வெள்ளி, ஏப்ரல் 15, 2022

ஆரியர்கள் அவலமாக உருவாக்கிய ஆண்டுகளின் பெயர்கள்.

 


தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பள்ளி நண்பர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுவில் வாழ்த்து குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொண்டுயிருந்தார்கள்.  

தை மாதத்தைதான் நான் தமிழ் புத்தாண்டா கொண்டாடுகிறேன் என பதில் பதிவு செய்தேன்.

சித்திரை மாதம்தான் ஆண்டு தொடக்க நாள் என ஃபோன் செய்து வாதிட்டான் நண்பனொருவன்.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்துக்கொண்டு மாமன்னர்களின் ஆலோசகர்கள் என்கிற பெயரில் மறைமுகமாக தங்களது அதிகாரத்தை நடத்தியபோது கி.பி 14ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத வழியில் விதவிதமாக புராணங்களை எழுதி இதுதான் நமதுவரலாறு என நம்பவைத்து மன்னர்களை கடைப்பிடிக்க வைத்தார்கள், மன்னர்களே வணங்கியபோது சாதாரண மக்கள் எம்மாத்திரம்.

தமிழ் ஆண்டுகள் என நம்மக்களை நம்ப வைத்த சமஸ்கிருத ஆண்டுகள் எப்படி உருவானது?

கடவுள் எனச்சொல்லப்படும் கிருஷ்ணனுக்கும் நாரதரும் கூடி பெற்றெடுத்த 60 பிள்ளைகளின் பெயரே 60 ஆண்டுகளின் பெயர்கள் எனச்சொல்லப்படுகிறது. அதாவது கிருஷ்ணருக்கு 60 ஆயிரம் மனைவிகள். (ராமாயணத்தில் ராமன் அப்பன் தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என சொல்லப்பட்டுயிருக்கும்) தனக்கு பெண் சுகம் வேண்டும்மென நாரதர் உடலும், மனமும் நினைக்கிறது. எல்லா ஃபிகர்களையும் கிருஷ்ணர் மனைவியாக வைத்திருப்பதால் எனக்கு ஒரு பெண் துணை வேண்டும் எனக்கேட்டாராம். இரவில் ஊரில் உள்ள வீடுகளுக்கு செல், நான் இல்லாத வீட்டில் நீ இரு என்றானாம் கிருஷ்ணன். (அட நன்னாரி பயலே அப்படின்னு வடிவேல் பாணியில் கேட்க தோனுதா?) நாரதர் இரவில் ஒவ்வொரு வீடாக போனபோது எல்லா வீட்டிலும் கிருஷ்ணரே இருந்தாராம். (அப்பவே ஜெராக்ஸ் மிஷின் இருந்துயிருக்கு) கடுப்பான நாரதர் தன் உடலின் காம ஆசையை தீர்க்க கிருஷ்ணனிடம் திரும்பவந்து, என்னய்யா எல்லா வீட்லயும் நீயே இருக்க என சண்டைப்போட்டதும், நீ போய் ஆற்றில் குளித்துவிட்டுவந்தால் பெண்ணாய் மாறுவாய், அழகிய மங்கையாக மாறியதும் என்னிடம் வா என்றானாம் கிருஷ்ணன். நாரதனும் பெண்ணாக மாற, கிருஷ்ணனுடன் கொஞ்சி காமம் செய்ததில் ஒரே பிரசவத்தில் 60 குழந்தைகள் பிறந்ததாம். அந்த குழந்தைகளின் பெயரே ஒவ்வொரு ஆண்டுக்கும் வைக்கப்பட்டுள்ளது. பிரபவ — விபவ — சுக்ல —  பிரமோதூத — பிரசோற்பத்தி — ஆங்கீரச —ஶ்ரீமுக — பவ —யுவ — தாது — ஈஸ்வர — வெகுதானிய — பிரமாதி — விக்கிரம — விஷு — சித்திரபானு — சுபானு — தாரண — பார்த்திப — விய — சர்வசித்து — சர்வதாரி — விரோதி — விக்ருதி — கர — நந்தன — விஜய — ஜய - மன்மத — துன்முகி — ஹேவிளம்பி —விளம்பி — விகாரி — சார்வரி — பிலவ — சுபகிருது — சோபகிருது — குரோதி — விசுவாசுவ — பரபாவ — பிலவங்க — கீலக — சௌமிய — சாதாரண — விரோதகிருது — பரிதாபி — பிரமாதீச — ஆனந்த — ராட்சச — நள — பிங்கள — காளயுக்தி — சித்தார்த்தி — ரௌத்திரி — துன்மதி — துந்துபி — ருத்ரோத்காரி — ரக்தாட்சி — குரோதன — அட்சய .

 

நிமிஷத்துக்கு ஒன்றுயென 60 பிள்ளையை பெண்ணாக மாறிய நாரதர் பெற்றுள்ளார். இந்த ‘மெகாபிரசவத்தை’ தொடர்ந்து அடிப்படையிலேயே ஒருக்கேள்வி எழுகிறது. அதாவது இப்படி ஒரே பிரசவத்தில் 60 பிள்ளைகளை ஒருபெண் பெற முடியுமா? அப்படியாயின் அவரது வயிறு எவ்வளவு பெரியதாக இருந்துயிருக்கும்? (பாகுபலி செட் கூட அவ்வளவு பிரமாண்டமாக இருந்துயிருக்காது) அதெல்லாம் விடுவோம். ஆணும், ஆணும் ‘கூடினால்’ குந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இப்போதுபோல் அப்போது ஆப்ரேஷன் செய்துக்கொண்டு பெண்ணாக மாறியிருப்பார் எனச்சொன்னால், கருபப்பை எங்கே என்கிற கேள்வி எழுகிறது?

கருப்பபை இல்லாமல் கடவுள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றால் எதற்காக சிவன் – பார்வதி, விஷ்ணு – லட்சுமி, பிரம்மன் – சரவஸ்வதி கணவன் – மனைவி என கதை சொல்லவேண்டும். முருகனுக்கு எதற்கு இரண்டு மனைவி? சிவன் விஷ்ணுவையும், பிரம்மனையும் திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளாக பெற்றுக்கொண்டுயிருக்கலாம்மே?

இந்த 60 சமஸ்கிருத ஆண்டுகளிலும் சாதி வர்ணம் பார்க்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார் கடவுள் சிலைகளை உருவாக்கும் தோழர் சிற்பிராஜன். இந்த 60 சமஸ்கிருத பெயர்களின் தமிழ் அர்த்தம் என சிலவற்றை குறிப்பிட்டுள்ளார். விகாரி = அசிங்கமான, சார்வரி = பலாத்கார எழுச்சி, பிலவ = நச்சுத் துளை, குரோதி = வன்மம் பிடித்தவள் என்கிறது. இப்படி ஒவ்வொரு பெயருக்கும் இப்படி அசிங்கமான அர்த்தம் கொண்டதாகவே இருக்கிறது.

இல்லையில்லை இதுதான் தமிழ் ஆண்டுகளுக்கான பெயர்கள் என வாதாடுபவர்களுக்கு அவரே மற்றொரு கேள்வியை எழுப்புகிறார். சார்வரி, விகாரி, பிலவ, குரோதி என்கிற ஆண்டு பெயர்கள் தெலுங்கில், கன்னடத்தில், சமஸ்கிருதத்தில், ஹிந்தியில், சிங்களத்தில் எப்படி இருக்கு? அப்படி இருக்கும் பெயர்கள் எப்படி தமிழ் ஆண்டுகளின் பெயர்களாக இருக்க முடியும் எனக்கேட்கிறார்?

இந்த பெயர்களில் மட்டும்மல்ல சமஸ்கிருத பண்டிட்டுகள் எனச்சொல்லிக்கொள்ளும் சங்கிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதியதாக சொல்லப்படும் மகாபாரதம், ராமாயணம் போன்றவை இப்படி லாஜிக் இல்லாத கதைகளாகவே உள்ளன. ராமாயண கதை என்பது 50 விதமானதாக உலகத்தில் உள்ளது. சீதையை ராவணன் கடத்தினான் என்கிறது ஒரு ராமாயணம். மற்றொரு ராமாயணம் சீதையை ராவணன் காப்பாற்றினான் என்கிறது, மற்றொரு ராமாயணம் பெண் பித்தனான ராமனை தசரதன் காட்டுக்கு அனுப்பினான் என்கிறது. வால்மீகியின் ராமாயண நாயகன் ராமன் அசைவம் சாப்பிடும் பட்சி என்கிறார். அவரைப்பார்த்து காப்பியடித்த கம்பரின் ராமாயணம் ராமனை சைவ பட்சி என்கிறது. வால்மீகி, சீதை கற்பை நிரூபிக்க தீயில் இறக்கினான் என்கிறான், கம்பன், தன் கற்பை நிரூபிக்க சீதையே தீயில் இறங்கினாள் என்கிறான். அதேபோல் மகாபாரத நாயகி பாஞ்சாலி, கர்ணனின் காதலி என்கிறது. மற்றொரு மகாபாரதம் பழிவாங்கவே ஐவரை திருமணம் செய்தால் என்கிறது.

இப்படி ஆரியர்கள் எழுதிய நூல்களின் பித்தாலட்டங்களை, ஆன்மீகம் என்கிற பெயரில் சாஸ்திரம், சம்பிரதாயம், மந்திரங்களை உருவாக்கி மக்களை அடிமையாக்கியுள்ளார்கள் என்பதை படித்துணர்ந்தபின்பே ஒருநூற்றாண்டுக்கு முன்பு தமிழ் ஆண்டுகள் என தனியே பெயர்களை, ஆண்டுகளை உருவாக்கினார்கள் தமிழறிஞர்கள். 1921ஆம் ஆண்டு தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழ் இலக்கிய நூல்கள், தொல்காப்பியத்தின் பாடல்களின் அடிப்படையில் ஆவணி என இருந்த தமிழ் புத்தாண்டு என்பது பின்பே சித்திரை என மாற்றப்பட்டது. அதனை தை மாதம் என மாற்ற வேண்டும், அதுதான் காலக்கணிப்பின் படி சரியானது என ஆய்வு செய்து அறிவித்த தமிழறிஞர்களின் கருத்து. அதேபோல் திருவள்ளுவர் ஆண்டு என்கிற ஒன்றை உருவாக்கினார்.

1981ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகதமிழ் மாநட்டில்தான் தமிழறிஞர்கள் ஒன்றுக்கூடி தமிழ்புத்தாண்டு என்பது தை முதலாம் தேதி என அறிவித்தார்கள். அப்போதைய தமிழ்நாடு அரசாங்கம் திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக்கொண்டது. தமிழர்களின் புத்தாண்டு என்பதை சித்திரை என்பதை தை என மாற்றவில்லை.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், "நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!" என்றார்.

2008ல் கலைஞர் சட்டம்மியற்றி தை 1 தமிழ்புத்தாண்டு என்றார். பின்னர் ஆட்சிக்கு வந்த பாப்பாத்தி என தன்னை சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சித்திரை என மாற்றினார்.

இயற்கை வாழ்முறைப்படி வெய்யில் காலத்தை யாரும் ஆண்டின் தொடக்க நாளாக அமைக்கமாட்டார்கள். தை மாதம் என்பது மழைக்காலம் ஓய்ந்து விவசாயம் செய்ய ஏற்ற மாதம். தமிழர்கள் காலத்தை இயற்கையை ஆதாரமாகக் கொண்டு பிரித்தார்கள். ஒரு நாளை..... 

 
வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம் என பிரித்து வைத்திருந்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். 

ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக