சனி, பிப்ரவரி 04, 2012

திண்டாட்டத்தில் திமுக................




திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் களோபரம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஈ.வி.கே.சம்பத், எம்.ஜி.ஆர், வை.கோ போன்ற சிலர் திமுகவை விட்டு வெளியேறும் போது ஏதாவது ஒரு கலகத்தை உருவாக்கிவிட்டு தான் போவார்கள். காராசாரமாக, அடிதடி வரை கூட அது போய்வுள்ளது. இது ஜனநாய கட்சி அப்படித்தான் இருக்கும். 

ஆனால் தற்போது நடக்கும் சண்டை வெளியே போவதற்காக நடப்பதல்ல. உள்ளேயே கலகத்தை உருவாக்கி பதவியை பிடிக்க நடக்கும் சண்டை. இந்த சண்டையில் ஈடுபட்டுயிருப்பவர்கள் கழகத்தை கடந்த 50 ஆண்டுகாலமாக சோதனைகளை சாதனையாக்கி இயக்கத்தை வழிநடத்தி வரும் கலைஞரின் பிள்ளைகள் தான் தற்போது அடித்துக்கொண்டு தங்களுக்குள் கோஷ்டியை உருவாக்கிக்கொண்டு இயக்கத்தை கரையான்போல் அரித்துக்கொண்டுயிருக்கிறார்கள். 

திமுகவுக்கு தலைமை தாங்கப்போகிறவர் கலைஞர்க்கு பின் மு.க.ஸ்டாலின் என்பது கழகம் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அறிந்ததே. அவர் கலைஞரின் பிள்ளை என்பதற்காக மட்டுமல்ல. கழகத்திற்கான அவரது உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. கலைஞர்க்கு அடுத்து தமிழ்நாட்டில் ஸ்டாலின் கால் படாத கிராமங்கள் இல்லை எனக்கூறும் அளவுக்கு கட்சிக்காக வலம் வருபவர். இன்றும் சிறைச்சாலை செல்வது முதல் போராட்டத்துக்கு தலைமை தாங்குவது வரை முன்னணியில் நிற்க்கிறார் பதவிக்கு வருவதில் மட்டும் பின் தங்கியே இருந்தார். இன்று இயக்கத்தில் தலைவர் தேர்தல் நடத்தினாலும் தொண்டர்களின் ஏகபோக ஆதரவு ஸ்டாலின்க்கு கிடைக்கும். அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. 

ஆனால் ஸ்டாலின்க்கு போட்டியாக கட்சியில் முக்கிய பதவிக்கு ஆசைப்படும் அழகிரி, கனிமொழி அப்படியல்ல. கலைஞரின் மகன் என்ற பந்தாவையும், பின்னணியையம் கொண்டு கட்சிக்குள் வந்தவர் அழகிரி. மதுரையை மையமாக கொண்டு முரசொலி இதழை கவனித்துக்கொள்ள சென்றவர் படிப்படியாக கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைத்து முத்த தலைவர்களை இழிவு படுத்தியவர். இவரின் தொல்லைகளால் கட்சியினர் அதிகம் பாதிக்கப்பட்டனர். 

அதேவேலையில், தென்மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்காக உழைத்தார் மறுக்க முடியாது. மற்றப்படி அவர் இயக்கத்துக்காக இதுவரை எந்த தியாகமும் செய்ததில்லை அப்பன் பதவி தம்பிக்கு போகிறதே என்பதற்காக தனக்கும் பதவி வேண்டும்மென வீம்புக்கு தென்மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வாங்கினார். எம்.பி சீட் வாங்கி மத்தியமைச்சராகியுள்ளார். திமுக தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் இருக்கும்போது வீரவசனம் பேசிய அழகிரி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வாரன பின் அவரின் நடவடிக்கை கண்டு பயந்து பதுங்கி கிடக்கிறார் அஞ்சநெஞ்சன். 

அந்த குடும்பத்துக்காறங்க மட்டும் தான் பதவிக்கு வரனுமா? ஏன் பொண்ணு வரக்கூடாதா என இராஜாத்தியம்மாளின் சக்களத்தி சண்டையால் கனிமொழி பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஸ்பெக்டராம் ஊழல் விவகாரத்தில் சிறைச்சென்றார். அவரால் கட்சிக்கு கிடைத்தது?. கலைஞர் தொலைக்காட்சி குழுமம் மட்டும் தான். அதை தவிர வேறில்லை. இவர்கள் இருவரும் அடுத்த தலைவர் பதவிக்கு ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?. 

கட்சியில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் போது இவர்கள் பின்னால் இருப்பவர்கள் தான் எதிர்க்கிறார்கள். தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டு வீரபாண்டி ஆறுமுகம் கர்ஜிக்கிறார் இதை காணும் போது உண்மையான ஜனநாயகம் திமுகவில் இருப்பதை கண்டு மகிழ்ச்சிக்கொள்ள வேண்டியுள்ளது. இது தமிழகத்தில் மற்ற கட்சிகளிடத்தில் இல்லை. அதற்காக மாவட்ட செயலாளர்கள் 3 முறைக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது என்ற விதி தவறானது என வீரபாண்டிஆறுமுகம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

காரணம், கட்சி தொடங்கிய போது ஒருவர் மாவட்ட செயலாளராக இருப்பார். அவர் இறந்தபின் அவரது பிள்ளை வருவார். அவன்போன பின் அவனது பிள்ளையிருக்கும். கட்சி பதவியில் தான் அப்படியென்றால் எம்.எல்.ஏ சீட், எம்.பி சீட் முதல் கவுன்சிலர் பதவி வரை இதே நிலை திமுகவில் மட்டுமே நீடிக்கிறது. அமைச்சராக, சேர்மனாக இருப்பவர்கள் கூட அந்த ஐந்து ஆண்டு காலத்திற்க்கு தங்களது கட்சி பதவியை விட்டு விலகி இருக்க மறுக்கிறார்கள். இப்படியிருந்தால் எப்படி கட்சி வளரும். 

ஸ்டாலின் தற்போது மாவட்டந்தோறும் சென்று இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். நான் கேட்கும் கேள்வி?. இளைஞர் அணியில் இருப்பவர்களில் ஒருவரை அதற்க்குண்டான பதவிக்கு கொண்டு வருகிறிர்கள். நிச்சயம் ஏற்றுக்கொள்ள கூடியது. அதே நேரத்தில், நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முன் கட்சியில் புதிய இளைஞர்களை சேர்த்துள்ளீர்களா?. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் பணியை திமுக செய்யவில்லை என்பதே எதார்த்தம். 

அதிமுக இளம்பெண் - இளைஞர் பாசறை ஆரம்பித்தபோது கொத்து கொத்தாக போய் சேர்ந்தார்கள். அதேபோல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோதும் அதில் தன்னை இணைத்துக்கொண்டார்கள். கட்சி பதவிகள் கிடைத்தது. கடந்த சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலின் போது திமுகவுக்கு களப்பணியாற்ற இளைஞர்கள் இல்லை என்பதே எதார்த்தம்.  

அதிமுகவில் இருந்து வந்தவர்களை வாங்க வாங்க என அழைத்து பதவிகள் தந்து, காலம்காலமாக கட்சிக்கு கஸ்டப்பட்டவனை நடுத்தெருவில் நிறுத்தும் பணியை ஸ்டாலின் செய்வதால் தான் கட்சிக்காரன் அழகிரி பின்னால் போகிறான் இதை முதலில் ஸ்டாலின் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

அதேபோல் கட்சியில் மாற்றம் என்பது படிப்படியாக செய்யவேண்டியது. இந்த நிமிடம் வரை பதவியில் இருப்பவர்கள் தான் அதிகம் சம்பாதித்து மூட்டை கட்டி வைத்துள்ளார்கள். இவர்கள் தான் வரும் ஐந்து ஆண்டு காலத்திற்க்கு செலவு செய்யவேண்டும். புதியதாக கட்சியில் சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு திமுகவின் வரலாற்றை கற்று தர வேண்டும். 

ஏன் இதைக்கூறுகிறேன் என்றால். பொறுப்பு தர இளைஞர் அணியினருடன் ஸ்டாலின் நடத்தும் நேர்காணல்களில், இளைஞர் அணியின் அமைப்பாளர் யார் என்ற கேள்விக்கே பதில் தெரியவில்லை. இவர்களுக்கு எங்கிருந்து வரலாறு தெரியபோகிறது. கட்சி என்பது பதவிக்கானது மட்டுமல்ல, போராட்டத்துக்குமானது, மக்களுக்குமானது என்பதை உணர்த்த வேண்டும். அப்போது தான் வளர்ச்சியை நோக்கி வீர நடை போட முடியும். 

ஸ்டாலின்க்கு பொறுப்பு தருவதில் ஆகட்டும், கட்சியை சீரமைப்பு செய்வதிலாகட்டும் தயக்கம் காட்ட கூடாது. தயங்கினால் வருங்காலம் இருண்டகாலமாகி விடும். 


புத்திரர்கள் மீதான பாசத்தில் தவிக்கும் கலைஞர் உறுதியான முடிவு எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இயக்கத்துக்கே இழப்புகள்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக