புதன், ஜூலை 23, 2014

கட்ஜீ உருவாக்கிய சர்ச்சை. யார் அந்த நீதிபதி ?




ஜனநாயகத்தின் நான்காவது தூணான இந்திய ப்ரஸ் கவுன்சில் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜீ உள்ளார். இவர் கடந்த 20ந்தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை, அவரது முகநூல் பகுதியில் எழுதிய தொடர் கட்டுரை, டிவிக்கு அளித்த பேட்டியில் நடந்துக்கொண்ட முறை, நேர்காணல் நடத்தியவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் எழுந்து போனது போன்றவை நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோ இல்லையோ அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி நாடாளமன்றத்தை முடக்கும் அளவுக்கு போய்வுள்ளது.

கட்ஜி குறிப்பிட்டது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த மாவட்ட நீதிபதியொருவதை தற்காலிக மெட்ராஸ் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி, பின் நீதிபதி, பின் கர்நாடகா மாநில உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க அப்போது மைய அரசில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தை சேர்ந்த கூட்டணியில் இருந்த பெரிய கட்சி ( திமுக ) எம்.பிகள் மிரட்டி தேவையை நிறைவேற்றிக்கொண்டார்கள். இதற்கு, அந்த காலக்கட்டத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த லகோட்டி, பாலகிருஷ்ணன், சபர்வால் போன்றோர் உடந்தையாக இருந்தார்கள் என்றார்.

இதோடு நிறுத்தியிருந்தால் ஏதோ சொல்றார் என கேட்டுக்கொண்டு போய்யிருக்கலாம். சந்தடி சாக்கில் தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா நீதிமன்ற விவகாரத்தில் தலையிட்டதே கிடையாது. நீதிக்கு தலை வணங்குபவர் என ஒரு பிட்டை போட்டுள்ளார். இந்த வரிகள் தான் கட்ஜியின் நேர்மைக்கு விழுந்த மிகப்பெரிய அடி.

கட்ஜி சொல்வது இருக்கட்டும் நீதிமன்றம் ஒன்றும் புனிதமானதல்ல. நீதிபதிகள் கடவுளும்மள்ள. நீதிபதி நியமனம் என்பது அரசியல் பதவியாகி நீண்ட காலமாகிறது. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பினால் சட்டம் படித்த யாரும் நீதிபதியாகலாம் என்பது எழுதப்படாத விதி. நீதிபதிகளும் கறுப்பு அங்கி அணிந்த அரசியல்வாதிகளாகி நீண்டகாலமாகிவிட்டது.

பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிட்டயர்டுக்கு பின் அரசின் கருணை பார்வை தங்களுக்கு கிடைக்க வேண்டும்மென அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது அதிகரிக்க தொடங்கிவிட்டது என்பது டீ கடையில் காலையில் பேப்பர் படிக்கும் பாமரன் வரை அறிந்தது தான். அப்படி அரசின் பார்வைக்காக ஏங்கி, அரசின் ஆதரவு கரங்களில் ஏந்திக்கொள்ளப்பட்டவர் கட்ஜி. அவர் தான் இன்று ஒய்வு பெற்ற நீதிபதிகளை பற்றி விமர்சித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விவகாரத்தை இப்போது கிளறுவதே வேடிக்கை. அதிலும் தன்னை யோக்கிய சிகாமணியாகவும், மற்றவர்களை அயோக்கியர்கள் போலவும் பேசுவது கேவலமான செயல்.

நீதித்துறையை திமுக ஆட்டிப்படைத்தது என விமர்சித்தபோது கேப்பில் “நீதி காக்கம் வீராங்கணை“ என ஜெவை புகழ்ந்தது தான் அதில் காமெடி. நீதிமன்றத்தை தனது கால் செருப்பாக நினைப்பவர் ஜெ என்பது நாடறிந்தது. தனக்கு எதிராக தீர்ப்பு எழுதிய நீதிபதி வீட்டுக்கு குடிநீர், மின்சாரம் கட் செய்தது, மற்றொரு நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா கேஸ் போட்டது, தனது டான்சி தீர்ப்பை விலை கொடுத்து வாங்கியது, தனக்கு எதிராக வாதாடிய சண்முகசுந்தரம் என்ற மூத்த நீதிபதி அடியாட்களை வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை சுமார் 15 ஆண்டுக்கும் மேலாக இழுத்தடிப்பது, இந்திய நீதித்துறையில் அதிக முறை வாய்தா வாங்கிய வழக்காக இருப்பது, என் வழக்கை இந்த நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என வித்தியாசமான கோரிக்கையோடு நீதிமன்றம் செல்வது, என் வழக்கை அரசின் சார்பில் இந்த வழக்கறிஞர் தான்  வாதாட வேண்டும் என கேட்பது, தமிழகரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை முட்டாள்கள் போல் நடத்துவது என தொடர்கிறது. அவரை நீதி விவகாரத்தில் தலையிடாதவர் என வர்ணிக்கிறார்.

அது அவரது சொந்த விருப்பம் எனச்சொல்லிவிட்டு விலகி போய்விட முடியாது. ஏன் எனில் ஜனநாயகத்தின் நீதி என்கிற தூணில் நீதிபதியாக இருந்தவர் இப்போது பத்திரிக்கை துறையின் தூணாக இருக்கிறார். இவர் அப்பட்டமாக பொய்யுறைப்பது வேதனையாக இருக்கிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும்.

கட்ஜி குற்றம் சாட்டும் அந்த உயர்நீதிமன்ற நீதிபதி யார் ?


குற்றச்சாட்டுக்குள்ளனான முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதை மறுத்துள்ளனர். ஆனால் குற்றம்சாட்டப்படும் நபர் உயிருடன் இல்லை. அவர் 2009 அக்டோபர் மாதம் காலமாகிவிட்டார். மறைந்தவர் மீது தான் குற்றம்சாட்டுகிறார்.

அவர் நீதிபதி அசோக்குமார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். பாளையம்கோட்டை, திருச்சியில் படித்தவர். சென்னையில் லா முடித்தவர் வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் வழக்கறிஞராக இருந்தபோது அதாவது 1977 மற்றும் 1980ல் ஜனதா கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தவர்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பதவிக்கு வந்தார். பின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் நிரந்தர நீதிபதியாகி அப்படியே ஆந்திரா மாநில உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009 ஜீலை மாதம் ஓய்வு பெற்றவர். அடுத்த இரண்டு மாதத்தில் இயற்கை எய்தினார்.

இவர் 2006ல் ஜெ ஏவிய போலிஸ் படையால் நள்ளிரவில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனச்சொல்லி கைது செய்யப்பட்ட கலைஞரை ரிமாண்ட் செய்தவர் நீதிபதி அசோக்குமார். அதேபோல் சரண்டரான ஸ்டாலினை 15 நாள் ரிமாண்ட் செய்தவர் இதே நீதிபதி தான்.

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கலைஞர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞரை நோக்கி சாட்டை அடிப்போன்ற கேள்விகளை கேட்டதால் ஜெ வுக்கு எதிரியானவர். அவர் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. உளவுத்துறை அறிக்கையை மீறி பிரதமரை மிரட்டி உயர்நீதிமன்ற நீதிபதியாக்கினார்கள் என்கிறார். 

எதற்காக இப்போது இந்த பிரச்சனை கிளம்பியது ? 

பதில் நிச்சயம் சில வாரங்களில் தெரிந்துவிடும். 

நம் சந்தேகம்,  மார்கண்டேய கட்ஜீவின் பதவி காலம் முடியப்போகிறது. கடந்த காலத்தில் பி.ஜே.பி மீது குற்றச்சாட்டுகளை சொல்லி எதிர்ப்புகளை சம்பாதித்தார். இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது பி.ஜே.பி. 

காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்களை தூக்கி எரிந்து வருகிறது மோடி அரசாங்கம். அந்த வகையில் கட்ஜீக்கும் நெருக்கடி வரலாம். தற்போது உள்ள பதவியில் இருந்து இறக்கப்பட்டாலும் வேறு நல்ல பதவியை எதிர்பார்த்து பி.ஜே.பியின் அணுகிரகத்தை எதிர்நோக்கி இப்படி செய்துயிருக்கலாம். 

அல்லது

தமிழகத்தை சேர்ந்த மறைந்த நீதிபதியொருவரை குற்றம்சாட்டி திமுகவை குறிவைத்து பிராண்டுவது, அதிலும் நீதித்துறையை காக்கும் காத்தல் தாய் என ஜெவை வர்ணிப்பதன் மூலம் வேறு ஏதோ ஒன்றை கட்ஜீ ஜெவுக்காக செய்ய நினைக்கிறார். இதற்கான வாய்பு தான் அதிகம்.

1 கருத்து: