ஞாயிறு, டிசம்பர் 30, 2012

வேகத்தில் விவேகமில்லா இளைய சமுதாயம்.



இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வீசப்பட்ட மாணவிக்கு ஆதரவாக உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என மாணவ சமுதாயம் திரண்டுள்ளது. பாராட்ட வேண்டியது. மாணவியின் கொடூர மரணம் கண்டிக்க தக்கது. 

நீதி கேட்டு நடு இரவில் பிரதமர் இல்லம் முற்றுகை, பாராளமன்றம் முற்றுகை, ரயில் மறியல், காவலர்களுடன் மோதல் என தினம் தினம் நடு இரவிலும் பிரச்சனை செய்கிறார்கள். உடடியாக பாலியல் குற்றங்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க சட்ட திருத்தம் செய்யுங்கள் என்கிறார்கள். 

இப்படி கேட்பது முட்டாள் தனமாக இல்லையா ?.

இதுயென்ன மீடியாவ நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒளிபரப்ப. பாலியல் குற்றத்துக்கு தூக்குதண்டனை, மரண தண்டனை தாருங்கள் என கோஷமிட்டால் உடனே தந்துவிட முடியாது. சட்டமியற்ற வேண்டும். சட்டம் இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வர பல படிகள் உண்டு. சட்டம்மியற்ற கமிட்டியுண்டு. அந்த கமிட்டி சட்டவிதிகளை உருவாக்க வேண்டும், அதன்பின் அதில் உள்ள நிறை குறைகள் பற்றி விவாதம் செய்ய வேண்டும். மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். பாராளமன்றத்தன் இரு அவைகளில் அவை விவாதம் செய்ய வேண்டும் அதன்பின் அது சட்டமாக்கப்பட வேண்டும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்படி எத்தனையோ நடை முறைகள் உண்டு.

ஆனால், இன்றே செய், இப்போதே செய் என்பது அவசரத்தின் கோலம். இளைய சமுதாயத்தினருக்கு உணர்ச்சி வேகத்தில் செயல்படுவார்கள். அதனை ஒருமை படுத்த வேண்டியது வயது முதிர்ந்தவர்களின் கடமை. ஆனால் இந்திய தேசத்தில் அதில் லாபம் பார்க்கவே துடிக்கிறார்கள் அரசியல் கட்சியினர். 



உணர்ச்சி கொந்தளிப்பில் நடக்கும் இந்த போராட்த்தில் மட்டுமல்ல கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டம் அன்னஹசாரே, பாபாராம்தேவ் தலைமையில் நடத்தினார்கள். அப்போது நாட்டின் தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தார்கள். சில வாரம் டெல்லியை பரபரப்பாக வைத்திருந்தார்கள். ஊழலை ஒழிக்க உடனே சட்டம் கொண்டு வரவேண்டும், கறுப்பு பணத்தை மீட்டு வர இப்போதே சட்டமியற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து போராடினார்கள்.

இப்போதே நடக்க வேண்டும் என எண்ணி போராடுவது முட்டாள்தனமானது. போராட்டத்தை தூண்டி விடுபவர்களுக்கு வேண்டுமானால் இப்படி செய்வது நன்றாக இருக்கும். உணர்ச்சி வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது இளைய சமுதாயத்துக்கு நல்லதல்ல. 


தீர்ப்பை எழுதிவிட்டு அதை நடைமுறைப்படுத்துங்கள் என அரசாங்கத்தை இளைய சமுதாயம் நெருக்குவது அழகல்ல. ஒரு பிரச்சனைக்கு குறிப்பிட்ட கால அளவு தர வேண்டும். அதனை அரசாங்கம் செய்யாவிட்டால் போராட்டம்மென்ன அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் இளையோர்களே. 

வேகம் விவேகமல்ல என்பது சாலை பயணத்துக்கு மட்டுமல்ல........... வாழ்க்கை பயணத்துக்கும் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். 

