திங்கள், பிப்ரவரி 15, 2016

ஊழல் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள மிரண்டு ஓடிய எம்.ஜி.ஆர்.


தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பொற்காலம், ஏழைகளுக்காக ஆட்சி நடத்தியவர் என புலங்காகிதம் அடைபவர்கள் பலர். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தும், அவரே முன்னின்று நடத்திய ஊழல்கள் பல. அவைகளை திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள். ஆதாரபூர்வமாக பல ஊழல்கள் வெளிவந்தாலும் அவை அப்படிறே மறக்கடிக்கப்பட்டன. புத்த பிரானின் வாரிசாக அவரை கட்டமைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு எம்.ஜி.ஆர் முகமுடியை கிழிக்கிறது. இன்றைய இளைய சமூகம் அறிந்துக்கொள்ள......

1982 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி. அந்த ஆட்சியில் ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்தார்கள். அந்த அமைச்சரவையில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக காளிமுத்து இருந்தார். தனது வேளாண்மைதுறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு 82-83களில் வேளாண்மை துறை நிதியை வங்கிகளில் முதலீடு செய்கிறார்.  

காளிமுத்துவின் சிபாரிசின் பேரில் அவரது நண்பர்கள் ராபின் மெயின், சூரியக்குமார், சாகுல் அமீது, சோமசுந்தரம், பசில்சாம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெற்றவர்கள் வாகனங்கள் வாங்கிவிட்டோம் என ஆவணங்களை வங்கிகளில் சமர்பித்துள்ளனர். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல 15 லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்கியுள்ளனர். கடன் பெற்றவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைய செலுத்தவில்லை. வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்றபோது, அவர்கள் தந்த ஆவணங்கள் போலி என தெரியவந்தது வங்கி அதிகாரிகளுக்கு. வங்கிகள் சார்பில் மத்திய புலனாய்வு துறையான சிபிஐயிடம் புகார் செய்தனர்.
 
1984ல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கியது சிபிஐ. முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அவரது உதவியாளர் மாணிக்கம், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 6 பேர், வாகன மதிப்பீட்டாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 32 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மோசடி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

1985 அக்டோபர் மாதம் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்துவின் நண்பர் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இப்படி ஒரு புகார் கிளம்ப காரணம், அப்போது அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா தான் என குற்றச்சாட்டினார் காளிமுத்து. 

இரண்டாவது முறையாக கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் நியமித்த தருனம்மது. அதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதை பயன்படுத்திக்கொண்ட காளிமுத்து, தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவுக்கொண்டு வர ஜெயலலிதா மத்திய காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார், அதன் ஒரு பகுதியாக தான் அதிமுக மீது குற்றச்சாட்டுகளை சுமத்த இந்த பிரச்சனை கிளப்பப்பட்டது, இதற்கு பின்னணியில் இருந்து தகவல்களை எடுத்து தந்தவர் ஜெயலலிதா தான் என்றும், மேலும் இந்த வழக்கு தொடர்பாக னது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்ற தகவலை கூறினார். 


இதைக்கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காளிமுத்து என இருவரையும் வரவைத்து விசாரித்தார். கற்பனையாக காளிமுத்து குற்றச்சாட்டுகளை சொல்லிக்கிட்டு இருக்கார் என மறுத்துள்ளார் ஜெயலலிதா. நான் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்றே என்னை இந்த விவகாரத்தில் மாட்டவைக்க திட்டுள்ளார் ஜெயலலிதா என்றுள்ளார். 

இந்த பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் வேறு பல பிரச்சனைகள் மற்றும் அமைச்சர் காளிமுத்து மீதான ஊழல், மோசடி வழக்கால் எதிர்கட்சியாக இருந்த திமுகவின் நெருக்கடியால் இதிலிருந்து தப்பிக்க 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தந்தனர். இதனால் இருவரின் மோதல் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது.  

அந்த நேரம், சிபிஐ தனக்கு எதிராக சிறையில் உள்ள ராபின்மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் வந்து கதறினார் காளிமுத்து. காளிமுத்துவுக்கு குறிவைப்பவர்கள், அடுத்து தன்னிடம் வருவார்கள் என தெரிந்து, தன்னையும், தனது அமைச்சரவை சகாவை காப்பாற்ற முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி ராபின்மெயின் அடைக்கப்பட்டுயிருந்த எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். ராபின்மெயினை எம்.ஜி.ஆர் மிரட்டியதாக எதிர்கட்சிகள் புகார் கூறின. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசிடம் பேசி அந்த லஞ்ச வழக்கில் இருந்து தன்னை மட்டும் காத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

1984-ல் சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் 1987-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். மீண்டும் அதிமுகவுக்கே வந்தார். 2001-ல் சட்டப்பேரவை சபாநாயகராக்கினார் ஜெயலலிதா. 

2005-ல் ராபின்மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத்தேவையில்லை என முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக பின்னர் காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.

 1987ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டபின் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016 ஜனவரி 29ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டதால் தற்போது உயிருடன் உள்ள 16 பேர் மீது வழக்கு நடைபெற்றது. 16 பேரில் 11 பேர் நிரபராதிகள், 5 பேர் குற்றவாளிகள் என சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி தீர்ப்பு வழங்கினார். காளிமுத்து நண்பர் ராபின் மெயின், சூரியக்குமார், சோமசுந்தரம், சாகுல் அமீது, பாசில் சாம் ஆகியோர் 7 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை தண்டனை பெற்றுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 65 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

லஞ்சம் தரதா மக்கள் மீதும் வழக்கு போட சட்டம் வரலாம்.





தேர்தல் வந்துவிட்டால் சின்ன சின்ன அரசியல் கட்சிகள் பெரிய கட்சிகளை சீட் கேட்டும், பணம் கேட்டு மறைமுகமாக, நேரடியாக மிரட்டுவதை போல தேர்தல் நெருக்கத்தில் அரசு ஊழியர் சங்கங்களும் தங்களது 18 அம்ச கோரிக்கைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு வந்துவிடுகிறார்கள்.

இந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் இறுதிக்காலக்கட்டத்தில் இப்போது எல்லா துறை அரசு ஊழியர்களும் தினம், தினம் தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நானும் கடந்த அரசியல் தெரிந்த இந்த 25 ஆண்டுகளாக காண்பது, எப்போது போராட்டம் நடத்தினாலும் 18 அம்ச கோரிக்கை, 15 கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என போராடுகிறார்கள். 90களில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் இன்று ஒய்வு பெற்று இருப்பார்கள். ஆனால் இன்றும் அந்த கோரிக்கையின் எண்ணிக்கை மட்டும் மாறாமல் இருப்பது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

அரியணையில் ஏறும் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் காலங்களில் இவர்களது போராட்டத்தால் படிந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் கேட்பதை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி தந்துவிடுகிறார்கள். ஆட்சியில் இருக்கும் கட்சி ஒருபடி மேலே போய், அவர்களுக்கு டி.ஏ ஏற்றுவது, சம்பளம் உயர்த்துவது, படி உயர்த்துவது என ஏதோ ஒன்றை செய்து தந்துவிடுகிறது.

ஆனால், தமிழகத்தில் ஒரு ஆபத்தான நடைமுறையை தேர்தலுக்காக ஜெ அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு சாதாகமாக நிறைவேற்றியுள்ளது. அது, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக பொதுமக்ககள் புகார் தந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு அரசாரணையை வெளியிட்டு மக்கள் மடையர்கள் என்பதை காட்டியுள்ளது தமிழகத்தை ஆளும் ஜெ அரசாங்கம்.

அரசு என்பது மக்களுக்கானது. மக்கள் தான் இங்கு எஜமானர்கள். அந்த எஜமானர்க்கு வேலை செய்ய வந்த வேலைக்காரர்கள் தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும். இதை நான் கொச்சை மொழியில் சொல்கிறேன். சட்டத்தை இயற்றியவர்கள், சட்ட புத்தகத்தில் டீசண்டாக தெளிவாக மக்களுக்காக தான் சட்டம், அரசாங்கம் எல்லாம் என்கிறது.

அப்படியிருக்க லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை கைது செய்து, சிறையில் அடைக்காமல்  அதற்கு என் அனுமதி பெற வேண்டும் என்கிறது அரசாங்கம். எந்த அரசாங்கம் உடனே அனுமதி தரும். இன்று ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதே அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகளை காப்பாற்றுவது அதிகாரிகள். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நகையும், சதையும் போன்றவர்கள். இந்த ஒற்றுமை ஆட்சி செய்யமட்டும்மில்லை, கொள்ளையடிப்பதற்காகவும் தான்.

லஞ்ச ஒழிப்புத்துறை, கைது, வழக்கு, விசாரணை, துறை ரீதியான நடவடிக்கை, இடைநீக்கம் என இருந்தும் எதற்கும் பயப்படாமல் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஒரு நல்ல ஆட்சியாளர்கள் என்பவர்கள் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு லஞ்சத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தவறு செய்வதையே குறிக்கோளாக கொண்ட பெரும்பான்மை அரசு ஊழியர்களுக்கு சாதகமாக ஒரு அரசாணை என்றால், இனி அவர்கள் எதற்கும் கவலைப்படாமல் லஞ்சம் வாங்குவார்கள்.

இது தேர்தலுக்காக அரசு ஊழியர்களின் வாக்குகளை மொத்தமாக வாங்க போடப்பட்ட அரசாணை. பின்னால் இதை ரத்து செய்யலாம் என்கிறார்கள். அரசாணை போட்டுவிட்டார்கள். அரசியல் கட்சிகள் இதற்கு குரல் கொடுக்காது, காரணம் அவர்களுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு தேவை. லஞ்சத்தை ஒழிக்க கூட்டணி சேர்ந்தோம் என்கிற மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் கூட இதற்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல்வாதிகள் அப்படித்தான். பேச்சுவேறு, செயல்வேறு என்பதை காட்டிவிட்டார்கள். ஆனால், ஊழலுக்காக குரல் கொடுப்பவர்கள், லஞ்சத்தை எதிர்த்து இயக்கம் நடத்துபவர்கள் கூட இதை வேடிக்கை பார்ப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது.

இன்று நாம் இதை எதிர்க்காமல் போனால் நாளை, லஞ்சம் தரவில்லை என பொதுமக்கள் மீது வழக்கு போட அரசாணை போடுவார்கள், சட்டம் இயற்றுவார்கள். ஏன் எனில் இங்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் ஜனநாயக வில்லன்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

சனி, பிப்ரவரி 06, 2016

தமிழகத்தை கேலி பொருளாக்கியது நாங்களே - ஸ்டிக்கர் அரசாங்கம் பெருமிதம்.






 இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தை விட கல்வியில், பொருளாதாரத்தில், வாழ்வாதாரத்தில் தமிழகம் முன்னேறிய மாநிலம் என்கிறது பல புள்ளி விவரங்கள். சாதி கட்டமைப்பில் கூட மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் நாம் பரவாயில்லை என்கிறார்கள். என்ன தான் வளர்ச்சியடைந்தாலும் அரசியலை நோக்கும் போது ஒரு குறிப்பிட்ட சாரரின் மூளை வளரவேயில்லையோ என தோன்றுகிறது. அந்த குறிப்பிட்ட சாரார் அதிமுகவினர் என நான் சொல்லாமல் நீங்கள் புரிந்துக்கொண்டால் நிச்சயம் நீங்கள் அதிமுக தொண்டரல்ல.


அதிமுகவினர் அடிமைகளை விட மிகமிக மோசமானவர்களாக நிற்கிறார்கள். அடிமையாக இருப்பவர்களுக்கு கூட அறிவு உண்டு. ஆனால், அதிமுகவில் இருப்பவர்கள் அறிவற்ற ஒரு கூட்டமாக இருப்பதை தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

யாருக்கு வேண்டுமானாலும் பதவி கிடைக்கும் ஒரு கட்சி எதுவென்றால் அது அதிமுக. உனக்கு எந்த தககுதியும் தேவையில்லை. கட்சி தலைமை சொன்னதை செய்யும் ஏவல்காரராக இருந்தால் போதும். பணம் செலவு செய்து அவர்களே வெற்றி பெற வைப்பார்கள். மற்ற கட்சிகளை போல சம்பாதிக்க முடியாது. சம்பாதிப்பதை தலைமைக்கு தந்துவிட வேண்டும். அவர்கள் தருவதை வாங்கிக்கொள்ள வேண்டும். பங்குயெல்லாம் சரியாக வந்துவிடும். அந்த ஒப்பந்தத்தில் இருந்து மீறினால் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் டம்மியாக்கப்படுவார்.

எவ்வளவு உயரத்துக்கு போனாலும் நான் உங்கள் விசுவாசி என்பதை காட்ட ஹெலிகாப்டரை பார்த்து வணங்க வேண்டும், கார் சக்கரத்தை காலாக நினைத்து விழுந்து கும்பிட வேண்டும். நிகழ்ச்சிக்கு வர இன்னும் 6 மணி நேரம் இருக்கிறது என்றாலும் மணிக்கணக்காக வெயில், மழை என பார்க்காமல் நிற்க வேண்டும். இதுமட்டும்மல்ல வித்தியாசமாக, விதவிதமாக கெட்ட வார்த்தைகளால் எதிர்கட்சிகளை, குறிப்பாக கலைஞரை, ஸ்டாலினை வசைப்பாட தெரிந்திருக்க வேண்டும். பொதுயிடம், சபை என எந்த நாகரீகமும் பார்க்ககூடாது.

கூடு, சொரணை எதுவும்மற்ற இயந்திரமாக இருக்க வேண்டும் என தலைமை எதிர்பார்க்கும். அதன்படி நடந்துக்கொண்டால் கட்சியில் பதவி நிலைக்கும். இது தெரிந்தே அதிமுகவினர் தங்களை அப்படியே உருமாற்றிக்கொள்கிறார்கள். பதவிக்காக ............. தின்னச்சொன்னாலும் தின்பார்களோ என்னவோ.......... இதை எழுதும் போது எனக்கு அந்த கட்சி தலைமை பதவியில் உள்ளவர் மீது கோபம் தான் வருகிறது. கட்சி தொண்டர்களுக்கு பதவி என்கிற ஆசையை காட்டி அறிவில்லாத கூட்டமாக மாற்றி வைத்துள்ளார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரும் அப்படித்தான்.  ஜெ உச்சத்தில் உள்ளார் அவ்வளவே.

ஜெயலலிதா கொள்ளையடித்துவிட்டு ஜெயிலுக்கு போய் பிணையில் வெளியே வந்ததற்கு ஊரெல்லாம் திருவிழா நடத்தினார்கள். சென்னை மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மாநிலத்தின் பிற பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிய நிவாரண பொருட்களில் “அம்மா“ ஸ்டிக்கரை ஒட்டினார்கள். அடுத்தவன் பிள்ளைக்கு நான் தான் தகப்பன் என்பதை போல. இதை கூட கட்சியின் விளம்பரத்துக்காக செய்தார்கள் என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்சி சார்பில் ஏழைகளுக்கு நடத்தி வைத்த திருமணத்தில் மணமக்கள் தலையில் ஜெ படம் போட்ட கிரீடம் வைப்பது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தலையில் மட்டும்மல்ல நெஞ்சிலும் வட்டமாக ஜெ படத்தை குத்தி வைத்துள்ளார்கள். இந்த மாதிரியான கேவலம் தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் செய்ய துணியாது. இப்படி சொந்த கட்சியினரை முட்டாளாக்கி வைத்திருப்பதை செய்தி நிறுவனங்களும் வேடிக்கை பார்ப்பது தான் விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

அடுத்ததாக இப்போது அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார் முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா. எவ்வளவு கேவலம்.

இந்த நீதிமன்றம் வித்தியாசமான பல வழக்குகளை சந்தித்துயிருக்கிறது என பராசக்தி வசனத்தை போல இந்த தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக இதுப்போன்ற வித்தியாசமான நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அடுத்தவர் எள்ளி நகையாடும் வகையில் அதிமுகவினர் செய்யும் இந்த செயல்களை கண்டு சொந்த மாநில மக்கள் மட்டும்மல்ல பக்கத்து மாநில மக்கள் கூட கைகொட்டி சிரிக்கிறார்கள். சிரிக்கவில்லை என சொல்பவருக்கு ஒரு உதாரணம். 


சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு இடைத்தேர்தல். மலேசியாவில் வெளிவரும் தமிழ் ஒரு பிரபலமான செய்திதாளின் செய்தியாளர் செய்தி சேகரிக்க பெரிய செட்டப்போடு தொகுதிக்கு வந்து ஒரு லாட்ஜ்ல் ரூம் போட்டு தங்கினார். வந்தவர் பிரச்சாரம், தலைவர்கள் பேச்சு என எதையும் எடுக்கவில்லை. அதற்கு பதில் ஆரத்தி எடுப்பது, முகத்தில் படம் வரைந்திருக்கும் தீவிர தொண்டர், தலைவர்கள் போல் வேடம் போட்டு ஊர்வலம் வரும் தொண்டர்கள், மேடைப்போட்டு குத்தாட்டம் போடுவது போன்றவற்றை தான் தினமும் விதம் விதமாக செய்தியாக்கினார். அவரிடம் கேட்டபோது, அங்க படிக்கப்போறது தமிழன் தான். தமிழக தேர்தல் காமெடியை ரசிக்க ஒரு பெரிய கூட்டம்மே அங்கயிருக்கு சார். தமிழ்நாட்டு அரசியலைப்பத்தி பேசனா அவ்வளவு கேவலமா பேசுவாங்க. இதெல்லாம் அங்க புதுசு. எங்களுக்கு அங்க ஆங்கில பேப்பரும் இருக்கு. அதலயும் இந்த செய்தி போடுவாங்க. இப்படியெல்லாம்மா தமிழ்நாட்ல அரசியல் நடக்குதுன்னு அந்த நாட்டுக்காரங்க கேட்பாங்க சார் என்றார். ( பத்து நாள் தங்கியதற்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்திருந்தார். )

இப்படி பிற மாநிலங்கள் மட்டும்மல்ல பிற நாடுகளிலும் கேலியாக பார்க்கும் மக்களாக தமிழக மக்களை மாற்றியது எங்கள் சாதனை என ஸ்டிக்கர் அரசாங்கம் விளம்பரப்படுத்தாமல் இருந்தால் சரி.