வெள்ளி, செப்டம்பர் 30, 2011

பரபரப்பான வாச்சாத்தி வழக்கு ஒரு பார்வை.



தருமபுரி மாவட்டம் அரூர்க்கு அருகில் உள்ள மலைவாழ் கிராமம் வாச்சாத்தி. 300 குடும்பங்களை கொண்ட பழங்குடியினர். இவர்களின் தொழில் காடுகளில் உள்ள சின்ன சின்ன மரங்களை வெட்டி அதை டவுன் போன்ற பகுதிகளில் கொண்டு வந்து விற்று ஜீவணம் செய்வது. விவசாய வேலை செய்வது, ஆடமாடுகளை கொண்டு ஜீவனம் செய்வது தான் இந்த கிராம மக்களின் நிலையே.

1990கள் வரை செல்வம் கொட்டி தரும் விலை உயர்ந்த மரங்கள் அதிகம் மேற்கு தொடர்ச்சி மலையில் உண்டு. அப்படித்தான் வாச்சாத்தி மலைவாழ் கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள சித்தேரி மலையில் அடர்ந்த காட்டில் சந்தனமரங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இதனை அதிகார வர்க்கத்தின் ஆசி பெற்ற மரக்கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தின. இந்த கும்பல் மரங்களை வெட்ட வாச்சாத்தி கிராம மக்களை பயன்படுத்திக்கொண்டன. வுறுமையில் இருந்த மக்கள் மரம் வெட்டி தந்தால் பணம் கிடைக்கிறதே அதுவும் தினக்கூலியை விட அதிகமாக ஒருநாளைக்கு 100 ரூபாய் கிடைக்கிறதே என அம்மக்கள் மரங்களை வெட்டி தந்தனர். அந்த மரங்கள் வனத்துறை அதிகாரிகள் ஆசியோடு செக்போஸ்ட்டுகள் தாண்டி நகரங்களுக்குள் போய்விடும். காவல்துறையும் இதை கண்டுக்கொள்ளாது.

அரசுக்கு கணக்கு காட்ட அடிக்கடி கட்டை கடத்துபவர்களை பிடிக்கிறோம் என்ற போர்வையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு போகும் வனத்துறை காவலர்கள், அதிகாரிகள் வனத்துறை இல்லங்களில் தங்கிக்கொண்டு மது, மான்-உடும்பு கறியை உண்டுவிட்டு தங்களது காம வெறியை தீர்த்துக்கொள்ள மலையில் வாழும் படிப்பறிவில்லாத, உலகம் அறியாத இளம் பெண்களை பலாத்காரமாக இழுத்து வந்து அறையில் வைத்து வேட்டையாட தொடங்கினர். இதை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் ஒன்று இறந்து போய் கிடப்பார்கள் அ மரம் கடத்தினான் என சிறையில் இருப்பார்கள். உயிருக்கும், மானத்துக்கும் பயந்து அம்மக்கள் இதனை வெளியே சொல்லாமல் மவுனம் காத்துவந்தனர்.

1990களில் வீரப்பன் விவகாரம் தருமபுரி, கோயம்பத்தூர், ஈரோடு பகுதிகளில் பெரிய விவகாரமாகிறது. சந்தன மரக்கடத்தல் விவகாரம் பெரிய அளவில் மலைவாழ் மக்கள் தான் என்கிறார்கள். அவர்கள் ஆசியோடு மரம் கடத்தப்படுவதால் எங்களால் இதை தடுக்க முடியவில்லை என அரசுக்கு அறிக்கை தருகிறார்கள். இது உண்மையா? பொய்யா என அரசு ஆராயவில்லை. அப்படி ஆராய்ந்திருந்தால் அம்மக்கள் எதனால் அவ்வாறு செய்கிறார்கள் என அரசு யோசித்து அவர்களை திருத்த நடடிவக்கை எடுத்திருக்கும். அப்போதுயிருந்த ஜெ தலைமையிலான அதிமுக அரசு அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்பியது.

தாங்கள் தப்பித்துக்கொள்ள இதற்கெல்லாம் காரணம், மலைவாழ் மக்கள் மீது குற்றம் சாட்டிக்கொண்டுயிருந்தார்கள். அப்படிப்பட்ட கிராமங்களுக்கு சென்று ரெய்டு செய்து கைது செய்ய கூட்டுக்குழு அமைக்கப்படுகிறது. அப்போது தான் அரசுக்கு வாச்சாத்தி மலைவாழ் மக்கள் குற்றவாளிகள் எனக்கூறினர். அதிகார வர்க்கத்தின் பார்வையின் கொடூரம் 1992 ஜீன் 20ந்தேதி வெளிக்காட்டினார்கள். வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர். அதன் ரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தது என்பதை விசாரணையின் போது உணர்ந்தது உலகம்.

அன்றைய தருமபுரி மாவட்ட ஆட்சியரான தசரதன்க்கு வாச்சாத்தி மக்கள் சந்தன மரங்களை வெட்டி தங்களது வீடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற தகவல் போகிறது. அவர் உடனே அதுப்பற்றி அப்போதைய தருமபுரி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராமானுஜத்திடம் தகவல் தெரிவிக்கிறார். வனத்துறையை சேர்ந்தவர்கள் 155பேர், காவல்துறையை சேர்ந்தவர்கள் 108பேர், வருவாய்த்துறையை சார்ந்த 6பேர் கொண்ட படை என அந்த கிராமத்தை நோக்கி செல்கிறது. இத்தகவல் தெரிந்து ஆண்கள், பெண்கள் என 90 சதவிதம் மக்கள் வீட்டை விட்டு மலைகளில் போய் தஞ்சம் அடைகின்றனர்.

