புதன், ஏப்ரல் 01, 2015

சன் சாம்ராஜ்யம் சரிந்ததா ?


எது நடக்ககூடாது என மாறன் சகோதரர்கள் நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. மாறன்களின் 742 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவில் இருந்து இயங்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச்சொல்லி மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் நெருக்கடி தந்தார் அதன்படி விற்கப்பட்டது என ஏர்செல் முதலாளி தந்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிகாரத்தை பயன்படுத்தி அதனை விற்க செய்து அதற்கு பிரதிபலனாக சன் டி.டி.எச் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்றது அமலாக்கத்துறை. அந்த வழக்கில் தான் அமலாக்கத்துறை மாறன் சகோதரர்கள் சொத்துக்களில் முக்கியமான சன் தொலைக்காட்சி நிறுவனம் உட்பட 11 சொத்துக்களை முடக்கியுள்ளது. 

2014ல் மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது முதல் விசாரணை, கைது, சொத்துக்கள் பறிமுதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் மற்றும் பிரபல வழக்கறிஞரான தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பலமுறை சந்தித்தனர்.

சந்திப்பில் பாஸிட்டிவ்வாக எதுவும் நடக்கவில்லை. மத்திய அரசின் அதிகார கோர பிடிகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர் சன் முதலாளிகள். கோரபிடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அதனை விற்க முடிவு செய்யபோவதாக கடந்த வாரம் ஒரு தகவல் டெஹல்கா புலனாய்வு செய்தி இணையதளம் வழியாக பரவியது.

பூமலை என்ற வீடியோ லைப்ரரி தொடங்கிய கலாநிதிமாறன் பின் சன் டிவி உருவாகி அது பல சேனல்களாக மாறி தென்னிந்தியாவின் மன்னர்களாக இருந்தார்கள் என்றால் அது மிகையில்லை. கார்ப்பரேட் ரவுடியான அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை குரு என படமாக எடுத்த மணிரத்தினம் அதில் குருபாய் பேசுவதாக ஒரு வசனம் வைத்திருப்பார், யாரை எதால அடிக்கனும்மோ அதால அடிச்சன் சிலருக்கு வெள்ளி செருப்பு, சிலருக்கு தங்க செருப்பு என பேசும். மாறனும் அப்படித்தான் அடித்து மிதித்துக்கொண்டு சென்றார். எங்கும் எதிர்ப்புயில்லை. எல்லாரும் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள் என மனக்கோட்டை கட்டினார். மனக்கோட்டை கட்டிய மாறனுக்கு உண்மை அவருக்கு எங்கு உரைத்தது என்றால் திமுக என்ற அரசியல் கட்சியோடு மோதும் போதுதான் புரிந்தது. 

திமுக தலைவர் கலைஞரின் சகோதரி மகனான முரசொலிமாறன் திமுக தலைவரின் மனசாட்சியாக இருந்தவர். திமுகவின் டெல்லி முகம்மாக விளங்கியவர். திமுக தலைவர் கலைஞரை உயிரினும் மேலாக நேசித்தவர். அவரது மகன்கள் தான் கலாநிதிமாறன், தயாநிதிமாறன். தன் மகன் கலாநிதியை மீடியா பக்கம் திசை திருப்பியவர் முரசொலிமாறன் தான். முரசொலிமாறன் இறந்தபோது அவரது குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தயாநிதிமாறனுக்கு எம்.பி சீட் தந்து தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றபின், கேபினட் அமைச்சர் என்ற பதவியும் வாங்கி தந்தார் கலைஞர். சீனியர்கள் பலர்யிருக்க திமுகவின் டெல்லி முகம்மாக, தனக்கு, திமுகவுக்கு பக்கபலமாக இருப்பார் என்பதால் கலைஞர் முன்னிறுத்தினார். ஆனால் நடந்தது யாரும் எதிர்பாராதது. 

டெல்லியில் அமர்ந்ததும் நாம்யில்லை என்றால் திமுகயில்லை என்ற எண்ணம் தயாநிதிக்குள் வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்துக்கொண்டது. 2006ல் திமுக  ஆட்சிக்கு வந்தபோது, தன் தொலைக்காட்சியால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்ற எண்ணம் சன் குழுமம் நடத்திய கலாநிதிமாறன்க்கும் வந்துவிட்டது. மாறன்கள் மத்தியரசை மிரட்டுவது, தங்கள் தொழிலை குறுக்கு வழியில் வளர்ப்பது, சக கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளை  வரவைத்து மிரட்டுவது தொடர்ந்தது. 

