செவ்வாய், டிசம்பர் 23, 2014

தனியார் மயமாகும் மின்வாரியம். ஆகட்டும்....... ஆகட்டும்......




அரசு நிறுவனங்கள் தனியார் மயமாவதை என் வலைப்பக்கத்தில் நானே சிலமுறை கண்டித்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் மின்வாரியத்தை தனியார் மயமாக்க மத்தியரசு சட்டம் கொண்டு வருகிறது என அறிவித்ததை அறிந்ததும் எனக்கு பெரும் சந்தோஷம். ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக பெரும் சந்தேஷமடைகிறேன். என்நிலைப்பாடு மாறுவதற்க்கு காரணம் மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் இதற்கு காரணம்.

1990க்கு முன்புவரை அதாவது நரசிம்மராவ் பிரதமராவதற்க்கு முன்பு வரை இந்தியாவில் 90 சதவித மின் உற்பத்தியை மத்திய, மாநில அரசு நிறுவனங்களே செய்தன. உலக மயமாக்களுக்கு பின் இந்திய அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க தொடங்கின.

மின்சாரதுறையை இரண்டாக மத்திய அரசின் திட்டப்படி மாநில அரசுகள் பிரித்தின. ஒவ்வொரு மாநிலமும் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தை தனித்தனியாக்கியது. மின்சார விற்பனை பிரிவை அரசு தன்னகத்தே வைத்துக்கொண்டன. மின் உற்பத்தியில் மட்டும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டன. அந்த மின்சாரத்தை அவர்கள் குறிப்பிடும் விலைக்கு மின்சார விநியோகப்பிரிவு வாங்கியது.

மின்சாரத்தை வாங்கும் விலையை வைத்து மின் கட்டணத்தை நிர்ணயிக்க மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட்டது. இது தன்னிச்சையான அமைப்பு என்றாலும் இது அரசின் காலுக்கு கீழ் தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன உத்தரவிடுகிறார்களோ அதை தான் இந்த ஆணையம் கேட்கும். மக்களிடம் கருத்து கேட்பது என்பது சும்மா கண்துடைப்புக்காக.

அரசு நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விலையை விட 800 மடங்கு அதிக விலை வைத்து தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்கின்றன. அதைதான் நமது மின்சார விற்பனை பிரிவு வாங்கி மின்விநியோகத்தை செய்து வருகிறது. இதில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கொள்ளையடிக்கிறார்கள்……. மக்கள் தலையில் வரி சுமை, மின் கட்டணம் உயர்வு என சுமை கூடுகிறது. இது ஒருபுறம்மிருக்கட்டும். விவகாரத்துக்கு வருவோம்.

மின் தடை, மின் கட்டணம் உயர்வு என மக்கள் வெதும்பும் வேலையிலும் மின்சார வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் மக்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.


சரியாக இரண்டு ஆண்டுக்கு முன்பு நகரத்தில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளரை சந்தித்த நண்பர், சார் என்னோட வீட்டு மனையின் குறுக்கே மின்சார கம்பி செல்கிறது. அதை மாற்ற வேண்டும் அப்போது தான் வீடு கட்ட முடியும் என கோரிக்கை மனு தருகிறார். அதை வாங்காமலே அதெல்லாம் மாத்தவே முடியாது என்கிறார். மாத்தவே முடியாதா விதிமுறையென்ன என அந்த பகுதி மின்விநியோக ஊழியர் உட்பட மின்வாரியத்தில் சாதாரண நிலையில் இருந்து உயர்நிலையில் இருப்பவர் வரை இதில் பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் அடக்கம் உதவுங்க. வீடு கட்ட முடியாம கஸ்டப்படறன் என தன் நிலையை சொன்னபோது, 70 ஆயிரம் தாங்க, ஒரு லட்சம் தந்துடுங்க மாத்திடலாம் என அசால்டாக சொல்ல அதிர்ச்சியானார். அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிடறன். உங்களுக்கு என்னவோ அதை செய்யறன் என பேசி பார்த்தும் பணத்த என்கிட்ட தாங்க நான் அரசுக்கு கட்டிக்கறன் ஒவ்வொருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விதிமுறைகள் என்ன என்பது பற்றி வாய் திறக்கவில்லை.

அவ்வளவு செலவாகும்மா?, யாரை நம்பி இவ்வளவு பணம் தருவது? அரசுக்கு கட்டினால் நாளை பணி முடியவில்லை என்றாலும் போராடி பணத்தை பெறலாம் இவர்களிடம் தந்தால் என யோசிக்க மின்வாரியத்தை சேர்ந்தவர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து எங்கே வேண்ணாலும் போ அதை மாற்றவே முடியாது என மறைமுகமாக மிரட்டினர். சோர்ந்து போகாமல் ஒரு வருடாமாக அலைந்தார்.