சனி, டிசம்பர் 29, 2012

என் தேச பெண்ணே உன்னை வணங்குகிறேன்.


சுதந்தரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்து விட்டது. என் தேசத்தில் பாலியல் பலாத்காரம் மட்டும் நின்ற பாடில்லை. ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தபோது நடந்த பாலியல் குற்றங்களை விட சுதந்தரத்துக்கு பின் தான் எம் தேச பெண்கள் பாலியல் வன்முறைக்கு அதிகம் பலியாகியுள்ளார்கள், இறையாகியுள்ளார்கள். சுதந்திரமாக கற்பழிக்கவும் சுதந்திரம் பெற்று தந்தார்கள் என எண்ணிவிட்டார்கள் போல.

பல ஆண்டுகளாக எம் தேசத்தின் மலைகிராமங்களில் உள்ள பழங்குடி பெண்களை பெரு நிறுவனங்களை சேர்ந்த பணியாட்களும், சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களும், காஷ்மீர் – வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையும், இந்தியாவின் ‘கண்ணியம்மிக்க’ ராணுவத்தினரும் நடத்திய பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகம். தங்களது இச்சைகள் தீர்ந்ததும் எம் தேச பெண்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டும், அதிகார வர்கத்தினரின் துப்பாக்கிகளுக்கு இறையாகி கிடந்தது அதிகம். மானத்துக்கு பயந்து வெளியே சொல்லாமல் மனதில் பாரத்தோடு வாழ்பவர்கள் அதை விட அநேகம்.

எம் தேச பெண்கள் பாலியல்க்கு பலியாவதை எதிர்த்து எத்தனை எத்தனையோ சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். அது பத்தோடு பதினோரு செய்தியாக செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் பதிவாகின. போராடியவர்களாலும் சாதிக்க முடியவில்லை. சட்டமன்றங்களிலும், பாராளமன்றத்திலும் அமர்ந்துள்ள பெண் பிரதிநிதிகளாளும் உரிமைகளை, பாதுகாப்பை உருவாக்கி தர முடியவில்லை. அவர்கள் எல்லோரும் சாதிக்க முடியாததை நீ சாதித்துவிட்டாய்.

இன்று பாலியல் பிரச்சனை எத்தனை பெரியது என்பதை என் தேசத்துக்கு புரிய வைத்தது உன் மீதான பாலியல் வன்முறையும், உன் இறப்பும்மே. இந்த உலகத்தில் நீ சந்தோஷமாக வாழ எவ்வளவோ கனவுகள் கண்டுயிருப்பாய். உன் கனவுகள் அந்த பேருந்தில் வைத்து பொசுக்கிவிட்டார்கள். அந்த மிருகங்கள் உன் உறுப்பை சிதைக்கும்போதே உன் கனவுகளை  சிதைந்துவிட்டார்கள் என்பதை இயற்கை அறிந்திருந்தது.

ஆனாலும் நீ மரணிக்கவில்லை. உன் நிலை இது நாள் வரை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், இணையத்திலும் மூழ்கி வீர வசனம் பேசிக்கொண்டுயிருந்த இளைய சமுதாயத்தை தட்டி எழுப்ப வைத்துவிட்டது. நடு சாமத்தில் நாட்டை ஆள்பவர்களை வீதிக்கு வர வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தது.


பன்னிரெண்டு நாள் உயிருக்கு போராடி இறுதியில் உன் சுவாசத்தை நிறுத்திக்கொண்ட என் தோழியே, சகோதரியே உன் உறுப்பை சிதைத்தவன்களின் உறுப்பை சிதைக்க வேண்டும். அவன்கள் அதைக்கண்டு தன் வாழ்நாள் முழுக்க அழ வேண்டும். அதுவே அவர்களுக்கு தரும் தண்டனை. இனி பாலியல் வன்முறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாக அமையும்.

