செவ்வாய், நவம்பர் 30, 2010

சினிமா நடிகர்களுக்காக காதலாக பெயர் மாறும் கள்ளக்காதல்கள்.



சக செய்தியாளர் ஒருவரிடம் அவரின் நண்பர், ஏங்க தினமும் நடிகர் பிரபுதேவா-நயன்தாரா மேட்டர் பேப்பர்ல போடறிங்க. நானும் அந்த பிரச்சனை ஆரம்பிச்ச காலத்துலயிருந்து படிக்கறன். எந்த செய்திதாளும் அவர்கள் பிரச்சனைய ஒழுங்க சொல்ல மாட்டேன்கிறிங்களே நியாயமா என கேட்டுள்ளார். 



என்னங்க ஒழுங்கா சொல்லல என கேட்ட பத்திரிக்கை நண்பரிடம், பிரபுதேவா ரமலத்துன்னு ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்கிட்டு குழந்தை குட்டிகளோட குடும்பம் நடத்தறவரு. இப்ப அவர் நடிகை நயன்தாராக்கூட சேர்ந்து ஜல்சா பண்றாரு. இத பிரபுதேவா மனைவி கண்டிச்சி கோர்ட்க்கு போய்யிருக்காங்க. ஆனா இத எழுதற பத்திரிக்கைகாரங்களான நீங்க, காதலர்கள் கோர்ட்க்கு வருவார்களா?, காதலர்கள் விழாவில் கலந்து கொண்டனர், காதல் முறியுமா?ன்னு செய்தி போடறிங்களே இது நியாயமா?
அப்படி எழுதறதுல என்ன?
 
இல்ல சாதாரண ஏழையாயிருக்கற, பிரபலமாகத ஆணோ அ பெண்ணோ தங்களுக்கு கல்யாணம்மான பிறகு தன் துணையை விட்டுட்டு வேற ஒருத்தரோட தொடர்பு வைத்திருந்தா கள்ளக்காதல்ங்கறிங்க. பிரச்சனைன்னு காவல்நிலையத்துக்கு வந்தா, கள்ளக்காதலால் மனைவி துன்புறுத்தல், கள்ளக்காதலால் கணவன் கொலைன்னு செய்தி போடறிங்க. இத கள்ளக்காதல்ன்னு சொல்ற நீங்க, நடிகர் பிரபுதேவா விவகாரத்தலயும் நீங்க அத கள்ளக்காதல்ன்னு தானே எழுதனும் என கேட்டவர்.

 
பணக்காரன், சமுகத்துல பிரபலமாயிருக்கறவங்க தன் மனைவி, பிள்ளைகளை விட்டுட்டு வேற ஒருத்தரோட தொடர்பு வச்சியிருந்தா அதுக்கு பேர் காதல். ஏழை, பாவப்பட்டவன் அதே தவறை செய்தா அதுக்கு பேர் கள்ளக்காதலாங்க என கேட்டுள்ளார்.
 
பத்திரிக்கை நண்பர் என்ன பதில் சொல்வது என தெரியாமல் நொந்து போய்வுள்ளார். நண்பரால் பதில் சொல்ல முடியாது. அவருக்கு மட்டுமல்ல பத்திரிக்கை துறையை சேர்ந்த என்னாலும் பதில் சொல்ல முடியாத கேள்வி தான்.
 
திரையுலகை சேர்ந்த பிரபுதேவா-நயன்தாரா விவகாரம் மட்டுமல்ல பிரகாஷ்ராஜ்-போனிவர்மா, நடிகை சீதா-டீவி நடிகர் ஆகாஷ் என இவர்கள் காதல் விவகாரத்தை எழுதும் போது மட்டும் கள்ளக்காதல் நல்ல காதலாக மாறிவிடுகிறது. 
 
நம் சமுகத்தில் கள்ளக்காதல் என்பது இதுதான் என ஒரு அளவுகோல் வைத்துள்ளார்கள் மிஸ்டர் பொதுஜனம். அதாவது கல்யாணம்மான ஒரு ஆணோ அ பெண்ணோ கல்யாணமாகாத அ கல்யாணமான பெண்ணோடவோ அ ஆணோடவோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அதை கள்ளக்காதல் என்கிறார்கள்.
 
அந்த விதிப்படித்தான் பிரபுதேவா-நயன்தாரா, பிரகாஷ்ராஜ்-போனிவர்மா விவகாரங்கள் உள்ளது. ஆக அவர்களைப்பற்றி எழுதும் போது கள்ளக்காதலர்கள் என்று தானே எழுத, அழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காதலர்கள் என எப்படி அழைக்க முடியும்.

இது மட்டுமல்ல பத்திரிக்கை துறையின் ஆணாதிக்க சிந்தனையும் இதில் உள்ளது. மேலே சொன்ன பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் விவகாரங்கள் ஆண் சார்ந்தது என்பதால் அவ்விவகாரத்தை காதல் என எழுதப்படுகிறது.

இதே விவகாரங்கள் நடந்துக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் நடிகை வினிதா தன் தந்தை நடிகர்கள் விஜயகுமார், அண்ணன் அருண்தம்பி மீது புகார் வாசித்துள்ளார். நடிகை வினிதாவை பற்றி செய்தி எழுதும் போது, நடிகை வினிதா இரண்டாவது கணவருடன் காவல்நிலையம் வந்து புகார் தந்;தார் என சில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளது. இது எப்படி சரியாகும்.

வினிதா முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டே இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். முதல் கணவரை விவகரத்து செய்தவுடனே திருமண பந்தம் சட்டப்படி முடிவுற்றது. ஆக மீண்டும் திருமணம் செய்துக்கொண்டவரை கணவர் என்று தானே எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு இரண்டவாது கணவருடன் வந்தார் என எழுதப்படுகிறது. அவருக்கு அப்படி எழுதும் போது,

நடிகர் பிரபுதேவா கள்ளக்காதலி நயன்தாராவுடன் ஊர் சுற்றுகிறார், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் இரண்டாவது மனைவியுடன் விழாவுக்கு வந்திருந்தார் என்று தானே எழுத வேண்டும். 

விதிவிலக்கு நடிகர்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? 

நடிகர்கள் கள்ளக்காதலை பத்திாிக்கை, மீடியா நண்பர்கள் காதல் என எழுதுவது எந்த விதத்தில் நியாயம் . சட்டம் பற்றி பேசும் நாம், இதில் ஏழைக்கு ஒரு விதமாகவும், பிரபலமான சினிமாக்காரர்களுக்கு ஒரு விதமாக நாம் எழுதுவது நியாயமா? வருங்காலத்தில் இதை மாற்றிக்கொள்ளவில்லை எனில் இன்று ஒருவர் கேட்டவர் கேள்வி நாளை பலர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஜாக்கிரதை. 

