வெள்ளி, மார்ச் 30, 2018

குற்றவாளிகளுக்கு குடை பிடிக்காதீர்கள். சமூகவளைத்தள விஞ்ஞானிகளே…


தவறு செய்த அதிகாரியையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறது சமூக வளைத்தளவாசிகள். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ளும் மனப்பாங்கில் நம்மில் யாரும்மில்லை என்பது தெரிகிறது.

தங்களை எழுந்து நின்று வரவேற்காத அதிகாரியை கொச்சைப்படுத்தி கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் ரகளை, அலுவலக ஊழியரை தாக்கினார்கள் என சில தொலைக்காட்சி மீடியாக்கள் செய்திப்போட அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த அதிகாரி சமூக வளைத்தள நாயகனாகிவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதே அதிகாரி கைகட்டி பவ்யமாக எம்.எல்.ஏக்கள் முன்பு நிற்க அய்யோ பாவம் என மீண்டும் அரசியல்வாதிகள் மீது பாய்ந்து, பிராண்டிவிட்டார்கள் சமூக வளைத்தளவாசிகள்.  

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுப்படுகிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் முழு விசுவாசமாக உள்ளார்கள். திமுக, காங்கிரஸ் கட்சியினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்குவதில்லை என்பது புகார். இந்த பிரச்சனைக்காக கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்க .இணை பதிவாளரும், தேர்தல் சிறப்பு அதிகாரியுமான நடுகாட்டுராஜாவை சந்திக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முன்னால் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் சென்றுள்ளனர். எம்.எல்.ஏக்கள் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தபோது எழுந்து நின்று வரவேற்காமல் அலட்சியமாக உட்கார்ந்துக்கொண்டு இருந்ததோடு, தனது அலுவலக ஊழியரை வைத்து எம்.எல்.ஏக்களை மோசமாக பேசவைக்க, இதற்கு பதிலடியாக எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் அதிகாரியை கொச்சையாக பேசியுள்ளனர். இரண்டு தரப்புக்கும் வாக்குவாதமாக அங்கிருந்து எஸ்கேப்பான நடுகாட்டுராஜா, பின்னர் கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் அலுவலகம் வந்து எம்.எல்.ஏக்களிடம் மன்னிப்பு கேட்டு கூட்டுறவு சங்க தேர்தலில் தவறு நடந்துள்ளது, வேட்புமனுக்களை ரத்துசெய்து வேறு தேதியில் நடத்த கடிதம் எழுதுகிறேன் எனச்சொல்லி கடிதம் எழுதியவர் அதற்கான நகலையும் எம்.எல்.ஏக்களிடம் தந்துள்ளார்.

அந்த அதிகாரி கைகட்டி பவ்யமாக, பாவமாக நின்றது, அருகில் அந்தபெண் அதிகாரி பாவமாக நின்றது எல்லாம் என்னைப்பொருத்தவரை முற்றிலும் நடிப்பு. இது நடிப்பு என்பது எதிரில் அமர்ந்துயிருந்த எம்.எல்.ஏக்களுக்கு நன்றாக தெரிந்துயிருக்கும். ஆனால், அதை சமூக வளைத்தளத்தில் பார்ப்பவர்கள், இப்படி அரசியல்வாதிகள் அராஜகம் செய்கிறார்களே என நினைத்துவிட்டார்கள்.

அரசியல்வாதிகளை ஏளனமாக பேசுபவர்கள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரிச்சந்திரன் வீட்டக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் கிடையாதுதான். அதற்காக அதிகாரிகள் சொக்கதங்கமும் கிடையாது. அரசியல்வாதிகளை விட மிகமோசனவர்கள் மிகபெரும்பான்மை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும். யார் ஆட்சியில் உள்ளார்களோ அந்த ஆட்சியாளர்களுக்கு ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கபட வேடதாரிகள்.  

அரசின் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை தங்களை தேடிவரும் பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் வந்தால் அவர்களை அதிகாரிகள் என்பவர்கள் முறைப்படி எழுந்து நின்று வரவேற்க வேண்டும். அது அந்த நபருக்கு தரப்படும் மரியாதையல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்கிற முறையில் அது அந்த பதவியில் இருப்பவர்களுக்கு தரப்படும் மரியாதை.



இதோடு வெளியாகியுள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கொள்ளும் இருவரும் அதிகாரிகள் தான். ஒருவர் மத்தியரசின் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்சான அதிகாரி (திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி) மற்றொருவர் தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்ற கூட்டுறவு இணைபதிவாளர் என்கிற பதவியில் உள்ள அதிகாரி (நடுகாட்டுராஜா).