இந்த கனவு நீ காணாததாக இருக்கலாம் ஆனால் என் தேசம் அந்த கனவை நனவாக்க வேண்டும் என்கிறது. அந்த கனவை உன் உயிரை தந்து உருவாக்கியுள்ளாய் அதற்காக உன்னை வணங்குகிறேன்.

வியாழன், டிசம்பர் 27, 2012

எதிரியால் புலி என வர்ணிக்கப்பட்ட சச்சின்



1973 ஏப்ரல் 27ந்தேதி மும்பையில் பந்தரா பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் கிரிக்கெட் உலகின் நட்சத்திரம் சச்சின். பிரபல இந்திப்பட இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ரசிகரான அவர் தன் பேரன்க்கு சச்சின் என பெயர் வைத்தார்.

சச்சின் அப்பா பேராசிரியர். அவரது அம்மா ஆயுள் காப்பிட்டு நிறுவன ஊழியர். படித்தது கிரிக்கெட்டுக்கு புகழ் பெற்ற சாரதா ஆஸ்ரமம் பள்ளியில். பள்ளி தேர்வில் ஆங்கிலத்தில் தோல்வியை தழுவினார். விளையாட்டில் சுட்டியாக இருந்தார். கிரிக்கெட் மீதான வெறியால் பள்ளி படிப்போடு சச்சினின் நின்றுவிட்டார்.

நட்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குபவர் சச்சின். தன் வீட்டு வாட்ச்மேன் மகன் ரமேஷ் தான் சச்சினின் நெருங்கிய நண்பர். சச்சின் உதவியாளர் உட்பட எல்லாம் அவரே.

டென்னிஸ் விளையாட்டு தான் சச்சினுக்கு பிடித்த விளையாட்டு. டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சுவீடன் நாட்டை சேர்ந்த ஜான் மெக்கன்ட்ரோ தான் அவரது ஆஸ்தான ஹீரோ. அவர் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தபின் தான் சச்சின்க்கு கிரிக்கெட் மீது காதல் தொடங்கியது. அதன்பின் எந்த பொருள் கிடைத்தாலும் அது பந்தாக, மட்டையாக மாறியது. சச்சின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர். சச்சினுக்கு கிரிக்கெட் உலகில் ஆதர்ச நட்சத்திரங்கள் கவாஸ்கர், கபில்தேவ். 

சச்சினின் சகோதரர் அஜித் தான் சச்சினுக்கு உந்து சக்தியாக இருந்தவர். 10 வயதிலேயே வயதுக்கு மீறி விளையாட்டில் புலியாக திகழ்ந்தார். இவரின் போட்டி திறமையை கண்டு சச்சினின் 13 வது வயதில் அதாவது 1986ல் மும்பை மிட்டே என்ற பத்திரிக்கை அவரை பேட்டி கண்டது. வெகுவாக அவரை புகழ்ந்தது.

இந்தியாவில் பம்பாய் கிரிக்கெட் சங்கம் பிரபலமான சங்கம். அந்த சங்கம் வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கும் விருது பெரியது. தனது 14வது வயதில் பலப்பல போட்டிகளில் கலந்துக்கொண்டு மும்பை கிரிக்கெட் ஆர்வலர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். அந்த ஆண்டுக்கான இளம் வீரர் என்ற விருதை எதிர்பார்த்தார். ஆனால் இவரை விட திறமை குறைவான ஒருவருக்கு கிடைத்துவிட்டது. இது சச்சினை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. பி.சி.ஏ பெரும் சர்ச்சையில் சிக்கியது.

அப்போது கிரிக்கெட் உலகில் பிரபல நட்சத்திரமாக இருந்த கவாஸ்கர் சச்சினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நீ மன வேதனையில் இருப்பாய் என்பதை நான் அறிவேன். பட்டம், பதவி, பதக்கம் பக்கம் உன் கவனத்தை திருப்பாதே. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதை சொல்படி வாழ கற்றுக்கொள் எனக்குறிப்பிட்டுயிருந்தார். தன் வாழ்க்கையில் அதை அன்று முதல் கடைப்பிடிக்க தொடங்கினார் சச்சின்.

ஸ்டார் கிரிக்கெட் க்ளப் சார்பாக 1988ல் கிரிக்கெட் விளையாட முதன் முறையாக இங்கிலாந்து சென்றார் சச்சின்.

14 வயதில் சச்சினின் திறமை, விளையாடும் முறை போன்றவை பிரபலமான, பழமையான இந்திய கிரிக்கெட் க்ளப்பின் தலைவர் ராஜ்சிங்கை கவர்ந்தது. இதனால் சங்க விதிமுறைகளை தளர்த்தி அந்த பாரம்பரிய க்ளப்பில் உறுப்பினராக்கி சச்சின் திறமைகளை வெளிக்கொண்டு வர உந்து சக்தியாக இருந்தார் ராஜ்சிங். 


1989ல் டெஸ்ட் போட்டிக்காக ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் சச்சின்க்கு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது அவரது வயது 16. இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடினார். புhகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், மீடியாக்கள் கூட இந்தியாவை விரோதமாக தான் பார்க்கும். சச்சினின் திறமையான விளையாட்டை கண்ட பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்று, இதே ஒரு புலி வந்துவிட்டது என பாராட்டியது.

இங்கிலாந்தில் மேற்கண்ட சுற்றுப்பயணத்தில் முதல் பேட்ஸ்மேனாக களம்மிறக்கப்பட்டார் சச்சின். அங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் செஞ்சுரியை பதிவு செய்தார் அப்போது 18 வயதை நெருங்கிக்கொண்டு இருந்தார். ஆட்ட நாயகம் விருது தரப்பட்டது. மைதானத்தில் சச்சினுக்கு ஏற்ற ஜோடி காம்ப்ளி. டீம் கேப்டன், துணை கேப்டன் என பொறுப்பு வகித்தவர் பின் கேப்டன் பதவியே வேண்டாம் என மறுத்தவர் தான் சச்சின்.

1995 முதல் சச்சின் நினைப்பவர்கள் தான் இந்திய கிரிக்கெட் அணியில் கோலோச்ச முடியும் என்ற நிலையை உருவாக்கினார். அவர் தான் அதிக வருமானம் பெறும் விளம்பர தூதர். அந்தளவுக்கு உச்ச அந்தஸ்த்தில் இருந்தாலும் மைதானத்தில் எப்போதும் சோர்ந்து இருந்தது கிடையாது.

சச்சின்க்கு எதிராக மும்பையில் இருந்தே இறக்கிவிட்டார்கள். அவர்கள் சச்சின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆனப்பின்பே தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் சச்சின்.

இதுவரை கிரிக்கெட் உலகில் இருந்த உலக சாதனைகள் பலவற்றை முறியடித்து சகாப்தம் படைத்தவர் சச்சின். தன் தந்தை இறந்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் கலந்துக்கொண்டு தன் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தியவர் சச்சின்.

இந்திய ரசிகர்களிடம் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டு உள்ள நாடுகளில் உள்ள விளையாட்டு பிரியர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார் சச்சின். தற்போது அவரிடம்முள்ள நாடாளமன்ற உறுப்பினர் என்ற சிம்மாசனத்தை விட சிறந்த சிம்மாசனம்.

ஜெவின் ‘நயவஞ்சக நாடகங்கள்’.




கல்யாண வீட்டுக்கு போனா நீ மாப்பிள்ளையா இரு. சாவு வீட்டுக்கு போனா நீ பிணம்மாயிரு என்பார்கள். அதற்கு காரணம் அந்தயிடங்களுக்கு செல்லும்போது மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றி உன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக கிராமத்தில் அப்படி சொல்லுவார்கள். 

தற்போது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தனி விமானத்தில் டெல்லி சென்றார் தமிழக முதல்வாரன ஜெ. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். 

ஒவ்வொரு மாநில முதல்வரும் தங்கள் மாநில கோரிக்கை பற்றி பத்து நிமிடம் பேச வேண்டும் எனச்சொல்லப்பட்டது. அதன்படி தமிழகத்தின் கோரிக்கையை முதல்வர் வாசிக்கும் போது பத்து நிமிடம் முடிந்ததும் மணி அடிக்கப்பட்டுள்ளது. உடனே கோபமாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் ஜெ, என்னை அவமதித்து விட்டார்கள் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார். நாட்டின் தலைநகரில் இருந்தப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவர் திட்டம் நிறைவேறிவிட்டது. மாநிலத்தின் கோரிக்கை, நலன் கேள்விக்குறியாக நிற்கிறது. 

அரசாங்கத்தின் நிர்வாகத்தை நன்கறிந்தார். எம்.பியாக ஒருமுறை, தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறை உள்ளார். அதற்கு முன்பு எம்.பியாக இருந்தவர்க்கு அரசாங்கத்தின் நடைமுறை தெரியாததல்ல. அதோடு, மாநாடு பற்றிய டைம் டூ டைம் ரிப்போர்ட்டில் யார் முதலில் பேசுவது, டீ டைம், லஞ்ச் டைம் வரை முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். சமீபத்தில் முதல்வர் ஜெ தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்திலும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. 

புரோட்டாக்கால் என்ற நடைமுறை இருக்க அதை அறிந்தும், அரசாங்க அலுவல்களின் நேர பயன்பாடு அறிந்தும் ஜெ மரியாதை கிடைக்கவில்லை, ஃபெல் அடித்துவிட்டார்கள் என சொல்வது அப்படியிருக்க ஜெயலலிதா எந்த கூட்டத்துக்கு போனாலும் வெளிநடப்பு செய்வதை பொழுது போக்காக வைத்துள்ளார். 

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்சனையில் இரண்டு மாநில முதல்வர்களை சந்தித்து பேசச்சொன்னது. அதன்படி பெங்களுரூவுக்கு சென்றார். ஷெட்டருடன் பேச்சு வார்த்தை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்துவிட்டேன் என வெளியே வந்து அறிவித்தார். (ஷெட்டர் நாங்கள் மரியாதையாக அனுப்பிவைத்தோம் என்றார்). இதே இப்போது தேசிய வளர்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு முன்பும் இப்படி செய்துள்ளார். 

கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைவரின் கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அதோடு, தான் இருக்கும் இடங்களில் தன்னை அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற மனோபாவத்தில் உள்ளார். தான் பேசுவதை அப்படியே கேட்கவேண்டும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அதற்காக எடுத்துக்கொள்ள தனக்கு உரிமை என எண்ணுகிறார். அதன் வெளிப்பாடு தான் இப்படி. இந்த நாடகத்தை தான் அவரது வீரமாக பிரகஸ்கரிக்கிறார்கள். 

அவரின் செயல்பாட்டை நியாயப்படுத்தி மற்றவர்களை குறை சொல்கிறார்கள். முதலில் அவர் சரியாக செயல்படுகிறாறா என மனசாட்சியிடம் கேட்டுவிட்டு பின் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும். 

வெள்ளி, டிசம்பர் 14, 2012

கமல் புகுத்தியுள்ள வியாபார யுக்தி.




தமிழ் சினிமாவில் புதிய யுக்தியை புகுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதாவது, படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் அதே நாளன்று டி.டி.எச் மூலம் ஒளிப்பரப்புவது. இந்தியாவில் முதல் முறையாக என்றுக்கூட சொல்லும் வகையில் இந்த புதிய யுக்தியை செயல்படுத்தியுள்ளார். கமலின் நடிப்பில், இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடப்படும் அதே நாளன்று ஏர்டெல் டி.டி.எச் மூலம் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படத்தை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டி.டி.எச் மூலம் ஒருமுறை பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம். படத்தை காப்பி செய்ய முடியாது. செட்டப் பாக்ஸ்சில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளவும் முடியாத தொழில் நுட்பத்தில் படத்தை திரையிடும் யுக்தி. இதுக்காக பெரும் தொகைக்கு ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் கமல்ஹாசன். இதனைத்தான் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள். சினிமா பார்க்கும் வரும் கூட்டம்மோ மிகக்குறைவு. தற்போதைய இந்த யுக்தியால் திரையரங்குகள் காணாமல் போய் அழிந்து விடும் என எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