புதன், நவம்பர் 24, 2010

மண்ணை கவ்விய ராகுல் காங்கிரஸ்.


இந்திய பேரரசை காக்க வந்த கடவுள் என காங்கிரஸாரால் வர்ணிக்கப்படும் ராகுல் தான் அடுத்த பிரதமராக்குவதற்கான முயற்சிகள் காங்கிரஸ் கட்சியால் செய்யப்பட்டு வருகின்றன. லண்டன் பல்கலைகழகம் ஒன்றில் பொருளாதாரம் படித்து பல பாடங்களில் தோல்வியடைந்து இந்தியா திரும்பினார்.
கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திராகாந்தி, அப்பன் ராகுல்காந்தி உட்கார்ந்த நாற்காலியில் உட்கார ஆசைப்பட்டார். கல்யாணம் கூட ஆகாத சின்ன பையன்க்கு இந்தியாவின் அரியாசனம் தந்தால் கட்சியின் பெரும் பெருச்சாளிகள் ஏற்றுக்கொள்ளாது என திட்டமிட்டு காய் நகர்த்த ஆரம்பித்தார்கள் சோனியா காங்கிரஸார்.
முதலில் எம்.பி சீட் தந்து வெற்றி தந்து உட்காரவைத்தார்கள். அமைச்சராக்குங்கள் என ராகுலின் அடிப்பொடிகள் குரல் கொடுத்தார்கள். நான் சின்ன பையன் என ஸ்டன்ட் அடித்து பதவியை மறுத்தார் ராகுல். இன்னோருத்தரின் கீழ் நாம் பணி புரிவதா என்ற தயக்கம் தான் அவரை அமைச்சராக்காமல் தடுத்தது.
அடைந்தால் சிவலோக பதவி என்பதைப்போல ஆனால் பிரதமர் தான். கீழ் உள்ள அமைச்சர் பதவி வேண்டாம் என்பதை சொல்லாமல் நான் சின்ன பையன் என பில்டப் தந்தார்.
நான் சாதிக்க வேண்டும், இந்திய இளைஞர்களுக்கு வழி காட்ட யாரும்மில்லை அவர்களுக்கு நான் வழிகாட்ட போறன். அவர்களை அரசியலுக்கு அழைக்க போறன் என ஸ்கூல், காலேஜ்களுக்கு ஓடினார், ஓடினார். மாணவ-மாணவிகள் மத்தியில் நான் புது விதமான அரசியல்வாதி என்றார். இந்திய நதிகளை இணைப்பது என்பது கேலிக்கூத்து என திருவாய் மலந்து வாங்கிகட்டிக்கொண்டார். கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்து மன்னிப்பு கேட்டார்.
பீகார் மாநிலத்திற்க்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ்க்கு என்று மரியாதை உள்ளது. நாங்கள் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என பம்மாத்து செய்துவிட்டு பீகாரை சுற்றிப்பார்த்தார். கூட்டணி என்பது இனி காங்கிரஸ்க்கு தேவையில்லை. இளைஞர்களின் பலம் காங்கிரஸாரின் உழைப்பு எங்களை தனித்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கும். நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என சவடால் பேசினார்.
பீகார் மாநிலத்தில் பல திட்டங்களை செய்த நிதிஷ்குமார் பி.ஜே.பியுடன் கூட்டணி சேர்ந்தார், லாலு பாஸ்வானுடன் கூட்டணி சேர்ந்தார் கூட்டணி சேர காரணம் தனித்து நின்றால் போனியாகாது என தெரிந்து தான்.

அரசியல் அடிப்படைக்கூட தெரியாத ராகுல் தனித்து நிற்போம், வெல்வோம் என  244 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். வாக்கு சேகரிக்க நகரங்களுக்குள் பயணமானார். ஏழை, ஒதுக்கப்பட்ட மக்களின் குடிசைகளில் தங்கி சோறு சாப்பிடுவது என பந்தா செய்து நாங்கள் தான் ஏழைகளின் பங்காளன் என நடித்து காட்டினார்.

6 கட்டமாக பீகாரில் தேர்தல் நடந்து 24ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நிதிஷ்குமார் கூட்டணி மெகா வெற்றி பெற்று விட்;டது. அதெயெல்லாம் விடுங்க.
காங்கிரஸ் ?.
5 இடங்களை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணியில் 9 இடங்களில் வென்றது. தனித்து நின்று 5 இடங்கள் என்பது பெரிய விஷயம் தான். ஆனால் நாங்க மெஜாரிட்டியா ஜெயிப்போம் என்ற ராகுல் நிலை தான் பரிதாபம்.
இந்த பீகார் முடிவை மனதில் வைத்துதான் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அடுத்த தேர்தலில் துணை முதல்வர் பதவி என தமிழக இளைஞர் காங்கிரசை பேச வைத்தார்கள் ராகுலும் அவரின் சிஷ்ய கோடிகளும். இல்லையேல் தனித்து நிற்போம், ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் கூட்டணி வைப்போம் என சவடால் பேசினார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.
பீகார் தேர்தல் காங்கிரஸ்க்கு அடியை தந்து விட்டது. இனி என்ன பேசப்போகிறார்கள் தமிழக காங்கிரஸார்.  

புதன், நவம்பர் 17, 2010

ஏழைகளை கடன்காரார்களாக்கும் கலைஞர் வீடு திட்டம்.


 
தமிழகத்தில் குடிசை வீடுகளில் கஸ்டப்படும் ஏழைகளுக்கு கான்கிரிட்டால் ஆனா வீடுகளை கலைஞர் வீடு கட்டி தரும் திட்டத்தின் மூலம் கட்டி தர அரசு முடிவு செய்து தமிழகத்தில் குடிசையில் வாழும் 21லட்சம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும்மென திட்டம் இயற்றப்பட்டு அதற்கான பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன. இந்த திட்டம் சிறந்த திட்டம் தான். அதனால் தான் இந்த திட்டத்தை காங்கிரஸ் எங்களது திட்டம் என குறுக்கு சால் ஒட்டி பெயர் தட்டி செல்ல முயல்கிறது.
 
ஆனால் இந்த திட்டம் ஏழை கிராமபுற மக்களை கடன்காரர்களாக மாற்றி வருகிறது. இது ஏதோ போற போக்கில் வைக்கப்படும் குற்றச்சாட்டல விசாhரித்துவிட்டு வைக்கப்படும் குற்றச்சாட்டு.
 