கலெக்டராகவுள்ள கந்தசாமி ஐ.ஏ.எஸ் என்கிற அதிகாரியை சந்தித்து திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ பிச்சாண்டி சந்தித்து, தனது தொகுதி மக்கள் தன்னிடம் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் தந்து கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுங்கள் என்றபோது அந்த கட்டினை எழுந்து நின்று கலெக்டர் பெற்றுக்கொள்கிறார். கலெக்டரை விட அதிகாரம் குறைந்த மாநில அரசு அதிகாரி நடுகாட்டு ராஜா, கூட்டாக எம்.எல்.ஏக்கள் வந்தபோது எழுந்து நின்று வரவேற்காமல், மரியாதை தராமல் உள்ளார். இத்தனைக்கும் அங்கு அத்தனை தொலைக்காட்சி மற்றும் புகைப்படக்காரர்கள் உள்ளனர். அப்படியும் அவர் எழவில்லையென்றால் என்ன அர்த்தம், நீங்கயெல்லாம் ஒரு ஆளேக்கிடையாது என்பதே அவரின் எண்ணம்.  

இப்படி நடந்துக்கொண்டமைக்கு துறை ரீதியில் ஒரு விசாரணை நடத்தி அந்த அதிகாரியை சஸ்பென்ட் செய்ய வேண்டும். அவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும்னெ அழுத்தமாக குறிப்பிடகாரணம். முதல்வர், தலைமைச்செயலாளர் என மாநிலத்தின் நிர்வாகத்தை நடத்துபவர்களை சர்வசாதாரணமாக சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த அதிகாரி மரியாதை தரவில்லையென்றால், கோரிக்கையோடு இவரைத்தேடி வரும் சாதாரண பொதுமக்களுக்கு இவர் எப்படிப்பட்ட மரியாதை தந்துயிருப்பார் என யோசித்தபோது வேதனையே மிஞ்சுகிறது.

மக்களுக்கானது தான் அரசாங்கம். அந்த அரசாங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பது நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும். கிராமத்தானோ, நகரத்தானோ விவரம் தெரியாதவன் ஒரு கோரிக்கையோடு அரசு ஊழியர்கள் அ அதிகாரிகளை சந்தித்தால் 99 சதவித அதிகாரிகள் தங்களது எதிரில் காலியாக உள்ள நாற்காலியில் உட்கார கூட சொல்லமாட்டார்கள், அலட்சியமாக எதிர்க்கொள்வார்கள். இதுதான் அரசு அலுவலகங்களில் அதிகாரம் செலுத்துபவர்களின் நிலை. இந்த நிலையை இந்த கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது எதிர்க்கொண்டு இருப்பீர்கள். அப்போது நமக்கு கோபம் வரும். நமக்கே இப்படியென்றால் லட்சகணக்கான மக்களை சந்திக்கும், அதிகாரிகளின் அதிகாரம் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு கோபம் வருவது இயல்பு.

அதனால் யார் ஒருவரை கொண்டாடும் முன்போ அல்லது தூற்றும் முன்பே கொஞ்சம் யோசியுங்கள்.

செவ்வாய், மார்ச் 06, 2018

டிஜிட்டல் யுகத்தில் வளருமா பிரிண்ட் மீடியா ???


பிரிண்ட் மீடியா அவ்வளவு தான். இன்னும் கொஞ்ச காலத்தில் நியூஸ் பேப்பர், வார, மாதாந்திர பத்திரிக்கைகள் எல்லாம் எதுவும் வராது, எல்லாம்மே எலக்ட்ரானிக் மீடியா ஆதிக்கம் தான். டிவி, இணையதளம், மொபைல் பத்திரிக்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்கிற தகவல் தமிழ் பத்திரிக்கையுலகில் வேகவேகமாக பரவி வரும் நிலையில் தி இந்து குழுமத்தில் இருந்து காமதேனு என்கிற வாராரந்தர பத்திரிக்கை வெளிவர துவங்கியுள்ளது.

இதுப்பற்றிய விளம்பரங்களை பார்த்துவிட்டு தான் அறிவு சார்ந்த நண்பர்கள் வட்டாரம் என்ன தோழா பத்திரிக்கைகள் விற்பனை படுபாதாளத்தில் உள்ள நிலையில் புதுசா புத்தகம் வெளியிடறாங்க எனக்கேட்டார்கள். அது ஒரு கலந்துரையாடலாக மாறியது. அவர்கள் மத்தியில் நான் கூறியது இதுதான்.

பிரிண்ட் மீடியாவை எந்த டெக்னாலஜி மீடியாவும் அழிக்க முடியாது. மேம்போக்காக காணும்போது பிரிண்ட் மீடியாவை விட விஷ்வல் மீடியா, இணையதள மீடியாக்கள் பாப்புலராக தெரியும். ஆனால் தெளிவான செய்திகளை, கட்டுரைகளை பிரிண்ட் மீடியாவால் மட்டும்மே தரமுடியும்.

