்கு போடுடான்னு சொன்னாரு போட்டுட்டன்.

என் மனதில் என்ன இப்படியொரு அப்பாவியா இருக்கான் என நினைத்துக்கொண்டியிருந்தபோது, நான் மட்டும் தான் இரட்டை இலைக்கு. எங்கப்பாவெல்லாம் கழுத்து நெறிச்சிப்போட்டால்கூட சூரியன் தான் போடுவாரு.  எங்கப்பாட்டிக்கூட சூரியனுக்கு தான் போடும், இப்பவும் அதுக்குதான் போட்டாங்க.

அப்போ நீ மட்டும் இரட்டை இலைக்கு போடற?

என் ஓனர் நல்லவர், அவர் சொன்னாரு போட்டன். அந்த பதில் சுவாரஸ்யத்தை தர தொடர்ந்து பேசத்தொடங்கியபின் அவன் மட்டுமே அடுத்த ஒரு மணிநேரத்துக்குமேல் இன்றைய அரசியல் பேசினான்.  

சோசியல் மீடியா வீடியோக்கள் எந்தளவுக்கு நடிகர் விஜய்யை தூக்கிப்பிடித்தது, அது ஒவ்வொருவரின் மனதை எந்தளவுக்கு மாற்றியது என்பதை அவன் சிம்பளாக ஒவ்வொரு விஷயமாக சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

நடிகர் விஜய்க்கான வெற்றி என்பது சினிமா மோகத்தில் வந்தது என்பதில் நான் உறுதியாக இருப்பதற்கு காரணம் நாம் அவர்களை கவனித்ததாலே. அதை அந்த இளைஞனின் பேச்சில் தெரியவந்தது. சினிமா ஹீரோ போலவே அரசியல் களத்தில் விஜய் செயல்படுவார், அவர் முதலமைச்சரானால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என இளைஞர்கள் அப்படியே நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தப்பட்ச சுய அறிவும், பகுத்தறிவும் இல்லாமல் இளையோர்கள் உட்பட பலரும் நம்பியுள்ளார்கள், இப்போதும் நம்புகிறார்கள் என்பது தெரிந்து அதிர்ச்சியாக இருந்தது.

விஜய் கட்சியினரின் செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் வருவதைப்பார்த்து சிரிக்கிறோம், கேள்வி எழுப்புகிறோம். அதை நம்ப பெரும் பெரும் இளைஞர் கூட்டமும், அடித்தட்டு மக்கள் கூட்டமும் இருக்கிறது. அது சோசியல் மீடியாக்களில் வரும் வீடியோக்கள், இன்ப்ளுயஸியர்சின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து எதார்த்தத்தை பேசுகிறோம், பெரும்பான்மை மக்கள் அப்படியல்ல.

வாப்பாவின் இந்த பதிவை படித்துவிட்டு இதை படியுங்கள் புரியும்.

நாம் அரசியல் குறித்து முகநூல், எக்ஸ் தளத்தில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். ஸ்நாப்ஷாட், இன்ஸ்டா வீடியோக்கள் இளைஞர்கள், சிறுபிள்ளைகளின் வாழ்வியலில் கலந்து அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவன் சொன்னபோது அதிர்ச்சியாகயிருந்தது. வளவளவென எழுதுவதை படிக்க ஜென் ஸி, ஆல்பா தலைமுறைக்கு நேரம்மில்லை. யாரே வெளியிடும் ஒரு நிமிட வீடியோவை பார்த்துவிட்டு சமூகத்தை புரிந்துக்கொண்டதாக நினைக்கிறார்கள். அந்த தம்பி உட்பட. இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தை சத்தம்மில்லாமல் பக்காவாக செய்துள்ளது விஜய் டீம்.

மாஸ் சினிமா கதை, திரைக்கதையை சமூகத்தில் டிஜிட்டல் தளம் வழியாக உருவாக்கியிருக்கிறது விஜய் டீம்.

கதையின் ஹீரோ விஜய். வில்லன் – திமுக (ஸ்டாலின்) தமிழ்நாடு அரசு.