திரையரங்கங்கள் அழிக்கபடுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கட்டும். திரையரங்குக்கு மக்களின் வரத்து குறைந்து போனதற்க்கு காரணம் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வராதது மட்டும் காரணமல்ல. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம், இடைவேளையின் போது அங்குள்ள திண்பண்ட அரங்குகளில் விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் அடிக்கப்படும் கொள்ளைகள் போன்றவையே மக்கள் திரையரங்கு பக்கம் வரமுடியாமல் செய்து வைத்துள்ளது. 

கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் இருநூறு ரூபாய் என விற்கப்பட்டது. இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் பத்து ரூபாய், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஐஸ்கிரிம் உள்ளே 25 ரூபாய், பன்னிரென்டு ரூபாய் கூல்ட்ரிங்ஸ் இருபது ரூபாய். இப்படி எல்லாம்மே அதிக பட்ச விலை. இங்கே குறிப்பிட்டது வேலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி போன்ற சின்ன நகரங்களில் தான். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரும் நகரங்களில் இதைவிட ரொம்ப அதிகம். அதோடு, தற்போது சிலப்பல சினிமா தியேட்டர்கள் வரும்போது நொறுக்கு தீணிகள் கொண்டு வரக்கூடாது என்ற கண்டிப்பு வேறு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டரில் போய் படம் பார்க்க குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. டிக்கட்டில் பிரிண்ட் செய்துயிருக்கும் கட்டணத்தை விட இருபது மடங்கு அதிகமாக வாங்குகிறார்கள் அரசாங்கத்துக்கு கேளிக்கை வரி, சேவை வரியாக கட்டுவது டிக்கட்டில் குறிப்பிட்டுயிருக்கும் தொகைக்கே. இப்படி அரசாங்கத்தையும், ரசிகர்களை தியேட்டர்காரர்கள் நன்றாக ஏமாற்றி சம்பாதித்து விடுகிறார்கள். 

இதில் பாவப்பட்டவர்கள் படத்தை வெளியிடும் விநியோகஸ்தார்கள், வட்டிக்கு பணத்தை வாங்கி படம் தயாரிக்கும் முதலாளிகள் தான். படம் வெற்றியடைந்தால் மட்டுமே முதலாளிக்கு லாபம். இல்லையேல் நடுத்தெரு நாராயணா தான். இதனை உணர்ந்து தான் தயாரிப்பாளருக்கும் லாபம் தரும் வகையில் இந்த புதிய ஹாலிவுட் யுக்தியை கொண்டு வந்துள்ளார் கமல். 

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து நில நாட்களே ஆனா என சேட்டிலைட் சேனல்கள் இன்று கூவுவதற்க்கு பின்னால் கமலின் வியாபார யுக்தியே காரணம். 

திரைப்படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பின்பு சில ஆண்டுகள் கழித்து டிவியில் ஒளிப்பரப்பிக்கொள்ள சேட்டிலைட் சேனல்களுக்கு உரிமை தந்து விற்க்கும் முறையை கமல் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் புகுத்தினார். ( தற்போது படம் வெளியாகும் முன்பே சேட்டிலைட் சேனல்கள் படத்தின் உரிமையை வாங்கி விடுகின்றன, படம் வந்த சில வாரங்கள் பொறுத்து சேனல்கள் ஒளிப்பரப்புகின்றன ). அப்போதும் இதேபோல் தான் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அந்த முறை தான் இன்று பல தயாரிப்பாளர்களை நஸ்டத்தில் இருந்தும், தற்கொலையில் இருந்தும் காப்பாற்றி வருகின்றன. 