இன்றைய நேரத்தை கைபேசிகளும், சமூகவளைத்தளங்கள் நம்மை ஆக்ரமித்துக்கொண்டதால் அதில் வரும் செய்திகளை பார்த்துவிட்டு அவ்வளவு தான் என கடந்து போகிறோம். அந்த நிலை மாறும் அப்படி மாறும்போது பிரிண்ட் மீடியாக்கள் மீண்டும் ராஜ்ஜியம் செய்வார்கள்.

இல்லை என்பவர்களுக்கு ஒருத்தகவல். நம் நாட்டை விட தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரிட்டன் போன்றவை. அங்கும் இந்த பிரச்சனை கடந்த காலங்களில் எழுந்தது. அங்கும் பிரிண்ட் மீடியா, விஷ்வல் மீடியா, இணையதள மீடியாக்கள் மோதல் உண்டு. ஆனால் அங்கு தொய்வில் இருந்த பிரிண்ட் மீடியா மீண்டும் வளர்ச்சிக்கு வந்தது, பிரிண்ட் மீடியாவை அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் தங்களது செய்தி வழங்கும் தன்மையில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள். வழக்கமான செய்திகளோடு செய்தியின் பின்னணிகளை தந்தார்கள்.

பிரிண்ட் மீடியா தொய்வில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தங்கள் செய்தி வழங்கும் நிலையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள்களை விட வாரம் இருமுறை, வாரம், மாதம்மிருமுறை, பருவ இதழ்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு திரைப்படம் என்றால் பாடல், நகைச்சுவை, கவர்ச்சி, பாடல் அதை விட அதிகமாக ஹீரோ, ஹீரோயின் எப்படி முக்கியம்மோ அதே அளவுக்கு இதழ்களுக்கு செய்திகளின் வகைகள் முக்கியம். அந்த வகையை ஜனரஞ்சக இதழ்கள் கடைப்பிடித்தாலும், அதில் மாற்றத்தை கொண்டு வந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை, விபத்துக்களில் இரண்டு பேர் இறந்தான், மூன்று பேர் அடிப்பட்டான் என்கிற செய்தியை தாண்டி அது எப்படி நடந்தது, யார் மீது தவறு என எதிர்பார்க்கிறான் வாசகன். ஒரு சார்பாக எதுவும் எழுத முடியாது, தற்போது வாசகனை ஏமாற்ற முடியாது. ஏன் எனில் வாட்ஸ்அப் முகநூலில் பல தகவல்கள் வந்துவிடுகின்றன. அதனால் பிரிண்ட் மீடியாக்கள் ஒரு செய்தியில் அரசியல் பின்புலம், அரசியல் ரகசியங்கள், அரசியல் மோதல்கள், ரவுடி ராஜ்ஜியம், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், மக்களை பாதிக்கும் சமூக கட்டுரைகள், மனதை உருக்கும் கட்டுரைகள், மனதை ஆர்ப்பரிக்கும் அதிரடியான கட்டுரைகள், தெரியாத தகவல்களை விரும்புகிறார்கள் இளைஞர்கள், நிகழ்கால செய்தியோடு – கடந்த கால வரலாறுகளை தெளிவான கட்டுரைகளை தான் அதிகம் விரும்புகிறார்கள் தமிழகத்தில்.

நான் தருவது தான் செய்தி என பிரிண்ட் மீடியா நினைத்தால் அதற்கு அழிவு காலம்.

ஏன் எனில் செய்திகளை உடனுக்குடனே அறிந்துக்கொள்ள தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் உள்ளன. ஒரு தொலைக்காட்சியால் நேரலை செய்தியை மட்டும்மே வழங்க முடியும், இணையதளங்களில் எது வேண்டுமானாலும் எழுதலாம், நம்பகத்தன்மை என்பது கிடையாது.

பிரிண்ட் மீடியாவில் வரும் செய்தி மீது பெரும் நம்பிக்கையுள்ளது. அதற்கு தேவையான செய்திகளை வழங்கவில்லையெனில் டெக்னாஜி உலகத்தில் பிரிண்ட் மீடியா தாக்கு பிடிக்க முடியாது.

இந்த வளர்ச்சியால் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது. பிரிண்ட் மீடியாவில் தேவையற்ற செய்திதாள்கள், இதழ்கள் காணாமல் போய் மறையும், விஷிவல் மற்றும் இணையதளத்தில் புற்றீசல் போல் வளரும். அது வளரும்போது மீண்டும் பிரிண்ட் மீடியா ஆதிக்கம் செலுத்தும்.