முதலில் தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் விவகாரங்கள், ஊழல், காவல்துறை அராஜகம் இவைகளை அதிகமாக மக்கள் மன்றத்திடம், குறிப்பாக இளைஞர்களிடம் வீடியோ வழியாக கொண்டு சென்றுள்ளார்கள். திமுகவை கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். நாட்டில் நடக்கும் எல்லா தப்புக்கும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகளே காரணம். அவர்களிடம் பெரும் பணம் இருப்பதால் அவர்களின் தவறை யாரும் தட்டுக்கேட்கவில்லை. திமுக என்கிற வில்லனை அழிக்க ஹீரோ வருவான். அதுதான் உங்கள் விஜய். அவருக்கு ஓட்டுப்போட்டு முதலமைச்சர் பதவியை தந்தால் அவர் தவறுகளை தடுத்துவிடுவார், மக்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த திரைக்கதையில் மோடியை எல்லாம் அவர்கள் தொடவேயில்லை. அவர்களின் டார்கெட் முழுக்க திமுக, ஸ்டாலின் மட்டுமே. அது அவர்களே எதிர்பாராத வகையில் பெரியதாக எடுப்பட்டுவிட்டது என அவன் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

நகர்புறத்தில் வேலை செய்யும் அந்த கிராமப்புற இளைஞனின் மனநிலையே இப்படியென்றால் நகர்புற இளைஞர்களின் மனநிலை எப்படியிருக்கும். வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி, யூடியூப் கதைகளை நம்பும் எல்லா வயதுடைய தற்குறிகள் அனைத்தையும் நம்பியுள்ளார்கள். விஜய் மனைவி சங்கீதா, நடிகை த்ரிஷா குறித்தெல்லாம் கூட சொன்னான்.

அந்த இளைஞன் சொன்னது, சமூக ஆய்வுக்குறியதாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதுயெல்லாம் இனி இதுப்போன்றவர்களிடம் அதிகமாக உரையாடவேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதிலும் இந்த 2கே கிட்ஸ், ஜென் ஸி, ஆல்ஃபா தலைமுறையோடு அரசியல், சமூகம், வாழ்க்கை, சினிமா என அனைத்து குறித்தும் நெருக்கமாக ஒரு நண்பனைப்போல் பேசி தெரிந்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

வியாழன், மே 07, 2026

பாசிசம்னா என்னன்னு இப்போ தெரியுதா விஜய் அங்கிள்.

 

காங்கிரஸ் இல்லா இந்தியா என்பது பாஜகவின் நீண்டகால திட்டம். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்தை தீவிரமாக செயலாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக. வடமாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எரியப்பட்டுவிட்டது. தனித்து அக்கட்சியால் ஒருமாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கமுடியாது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்றால் அக்கட்சியை தென்மாநில மக்கள் ஓரளவு நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவே. அதிலும் காங்கிரஸ் பாரம்பரிய வழக்கப்படி தொடர்ந்து துரோகங்கள் செய்வதை நிறுத்தவில்லை.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் நடந்தபோதே காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள் என திமுகவுக்கு நெருக்கடி தந்துவந்தது ஒன்றியத்தை ஆளும் பாஜக. ஜெ இறந்தபின் எதிர்கட்சியாக வலிமையாக இருந்த திமுகவிடம் எங்களோடு கூட்டணி கூட வேண்டாம், காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள், அதிமுக உடைத்துதருகிறோம் நீங்கள் ஆட்சியமையுங்கள் என ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியது பாஜகவும் பாஜக அதிமுக அணியும். திமுக அதனை செய்யாது என மறுத்துவிட்டார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின்பும் காங்கிரஸ்சை கழட்டிவிட்டால் நிதிகளை தருகிறோம் எனச்சொன்னது பாஜக. முதலமைச்சர் ஸ்டாலின் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆளுநர் வழியாக தமிழ்நாடு அரசுக்கு தரப்பட்ட பெரிய பெரிய நெருக்கடிகளை தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அத்தனை நெருக்கடிகளை சட்டத்தின் உதவியோடும், அரசியல் ரீதியாகவும் அடித்து நொருக்கி களத்தில் செயல்பட்டு தமிழ்நாட்டை பொருளாதாரத்தில், கல்வியில், சுகாதாரத்தில், தொழில்வளர்ச்சியில், பெண்கள் முன்னேற்றத்தில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக்கி காட்டினார். பாஜகவை எதிர்த்து நின்ற ஸ்டாலினை தான் மக்கள் தோற்கடித்துள்ளனர்.