முதலில் திட்டத்தை பற்றி அறிந்துக்கொள்வோம், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தற்போது 3 லட்சம் வீடுகள் 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை 200 சதுர அடியில் பயனாளிகள் கட்டிக்கொள்ள வேண்டும் அதற்கான சிமெண்ட், கதவு, ஜன்னல், ஆகியவற்றை மட்டும் அரசு தந்து விடும். அதற்கு 15 ஆயிரத்தை பிடித்துக்கொள்ளும். மீதி 60 ஆயிரத்தில் கருங்கல், செங்கல், மணல், மேஸ்திரி கூலி ஆகியவற்றை பயனாளிகள் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும் அதற்கான பணத்தினை அரசு அதிகாரிகள் கண்காணித்து வீடு கட்ட கட்ட 4 தவணையாக பணத்தை தருவார்கள்.
 
இப்போது அரசு நிர்ணயித்துள்ள 75 ஆயிரத்தில் தான் பிரச்சனையே. அரசு இந்த திட்டத்தை போடும் போது 1 கருங்கல் விலை 4 ரூபாய், 1 செங்கல் விலை 3 ரூபாய், 1 மூட்டை சிமெண்ட் 170 ரூபாய், 4 யூனிட் மணல் 5 ஆயிரம் ரூபாய், ஆண் கொத்தனார் கூலி 250 ரூபாய், பெண் கொத்தனார் கூலி 150 ரூபாய், 1 டன் இரும்பு 25 ஆயிரம் இதையெல்லாம் கணக்கு போட்டு வீடு கட்ட 75 ஆயிரம் ஆகும் என கணக்கிட்டு 1 வீடு கட்ட 75 ஆயிரம் செலவாகும் என அரசு முடிவு செய்து அறிவித்தது.
 
ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது. திட்டம் தீட்டும் போது கட்டுமான பொருட்களின் விலையென்னவோ குறைவு தான். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது திட்டம்மிட்டே சிண்டிகேட் அமைத்து கட்டுமான பொருட்களான கருங்கல், செங்கல், சிமெண்ட், மணல், கம்பி வியாபாரிகள் திட்டமிட்டே விலையேற்றம் செய்துள்ளார்கள்.

 
தற்போது விலையேற்றத்தின் படி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் 1 கருங்கல் விலை 8 ரூபாய், 1 செங்கல் விலை 6 ரூபாய், 1 மூட்டை சிமெண்ட் 250 ரூபாய், 4 யூனிட் மணல் 8 ஆயிரம் ரூபாய், ஆண் கொத்தனார் கூலி 300 ரூபாய், பெண் கொத்தனார் கூலி 150 ரூபாய், 1 டன் இரும்பு 35 ஆயிரம் என விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏல்லாமே திட்டமிட்டு டிமாண்ட் உருவாக்கி செய்யப்பட்ட விலையேற்றம். இதில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.
 
தற்போது இந்த விலைக்கும் கட்டுமான பொருட்கள் கிடைக்க விடாமல் செய்கிறார்கள். இதனால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கிராமத்து ஏழை பொது மக்கள் தான். மழையில் குடிசை வீட்டில் வாழ்ந்து கஸ்டப்படும் நமக்கு கான்கிரிட் வீடு கிடைக்கின்றதே என சந்தோஷப்பட்டு இருந்த குடிசை வீட்டையும் இடித்து விட்டனர். அதன்பின் விலையேற்றத்;தால் தற்போது அரசாங்கத்தில் தரப்படும் 60 ஆயிரத்தில் வீடு கட்ட முடியவில்லை என்பதால் ஏழைமக்கள் கந்து வட்டிக்கும், கழுத்தில், காதில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்தும் கடன் பெற்று வீடு கட்டி வருவதை பார்க்க முடிகிறது.
 
தற்போது கலைஞராகட்டும், துணை முதல்வர் ஸ்டாலினாகட்டும் கலைஞர் வீடு திட்டத்தில் திறந்து வைத்துள்ள வீடுகள் 75 ஆயிரத்தில் கட்டப்பட்டவையள்ள. 1லட்சத்து20 ஆயிரத்துக்கும் மேல் செலவாகியுள்ளது. மீதி 45 ஆயிரம் ஏழை மக்கள் வட்டிக்கு வாங்கிய பணம்.

 
திமுகவுக்கு நல்ல பெயர் கொண்டு வரவேண்டிய திட்டம் விலையேற்றத்தால் ஏழை மக்களை கடன்காரர்களாக்கி திமுக அரசுக்கு எதிராக சாபம் விட வைக்கிறது. இது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. அதிகாரிகளுக்கும் தெரியாமல் இல்லை.

சமீபத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செங்கல், மணல், கருங்கல் விற்பனையாளர்களை அழைத்து பழைய விலையில் நியாயமான விலையில் விற்பனை நடக்கவில்லையெனில் பர்மிட் கேன்சல் செய்யப்படும் என எச்சரித்ததன் விளைவு பழைய ரேட்டில் அங்கு சிமெண்ட்டை தவிர எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. அதை மற்ற மாவட்ட அதிகாரிகள் பாலோ செய்வதில் என்ன தயக்கம். தயக்கத்திற்க்கு காரணம் முதலாளிகள் தரும் கமிஷன். அரசியல்வாதிகள் மட்டும் தான் சம்பாதிக்க வேண்டுமா நாங்கள் சம்பாதிக்க கூடாதா என அதிகாரிகள் எண்ணியதன் விளைவு முதலாளிகளிடம் அதிகமாக சோரம் போய்க்கொண்டுயிருக்கிறார்கள்.

எதிர்கட்சிகள், பொதுமக்கள் விலையேற்றத்தை குறையுங்கள் என கேட்பதற்க்கு விலையேற்றமேயில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு திமுக அரசாங்கம் மறைத்து வருகிறது. இது தொடர்ந்தால் மற்ற திட்டங்களில் திமுக அரசாங்கம் சம்பாதித்து வைத்துள்ள பெயர் இந்த திட்டத்தால் மக்கள் மத்தியில் கெட்டுப்போய்விடும். கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வரும் என்பதை போல இப்படியே தொடர்ந்தால் திமுக ஆட்சிக்கு டும் டும் கொடுப்பார்கள் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் உஷார்.

ஞாயிறு, நவம்பர் 14, 2010

தேய்பிறை நிலையில் திராவிட முன்னேற்ற கழகம்.





14 ஆண்டுகாலம் தொடர்ந்து தமிழகத்தை எம்.ஜீ.ஆர் ஆண்டபோதுக்கூட திமிறுடன் ஜாம்பவானாக நின்றது திமுக. ஆனால் தற்போது தேர்தல் கூட்டணிக்காக சுள்ளான் கட்சிகளுக்காக ஏங்கி நிற்க்கிறது. காரணம் திமுக தன் பலத்தை இழந்து வருகிறது. இல்லையென மறுத்தாலும் நிதர்சன உண்மை அது தான். இளம் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்க்க எந்த பணியும் செய்யாமல் சூம்பி போய் கிடக்கிறது. காரணம் நான் தான் பெரியவன் என்ற மனோபாவம். நம்மை போல் இங்கு இங்கு வேறு எந்த கட்சியும்மில்லை என்ற அகம்பாவம்.