ஒருவருடத்துக்கு பின் நட்பு அடிப்படையில் அதிகார வர்க்கத்தில் அதி முக்கியமானவரை பிடித்தார் அதிகாரிகள் கொஞ்சம் இறங்கி வந்து இழுத்தடித்தார்கள்……….. அதற்குள் 8 மாதங்கள் ஓடியது……….. நீண்ட போராட்டத்துக்கு பின் 1.86 லட்ச ரூபாய் அரசுக்கு கட்ட வேண்டும். கட்டினால் மாற்றலாம் என நோட்டீஸ் தந்தனர் அதிகாரிகள். அதை வாங்கி பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே போன நண்பர் அதையும் தயார் செய்து கட்டினார். பணம் கட்டியபின்பும் 3 மாதம் இழுத்தடித்தார்கள். கடைசியாக அந்த லைனை மாற்றிவிட்டு குறிப்பிட்ட அதிகாரி உட்பட அனைவரும் வெட்கம்மே இல்லாமல் தலையை சொறிந்து வாங்கிக்கொண்டு போனார்கள் நண்பரிடம்.

அந்த லைனை மாற்றும்போது நண்பர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, ஒரு கம்பம் நடுரோட்டில் அமைந்துயிருந்த்து. அந்த ஏரியா முழுக்க முழுக்க நடுத்தர மக்கள் (ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிகம்) வசிக்கும் பகுதி. இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்லும் ரோட்டின் நடுவே மின் கம்பம் இருப்பதால் ஆட்டோ போவதில் கூட பெரும் சிக்கலாக இருந்தது. என் லைனை மாற்றும் போது இந்த கம்பத்தலயிருந்து தான் மாத்தறிங்க அதனால இந்த கம்பத்தை புடுங்கி சாலையோரம்மா தள்ளி நடுங்க என கோரிக்கை வைத்தார். இத்தனைக்கும் அந்த ரோட்டுக்கும் அவரது மனை உள்ள பகுதிக்கும் எந்த சம்மந்தமும்மில்லை.

அதற்கு அங்கிருந்த அதிகாரி உட்பட பணியாளர்கள் (8 பேர்) சொன்னது, சார் உங்க மனை மேல போற லைனை மாத்திட்டோம். அதோட விடுங்க நீங்க எதுக்கு இதப்பத்தி பேசறிங்க. இத மாத்தனம்ன்னு வருவாங்க அப்பா நாங்க கொஞ்சம் (பணம்) பார்ப்போம்மில்ல என்றார்கள் சிரித்துக்கொண்டே. இது 100 சதவிதம் உண்மை. அது மட்டுமல்ல லைனை மாற்றியபோது ஒரு வீட்டுக்கள் இருந்த கம்பம் டம்மியாக்கப்பட்டது. அதை மின்வாரியம் பிடுங்கி எடுத்துச்செல்ல வேண்டும். அந்த வீட்டுக்காரரிடம் 10 ஆயிரம் தந்தா தான் புடுங்கிம்போவோம் என்றார்கள் நண்பர்கள் கண் முன்னாலே இது நடந்தது. எத்தனை அக்கிரமம். இவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் என்ன தானதர்மத்துக்காகவா வேலை செய்கிறார்கள்.

இதுமட்டுமல்ல, இன்னோரு சம்பவம், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் போது மின்கம்பங்ளை சாலை ஓரத்தில் தள்ளி நடுங்கள் எனச்சொல்ல அதன்படி காலியாக தனியார் இடத்தில் மாற்றி நட்டுவிட்டு போய்விட்டார்கள். அதிலும் ஒழுக்கம் கிடையாது. காலி இடங்கள் வீடுகளாக, நிறுவன கட்டிடங்களாக மாறியது. ஒருவர் தான் கட்டிய கட்டிடத்துக்கு மின் இணைப்புக்காக போனபோது, லைன் பில்டிங்க ஒட்டி வருது ரூல்ஸ்படி அது தப்பு. அதனால கனெக்ஷன் தர முடியாது எனச்சொல்ல சார் பட்டா இடத்தல நீங்க கம்பத்த நட்டுட்டு இப்படி பேசனா என்ன அர்த்தம் என கேட்க பதிலுக்கு அவமானமான பதில் தான் வந்துள்ளது.  

நண்பரிடம் மின்வாரிய இடைநிலை ஊழியர் ஒருவர் நான் மாற்றி தருகிறேன் என அதிகாரிகளுக்கு தர வேண்டும் என சுளையாக ஒரு தொகையை வாங்கி சென்றுள்ளார். அரசுக்கு நீங்கள் 20 ஆயிரம் கட்ட வேண்டும் அதுக்கு தயார் பண்ணிடுங்க எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளார். இப்படி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் பணம் பார்க்கிறார்கள் அதே ஊழியர்கள். (இப்படி பல சம்பவங்கள் உள்ளன. எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டுக்கூட எழுதலாம் அந்தளவுக்கு தகவல்கள் உள்ளன.)


இதுதான் மின்வாரியத்தில் மேலிருந்து, கீழ்வரை உள்ள நிலை. ஒருகாலத்தில் ஏனோதானோவென மின்கம்பத்தை நட்டுவிட்டு சென்றனர் மின் ஊழியர்கள். அது மின்சாரம் பார்க்காத கால கட்டம் என ஏற்றுக்கொள்ளலாம். இப்போதும் ஒழுக்கம்மில்லாமல் மின்கம்பம் நடுவது எந்த விதத்தில் நியாயம்?, ஒரு பிரச்சனையை உருவாக்கி அதை தீர்க்க தம்மிடம் வரும்போது பணத்தை வாங்குவது தான் மின்சார வாரியத்தில் பணியாற்றுபவர்களின் தற்போதைய நடைமுறையாக உள்ளது. மின்சார பிரச்சனை என்பதால் மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. மக்கள் மின்சார அலுவலகத்தை தேடி செல்கிறார்கள். அதில் சிலர் நேர்மையாக இருக்கலாம். சிலர் மனசாட்சிக்கு பயந்து பணம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்து தருகிறார்கள். அவர்கள் வெகு குறைவாக உள்ளார்கள். மீதியுள்ள 90 சதவித ஊழியர்கள் அப்படியல்ல என்பதே எதார்த்தம்.

மின்வாரிய ஊழியர்கள் மட்டுமல்ல வருவாய்துறை, காவல்துறை போன்றவை மக்களை பணம் காய்க்கும் மரமாக தான் பார்க்கிறார்கள். மக்கள் என்ன ஒவ்வொரு வீட்டிலும் பணம் அச்சடிக்கும் இயந்திரமா வைத்துள்ளார்கள். அச்சடித்து கொண்டு வந்து பிச்சை போட?

மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளே, ஊழியர்களே, தொழிலாளர்களே நிகழ்கால சாட்சியாக நம் கண் முன்னால் நடந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்  கேட்டுக்கொள்ளுங்கள். பி.எஸ்.என்.எல் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. நீங்கள் அறியாததல்ல. தொலைபேசி வசதி பரவலாக வந்தபோது அங்கு பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் செய்த அலம்பல் கொஞ்ச நஞ்சமல்ல. தீபாவளி, பொங்கல் வந்தால் இவர்களுக்கு “பிச்சை“போட வேண்டும். லைன்ல க்ராஸ் டாக் வருது, ஓர்க் ஆகல என புகார் சொல்ல சென்றால் கலெக்டரை சந்தித்து விடலாம் இவர்களை சந்திக்க முடியாது. வாரக்கணக்கில் காக்கவைத்து பின் வந்து சரி செய்துவிட்டு 500 தா, 1000ம் தா என பிடுங்கி செல்வார்கள். பணம் வாங்க வேண்டும் என்பதற்காகவே தொலைபேசி லைனில் கோளாறை உருவாக்குவார்கள். எதிர்த்து கேட்டால் நாங்கள் அரசு ஊழியனாக்கும் என்பார்கள்.

2002க்கு பின் நிலவரம் அப்படியே தலைகீழ். தொலைதொடர்பு துறை தனியார் மயமானதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், மக்கள் ஆதரவு கேட்டார்கள் ஒரு சதவிதம் கூட கிடைக்கவில்லை. தனியார் மயமானதை தடுக்க முடியவில்லை. இன்று உயர்அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை தெருவில் இறங்கி வெய்யிலில் சார் எங்க நிறுவன சிம்கார்டு வாங்குங்க, டேட்டா கார்டு வாங்குங்க என சிம்கார்டு விற்கிறார்கள், விளம்பர  நோட்டீஸ் தருகிறார்கள். இவர்களை பார்த்து பொதுமக்கள் எந்த விதத்திலும் பரிதாபம் கொள்ளவில்லை.


உங்கள் நிலையும் அதுதான். 

2 கருத்துகள்:

  1. இப்ப நீங்க தனியார் call centre ஐ கூப்பிடவுடனே உங்க வீடு வாசல்லே வந்து நிக்கிரானாக்கும். அட நீங்க வேறே இவனுங்க தொல்லை அவனுங்களை விட ஜாஸ்தியல்ல போச்சு. இதுல call centre ஐ கூப்பிட்டாலே பைசா வசூளிக்கிறானுங்க.

    பதிலளிநீக்கு