தேர்தல் களத்தில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது. இதனை புதியதாக அதிகாரத்துக்கு வரும் தற்குறிகள் புரிந்துக்கொள்ளவில்லை, அவர்கள் புரிந்துக்கொள்ளவும்மாட்டார்கள். அதெல்லாம் ஒருபுறம்மிருக்கட்டும்.

அரசியல் சாசனப்படி நாடாளுமன்றமோ – சட்டமன்றமோ – உள்ளாட்சி அமைப்புகளோ எதுவாக இருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அதிகார நாற்காலியில் அமரப்பார்கள். ஒருவேலை தொங்கு சட்டசபை அமைந்தால் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்றுள்ள கட்சியை ஆளுநர் என்பவர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பதவியேற்றபின் ஆளுநர் குறிப்பிடும் நாளில் தங்களுக்கு ஆதரவு இருப்பதை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தவேண்டும், இதுதான் நடைமுறை.

இந்த தேர்தலில் நடிகர் விஜய் கட்சியிடம் 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சியமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை.  இரண்டாவது அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள திமுக எதிர்கட்சியாக செயல்படுகிறோம் என அறிவித்துவிட்டது. மூன்றாவதாக அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அதிமுக, விஜய் கட்சிக்கு ஆதரவில்லை எனச்சொல்லிவிட்டது. திமுகவுடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு 5 எம்.எல்.ஏக்களுடன் ஓடிப்போய் தவெகவுடன் துண்டுப்போட்டு உட்கார்ந்துக்கொண்டது காங்கிரஸ், விஜய்யும் ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக விசிக, இடதுசாரிகள், பாமக போன்றவை விஜய்யுடன் கைகோர்க்க பின்வாசல் வழியாக பேசுகிறார்கள், கூட்டணி ஆட்சிக்கு அடிப்போடுகிறார்கள். தொங்கு சட்டசபை அமைந்தால் இதுயெல்லாம் நடக்கும்தான். குதிரை பேரங்களும் நடக்கச்செய்யும்.

தவெக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கு பேச பேரங்கள் ஒத்துவராததால் அதுவும் பாதியில் நிற்கிறது.

காங்கிரஸ்சுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் பாஜக தனது கோபத்தைக்காட்டும் என்பது அரசியல் புரிந்தோர் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ்சை தனித்துவிடச்செய்வதோடு அந்தகட்சியை காலி பெருங்காய டப்பாவாக மாற்றிக்கொண்டு வருவதை பாஜகவின் சமகால அரசியல் ஆட்டத்தில் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். நிலைமை அப்படியிருக்க பெரிய பலமே இல்லாத காங்கிரஸ் ஆதரவை தவெக ஏற்றுக்கொண்டது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. இன்னும் அவருக்கு அரசியலே தெரியவில்லை.

முதல்முறையாக முதலமைச்சராக வந்த வாய்ப்பை சினிமா தனமாகவே இன்னும் அனுகுகிறார் நடிகர் விஜய். அவர் மீதான அதிருப்தியை ஒதுக்கிவிட்டு இதனைப்பாருங்கள். ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்கிற கடிதத்தை தருவதற்காக ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் நடிகர் விஜய்யின் வீடியோவை பாருங்கள் நான் சொல்வது புரியும்.

 

11 இடங்களை நான்கு, ஐந்து கட்சிகளிடம்மிருந்து ஆதரவு வாங்கி ஆட்சியமைப்பது என்பது தலைமேல் தொங்கும் கத்திப்போன்றது. தேர்ந்த கட்சியாலே அதனை சிறப்பாக செய்யமுடியாது. அப்படியிருக்க அரசியல் அரிச்சுவடி தெரியாத, அரசு நிர்வாகம் செய்யத்தெரியாத, ஒருமாநிலத்தை ஆட்சிச்செய்ய தனது அதிகாரம் குறித்து தெரியாத   விஜய்க்கு தனக்கு பக்கபலமாக ஒருபெரிய கட்சி இருக்கவேண்டும் என்பதை நோக்கி காய்களை நகர்த்தி சில விட்டுக்கொடுத்தல்களை செய்திருக்கவேண்டும். காரணம், விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அல்லது கடந்தகாலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசின் ஆதரவு பலமாக தேவை. இவர் ஸ்டாலினல்ல அதிகாரத்திலுள்ள பாஜகவை எதிர்த்து நின்று ஆட்சி செய்ய.

பதவியேற்கவிடாமல் கவர்னரை வைத்து சத்தம்மில்லாமல் ஆட்டமாடிக்கொண்டு இருக்கிறத ஒன்றியத்தை ஆளும் பாஜக. அதுக்குறித்து தற்குறிகள் தவிர அனைவருக்கும் தெரிகிறது. அதுக்குறித்து வாய்திறக்கவில்லை. இப்போதுவரை நாங்கள் அதிக எம்.எல்.ஏ சீட்களை பெற்றுள்ளோம், சட்டப்படி எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள் என இப்போதுவரை விஜய்யால் அல்லது அந்த கட்சியால் வாய் திறந்து பேசமுடியவில்லை. இதிலேயே அவரின் வீரம், அவருக்கு ஓட்டுப்போட்ட தற்குறிகளுக்கு தெரிந்துயிருக்கும். புரியாததுப்போல் நடிப்பார்கள்.

புதிய கல்வி (மும்மொழி) கொள்கையை அமல்படுத்தச்சொல்லி மத்தியரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தவரை அதை எதிர்த்து 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. விஜய் ஆட்சியமைக்கப்போகிறார் என்றதும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. 20 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, ஆனால் அதுக்குறித்து எதுவும் சொல்லவில்லையே என அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள், விஜய் மீது வெறுப்பு உருவாகியுள்ளது. பதவியேற்கும் முன்பே விஜய்யின் தைரியம் ஏலனமாக பார்க்கப்படுகிறது. இவனெல்லாம் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துட்டால் பாஜக குட்டிக்கரணம் போடச்சொன்னாலும் போடுவான் போலயே என நினைக்கிறார்கள்.

விஜய்யின் காக்கும் கடவுளாக கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பம் சரிகிறதே என நேற்று நள்ளிரவு முதல் ஒருதகவலை பரப்பிக்கொண்டு இருக்கிறது ஒரு கும்பல். அதாவது திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்கப்போகிறார்கள், விஜய்யை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள், அப்படியாயின் அவரின் பலத்தை பாருங்கள் என பரப்புகிறது. வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என நினைப்பதுப்போல ஆங்கில ஊடங்களில்தான் இப்படியொரு செய்தி வெளியாக செய்தார்கள். இதன்பின்னால் இருப்பது யார்? விஜய்யை இயக்கிக்கொண்டு இருப்பவர்கள்.

பாஜகவை விடுங்கள், ஆளுநர் தன்னை ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து முனுமுனுப்பு கூட விஜய்யிடம்மிருந்தோ அவரது கட்சியிடம்மிருந்தோ இதுவரை வரவில்லை. இதுதான் பாசிசம் விஜய்.

இப்போது நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்றாலும் நீங்கள் தீயசக்தி எனச்சொன்ன திமுகவும், ஜனநாயக சக்திகளும் தான் குரல் கொடுக்கவேண்டும். உங்களுக்காக ஸ்டாலின் குரல் கொடுப்பாரா என பயப்படவேண்டாம், உங்களுக்காக இல்லையென்றாலும் பாசிசத்துக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார்.

ஏன் எனில் அவர் ஸ்டாலின், திமுகவின் தலைவர்.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்...

 

பெங்களுருவை சேர்ந்த கிரண் என்கிற சப்ட்வேர் இன்ஜினியரை அவனது காதலி பிரேமா, நாற்காலியில் கட்டிப்போட்டு அவன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் புகை வருவதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல்போய்வுள்ளது. பிரேமாவை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பி.டி.எஸ்.எம் செய்தோம், அப்படி நடந்துவிட்டது எனச்சொன்னதை காவல்துறை நம்பவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக பார்க்கிறது பெங்களுரூ காவல்துறை.

இப்படி தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. (தமிழ்நாடா என அதிர்ச்சியடைய வேண்டாம் ஒசூர் சம்மந்தமான புகார் ஒன்று இணையத்திலேயே உள்ளது.) அதனை குற்றம்சாட்டப்பட்டவர் பி.டி.எஸ்.எம் எனச்சொல்ல காவல்துறை அதனை திட்டமிட்ட கொலையாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.

அதுயென்ன BDSM?

இது கலவியில் ஒருவகை சிற்றின்ப விளையாட்டு.

B - Bondage : Use of physical restraints (ropes, handcuffs) to limit movement.

D - Discipline : Rules-based interaction involving a dominant partner and a submissive partner.

S - Sadism : Deriving pleasure from inflicting

M - Masochism : masochism pain or intense sensation.

நீங்கள் தமிழ்படுத்தி படித்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து எளிமையாக சொல்லவேண்டும் என்றால் உணவில் ஒருவருக்கு இட்லி பிடிக்கும், இன்னொருவருக்கு தோசை, மற்றவருக்கு பூரி, சிலருக்கு பரோட்டா, மிகச்சிலருக்கு உப்புமா பிடிக்கும். இப்படித்தான் கலவியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் பிடிக்கும். தம்பதிகளில் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. டுபாகூர் செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களை தாண்டி உண்மையான செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களின் விளக்கங்கள் மூலம் அதுக்குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த பி.டி.எஸ்.எம் குறித்த பயிற்சி வகுப்புகள் சென்னை, பெங்களுரூவில் நடப்பதாக இணைய நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் ஆச்சர்யத்துடன் வெளியிட்ட விளம்பரத்தை கண்டேன். அந்த விளம்பரத்தில் பி.டி.எஸ்.எம் பாதுகாப்பாக செய்வது குறித்த பயிற்சி எனச்சொல்லியிருந்தார்கள். எனக்கு பி.டி.எஸ்.எம் குறித்தெல்லாம் அதிர்ச்சியெல்லாம் இல்லை. பலஆண்டுகளுக்கு முன்பே நாராயணரெட்டி போன்ற மருத்துவர்களின்  கட்டுரைகள் வழியாக இதுப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதன்பின் கோவில் சிற்பங்கள், தண்டராம்பட்டு, தானிப்பாடியில் உள்ள கலவி குளத்தின் சிற்பங்களில் பார்த்துள்ளேன். நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரை நேரிலும் பார்த்துள்ளேன். இப்போது பி.டி.எஸ்.எம் க்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுமட்டும்மல்ல மாஸ்ட்ரூபேட் செய்யவும் பயிற்சி தருகிறார்கள் என்கிற விளம்பரத்தையும் பார்த்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. இந்த 2கே தலைமுறை எல்லாவற்றிலும் தெளிவு என நினைக்கிறோம். ஆனால் அதிலும் 100க்கு 10 பேராவது அம்மாஞ்சியாக அதாவது இணையருக்கு முத்தம் தந்தால்போதும் குழந்தை பிறந்துவிடும் கேட்டகிரியாகவே இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.

மரணித்த அந்த இளைஞனின் அப்பா தன் மகன் குறித்து சொன்னதாக எழுதியிருந்தார்கள்.தன் மகன் நல்லவன், அவனுக்கு பெண்களிடம் பேசுவதே தெரியாது எனச்சொல்லியிருந்தார். உலகத்தில் 90 சதவித பெற்றோர்கள் என் பிள்ளைகள் அப்பாவி என நினைக்கிறார்கள், நம்புகிறார்கள், வாதாடுவார்கள். தன் பிள்ளைகளின் தவறுகள் தெரியாதவரை.

உலகம் முழுவதும்மே பி.டி.எஸ்.எம் விரும்பும் கேட்டகிரி மனிதர்கள் குறிப்பிட்ட சதவிதம் இருக்கிறார்கள். உணவே ஆளுக்கு ஆள் மாறுப்படும்போது கலவி மாறுப்படாதா என்ன? மறுப்படும். சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இணையருக்குள் நடக்கும் கலவி தவறில்லை. அதிலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அப்படி நஞ்சாகி ரத்த காவு வாங்கியபின்பே விவகாரம் வெளியே வருகிறது.