இந்த எண்ணம் தான் காங்கிரஸ் சாம்ராஜ்யத்தை அழித்தது. இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பேரியக்கம் 1955களில் சங்பரிவார், இடதுசாரி அமைப்புகளை கில்லு கீறையாக  நினைத்தது. ஆனால் காலப்போக்கில் காங்கிரஸ் கண்ணை உறுத்தும் நிரந்தர தூசாக மாறிவிட்டது. இடதுசாரி கட்சிகள் தான் இரண்டு முறை மத்தியரசை இயக்கியது. தமிழகத்தில் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என்றார் காமராஜார். அவர் குறிப்பிட்ட அதே திமுக தான் ஆட்சியில் அமர்ந்து அவரிடம் ஆசி வாங்கியது. இன்றைய காலம் வரை காங்கிரஸ்சை அரியணை ஏற விடாமல் செய்து வருகிறது.

சுதந்திரம் வாங்கி தந்த கட்சி எதனால் அழிந்தது என்றால் காங்கிரஸ் பேரியகத்தின் முதலாளித்தும், தொண்டர்களை கட்சிக்கு வேலை செய்யும் கூலியில்லாத வேலைக்காரர்களாக எண்ணியது, மக்கள் மனதை புரிந்து கொள்ள முடியாதததன் விளைவு ஓட்டை விழுந்த படகானது. இதை புரிந்துக்கொண்டு கட்சி ஆரம்பித்த காலத்தில் திமுக தலைகள், மக்களோடு நெருங்கி பழகி ஏழைகளின் குரலாக ஒலித்தது. காங்கிரஸ் முதலாளித்துவமான கட்சி என குற்றச்சாட்டு, எழைகளின் எதிரி என்ற வசைப்பாடல், பேரியகத்தில் உள்ள ஏதோச்சதிகாரம், வாரிசு அரசியல், பணக்காரர்களின் புகலிடம்மென பட்டி தொட்டியெங்கும் மக்கள் மனதில் உள்ளதை உள்வாங்கி பேசியது திமுக. ஏழைகள், நடுத்தர மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கி திமுகவை ஆட்சி கட்டிலில் அமரவைத்தார்கள். 35 ஆண்டுகாலம் காங்கிரஸ்சை அரியாணை பக்கம் தமிழகத்தில் வரவிடாமல் செய்து வருகிறது திமுக.

காங்கிரஸ் மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை வளரும் காலத்தில் திமுக சொன்னதோ அதே குற்றச்சாட்டுகளை இன்று திமுக மீது வைக்கப்படுகிறது. அன்று காங்கிரஸ் செய்த அதே வேலையை தான் தெரிந்தே இன்று திமுக செய்து வருகிறது.

இன்று தொழிலதிபர்கள் திமுகவை தான் நம்பி உள்ளார்கள். பணக்காரர்கள் எல்லாம் வரிசை கட்டி நின்று திமுகவில் மெம்பராகியுள்ளார்கள். திமுகவை இயக்குபவர்கள் பண முதலாளிகள் தான். சிமெண்ட் விலை உயர்வை தடுக்க முடியாமல் திண்டாடுகிறது. பூரண மது விலக்கு எனச்சொல்லப்பட்டது. காரணம் முதலாளிகளின் ராஜ்யத்தில் திமுக இருப்பதால் தான். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் பணக்காரர்கள் அதிகம் உள்ள கட்சி எது என கணக்கெடுத்தால் திமுகவுக்கு முதலிடம். வாரிசு அரசியல் பற்றி பேசிய திராவிட தலைவர்கள் தங்களது வாரிசுகளை அரசியலில் இறக்கி நோகாமல் நோம்பு கும்பிட வைக்கிறார்கள். தொண்டர்களை எப்படி காங்கிரஸ் கண்டுக்கொள்ளவில்லையோ அதே போல் இன்று திமுக நிர்வாகிகள் உடன் பிறப்புகளை உளுத்தம் பருப்புகளாக்கிவிட்டார்கள்.

எந்த ஏழைகள் திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார்களோ அந்த ஏழைகள் தற்போது திமுகவின் எதிரிகளாகி போனார்கள்;. காரணம், பாமர ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் திண்டாடிக்கொண்டுயிருக்கிறார்கள். உண்ணும் உணவு முதல் குடியிருக்க வீடு கட்டுதல் வரை விலையேற்றம் விலையேற்றம். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்;, ஒரு கிலோ பருப்பு 150 ரூபாய் என விற்கப்படுவது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள உங்களுக்கு சாதாரண பணமாக தெரியலாம். அன்றாடம் கூலி வேலைக்கு போகும் சாமானியனுக்கு அது எட்டாக்கனி.

இதைப்பற்றி கேட்டால் நாங்கள் தான் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தருகிறோமே என சவடால் பேசுகிறிர்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் அதை வாங்கி சாப்பிடுகிறானா சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியது 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தருவதற்க்கல்ல. நீங்கள் சாப்பிடும் அதே அரிசியில் நாங்களும் சாப்பிட வேலை வாய்ப்பை உருவாக்கி தருவீர்கள் என நம்பி தான். ஆனால் பாமரனை பிச்சைக்காரனாக்காமல் விடமாட்டோம் என கங்ஙணம் கட்டிக்கொண்டு அலைகிறிர்கள்.

விவசாயிகளுக்கு இலவச மோட்டார் என்கிறிர்கள். ஆதை எங்கு கொண்டுப்போய் பொருத்துவது, வடமாவட்டங்களில் விலை நிலங்கள் எல்லாம் விற்பனை நிலமாக மாறிவிட்டது, மிச்ச சொந்தயிடங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழில் பேட்டை அமைக்க அரசே வாங்கி தருகிறது, கொங்கு மண்டலம், தஞ்சை மண்டல பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் விடுகிறான். ஒரு மூட்டை சிமெண்ட் செப்டம்பர் மாதம் 170 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது அக்டோபர் மாதம் திடீரென 250க்கு வந்தது. நவம்பரில் 300 ரூபாய் என ஆனது. அவலத்திற்க்கு பிறந்த அவல மக்கள் கூப்பாடு போட்டதும் சிமெண்ட் பெருச்சாலிகளின் கூட்டத்தை கூட்டினிர்கள். 10 ரூபாய் விலை குறைப்பு என்றார்கள். 150 ரூபாய் வரை விலை ஏற்றிவிட்டு 10 குறைத்தார்கள். நீங்களும் இதே விலை குறைந்து விட்டது என அறிக்கை வாசித்தீர்கள். இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இதுவா ஆட்சி நடத்தும் லட்சணம்.

மக்கள் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என நம்பியது அந்தக்காலம், திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜீ.ஆர் கட்சி ஆரம்பித்த போது, அதிமுகவை காளான் கட்சி என எண்ணினார் கருணாநிதி. ஆனால் அக்கட்சி ஆலமரமாக கிளை விட்டு பரவி எம்.ஜீ.ஆர் உயிருடன் இருந்தவரை திமுகவை தமிழகத்தில் அரியணை பக்கம் வரவிடாமல் பார்த்துக்கொண்டார். அரியணையில் இல்லாமல் இருந்தாலும் தொண்டர்களை கட்டுப்பாடக இயக்கத்தில் வைத்திருந்தார் கலைஞர். காரணம் உடன் பிறப்புகளுக்கு முரசொலியில் அவர் எழுதிய கடிதங்களும், அவரின் குரல் வளமும் திமுகவை தாங்கிப்பிடித்தது. மக்களும் திமுகவை ஆதரித்தார்கள். அது அன்றைய கால கட்டம். இன்றைய கால கட்டம் வேறு.

ஈழத்தமிழனை கடைசி நேரத்திலாவது திமுக காப்பாற்றும் என எத்தனையோ தமிழக தமிழர்கள் ஏங்கினார்கள். ஆனால் உண்ணாவிரதம், மனிதசங்கிலி என போராட்டத்தை மழுங்கடித்தீர்கள். ஈழத்தமிழன்க்காக எப்போதும்மில்லாத வகையில் ஜெயலலிதா கண்ணீர் வடித்தார். அதுயெல்லாம் நீலீக்கண்ணீர் என மக்கள் புரிந்து கொண்டதால் தான் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்காளிர்த்தார்கள். நீங்கள் நடத்தியதும் டிராமா என்று தெரியும் இருந்தும் ஏன் வாக்களித்தார்கள் தெரியுமா? ஆட்சிக்கு வந்தபிறகாவது காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தில் தான். ஆனால் திமுக ஈழத்தமிழன் விவகாரத்தில் துரோகம் செய்ததை மக்கள் மனதில் கனலாக எரிந்துக்கொண்டுதான்யிருக்கிறது.

காங்கிரஸ் தலைகளை தோற்கடித்தது போல திமுக தலைகளை அவர்களால் தோற்கடிக்க நீண்ட நேரமாகாது. திமுகவை பற்றி மக்கள் நன்கறிந்ததால் தான் விஜயகாந்த் பின்னாலும், அதிமுக பின்னாலும் ஓடுகிறான். ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட போய் சேருகிறான். திமுகவை நம்பி வராததர்க்கு காரணம், திமுக ஏழைகளை விட்டு வெகு தூரம் தள்ளி போய்விட்டது என்பதால் தான். திமுக தன்னை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் தேய் பிறை நிலை தொடரும்.

வியாழன், நவம்பர் 11, 2010

கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானியாக - மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ்.


       மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் ராஜேந்திரன் நியூசிலாந்தில் உள்ள ஜீரிச் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர். 5 முறை இளம் விஞ்ஞானி விருது பெற்றவர். உலகில் உள்ள முதல் 100 விஞ்ஞானிகளுள் இவரும் ஒருவர் என பட்டியலிடப்பட்டுள்ளார். உலகத்தில் மோசமான வியாதியென மருத்துவர்களால் குறிப்பிடப்படும் ‘அல்சைமர்’ என்ற நோய் எப்படி உருவாகிறது என கண்டுபிடித்தவர், அதற்கான மருந்தும் கண்டுபிடித்துள்ளார். 

பிரபல மருத்துவ பத்திரிகைகளான நேட்சர், சைன்ஸ் நியூரோன் போன்றவற்றில் வெளியாகும் விஞ்ஞானிகளின் கட்டுரைகள் இவரின் ஒப்புதல் பெற்றால் தான் அச்சுக்கு போகும்.

சமீபத்தில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் 3 தினங்கள் நடந்த நானோ டெக்னாலஜி 2010 சர்வதேச கருத்தரங்கிற்கு வந்திருந்தவரை இரவு நேரத்தில் சந்தித்தபோது, இளமை வேகத்தோடு, சமுக, கிராம மாணவர்கள் மீதான உண்மையான அக்கறையுடன் பேசினார். அவருடன் பேசியபோது 35 வயதாகும் அவர் இன்னமும் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை என்பது தெரிந்தது.

தொடர்ந்து அவருடன் உரையாடியதிலிருந்து...

? :விஞ்ஞானியாவதற்கான விதை எங்கு, எப்போது உங்கள் மனதில் விதைக்கப்பட்டது?

லாரன்ஸ் : சென்னை தாம்பரம் மறைமலையடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பி.எஸ்.சி பயோகெமிஸ்ட்ரி காஞ்சிபுரம் சங்கரா காலேஜ்லயும், எம்.எஸ்.சி மூலக்கூறு உயிரியல் சென்னை பல்கலைக் கழகத்தில் முடிச்சிட்டு பெங்களூரில் இருக்கிற இந்தியன் இன்ஸ்டியூடியுட் ஆப் சைன்ஸ் கழகத்தில பயோ-பிசிக்ஸ் சேர்ந்தேன். அங்க தான் முதன் முதலா ஆய்வுல ஈடுபட்டேன். முதல் ஆய்வு, நம்மோட உடம்புல பல விதமான வியாதிகள் வருவதற்கு காரணம் உடம்புலயிருக்கிற புரோட்டின். இது எப்படி காரணம் ஆகுதுன்னு கண்டுபிடிச்சேன். அது எனக்கு பெரிய ஊக்கத்தை தந்தது.

2000ல இஸ்ரேல் சென்றேன். அங்கு ஆராய்ச்சி செய்வது எப்படிங்கிற அடிப்படை பயிற்சிய கத்துக்கிட்டன். அங்கயிருக்கும் போது கேன்சர் நோய் ஏற்படுவது எப்படி, அந்நோய் உடலில் பரவுவது எதனாலங்கிற ஆய்வுல ஈடுபட்டேன். அதோட டாக்டர் பட்டம் பெற முயற்சி செய்தேன். ஜெர்மனியில அதுக்கான வாய்ப்பு கிடைச்சது. 2001ல ஜெர்மனி போய் கான்சடன்சி யுனிவர்சிட்டியில சேர்ந்தேன். 

அங்க என்னோட புராஜெக்ட், நம்மலோட உடம்புல உயிரணுக்கள் எந்த நேரமும் அலார்ட்டா இருக்கிறது எப்படிங்கிறத கண்டுபிடிச்சேன். என் ஆய்வ பாராட்டி 2 வருடத்துக்குள்ளயே டாக்டர் பட்டம் வாங்கினேன்.

? : நீங்கள் மருந்து கண்டுபிடித்ததாக அறியப்படும் ‘அல்சைமர்’ வியாதியைப் பற்றி சொல்லுங்க ?

லாரன்ஸ் : டாக்டர் பட்டம் வாங்கினதுக்கப்பறம் பாதியில விட்ட கேன்சர் நோய் பற்றிய ஆய்வ திரும்ப செய்தேன். கேன்சர் நோய் ஒரு இடத்திலயிருந்து மற்றொருயிடத்துக்கு பரவுவது எப்படிங்கிற ஆய்வுல, அதுக்கெல்லாம் காரணம் நம் உடம்புலயிருக்கிற கொழுப்பு தான்னு கண்டுபிடிச்சேன். 

அந்தக் கொழுப்பு நம் உடம்புல அதிகமாகும் போது கேன்சர் வியாதி பரவுது. அதேமாதிரிதான் ‘அல்சைமர்’ நோய் ஏற்படுதுங்கிறத கண்டுபிடிச்சேன். 65 வயதுக்கு மேல இந்த நோய் அதிகமான நபர்களுக்கு வரும். அதோட மூளையில, உடம்புலயிருக்கிற கண்ணுக்கு தெரியாது நூல் போன்ற அளவுல இருக்கிற எலும்புகள் செயல் இழக்க அதாவது இறக்க ஆரம்பிக்கும் போது ஞாபக சக்திகள் குறைய ஆரம்பிக்கும். இந்த நோயின் தாக்கம் மேற்கத்திய நாடுகள்ல அதிகம். அமெரிக்காவுல மட்டும் 55 லட்சத்துக்கும் அதிகமான முதியவர்களுக்கு இந்நோய் இருக்கு. 

இந்நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் கிடையாது. ஆனா தடுப்பு மருந்துகள், தடுப்புக்கான வழிமுறைகள் நிறையயிருக்கு.

? : இந்தியாவில் இந்நோயின் பாதிப்பு எந்த அளவில் இருக்கிறது?

லாரன்ஸ் :இந்தியாவுல எவ்வளவு நபர்களுக்கு இருக்குங்கிறது தெரியல. ஏன்னா நம்ம நாட்ல சைக்காலிட்டிஸ்ட்டுகிட்ட போறதுன்னா ஏதோ எமன்கிட்ட போறமாதிரி ஃபீல் பண்றாங்க. அதனால யாரும் போறதில்ல. அதனால அந்நோய் பற்றி சரியான புள்ளிவிபரம் இந்தியாவில் இல்லை. 

ஆனால் இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் இந்தியாவில் இந்நோயின் தாக்கம் அதிகமாகயிருக்கும்.  அதுவும் மாணவர்களுக்கு இந்நோய் அதிமாகயிருக்கும். காரணம் இங்கு உணவு முதல் எல்லாவற்றிலும் மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதுதான்.

? : இந்நோய் இந்தியாவில் வராமல் தடுக்க வழி என்ன?

லாரன்ஸ் :  நாம், நம் வாழ்க்கை முறையை வாழ்ந்தாலே போதும், பல நோய்கள் நம்மை அண்டாது. இந்நோய் தடுக்க உடம்புல கொழுப்பு ஏறாம பாத்துக்கனும், டயட்லயிருக்கனும், மஞ்சள் பொருட்கள உணவுல சேர்த்துக்கனும், கறிதுகள் சாப்பிடனும், க்ரீன் டீ, ரெட் ஒயின் சாப்பிட்டா இந்நோய் வராம தடுக்க முடியும்.

? : இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கிறதற்கான முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறது?

லாரன்ஸ் : சில மருந்துகள் உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அது தற்போது ஆய்விலயிருக்கு. நான் கண்டுபிடித்த மருந்தும் ஆய்வுலயிருக்கு. ஆனா அந்த மருந்துகள் வெளியில வர இன்னும் 20 ஆண்டுகள் ஆகும்.

? :  ஆராய்ச்சியில் உங்களுடைய அடுத்த திட்டம் என்ன?

லாரன்ஸ் : திட்டம் போட்டு செய்யுறது இல்லைங்க ஆராய்ச்சி. இப்ப செய்யுற ஆராய்ச்சியோட தொடர்ந்து செய்யும் மற்றொரு பணி என்னன்னா, தமிழ்நாட்டுல ஆதிகாலத்தில சித்தர்கள் நீண்ட காலம் வாழ்ந்துயிருக்காங்க. அவுங்க எப்படி உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் வாழ்ந்தாங்கன்னு, அதப்பற்றி புத்தகங்கள படிச்சப்ப சில மூலிகைகள் பற்றிய பெயர்கள் அதிலயிருந்தது. 

அதப்பத்தி இங்குள்ள நண்பர்கள் மூலமா பேசி சித்தர் பாடல்கள், அவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், புத்தகங்களை தேடிப்பிடித்து அதுக்கான மூலிகைகள் என்னென்ன?, அன்றைய காலகட்டத்தில நோய்கள் குணமாக தரப்பட்ட மூலிகைகள் எதுயெதுன்னு தேடிப்பிடிச்சி கலெக்ட் பண்ணி எனக்கு அனுப்பி வைக்கிறாங்க. அத நான் இங்க ஆய்வு செய்து மருந்து கண்டுபிடிக்க அத வச்சி ஆய்வு பண்ணிக்கிட்டுயிருக்கேன்.

? : ரைஸ்.ரூரல் என்று ஒரு அமைப்பு நடத்துகிறீர்களே அது எதற்காக?

லாரன்ஸ் : நான் உலகத்தின் பல நாடுகளுக்கு போய் கருத்தரங்குகள்ல கலந்துக்கொள்ளும் போது அங்க நம் இந்தியாவை சேர்ந்த பலரை சந்திக்கிறன். அவுங்க எல்லாருமே சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, கோவைன்னு முக்கிய நகரங்களை சேர்ந்தவங்களாதான் இருக்காங்களே தவிர பொள்ளாச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை பகுதி கிராமத்தை சேர்ந்தவங்க யாரும்மில்லைங்கிறது தெரிஞ்சது.

யேல் பல்கலைகழகத்துல ஒரு கருத்தரங்குல பேசினேன். அப்ப அங்க ஒரு ஆராய்ச்சி மாணவன், நான் பேசின டாபிக்லயிருந்து சில கேள்விகள் கேட்டார். அவருக்கு விளக்கினேன். 

2 ஆண்டுக்கு முன்பு உத்திரமேரூர்ல ஒரு காலேஜ் விழாவுக்கு வந்திருந்தேன். அங்க யேல் பல்கலை கழகத்தில பேசின அதே டாபிக்க பேசினேன். ஓரு மாணவன் கேள்வி கேட்டான். அவன் கேட்ட கேள்வியும், யேல் பல்கலைக் கழகத்தல அந்த ஆராய்ச்சி மாணவன் கேட்ட கேள்வியும் ஒண்ணு. ஆக யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல நம் கிராமத்து மாணவர்கள்.

திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லாம் இருக்கிறது. ஆனா, அவர்களுக்கு சரியாக வழிகாட்டதான் யாருமில்லை. நகர மாணவனுக்கு வழிகாட்ட பலர் இருக்காங்க. கிராமத்து மாணவர்களுக்கு யாருமில்லை. அதன் விளைவாகதான் ரைஸ் ரூரல் என்கிற இணையதள அமைப்பை 2 ஆண்டுக்கு முன்ன ஆரம்பிச்சேன்.

இதில என்னைப்போல பல நாடுகளைச் சேர்ந்த ஒத்த கருத்துடைய 20 விஞ்ஞானிகள் இருக்காங்க. ஒரு மாணவன் தனக்கு தெரியாதைப்பற்றி மெயில் செய்தா, நானோ மற்ற விஞ்ஞானிகளோ பதில் சொல்லுவோம். தினமும் 200 மெயில் வருது. யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்ங்கிற மாதிரி விவாத தளமா உருவாக்கி வச்சியிருக்கேன். இதன் மூலமா கிராமத்து மாணவர்கள முன்னேற்றம் செய்யனும் அதுக்காக தான் இந்த அமைப்பு.

? : இவ்வமைப்பு தொடங்கி 2 ஆண்டுகளில் இதற்கான வரவேற்ப்பு எப்படி உள்ளது?.

லாரன்ஸ் : பல மாணவர்கள் மெயில் அனுப்பிக்கிட்டுயிருக்காங்க. பிரச்சனை என்னன்னா நம் மாணவர்களுக்கு ‘சீவி’ங்கிற பயோடேட்டா தயாரிக்கிறது கூட எப்படின்னு தெரியல. இந்தியாவுலயிருந்து வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பற ‘சீவி’ எப்படியிருக்குன்னா ஜாதி, மதம், அப்பா, பிறந்த தேதின்னுயிருக்கு. வெளிநாட்டு அமைப்புகளுக்கு இது தேவையில்ல. சம்மந்தப்பட்டவங்களோட திறமை, படிப்பு தான் அவுங்களுக்கு தேவை. அதப்பத்தி தெளிவு படுத்தியிருக்கோம்.

சமீபத்தில் அமைப்பு சார்பா, 5 கட்ட தேர்வுகள் இணையம் வழியா நடத்தினதுல கிராம சூழ்நிலையில் வளர்ந்து படித்துவரும் 5 மாணவர்கள், 3 பேராசிரியர்கள் உட்பட 8 பேர் வெற்றி பெற்றாங்க. அவர்களுக்கு அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இன்னும் சில தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொள்வது எப்படி என்கிற பயிற்சிய இலவசமா வழங்க முயற்சி எடுத்து வர்றேன்.

? : கருத்தரங்கிற்கு வந்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நீங்கள் வைத்த கோரிக்கை என்ன?

லாரன்ஸ் : அமைப்பின் மெயிலுக்கு தினமும் குறைந்தது 200 மெயிலுங்க வருது. ஆராய்ச்சி பணியில இருக்கிற என்னால தொடர்ந்து கேள்விக்கு பதில் தர முடியல. எங்கிட்ட பொருளாதார வசதியில்லை. நான் வாங்குற சம்பளத்துல 2 பேரை வேலைக்கு அமர்த்த முடியும் இது பத்தாது. 

அதனால தான் அரசாங்கம் இத எடுத்து நடத்த ஆரம்பிச்சா அதுக்கான தகவல்கள நான் மற்ற விஞ்ஞானிகள் மூலமா தருவேன்.கிராமத்து மாணவர்களுக்கு, வெளிநாடுகள்ல உள்ள ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள்ல சேர்ந்து படிக்கிறது போன்ற தகவல்கள இலவசமா சொல்ல முடியும். 

இந்தத் திட்டம் கிராமத்து மக்களிடம் போய் சேரனும். அவுங்க அத பயன்படுத்திக்கனும். அரசாங்கத்தோட இணைந்து செய்தா மக்களிடம் அதிகமா ரீச் ஆகும். தமிழக, இந்திய கிராமத்து இளைஞர்கள் உலகில் கொடிக்கட்டி பறப்பாங்க. அதனாலதான் அதப்பத்தி அமைச்சர்கிட்ட பேசினேன்.

இவ்விதம் நமது கேள்விகளுக்கு எல்லாம் அக்கறை நிறைந்த அறிவியல் கருத்துக்களை பதிலாக அளித்தார் மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் ராஜேந்திரன். 

நேர்காணல் : ராஜ்ப்ரியன்

நியாயமா இது நியாயமா............?


கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி இருவரை ஈவு இறக்கமின்றி கொன்ற கொலை காரர்கள் இருவரில் மோகன்ராஜ் என்பவனை போலிஸார் என்கவுண்டர் செய்து கொன்றபோது நரகாசூரன் இறந்தது மகழ்ச்சியே என கோவை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மனித உரிமை ஆர்வலர்களோ அவனை காவல்துறை சுட்டுக்கொன்றது தவறு என நீதிமன்ற படியேறியுள்ளது.

இதற்கிடையே இறந்தவனின் சொந்தவூரில் நடந்த கொடுமை மன்னிக்க முடியாதது. அதைப்பற்றி யாரும் பேசமறுப்பதேன்?. சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் உடல் ஊருக்குள் வரக்கூடாது, இங்கு அவன் உடலை புதைக்க விடமாட்டோம்மென அவன் பிறந்து வளர்ந்த பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சி ஊர் பொதுமக்கள் அவனது தந்தையாரை தடுத்துள்ளனர். அதன் பின் அவன் தங்கியிருந்த கோவனூர் என்ற கிராமத்தில் எரிக்கலாம் என முடிவு செய்து அங்கு கொண்டு போனபோது அங்கிருந்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடைசியாக காவல்துறை உதவியுடன் பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் எரித்துள்ளனர். பிறந்த, வளர்ந்த, வாழ்ந்தயிடத்தில் எரிக்க விடாமல் மக்கள் துரத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுவும் மனித உரிமை மீறல் தான். பெற்ற பாவத்துக்காக அவனின் உடலை எறிக்க வந்து தங்களது கடமையை செய்ய சென்றவர்களை சுத்தி சுத்தி துரத்தியவர்களை என்னவென்று சொல்வது. 

அவன் செய்த கொலைக்கு அவனை பெற்றவர்களோ, அவனை நம்பி வந்தவாளே, அவனுக்கு பிறந்த குழந்தையோ எப்படி காரணமாக முடியும். அவன் செய்த தவறுக்கான தண்டனையை காவல்துறை துப்பாக்கி குண்டு மூலம் தந்துவிட்டது. இருந்தும் அவனது உடலை புதைக்க கூட விடமாட்டோம் எனச்சொல்வது எந்த விதத்தில் நியாயம். 