மாறன்களின் தினகரன் பத்திரிக்கை திமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்து கணிப்பு நடத்தியது. அதுவரை போட்டியிலேயே இல்லாத அழகிரி, தயாநிதி பெயர்கள் அந்த பட்டியலில் இருந்ததோடு, அழகிரியை விட தயாநிதிக்கு செல்வாக்கு அதிகம் என காட்டியது அந்த கருத்துகணிப்பு. அழகிரி கண் அசைவு, மதுரை தினகரன் அலுவலம் பற்றி எரிந்தது மூன்று உயிர்கள் கருகின. அப்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக திமுக சார்பில் இருந்த தயாநிதிமாறன் டெல்லியில் இருந்தபடி அப்போது கட்சியின் பொருளாளராக தமிழக மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடுவீராசாமிக்கு போன் செய்து, ஆட்சியை கலைச்சிடுவன் என மிரட்டிய மிரட்டல் தான் பாம்புக்கு பால் வார்த்துவிட்டோம் என திமுக தலைவரை அதிர்ச்சியடையவைத்தது.

ஆட்சியை கலைப்பேன் என மிரட்டும் தைரியம் மாறன்களுக்கு எப்படி வந்தது ?.

சன் டிவி தொடங்கியபோது தமிழகத்தில் அரசு அதிகாரிகளை மிரட்டியது, சுமங்கலி கேபிள்க்காக ஆப்ரேட்டர்களை நசுக்கியது, ராஜ் டிவியை ஆட்டம் காண வைத்தது, தமிழக்தில் சேனல் தொடங்கிய ஸ்டார் விஜய் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது, டாடா ஸ்கைக்காக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை மிரட்டியது, தமிழகத்தின் தினசரிகளின் வியாபாரத்தை நசுக்கியது, சினிமாத்துறையில் ஏதோச்சதிகாரம் செய்தது, எந்திரன் படத்தின் போது ரஜினியை மிரட்டியபோது அவர்கள் அமைதியாக இருந்தனர். இதை பார்த்துவிட்டு நம்மைக்கண்டு எல்லோரும் அலறுகிறார்கள் என தப்பு கணக்கு போட்டார்கள் மாறன் பிரதர்ஸ். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நேரம் வந்தபோது தங்கள் கோபத்தை திமுக மீதுதான் காட்டினார்கள். அதற்கு காரணம், மாறன்களுக்கு பின்னால் திமுக என்ற ஒளிவட்டம் இருந்தது. அதை மாறன்கள் அறியவில்லை, மற்றவர்கள் அறிந்திருந்தனர். 

மாறனின் மத்தியமைச்சர் பதவி பறிப்பு, கலைஞரின் கடிதம், மாறன்களின் மறுப்பு கடிதம், கண்கள் பனித்த வரலாறு எல்லாம் தமிழகம் அறிந்தது தான். விலக்கிவைக்கப்பட்டு இருந்தபோது மாறன் செய்த துரோகத்தை தான் திமுக தலைவர் மட்டுமல்ல திமுக தொண்டர்கள் கூட மறக்க முடியாமல் தவித்தார்கள். திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல் போனதற்கும் வரலாற்றின் கரையாகிப்போன 2ஜீ பிரச்சனை தமிழகத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அதன் தகவல்களை ஜெவுக்கு தந்ததற்க்கு பின்னால் இருந்தது இந்த மாறன்கள் தான். கண்கள் பணித்தபோதும், 2009, 2011 எம்.பி சீட் தந்ததுக்கு பின்னால் குடும்பபேரங்கள் இருந்தாலும் முழு நேர அரசியல்வாதியோடு மோதினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அனுபவிக்கிறார்கள் மாறன்கள்.

ஏர்செல் – மேக்சிஸ் நிறுவன வழக்காகட்டும், விதிமுறைக்கு மாறாக அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்த வழக்குகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் முழிக்கிறார்கள். முடியவில்லை. இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும் இதுவரை தன்னை காத்தது தனது தொலைக்காட்சிகள் கிடையாது திமுக என்கிற கட்சி என்பது. நம்மால் திமுக கிடையாது, திமுகாவால் தான் நாம் தொழிலை பிரச்சனையில்லாமல் நடத்திக்கொண்டுயிருந்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும் அவர்களுக்கு. புரியும்போது எல்லாம்மே முடிந்த கட்டத்துக்கு போய்நின்றுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக வளர்த்த ஏணியையே எட்டி உதைத்தவர்கள் என்பதால் தான் இப்போது இவர்களுக்கு உதவக்கூட யாரும்மில்லை. பிரச்சனையில் இருந்து தப்பிக்க மாபெரும் சன் சாம்ராஜ்ஜியத்தை மீடியா சாம்ராட்டாக உருவாக முயலும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு கைமாற்றிவிட முயன்று அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.

சன் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்துள்ளது. படு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர்கள் மீள்வது என்பது பெரும்பாடு என்றே தோன்றுகிறது. 

2 கருத்துகள்: