வெள்ளி, டிசம்பர் 13, 2013

அன்பே அழகானது. – பகுதி 13.



சுதா அந்த ஐஸ்கிரீம் பார்லர் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள். இதான் அந்த பார்லர் இறங்குக்கா. பின்னால் அமர்ந்திருந்த ஜானகி இறங்கியபடி என்னடீ சின்ன பார்லரா ?.

பார்லர் சின்னது தான் ஆனா இங்க விக்கறதுயெல்லாம் கம்பெனி ஐஸ்கிரிம்க்கா.

ஜானகியும், சுதாவும் அந்த பார்லருக்குள் சென்று அமர்ந்தனர். அங்கிருந்த நடுத்தர வயதுள்ளவரிடம் ஒரு ஸ்டாபெரி, ஒரு வெண்ணிலா என்றாள். ஐஸ்கிரிம் எடுத்து வந்து வைக்க இருவரும் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டபடி ஜானகி சுதாவிடம், எம்.எஸ்.சி முடிச்சிட்ட அதுக்கப்பறம் என்ன கல்யாணம் தானே.

கல்யாணம்மா நோ சான்ஸ்.

என்னடீ நோ ங்கற. யாரையாவது லவ் பண்றியா?.

லவ்வா நீ வேறக்கா அப்பா காதுல கேட்டுச்சி கொன்னு போட்டுடுவாரு.

அப்பான்னா அப்படித்தான் இருப்பாங்க. அதுக்காக லவ் பண்ணாம இருக்க முடியும்மா.

நீ வேற சும்மாயிருக்கா. அடுத்து எம்.பில் பண்ணப்போறன்.

இப்படியே படிச்சிக்கிட்டு இருந்தன்னு வச்சிக்க கிழவியாகிடுவ. ஜாலியா இருக்கற வயசு இதுதான். கல்யாணத்துக்கப்பறம் மாமனார், மாமியார், வீட்டுக்காரர், குழந்தைன்னு லைப் மாறிடும். அதனால காலேஜ் படிக்கறப்பவே ஒரு நல்ல பையனா பாத்து லவ் பண்ணு, ஜாலியா இரு.

அய்யோ அக்கா என் லைப்ல லவ்வுக்கே இடம்மில்ல. அதனால வேற ஏதாவது பேசு.

என்னடீ இப்படி பேசற.

நீ இப்படி கேட்டது அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது பக்கத்து வீட்டு பொண்ணுன்னு பாக்கமாட்டாரு பளார், பளார்ன்னு அடிப்பாரு உஷார்.

உங்க வீட்ல எல்லாரும் ஏன்டீ இப்படி உங்கப்பாவுக்கு பயந்து சாகறிங்க. கொஞ்சமாவுது எதிர்த்து பேசுங்கடீ.

அவர் நல்லவர்க்கா எங்க மேல பாசம்மாயிருக்காரு, என்ன கேட்டாலும் வாங்கி தர்றாரு. இப்பக்கூட அண்ணன் பைக் கேட்டான் வாங்கி தந்தாரு. எனக்கும் இதோ ஸ்கூட்டி வாங்கி தந்துயிருக்காரு. பணம் கேட்டாக்கூட ஏன், எதுக்குன்னு கேட்காம தருவாரு. அவருக்கு எங்க மேல அளவுக்கடந்த பாசம் எங்களுக்கும் அவர் மேல பாசம் நீங்க சொல்றமாதிரி பயம்மெல்லாம்மில்ல.

பாசமானவர் தானே அப்பறம்மென்ன லவ் பண்ணிட்டு உங்கப்பாக்கிட்ட போய் இவனை லவ் பண்றன் இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவன்னு  சொல்லு.

அந்த லவ் மட்டும் தான் அவருக்கு புடிக்காது. அவருக்கு புடிக்காதுங்கறதால எனக்கும் புடிக்காது.

அப்பன் செல்லம்டீ எனச்சொல்ல சிரித்துக்கொண்டே ஃபில் தந்துவிட்டு ஸ்கூட்டியை நோக்கி வந்தார்கள். வேகவேகமாக அப்போது தான் அந்த இளைஞன் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி வந்தான். வந்தவன் ஜானகியையும், சுதாவையும் தாண்டி செல்லும் போது ஜானகியின் கை மீது அவனது கை லேசாக உரசிவிட்டது.

ஸாரிங்க எனச்சொல்லியபடி திரும்பிக்கூட பார்க்காமல் சென்றான்.

ஜானகி திரும்பி முறைத்துவிட்டு நடக்க தொடங்கினாள். பார்லர்க்குள் சென்றவன் 4 ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு வேகவேகமாக திரும்பி வரும்போது ஸ்கூட்டி அருகே நின்றிருந்த சுதா மீது உரசிவிட்டான்.

சுதா ஏய் என்றதும் திரும்பி ஸாரிங்க என்றான்.

அதுயெப்படி போகும்போது என்ன இடிப்ப வரும்போது அவள இடிக்கற.

இடிக்கலைங்க லேசா கை பட்டுச்சி அவ்ளோ தான்.

இடிக்கலையா ஏன் இடிச்சிதான் பாறேன் என ஜானகி சொல்ல சும்மாயிருக்கா என கிசுகிசுத்த சுதா. அவனைப்பாத்து கண்ணு தெரியலயா உங்களுக்கு என கேட்க சாக்கடை தண்ணி நிக்கறதால தாண்டி போகும்போது லேசா பட்டுடுச்சி அவ்ளோ தான் என்றவன் வேகவேகமாக நடக்க தொடங்கினான்.

போறதப்பாரு பொறுக்கி மாதிரி என்றாள் ஜானகி.

சரி விடுக்கா என்றபடி ஸ்கூட்டியை கிளப்பியவள், என்னக்கா அவன் இடிக்கலன்னதும் ஏன் இடிச்சி தான் பாறேன்னு கேட்கற என கேட்டால் நக்கலாக.

சும்மாடீ.

உன் உட்பி மட்டும் இத கேட்டுயிருந்தாரு அவ்ளோதான் நீ.

அவனை நீ தான் மெட்சிக்கனும் அது சரியான பேக்கு.

என்னக்கா அவரைப்போய் இப்படி திட்டற.

பின்ன என்னடீ அது ஒரு காலேஜ்ல லெக்சரரா ஜாயின் பண்ணியிருக்கு. லாஸ்ட் சண்டே எங்கயாவது வெளியில அழைச்சிம் போடான்னு கேட்டதுக்கு நான் ஒரு லெக்சரர் காதலியோட வெளியில சுத்தறத பாத்தா பசங்க என்ன நினைப்பாங்கன்னு கேட்கறான்.

சுதா சிரித்தபடி உண்மையாவாக்கா ?.

ஆமாண்டீ.

அப்ப இனிமே கல்யாணத்துக்கப்பறம் தான் ரொமான்ஸ்சா ?.

எல்லாம் என் கஸ்டகாலம்டீ.

இரண்டு வருஷமா ஜாலியா சுத்திக்கிட்டு இருந்திங்க அது பத்தலயா?.

எப்பவும் காதலிச்சிக்கிட்டே இருக்கனும் அப்பத்தான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்.

ரொம்ப காதலிச்சா வெறுப்பாயிடும்க்கா. காதல்ல சண்டை இருக்கனும் அதுக்கப்பறம் சேர்ந்து பாருங்க ஜாலியா இருக்கும்.

என்னடீ லவ்வே புடிக்காதுன்ன அதல பீ.எச்.டி பண்ணவ மாதிரி க்ளாஸ் எடுக்கற. உண்மைய சொல்லு யாரையாவது லவ் பண்றியா ?.

நீ வேறக்கா சத்தியமாயில்ல.

உன்ன நம்பறன் ஆனா உன் வயச நம்பமாட்டன்.