ரெய்டு என்ற பெயரில் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தெருவுக்கு வந்தன. வீட்டில் இருந்த இளம் பெண்களை காம வெறி பிடித்த வேட்டை நாய்களான வனத்துறை, காவல்துறையில் இருந்த சிலர் தூக்கிக்கொண்டு போய் ஊரின் குளக்கரையில் வைத்து வைத்து கடித்து குதறினர். அவர்கள் கதறிய கதறல் அந்த மலைகளின் பாறைகளில் பட்டு அங்கிருந்த பறவைகள், மான்கள், புலிகள் கூட தரிக்கெட்டு ஓடியிருக்கும். ஆனால் இந்த வெறி நாய்களின் காதுகள் மட்டும் செவிடாகவேயிருந்தன. குழந்தை முகம் மாறாத, பிஞ்சி மார்புகளை கொண்ட 13, 16 வயது பெண்களை கூட மார்கழி நாய்கள் போல் கூட்டமாக சீரழித்து விட்டு 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 சிறுவர்களை கைது செய்து இவர்கள் சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தார்கள், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது.

இந்த விவகாரம் மலைவாழ் மக்கள் சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு தெரியவந்து அவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். 1992 ஜீன் 22ந்தேதி, அரூர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அவர்கள் அதை வாங்கி குப்பை தொட்டியில் கிழித்து போட்டனர். உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்க்கு இதை கொண்டு சென்றனர். நடந்தது என்ன என அன்றைய ஜெயலலிதா அரசிடம் அறிக்கை கேட்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி நல ஆணைய தென்மண்டல தலைவி பாபதியும் விசாரணை செய்து அந்த கொடூரத்தை பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தந்தனர். அறிக்கையை படித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும்மென உத்தரவிட்டது.

அதன்படி தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து தங்களது சகாக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மிரட்ட தொடங்கினர். இதனால் வழக்கு 1996ல் சி.பி.ஐ விசாரிக்க தொடங்கியது. தங்களை கற்பழித்த கயவர்களை 18 பெண்கள் அடையாளம் காட்டினர். கயவர்களான காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையை சார்ந்த 269பேரை குற்றவளியாக்கி வழக்கை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ நடத்த தொடங்கின. முதல் 155 பேர் வனத்துறையை சார்ந்தவர்கள், 156 முதல் 263 வரை காவல்துறையை சார்ந்தவர்கள், 264 முதல் 269 வரை இருப்பவர்கள் வருவாய்துறையை சார்ந்தவர்கள் என 269 பேர் மீது வழக்கு நடந்தது. விசாரணையில் இருக்கும் போது பல குறுக்கீடுகள், இழுத்தடிப்புகள் எனச்சென்றது. வழக்கு நடக்கும்போதே 53பேர் இறந்துவிட்டதால் 213 பேர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

19 வருடங்களாக வாச்சாத்தி மக்கள், பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் காத்திருந்தனர். கடைசியில் 2011 செப்டம்பர் 29ந்தேதியன்று தருமபுரி மாவட்ட நீதிபதி குமரகுரு தீர்ப்பு தந்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள். அதில் கற்பழிப்பில் ஈடுபட்ட 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை, 3 ஆயிரம் அபராதம், வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் கீழே தண்டனை தரப்பட்டுள்ளது.

நீண்ட ஆண்டுகள் பொருத்து கிடைத்த நீதிதான். ஆனாலும் இதில் பாதிக்கப்பட்ட மக்கள் படும் மனவேதனைக்கு இது ஒத்தடம் தானே தவிர மருந்தல்ல. . . . .

புதன், செப்டம்பர் 28, 2011

'கை' பொம்மை சி.பி.ஐ வரலாறு.



சென்ட்ரல் பீரோ ஆப் இன்வஸ்டிகேஷன். தமிழில் மத்திய புலனாய்வு அமைப்பு. தன்னிச்சையான, சுதந்திரமான அமைப்பு.  மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு யாரும் உத்தரவிடமுடியாது. நாங்கள் முடிவு செய்தது செய்தது தான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கவே முடியாது என கூறியது தான் அதன் மீதான நம்பகதன்மையை சுத்தமாக இழக்க வைத்துவிட்டது.

2ஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக்கொண்ட சுப்பிரமணியசாமி, 2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்க்கும் பங்குள்ளது என குற்றம்சாட்டி சில ஆதாரங்களை எடுத்து தந்துள்ளார். இதனை விசாரிக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் கூறியபோது, அவரை விசாரிக்க எந்த முகாந்திரமும்மில்லை அதனால் அவரை விசாரிக்க முடியாது என ஒரே போடாக போட்டுவிட்டது. உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. இந்த பதில் இந்தியாவில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதில் விவாதம் நடத்த ஒன்றுமேயில்லை.