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் சுதந்திரம் கேட்டு போராடிய நம் மக்களை கொத்து கொத்தாக கொன்ற வெள்ளையனுக்கு தமிழகத்தில் பலயிடங்களில் சமாதியுள்ளது. கோடி கோடியாய் கொள்ளையடித்து பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விட்டு மறைந்த பல அரசியல் தலைவர்களுக்கு நம் நாட்டின் தெருக்களில் சிலையுள்ளது.

நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் பக்கத்து நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அங்குள்ள மக்களை ஆயிரக்கணக்கில் கொல்ல சொன்ன, உதவி செய்த அரசியல் கட்சியை நாம் அரியணையில் அமர்த்தி வைத்துள்ளோம்.

அப்படிப்பட்ட சூடு சொறணையற்ற நாம் உயிரற்ற உடலை மேலும் மேலும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?.

திங்கள், நவம்பர் 08, 2010

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்.


காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே  தொடங்கிவைத்தார்.

 
நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான கதவை முதலில் அகலமாக திறந்தவர் பிரதமராகயிருந்த ராஜிவ்காந்தி.
 
தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்காவின் பன்னாட்டு கம்பெனிக்கு போபாலில் மக்கள் வாழும் பகுதியில் ஆபத்தான விஷவாயு அடங்கிய தொழிற்சாலைக்கு அனுமதி தந்து அது வெடித்து மிகப்பெரிய உயிர்பலி வாங்கியது. பணத்தை வாங்கிக்கொண்டு அதன் முதலாளிகளை தப்ப விட்டவர் ராஜிவ்காந்தி.
 
சர்வ வல்லமை பொருந்திய பிரதமர் பதவியில் இருக்கும் போதே சாதாரண அரசு ஊழியரைப்போல் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார். ராணுவவீரர்களின் உயிர்களோடு நாட்டின் பாதுகாப்போடு விளையாட ஆரம்பித்தார். போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் கோடி கோடியாக கமிஷனாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் குவித்தார். ராஜிவ்காந்தி மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு வாசிசுகளால் புஷ்வானமாகி விட்டது.
 
கிராமங்களில் இன்று விவசாயம் அழிந்து போக காரணம் இதே ராஜிவ்காந்தி தான். விவசாயிகளை அமரர்களாக்க விதை விதைத்தார். புது முயற்சி என புது ரக விதை, மருந்துகளை இறக்குமதி செய்தார். அது இந்திய விவசாயத்தை அழிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பமான பிரச்சனை இன்று தினம் 10 விவசாயிகளாவது இறக்கும் அளவுக்கு வந்து நிற்க்கிறது.
 


உலகமே நம்மை ஆச்சர்யத்தோடு பார்ப்பதற்க்கு காரணம், நம் மக்களின் கலாச்சாரம் தான். ஆனால் இன்றைய நிலையில் அந்த கலாச்சாரத்தை உடைத்து யாரும் யாரோடும் என்ற நிலையை உருவாக்கியது இந்த ராஜிவ்காந்தி காலத்தில் தான்.

1990ல் நடந்த இந்திய நாடாளமன்றத்திற்க்கான பொது தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. செய்த பாவம் திண்றால் போகாது என்பதை போல ராஜிவ்காந்தி பதவியில் இருக்கும்போது ஈழ தமிழனுக்கு செய்த துரோகத்தால் மரணம் அவரை தேடி வந்தது. அவரின் மரணம் காங்கிரஸ் கட்சியை உயிர் பெற வைத்தது. ஊழல்வாதி ஜனநாயக நாட்டின் மகாத்மாவாகி விட்டார். ஆனால் அவர் விட்டு சென்ற பணிகளை அவரின் வாரிசுகள் இன்று தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

நூறு நாள் வேலை திட்டம். இந்திய கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் இந்தியா ஒளிர்க்கிறது என்ற பிரச்சாரம் செய்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் நடை பயணம் போகும் இளைஞர் காங்கிரஸ் மூச்சுக்கு முண்ணூறு முறை எங்கள் திட்டம் சிறந்த திட்டம் என கூப்பாடு போட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தால் ஏழைகளே செய்யும் வேலைக்கு கூலியை நிர்ணயிக்கிறார்களாம்.

பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம், ஆந்திராவில் போய் பாருங்கள் இந்த திட்டத்தின் லட்சணத்தை. அப்படி ஒரு திட்டம் இருப்பதே அந்த மக்களுக்கு தெரியவில்லை. வேலை செய்ததாக கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். வெளிப்புறத்திற்க்கு பார்த்தால் நல்ல சிறந்த திட்டமாக தோன்றும். ஆனால் உண்மையில் மக்களை சோம்பேறிகளகாக்க வந்த திட்டம், விவசாயத்தை முற்றிலும் அழிக்க வந்த திட்டம். அதில் 30 சதவிதம் வெற்றி பெற்று விட்டது காங்கிரஸ்.

தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களில் இந்த திட்டத்தால் விவசாயம் படு பாதாளத்துக்கு போய்விட்டது. இந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும் என கேட்டு விவசாய அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்தியரசு அசையவில்லை. காரணம் திட்டத்தின் மறைமுக வெற்றி. விவசாயத்தை அழித்து விட்டு என்ன செய்யபோகிறார்கள். தரிசுகளாக மாறும் நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்க தான் இந்த திட்டம். பன்னாட்டு கம்பெனிகளை வரவைத்து அவர்கள் மூலம் கோடி கோடியாய் கொள்ளயைடிக்கவும், ஏழை மக்களை இன்னும் ஏழைகளாக்கி குளிர்காயவுள்ளது. 



அதை இன்று சோனியாகாந்தி தலைமையில் நடக்கிறது. நாளை இந்தியா இளைஞர்களின் கனவு நாயகன் என வர்ணிக்கப்படும் கொலம்பியா நாட்டு பெண்ணை மணக்க போகும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல்காந்தி தலைமையில் நடத்த எல்லா பூர்வாங்க வேலையும் நடக்கிறது. இப்படியெல்லாம் காங்கிரஸ்காரர்களால் நடக்கும் என யூகித்தே 50 ஆண்டுகளுக்கு முன், உலகமே கொண்டாடும் மகாத்மா காந்தி இந்தியா விடுதலை பெற்றதும், காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது. இதை கலைத்து விட வேண்டும் என சொன்னார். அதை செய்திருந்தால் வரலாற்றின் பொன் எழுத்தில் காங்கிரஸ்சின் பெயர் நிலைத்திருக்கும்.

சொந்த சகோதரர்களை, தமிழனின் தொப்புள் கொடி உறவை அழித்த, இந்தியாவை விலை பேசும் தலைமை கொண்ட, ஊழல்வாதிகள் நிறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தை அழிக்க வேண்டும்.