வெள்ளி, மார்ச் 30, 2018

குற்றவாளிகளுக்கு குடை பிடிக்காதீர்கள். சமூகவளைத்தள விஞ்ஞானிகளே…


தவறு செய்த அதிகாரியையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறது சமூக வளைத்தளவாசிகள். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ளும் மனப்பாங்கில் நம்மில் யாரும்மில்லை என்பது தெரிகிறது.

தங்களை எழுந்து நின்று வரவேற்காத அதிகாரியை கொச்சைப்படுத்தி கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் ரகளை, அலுவலக ஊழியரை தாக்கினார்கள் என சில தொலைக்காட்சி மீடியாக்கள் செய்திப்போட அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த அதிகாரி சமூக வளைத்தள நாயகனாகிவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதே அதிகாரி கைகட்டி பவ்யமாக எம்.எல்.ஏக்கள் முன்பு நிற்க அய்யோ பாவம் என மீண்டும் அரசியல்வாதிகள் மீது பாய்ந்து, பிராண்டிவிட்டார்கள் சமூக வளைத்தளவாசிகள்.  

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுப்படுகிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் முழு விசுவாசமாக உள்ளார்கள். திமுக, காங்கிரஸ் கட்சியினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்குவதில்லை என்பது புகார். இந்த பிரச்சனைக்காக கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்க .இணை பதிவாளரும், தேர்தல் சிறப்பு அதிகாரியுமான நடுகாட்டுராஜாவை சந்திக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முன்னால் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் சென்றுள்ளனர். எம்.எல்.ஏக்கள் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தபோது எழுந்து நின்று வரவேற்காமல் அலட்சியமாக உட்கார்ந்துக்கொண்டு இருந்ததோடு, தனது அலுவலக ஊழியரை வைத்து எம்.எல்.ஏக்களை மோசமாக பேசவைக்க, இதற்கு பதிலடியாக எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் அதிகாரியை கொச்சையாக பேசியுள்ளனர். இரண்டு தரப்புக்கும் வாக்குவாதமாக அங்கிருந்து எஸ்கேப்பான நடுகாட்டுராஜா, பின்னர் கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் அலுவலகம் வந்து எம்.எல்.ஏக்களிடம் மன்னிப்பு கேட்டு கூட்டுறவு சங்க தேர்தலில் தவறு நடந்துள்ளது, வேட்புமனுக்களை ரத்துசெய்து வேறு தேதியில் நடத்த கடிதம் எழுதுகிறேன் எனச்சொல்லி கடிதம் எழுதியவர் அதற்கான நகலையும் எம்.எல்.ஏக்களிடம் தந்துள்ளார்.

அந்த அதிகாரி கைகட்டி பவ்யமாக, பாவமாக நின்றது, அருகில் அந்தபெண் அதிகாரி பாவமாக நின்றது எல்லாம் என்னைப்பொருத்தவரை முற்றிலும் நடிப்பு. இது நடிப்பு என்பது எதிரில் அமர்ந்துயிருந்த எம்.எல்.ஏக்களுக்கு நன்றாக தெரிந்துயிருக்கும். ஆனால், அதை சமூக வளைத்தளத்தில் பார்ப்பவர்கள், இப்படி அரசியல்வாதிகள் அராஜகம் செய்கிறார்களே என நினைத்துவிட்டார்கள்.

அரசியல்வாதிகளை ஏளனமாக பேசுபவர்கள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரிச்சந்திரன் வீட்டக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் கிடையாதுதான். அதற்காக அதிகாரிகள் சொக்கதங்கமும் கிடையாது. அரசியல்வாதிகளை விட மிகமோசனவர்கள் மிகபெரும்பான்மை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும். யார் ஆட்சியில் உள்ளார்களோ அந்த ஆட்சியாளர்களுக்கு ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கபட வேடதாரிகள்.  