1941ல் ஸ்பெஷல் போலிஸ் விங் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாட்டில் திருப்தியில்லாததால் சில மாற்றங்கள் செய்து 1963ல் சி.பி.ஐயாக உருமாற்றம் செய்யப்பட்டு செயல்பட தொடங்கியது. இதனை கோஹலி என்ற ஐ.பி.எஸ் ஆபிஸர் நிறுவினார். இவரின் சட்டத்திட்டமே இன்றும் செயல்பாட்டில் உள்ளது. இதன் இயக்குநர்களாக இந்திய காவல் பணியில் உள்ள அதிகாரிகளே இருப்பார்கள். அதுவும் இரண்டு ஆண்டு பணியாக. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல், அதிகாரிகள் ஊழல், லஞ்ச அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் கொலை, வங்கி, வணிக நிறுவனங்களின் ஊழல், திருட்டு, கொள்ளை போன்றவற்றை விசாரணை செய்யும் அமைப்பு. வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளும் அரசின் அங்கீகாரம் பெற்ற வெளிப்படையான புலனாய்வு அமைப்பு. இதற்கென தனி அகடாமியும் உள்ளது.


ஆனால் காலங்காலமாக இது ஆளுங்கட்சியின் கை பொம்மை என்ற விமர்சனத்தை மட்டும் துடைக்க பாடுபடவில்லை. காரணம் அந்த கூற்றில் உள்ள உண்மையால். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இராணுவத்திற்க்கு போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜிவ்காந்தி ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்தது. அதனை சி.பி.ஐ விசாரித்தது. ராஜிவ்காந்தி இறந்தபின்பும் அந்த வழக்கு நடந்தது. தற்போது 1 ஆண்டுக்கு முன் குற்றத்தை நிருபிக்காமல் வழக்கு நடக்கும்போதே ஏஜென்ட் குவரோத்சியை தப்பவிட்டு வழக்கை முடியாது, போபால் விஷவாயு வழக்கை இழுத்து மூடி அதன் முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்துக்கொண்டது இதே சி.பி.ஐ.

அதேபோல், பி.ஜே.பி ஆட்சிகாலத்தில் சவப்பெட்டி, ஆயுதம் வாங்கியதில் பி.ஜே.பி தலைவர்கள் லஞ்சம், கமிஷன் வாங்கியதை தெஹல்கா என்ற இணையதள இதழ் வீடியோ பதிவாக வெளிச்சம் போட்டு காட்டின. வழக்கு சி.பி.ஐக்கு போனது. பி.ஜே.பியின் வழிகாட்டலில் அந்த நிறுவனத்தையே சின்னபின்னமாக்கியது சி.பி.ஐ.

நமக்கு ரொம்ப பரிச்சயமான 2ஜி வழக்கை எடுத்துக்கொள்வோம். திமுகவை சேர்ந்த எம்.பிக்களான ராசா, கனிமொழி கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு அதன்பின் ஆதாரங்களை திரட்டிய சி.பி.ஐ தயாநிதிமாறன், காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் சார்பு தொழிலதிபர்கள் ரத்தன்டாடா, அம்பானிபிரதர்ஸ், மிட்டல்களை விசாரிக்கவே மாட்டேன் என்கிறது. அவர்களை விசாரிக்க சொல்லி மீடியா, நீதிமன்றம் கூறும்போது கண்ணை மூடிக்கொள்கிறது, காதை அடைத்துக்கொள்கிறது.


காமன்வெல்த் ஊழலில், காங்கிரஸ்சின் பெரிய தலைவரான சுரேஷ்கல்மாடியை, அதற்க்கு துணை போன மத்திய காங்கிரஸ் அரசின் அதிகாரிகளை ஒப்புக்கு விசாரித்தது. கல்மாடி மட்டும் சிறையில் உள்ளார். இப்போது அப்படியொரு வழக்கு இருக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. அதேபோல் ஆதார்ஷ் வீடு கட்டும் திட்ட விசாரணை எப்படி நடக்கிறதா? இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது.

இப்படி ஆரம்பம் காலம்தொட்டே வெளிப்படையாக மத்திய ஆளும் கட்சியின் துணை அமைப்பாக கருமமே கண்ணாக இருப்பதால் தான் ஆளும்கட்சியின் கைபொம்மை என்கிறார்கள்.

இதை சி.பி.ஐயால் மறுக்க முடியுமா ?. முடியவே முடியாது.

2ஜி விவகாரத்தின் மறுபக்கம் வெளிவரும் நேரம்.



மீண்டும் தேசிய அளவில் சூடு பிடித்துள்ளது 2ஜி விவகாரம். இந்த விவகாரம் முன்பு திமுகவை மையமிட்டே சுற்றி வந்தது. இதில் காங்கிரஸ்க்கும் பங்குண்டு, இந்த விவகாரம் வெடிக்க காரணம் காங்கிரஸ் தான் என பலமுறை நமது கட்டுரைகளில் அலசியிருந்தோம்.

தற்போது ஆடிட்டர் அறிக்கை ஒன்று லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 2645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதனை தலைமை கணக்கு அதிகாரிதான் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி இழப்பு என்றார். அது ஊழல் செய்யப்பட்டதாக வெளியாகி பரபரப்பானது.

இதில் ஊழல் நடந்திருக்கும். ஆனால் இவர்கள் குறிப்பிடும் அளவுக்கு நடந்திருக்க வாய்ப்பில்லை. அதோடு, திமுகவை அழிக்க காங்கிரஸ், அதன் சார்பு தொழிலதிபர்கள், மாறன் பிரதர்ஸ் கூட்டு சேர்ந்து நடத்தும் சூழ்ச்சி என்பதை குறிப்பிட்டுயிருந்தோம். தயாநிதிமாறன், ப.சி, மன்மோகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ராசா இழுத்து விட்டதும் துடித்து போன லாபி வட்டாரங்கள் முதலில் தயாநிதிமாறனை காப்பாற்ற நடடிவக்கையில் இறங்கின. காங்கிரஸ் தனது ஆட்களை காப்பாற்ற முயற்சிக்கிறது.

இதற்கிடையே 2ஜி விவகாரம், அரசியல் விவகாரங்களால் பிரதமர் பதவியில் இருந்து விலக மன்மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அப்படி அவர் போனால் சோனியாவின் சாய்ஸ் சிதம்பரம். இதனை நீண்ட நெடுங்காலமாக பிரதமர் கனவில் உள்ள நிதித்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி உணர்ந்தார். இதனை தடுக்க உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரத்தின் இமேஜ்ஜை தேசிய அளவில் டேமேஜ் செய்ய எண்ணிய பிரணாப், சு.சாமியை கொண்டு காய் நகர்த்தினார். 2ஜி விவகாரத்தில் சிதம்பரத்திற்க்கு பங்குள்ளது என உச்சநீதிமன்றம் போகவைத்தார். அவர் நீதிமன்றத்தில் சில கடித ஆதாரங்களை எடுத்து காட்டினார். இதனை கொண்டு நட்டத்தை தடுக்க தவறிய சிதம்பரத்துக்கும் 2ஜியில் பங்குள்ளதாக தெரிகிறது என்றார். இதனை காங்கிரஸ்க்கு எதிரான தரப்புகள் கையில் எடுத்துக்கொண்டன. தலைக்கு மேல் வெள்ளம் போகும் நிலை.


திமுகவை அழிக்க வேண்டும் என கிளப்பப்பட்ட 2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், பிரதமராகவுள்ள மன்மோகன்சிங், காங்கிரஸ் லகானை வைத்துள்ள சோனியாவுக்கு நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது. பூமாராங் போல் அது கிளப்பிய ஊழல் பிரச்சனை தற்போது அதன் காளையும் சுற்ற தொடங்கியதை காங்கிரஸ் உணர்ந்து விட்டது. அதனால் உண்மையை வெளியிடும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்துவிட்டது.

ஊழல் நடந்துள்ளது. மீடியாக்கள், அரசியல் கட்சியினர் கூறும் அளவள்ள என்பதை நன்கறிந்த மன்மோகன், தனது அரசு இயந்திரங்கள் 2ஜியை கிளப்பி திமுக இமேஜ்ஜை டேமேஜ் செய்தது என்பதும் நன்கறிந்தவர். அதோடு, சிதம்பரத்தை காலி செய்து பிரதமர் பதவியை பிடிக்க ஆசைப்படும் பிரணாப் தான் இதன் பின்னால் இருந்து சிதம்பரத்துக்கும் பங்குண்டு என கிளப்பி சிக்கலாக்குகிறார் என்பதை அறிந்தே சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அதனால் அவர் பதவி விலக வேண்டியதில்லை என்றார்.


இந்நிலையில் தான் உண்மையான இழப்பு இதுதான் என்ற தகவலை காங்கிரஸ்சே லீக் செய்துள்ளது. 2ஜியில் ஊழல் நிச்சயம் நடந்தது. இதில் திமுக மட்டுமல்ல காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், தலைவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் வெளியில் குறிப்பிடும் அளவுக்கான தொகையல்ல என்பதே நமது வாதம். அதோடு தவறு செய்தவர்களில் திமுகவினர் மட்டும் உள்ளேயிருக்க, ஊழலில் அதிக பங்கு வாங்கிய காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள், திமுகவை அழிக்க துணை போனவர்கள் வெளியே இருப்பது அநியாயம்.

இப்போது, பசி-பிரணாப் சண்டையில் 2ஜி விவகாரத்தின் மறுப்பக்கம் வெளி வரும் காலம் நெருங்கிவருகிறது. வெளி வந்தால் திமுக தலைமை உணர்ந்து கொண்டு காங்கிரஸ்க்கு பாடம் கற்பித்தால் நல்லது.

சனி, செப்டம்பர் 24, 2011

உள்ளாட்சி தேர்தலில் தவறான கணக்கு.

நீண்ட காலத்திற்க்கு பின் தமிழக தேர்தல் களத்தில் எல்லா கட்சிகளும் தனித்தே களம்மிறங்குகின்றன. திமுக தனித்து களம் காண்கிறோம் என காங்கிரஸ், விசியை கழட்டி விட்டுவிட்டு 91க்கு பின் தனித்து களம்மிறங்கியுள்ளது. 4 மாத்திற்க்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தலில் பங்காளிகளாக இருந்த தேமுதிக, கம்யுனிஸ்ட், புதிய தமிழகம், சரத்குமார் கட்சி போன்றவற்றை துரத்தியடித்துவிட்டு தனியாக நிற்கிறது அதிமுக. எங்களுக்கும் தன்மானம்மிருக்கு என பாமகவும் தனித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதைப்பார்த்து எந்த கட்சிக்கு எவ்வளவு ஒட்டு பலம் என்பதை இந்த தேர்தல் மூலம் முடிவு செய்துவிடலாம் என பலரும் கணக்கு போட்டு காத்திருக்கின்றனர். அப்படி காத்திருப்பது முற்றிலும் தவறானது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்கை கொண்டு ஒரளவு மட்டுமே  கணக்கிட முடியும். காரணம், உள்ளாட்சி தேர்தல் என்பது கிராம, நகர அளவில் நடப்பது. இங்கு கட்சிகளுக்கு செல்வாக்குயிருக்காது. வேட்பாளர்களின் தனித்தன்மை, சாதி ஆகியவையே வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும்.

திமுகவினர் அதிமுகவினருக்கும், அதிமுகவினர் தேமுதிகவினருக்கும் மாத்தி மாத்தி ஓட்டுப்போடுவார்கள். காரணம், இங்கு கட்சியை விட சாதியும், மதமும்மே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அப்படியிருக்க இதை வைத்து எந்த அரசியல் கட்சியின் செல்வாக்கையும் தீர்மானித்துவிட முடியாது. அப்படி தீர்மானிக்க நினைப்பவர்கள் விமர்சகர்களல்ல.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே அமையும். இதுதான் இதற்க்கு முந்தைய கால தேர்தல் வரலாறும். அதற்க்கு காரணம், மக்கள் யார் ஆளும்கட்சியோ அந்த கட்சி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே நமக்கு தேவையானது தேடி சுலபமாக வரும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள். இப்படி விழும் வாக்கை கொண்டும் போய் ஒரு கட்சியின் கணக்கில் சேர்க்க முடியாது. காரணம் இது சட்டமன்ற தேர்தலோ, நாடாளமன்ற தேர்தலோயில்லை. 

எனது கூற்றுப்படி இந்த தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும், இரண்டாம் இடத்தை திமுக பிடிக்கும். மற்றப்படி தேமுதிக, பாமக பட்டியலில் வரலாம். காங்கிரஸ், வி்.சி, புதிய தமிழகம், இடது வலது கம். கட்சிகள் போன்றவர்கள் டெப்பாசிட் வாங்கினால் அதிசயம் என்பது எனது கருத்து.
இந்த தேர்தல் மக்கள் மன்றத்திலோ, அரசியல் மட்டத்திலோ பொிய அளவில் மற்றத்தை கொண்டு வராது.இந்த வெற்றி மூலம் எம்.பி தேர்தல் வரை அரசியல் செய்யவோ, அறிக்கை விடவோ வசதியாக இருக்கும்மே தவிர வேற ஒன்றும்மில்லை.


செவ்வாய், செப்டம்பர் 06, 2011

தக்க தய்ய தய்ய தய்யா தய்யா. . . ஊட்டி மலை இரயில் முடிவு.



தக்க தய்ய தய்ய தய்யா தய்யா. . . தக்க தய்ய தய்ய தய்யா தய்யா . . . . ஊட்டி போக விருப்பப்படும் ஹனிமுன் ஜோடிகளாகட்டும், பெருசுகளாகட்டும், விட்டில் உள்ள குட்டீஸ்கள் முதல் பெருசுகள் வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி போக விருப்பப்படுவது இரயில் பயணத்தில் தான். டிக்கட் கிடைக்கவில்லை என்றாலும் நாள்கணக்கில் காத்திருந்து டிக்கட் பெற்றுக்கொண்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எத்தனை எத்தனையோ சுற்றுலா பயணிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உண்டு.

1800களில் பிரிட்டிஸ் அதிகாரிகள் குளு குளு ஊட்டியில் ஓய்வு எடுக்க செல்வதற்காகவும், இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே மலையேறவும் இந்த இருப்புபாதை அமைக்க முடிவு செய்தனர். பாதை அமைப்பதற்கான ஆய்வை செய்யுமாறு ஆங்கிலேய பொறியாளர் ஜே.எல்.எல். மோரன்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஆய்வு மேற்க்கொண்டு ரயில்பாதை அமைக்கலாம் என ஒப்புதல் தந்தார். 1854ல் பணிகள் தொடங்கின. ஆனால் மலைப்பாதை என்பதால் சிரமத்தை சந்தித்தனர். இதனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின் மீண்டும் ஆய்வு செய்து 108 வளைவுகள், 250 பாலங்கள் அமைக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. இதனை 11 ஆகஸ்ட் 1898ல் சென்னை கவர்னர் தொடங்கிவைத்து பயணம் செய்தார். அதன்பின் இந்த பாதை அதாவது 1909ல் ஊட்டி வரை பாதை நீட்டிக்கப்பட்டு இன்று வரை இந்த பாதையில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பிரபலம் வாய்ந்த டார்ஜிலிங், சிம்லா, மாதேரன் மலை ரயில்பாதையை போன்று இதற்க்கும் வரலாற்றில் இடம்முண்டு. அதோடு உலகில் பற்சக்கரத்தில் இயக்கப்படும் ரயில் சேவை இதுமட்டுமே. இந்த ரயில்பாதையைப்பற்றி இந்தியன் இரயில்வே நிர்வாகம் மற்றும் புதுடெல்லியில் உள்ள இரயில்வே அருங்காட்சியகம் பண்பாட்டு ரீதியான, பழமையான சின்னங்களை அங்கீகரிக்கும் ஐ.நாவின் யுனஸ்கோ அமைப்புக்கு தெரியப்படுத்த சிட்னியை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ தலைமையில் ஒரு குழு இந்த பாதையில் ஆய்வு மேற்க்கொண்டு உலக பாரம்பரிய சின்னம் என 2004ல் அறிவித்தது.

மேட்டுப்பாளையம் டூ ஊட்டிக்கு 49கி.மீ. இந்த தூரத்தை 4 மணிநேரம் பயணம் செய்து கடக்கிறது இந்த நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட இரயில். கரும் புகையை கக்கியபடி இது ஊர்ந்து செல்லும் அழகே தனி. இந்த 43கி.மீ தூர இடைவெளியில் பெருசுகள் கண்டுகளிக்க இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், வாண்டுகள் குதுகலிக்க மான், குரங்கு, யானை போன்ற விலங்குள், காதல் ஜோடிகளும், ஹனிமூன் தம்பதிகள் கிச் கிச் மூட்டிக்கொள்ள 16 இருட்டானா சுரங்கங்கள் அ குகைகளும் கொண்ட பாதையாக இந்த ரயில்பாதையுள்ளது. பாரம்பரியமான இந்த ரயில் நிலக்கரியில் இயக்கப்படுகிறது. மணிக்கு 13கி.மீ வேகத்தில் மலையேறும் இந்த இரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு இடையே 10 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

இந்த பாரம்பரியமான இரயிலை தான் நிறுத்தும் முடிவில் உள்ளது தென்னக இரயில்வே நிர்வாகம். ஏன் ?

தற்போது 3 பெட்டிகளை கொண்டு தினமும் இரண்டு முறை மட்டுமே இயக்கப்படும் இந்த இரயிலால் நிர்வாகத்துக்கு வருமானம் இல்லையாம். அதோடு இப்பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு இருப்பு பாதையில் பாறைகள் உருண்டு வந்து விழுந்துவிடுவதால் அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்படுகின்றன. இதனை சரி செய்வதற்க்கு நிர்வாகத்திற்க்கு அதிகமான சிரமமும், செலவும் ஏற்படுகிறதாம். அதோடு இரயிலை இயக்க தேவைப்படும் எரிவாயு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் இதனை நிறுத்தப்போவதாக அறிவிக்கவுள்ளது தென்னக ரயில்வே.

இன்றைய யுகத்தில் இந்திய அதிகார வர்க்கத்திற்க்கு பணம் தானே பிரதானம். கலையும், பண்பாடும், பாரம்பரியமும் எதற்க்கும் உதவாது என எண்ணி உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட இந்த இரயில் சேவையை நிறுத்த முயல்கின்றனர். அரசியல்வாதிகள் இதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குரலே இதை தடுக்க முடியும்.

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ஸ்பெக்ட்ராம் வழக்கை ஊத்தி மூட துடிக்கும் காங்கிரஸ். பின்னணி என்ன?



ஆரம்பம் முதலே இங்கு எழுதப்பட்ட ஸ்பெக்ட்ராம் பற்றிய கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டது, ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகள், ஊடகங்கள் குறிப்பிடுவது போல் ஒரு லட்சத்து எழபதாயிரம் கோடி என குறிப்பிடப்படுவது தவறு. இங்கு குறிப்பிடும் தொகையை விட குறைவாகத்தான் இருக்க வாய்ப்பு. அதோடு ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை கிளப்யிதற்க்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது. அவர்கள் திட்டமிட்டே திமுகவை அழிக்க இதனை மறைமுகமாக கிளறி விடுகிறார்கள், மத்திய காங்கிரஸ் அரசுக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ராம்மில் ஊழல் நடக்கவோ, அவர்களுக்கு பங்கு இல்லாமல் போகவோ வாய்ப்பேயில்லை, அதேபோல் திமுகவை அழிக்க காங்கிரஸ்சுடன் பெரும் பணக்காரர்கள், தமிழகத்தில் மாறன் பிரதர்ஸ் மற்றும் தமிழக பிராமண சக்திகள் ஒன்றிணைந்துள்ளது எனக்குறிப்பிட்டோம்.

ஏர்செல் விவகாரத்தில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் தயாநிதிமாறனுக்கு எதிராக வெளிவந்தது. அவரது பதவியை பலி கொடுக்க வைத்தது. அவரை சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. விசாரணை நடந்தது. அதிலிருந்து காத்துக்கொள்ள தனது பெரும் தொழிலதிபர் மூளையை பயன்படுத்துகிறார், அதேபோல் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பெரும் தொழிலதிபர்கள், காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் எனக்குறிப்பிட்டுயிருந்தோம். இந்த வழக்கின் பின்னணியில் உள்ளது காங்கிரஸ் தான் என்பதை பலமுறை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுயிருந்தோம். அவர்கள் நினைத்தால் மட்டுமே ஸ்பெக்ட்ராம் விவகாரம் அடங்கும் என்றிருந்தோம். அதேபோல் சி.பி.ஐ மத்திய காங்கிரஸ் அரசால் ஆட்டி வைக்கப்படுகிறது எனக்குறிப்பிட்டுயிருந்தோம்.


நாம் குறிப்பிட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. பட்டியாலியா நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு வரும் ஆ.ராசா, 2ஜியில் தவறே நடக்கவில்லை. இது பிரதமர்க்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்க்கும் தெரிந்தே நடந்தது. அவர்கள் அலோசனை படியே நடந்தது. அதனால் அவர்களை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்கிறார். கனிமொழியின் வழக்கறிஞர், கலைஞர் டிவி பணம் வந்த விவகாரத்திற்க்கும் ஸ்பெக்ட்ராம்க்கும் சம்மந்தம்மில்லை. அவருக்கும் நிர்வாகத்திற்க்கும் எந்த சம்மந்தமும்மில்லை என்றார். இப்படி காங்கிரஸ் தரப்புக்கு எதிராக குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், மாறன் குரூப்பை இதற்க்குள் இழுத்ததும் ஸ்பெக்ட்ராம் வழக்கு நடக்கிறதா இல்லையா என்பதே இப்போது சந்தேகமாக உள்ளது.

பிரதமர் மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்தால் ராசா எழுப்பும் கேள்விக்கு அவர்களாலோ, சி.பி.ஐயாலோ பதில் சொல்ல முடியாது. இதனால் குட்டு வெளிப்படும் என்பதோடு பூமாராங் போல் கிளறி விட்ட அந்த புதைக்குழிக்குள் தாங்களே சிக்க நேரிடும் என அரண்டு போன காங்கிரஸ் அவசர அவசரமாக இவ்விவகாரத்தை முடித்து வைக்க துடிக்கிறது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ்க்கு துணை நின்ற பெரும் நிறுவனங்கள், மாறன் பிரதர்ஸ் காங்கிரஸ்க்கு நெருக்கடி தர வழக்கு ஊத்தி  மூட வைக்கும் பணியை காங்கிரஸ் அரசாங்கம் செய்ய தொடங்கிவிட்டது.


அதற்கான முன்னோட்டம் தான், தொலை தொடர்பு ஆணையமான ட்ராய், ஸ்பெக்ட்ராம் ஏலத்தில் நட்டம்மே ஏற்படவேயில்லை எனக்கூறியது. அதேபோல் சி.பி.ஐ, தயாநிதிமாறன் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. அவர் நல்லவர் என சர்டிப்கெட் தந்தது. அதோடு இதை மேலும் பி.ஜே.பி கிளாறாமல்யிருக்க அவர்களது ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தவறு செய்துள்ளார்கள் அதை விசாரிக்க வேண்டும் எனக்கூறி கடிவாளம் போட்டுள்ளது.

ஆக காங்கிரஸ்க்கு, பெரும் தொழிலதிபர்களுக்கு, திமுகவை அழிக்க நினைக்கும் மற்ற சக்திகளுக்கு எதிராக ஸ்பெக்ட்ராம் விவகாரம் திரும்ப நினைத்ததும் இவ்வழக்கு சைலண்ட்டாக்கி வருகிறது காங்கிரஸ் அரசு. முடிவும் அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துயில்லை. இவ்விவகாரத்தில் இழப்பு என்னவோ திமுகவுக்கு தான். அது ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் இழந்த இமேஜ்ஜை சரி செய்துக்கொள்ள நீண்ட பல மாதங்களாகும்............ சரி....... கொள்ளையடிச்சதுக்காக அதையும் தாங்கிக்கதான் வேண்டும்.

தூக்குக்கு எதிரான தீர்மானத்திற்க்கு பின்னால்.




கடந்த 15ந்தேதி தமிழ் உணர்வாளர்களின் திராவிட எதிர்ப்பு அரசியல் கட்டுரை வெளியிட்டுயிருந்த மறுநாள் அதாவது ஆகஸ்ட் 16ந்தேதி முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் போடச்சொல்லி மத்திய உள்துறை முறைப்படி தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் முதல்வரான ஜெவுக்கு கிடைத்தது. அதுப்பற்றி 25ந்தேதி வரை வாய் திறக்காதவர் அவர் தந்த ஒப்புதலுக்கு பின் 25ந்தேதி இரவு வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர்க்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அதில், அவர்களை தூக்கில் போட்டு உடனடியாக தகவலை அரசுக்கு தெரியப்படுத்துங்கள் என்று. இத்தகவல் தெரிந்தும் தமிழ் உணர்வாளர்கள் கொதித்தார்கள் ஆனால் முதல்வருக்கு எதிராக வாய்திறக்கவில்லை. கல்லூரி மாணவ-மாணவிகள், வழக்கறிஞர்கள், பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தினார்கள். ராமதாஸ், வை.கோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், சீமான் போன்றோர் அவர்களை காப்பாற்ற கோரி முதல்வர்க்கு கோரிக்கை விடுத்தார்கள். அப்படியும் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை.