திருட்டு டி.வி.டி பற்றி கமல் தனது கருத்தாக, வளரும் தொழில்நுட்பத்தில் அதை தடுக்க முடியாது. அதனை ஒழிக்க ஆடியே சி.டி, டி.வி.டி வெளியிடுவதைப்போல திரைப்படம் திரையரங்கில் வெளியிட்ட ஒரு வாரம் கடந்து தயாரிப்பாளர்களே அத்திரைப்படத்தை டி.வி.டியாக வெளியிட்டால் திரையரங்குக்கு வர முடியாதவர்கள் டி.வி.டி வாங்கி படத்தை பார்ப்பார்கள். ஒர்ஜினல் டி.வி.டி கிடைக்கும் போது யாரும் திருட்டு டி.வி.டி வாங்கி படம் பார்க்கும் நிலை வராது. இதனால் தயாரிப்பாளர்க்கு வருமானம் வரும். அதோடு எந்தப்படத்தையும் தியேட்டரில் போய் பார்த்தால் தான் படம் பார்த்த தன்மையிருக்கும். டிவிடியில் பார்த்தால் படம் பார்த்த தன்மையிருக்காது. அதனால் ரசிகர்கள், தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் மக்கள் நிச்சயம் திரையரங்கம் வருவார்கள். இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படாது. இந்த யுக்தியை ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே புகுத்திவிட்டார்கள் தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டார்கள் நாமும் காலத்திற்க்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். 

அதையேத்தான் இன்றும் கூறுகிறார். வளரும் தொழில் நுட்பத்துக்கு தகுந்தார்போல் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நமக்காக தொழில் நுட்பம் வளராமல் இருக்காது. அதோடு சேர்ந்து நாம் பயணம் செய்யும் வகையில் நம்மையும், தொழிலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

தற்போது புகுத்தியுள்ள டி.டி.எச் யுக்தி, தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதோடு டி.டி.எச் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு வியாபார போட்டியை உருவாக்கி தந்துள்ளது. இனி ஒரு படம் தொடங்கும் போதே உரிமையை வாங்கிட போட்டி போடுவார்கள் என்பது மட்டும் நிஜம். 

‘முதல் நாளே முதல் ஷோ வீட்டிலேயே அமர்ந்து குடும்பத்தோடு காண எங்கள் நிறுவன டி.டி.எச்யை வாங்குங்கள் என்ற விளம்பரம் வரும் பார்த்துக்கொண்டே இருங்கள். 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

வெள்ளைரவியும் - வெள்ளைதுரையும்.



மறைந்த சாதி தலைவர் ஒருவரின் ஆண்டு அஞ்சலி விழாவுக்காக பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிகள் பிரபு, பாரதி டீமால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சரண்டரான ரவுடிகள் பிரபு, பாரதி இருவரும் நீதிமன்றம் சென்று வரும் வழியில் தப்பிவிட்டார்கள். வாகன சோதனையின் போது பிடிக்க முயன்றபோது வெட்டவந்தார்கள் தற்காப்புக்காக சுட்டோம் செத்தார்கள் என என்கௌண்டர் செய்யப்பட்டதற்க்கு கதை சொன்னார்கள்.

இந்த என்கௌண்டர் மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனம் செய்ததற்க்கு எஸ்.ஐ கொல்லப்பட்டபோது உங்கள் கண்ணுக்கு மனித உரிமை தெரியவில்லையா?, அவருக்கும் குடும்பம் உள்ளது என்பதை மறந்து விடுகிறீர்களே?, அவரும் மனிதர் தான் என்ற குரல் காவல்துறை தரப்பில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான்காயிரம் மக்கள் இன்பத்தை கெடுக்கும் நான்கு பேரை நான்காயிரம் மக்களின் சந்தோஷத்துக்காக கொல்வது தவறுயில்லை என கருத்து தெரிவிக்கிறார் மானாமதுரை டி.எஸ்.பியும் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கொண்டாடப்படும் வெள்ளைத்துரை. நீங்கள் ஒருவரை கொன்றீர்கள் நாங்கள் இருவரை போட்டு தள்ளியள்ளோம் என சந்தோஷப்படுகிறார்கள் இன்னும் சில காவலர்கள். 