அரசின் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை தங்களை தேடிவரும் பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் வந்தால் அவர்களை அதிகாரிகள் என்பவர்கள் முறைப்படி எழுந்து நின்று வரவேற்க வேண்டும். அது அந்த நபருக்கு தரப்படும் மரியாதையல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்கிற முறையில் அது அந்த பதவியில் இருப்பவர்களுக்கு தரப்படும் மரியாதை.



இதோடு வெளியாகியுள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கொள்ளும் இருவரும் அதிகாரிகள் தான். ஒருவர் மத்தியரசின் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்சான அதிகாரி (திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி) மற்றொருவர் தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்ற கூட்டுறவு இணைபதிவாளர் என்கிற பதவியில் உள்ள அதிகாரி (நடுகாட்டுராஜா).

கலெக்டராகவுள்ள கந்தசாமி ஐ.ஏ.எஸ் என்கிற அதிகாரியை சந்தித்து திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ பிச்சாண்டி சந்தித்து, தனது தொகுதி மக்கள் தன்னிடம் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் தந்து கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுங்கள் என்றபோது அந்த கட்டினை எழுந்து நின்று கலெக்டர் பெற்றுக்கொள்கிறார். கலெக்டரை விட அதிகாரம் குறைந்த மாநில அரசு அதிகாரி நடுகாட்டு ராஜா, கூட்டாக எம்.எல்.ஏக்கள் வந்தபோது எழுந்து நின்று வரவேற்காமல், மரியாதை தராமல் உள்ளார். இத்தனைக்கும் அங்கு அத்தனை தொலைக்காட்சி மற்றும் புகைப்படக்காரர்கள் உள்ளனர். அப்படியும் அவர் எழவில்லையென்றால் என்ன அர்த்தம், நீங்கயெல்லாம் ஒரு ஆளேக்கிடையாது என்பதே அவரின் எண்ணம்.  

இப்படி நடந்துக்கொண்டமைக்கு துறை ரீதியில் ஒரு விசாரணை நடத்தி அந்த அதிகாரியை சஸ்பென்ட் செய்ய வேண்டும். அவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும்னெ அழுத்தமாக குறிப்பிடகாரணம். முதல்வர், தலைமைச்செயலாளர் என மாநிலத்தின் நிர்வாகத்தை நடத்துபவர்களை சர்வசாதாரணமாக சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த அதிகாரி மரியாதை தரவில்லையென்றால், கோரிக்கையோடு இவரைத்தேடி வரும் சாதாரண பொதுமக்களுக்கு இவர் எப்படிப்பட்ட மரியாதை தந்துயிருப்பார் என யோசித்தபோது வேதனையே மிஞ்சுகிறது.

மக்களுக்கானது தான் அரசாங்கம். அந்த அரசாங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பது நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும். கிராமத்தானோ, நகரத்தானோ விவரம் தெரியாதவன் ஒரு கோரிக்கையோடு அரசு ஊழியர்கள் அ அதிகாரிகளை சந்தித்தால் 99 சதவித அதிகாரிகள் தங்களது எதிரில் காலியாக உள்ள நாற்காலியில் உட்கார கூட சொல்லமாட்டார்கள், அலட்சியமாக எதிர்க்கொள்வார்கள். இதுதான் அரசு அலுவலகங்களில் அதிகாரம் செலுத்துபவர்களின் நிலை. இந்த நிலையை இந்த கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது எதிர்க்கொண்டு இருப்பீர்கள். அப்போது நமக்கு கோபம் வரும். நமக்கே இப்படியென்றால் லட்சகணக்கான மக்களை சந்திக்கும், அதிகாரிகளின் அதிகாரம் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு கோபம் வருவது இயல்பு.

அதனால் யார் ஒருவரை கொண்டாடும் முன்போ அல்லது தூற்றும் முன்பே கொஞ்சம் யோசியுங்கள்.

3 கருத்துகள்:

  1. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    பதிலளிநீக்கு