28ந்தேதி இரவு காஞ்சிபுரத்தில் தோழி செங்கொடி தீ குளித்து திறந்தார். அப்போதும் தமிழ் உணர்வாளர்கள் அரசுக்கு எதிராக யாரும்மே மூச்கூட விடவில்லை. அம்மா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கெஞ்சினார்கள். 29ந்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் எனக்;கு அந்த அதிகாரம்மில்லை என அறிவித்த முதல்வர். இது கருணாநிதி செய்த சதியால் வந்த விணை என அரசியல் பேசினார். அப்போதும் அம்மா அவர்களை காப்பாற்ற உங'களிடம் அதிகாரம்முள்ளது அதற்க்கு முன் உதாரணங்கள் உள்ளது என்றார்களே தவிர வேறு ஒரு வார்த்தை கூட அவரைப்பற்றி கடுமையாக பேசவில்லை. முன்னால் முதல்வரான கலைஞர் கருணாநிதி, முதல்வருக்கு அதிகாரம்முள்ளது அவரால் முடியும் என அறிக்கை விட்டார். எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த் ஏதோ வேண்டா வெறுப்பாக அறிக்கை விட்டார். பல தலைவர்கள் தொடர்ந்து அறிக்கை விட்டார்கள். அதேநாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 30ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்ப்பட்டது.


29ந்தேதி இரவு தலைமைசெயலகம், போயஸ்கார்டன் பிஸி. வழக்கில் நிச்சயம் தடை என கிடைக்கும் என அறிவித்தார்கள் அவரது நலன் விரும்பிகள். இதனை ஆலோசித்த ஜெ நாம் இந்த நேரத்தில் தீர்மானம் இயற்றினால் தமிழர்களுக்கு ஐஸ் வைத்ததுபோலகிவிடும், நாம் தான் தூக்குதண்டனையை நிறுத்தியது போலகிவிடும் என யோசித்தே 30ந்தேதி ஜெ சட்டமன்றத்தில், தமிழக மக்களின் விருப்பத்திற்க்கினங்க ( இந்த இடத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் அப்போதும் அவரின் விருப்பமல்ல ) மூவரின் தூக்கை மத்தியரசு நிறுத்த வேண்டும்மென தீர்மானம் கொண்டு வந்தார். அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, கான்சிலோஸ், சௌத்ரி, வைகை, வை.கோ, தடா.சந்திரசேகர் ஆகியோர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கில் ஆஜராகி தூக்கு தண்டனையை 8 வார காலத்திற்க்கு இடைக்கால தடை பெற்று தந்தார்கள்.

இது ஒருபுறம்மிருக்கட்டும்.

சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதை ஒரு நாளிதழ் முதல்வர் ஜெவுக்கு சிறப்பு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்மானம் குப்பை தொட்டியில் போடதான் பயன்படுமே தவிர அவர்களை காப்பாற்ற பயன்படாது என்பது அரசியல் சட்டம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். நன்றி தெரிவித்து  செய்தி வெளியிட்ட செய்தி ஆசிரியர்களுக்கும் தெரியும். காரணம் தூக்குதண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினால் செல்லாது. முதல்வர் தனது அமைச்சரவையை கூட்டி தீர்மானம் இயற்றி அதை கவர்னரிடம் தந்தால் மட்டுமே தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முடியும் இதுதான் நடைமுறை. இப்படித்தான் இதற்க்கு முன் சிலர் தமிழகத்தில் தூக்குதண்டனையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்கள். இதை இன்று போராட்ட களத்தில்வுள்ள தலைவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பொதுக்கூட்டம் ஒன்றில் பேரா.கிலானி இதை வெளிப்படுத்திவிட்டு போய்வுள்ளார்.

அதனால் தோழர்களே ஜெயலலிதாவிடம் போய் கூறுங்கள், சட்டமன்ற தீர்மானத்தை போல அமைச்சரவை தீர்மானம் ஒன்றை கொண்டு வாருங்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று. ஈழ விவகாரத்தில் கலைஞர்க்கு ஒரு பார்வை ஜெயலலிதாவுக்கு ஒரு பார்வை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இரண்டு பேரும் ஒரே தராசில் வைக்க வேண்டியவர்கள் தான். பல விவகாரங்களில் கலைஞரை நம்பலாம். ஜெயலலிதா நம்ப தகுந்தவரல்ல.


ஆனால் நீங்கள் கடந்த காலங்களில் கலைஞரிடம் காட்டிய எதிர்ப்பு வேகத்தை ஜெ விடம் காட்ட மறுக்கிறீர்களே ஏன்?. பயமா இல்லை பக்தியா ? பயம் என்றால் களத்திற்க்கு வராதீர்கள். பக்தி என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள் நாங்கள் தமிழர்கள் தான் ஆனால் பார்ப்பனியத்துக்கு கொடி பிடிக்கும் தமிழர்கள் என்று. பார்ப்பனர்களான சோ, சுப்பிரமணியசாமி, குருமூர்த்தி, வைத்தியநாதன் போன்றவர்கள் வெளிப்படையாக அவாளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் தமிழ் உணர்வு, திராவிட அரசியல் எனச்சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு ஜெ வுக்கு கவாடி தூக்குகிறிர்களே நியாயமா?.

இல்லை நாங்கள் செய்தது இராஜதந்திரம், அதிகாரம் உள்ளவரிடம் அடங்கிபோனதால் தான் நமக்கு சாதகமாக அவர் மாறுகிறார் எனச்சொன்னால் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த திமுக அரசாங்கத்திடம் இப்படி நடந்துகொள்ளவில்லையே அது ஏன்? எதனால்? உங்களால் கூற முடியாது காரணம் பார்ப்பணிய பக்தி. வாழ்க உங்கள் அரசியல்.