அவர்கள் கேட்பது நியாயம். தான் சார்ந்த ஒரு துறையின் ஒரு எஸ்.ஐ கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தாரை விட அவரது சக துறை ஊழியர்களுக்கு அதிக வருத்தம்மிருக்கும். பாதுகாப்பு தரும் எங்களுக்கே பாதுகாப்புயில்லையே எங்கள் உயிர்க்கு என்ன பாதுகாப்பு என கேட்கிறார்கள் அவர்கள் கேட்பது நியாயம்.

என் கேள்வி, கொலை செய்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்து அவன் செய்த தவறை உணர்த்தாமல் கொலை செய்தான் அதனால் கொன்றோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம். கொலை செய்வதனை கொலை செய்ய காவல்துறை எதற்கு, சட்டம் எதற்க்கு, நீதிமன்றம் எதற்கு?. காவல்துறை மற்ற உள்ளேயும், வெளியேவும் உலாவும் ரவுடிகள் விவகாரத்தில் இப்படித்தான் நடந்துக்கொள்கிறதா?. எத்தனை கொலைக்காரர்கள் தற்போது ஆயுள் தண்டனை கைதிகளாக, தூக்குதண்டனை கைதிகளாக சிறையில் உள்ளார்கள். அதேபோல் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்துயிருக்கலாம்மே ஏன் செய்யவில்லை. செய்யாததற்க்கு காரணம் ?


காவல்துறை தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயலும் யுக்தி. மக்களுக்கும், ரவுடிகளுக்கும் போலிஸ் என்றால் பயம் இருக்க வேண்டும், யாருக்கும் காவல்துறையை எதிர்க்கும் துணிவு வரக்கூடாது என்பதை உணர்த்தவே என்கௌன்டர் என்ற பெயரில் கொலை செய்துள்ளார்கள். இது மக்கள் மத்தியில் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு விதமான பயத்தை உருவாக்கும் செயல். இதனால் ரவுடிகளுக்கு வேண்டுமானால் போலிஸ் மீது பயம் வரலாம். ஆனால் மக்களுக்கு பயத்துக்கு பதில் வெறுப்பு நிச்சயமாக வந்துவிடுகிறது. அவர்களை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையும், காவல்துறையின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தராத நிலையும் பொதுமக்களிடம் இருக்கிறது. 

பொதுமக்களின் நண்பர்கள் எனச்சொல்லிக்கொண்டு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் புரியும் விசுவாசியாய் நடந்துக்கொள்ளும் அனேக காவல்துறையினர் காவல்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி தங்களது உரிமையை பெற்றுக்கொண்டால் பாராட்டலாம். ஆனால் அதற்க்கு நேர் எதிராக என்கௌன்டர் பெயரில் கொலை செய்வது, அதிகார வர்க்கத்தை துணிவில்லாமல் பொதுமக்களை, வியாபாரிகளை, ரவுடிகளை, திருடர்களை மிரட்டி பணம் பறிக்கும் இவர்கள் தாங்கள் செய்த கொலைகளை நியாயப்படுத்த மக்கள், சந்தோஷம் என கதையளக்க தொடங்கியுள்ளார்கள். 

என்கௌண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் வெள்ளைரவி, வீரமணி, மணல்மேடு சங்கர் போன்றவர்கள் பணத்துக்காக கட்டைப்பஞ்சாயத்து, கொலைகள் செய்தனர். அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செய்ததை வெள்ளைதுரை போன்ற சில அதிகாரிகள் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு சட்டத்தின் துணையோடு அதேயே செய்கிறார்கள். இவர்களுக்கு பெயர் காவலர்கள். அவர்களுக்கு பெயர் ரவுடிகள்.

நல்ல சட்டம்.