உங்க இரண்டு பேர் வீட்ல தான் காதலுக்கு ஓ.கே சொல்லிட்டாங்களே அப்பறம்மென்ன கல்யாணம் செய்துக்க வேண்டியதானே. ஏதாவது வேலைக்கு போனாதான் கல்யாணம் செய்து வைப்பன்னு எங்கப்பா சொல்லிட்டாரு. அது இப்பத்தான் வேலைக்கு போக ஆரம்பிச்சியிருக்கு. தை மாசம் கல்யாணம் வைப்பாங்கன்னு நினைக்கறன்.

விடுக்கா இன்னும் இரண்டு மாசம் தானே. அதுக்கப்பறம் பார் அவர் உன்னை தினம் தினம் வெளியில கூப்ட்டும் போவாரு. பாக்கலாம் என ஜானகி சொல்ல சுதாவின் வீடு வந்தயிருந்தது. இருவரும் வீட்டுக்குள் செல்ல டிவி பார்த்துக்கொண்டுயிருந்த காவேரி, எங்கடீ போய்ட்டு வர்றிங்க?.


என் ஃபர்த்டேக்கு ட்ரீட் தரலன்னு அக்காவுக்கு கோபம். அதான் ஐஸ்கிரிம் வாங்கி தந்து அக்காவ கூல் பண்ணி அழைச்சிக்கிட்டு வர்றன்.

பொய் சொல்றா அத்தை. ஐஸ்கிரிம் வாங்கி தர்றன் வான்னு கூப்டும் போனவ அங்கப்போய் இவதான் இரண்டு ஐஸ்கிரிம் சாப்பிட்டா.

அவதான் ஐஸ்கிரிம் பைத்தியம்ன்னு தெரியும்மில்ல. அப்பறம் எதுக்கு போன ?.

ஐஸ்கிரிம் சாப்பிட்ட அவள திட்டாம என்னை ஏன் திட்டறிங்க?.

இவளை திட்டனா அவுங்க அப்பாக்கிட்ட சொல்லுவா. அப்பறம்மென்ன வீடே ரெண்டாகற மாதிரி குதிப்பாரு. அதான் அவள எதுவும் சொல்றதில்ல. எங்கயாவது கெட்டு போவட்டும் என சலித்துக்கொண்டவர் அவள விடு உங்கம்மாயெங்க?.

பஜார்க்கு போறன்னு சொன்னாங்க.

வந்ததும் சொல்லுடீ.

ம்.

அக்கா இரு வந்துடறன் எனச்சொல்லியபடி சுதா தன் அறைக்குள் நுழைந்தாள்.

தேவராஜ் வீட்டுக்குள் நுழைந்தபடி நீ இங்க என்ன பண்ற என ஜானகியை பார்த்து கோபமாக கேட்க ஜானகி அமைதியாக காவேரியை பார்த்தாள்.

கேட்கறன்யில்ல.

சும்மா அத்தைய பாத்துட்டு போகலாம்ன்னு வந்தன் என்றாள் பயந்த குரலில்.

பாத்துட்டயில்ல அப்புறம் இங்கயென்ன வேலை என குரலில் கடுமையை காட்டினார்.

அவளை எதுக்கு இப்ப மிரட்டிக்கிட்டு என கேட்டபடி ஜானகி பக்கம் திரும்பி நீ போய்ட்டு அப்பறம் வாடீ எனச்சொல்ல சிட்டாக பறந்துபோனால் ஜானகி.

வயசு பொண்ணுயிருக்கற வீட்ல வீட்டுக்கு அடங்காமா சுத்தற அவளை
எதுக்குடீ சேக்கற.

அவளும் வயசு பொண்ணு தான். நல்லப்பொண்ணு தான்.

எது காதலிக்கறவ நல்ல பொண்ணா ?.

அவுங்க வீட்லயே அத ஏத்துக்கிட்டாங்க. நீங்க எதுக்கு அதப்பத்தி பேசறிங்க. வந்து சாப்பிடுங்க என்றபடி சமையலறைக்குள் சென்றார்.

அப்போது வெளியே வந்த சுதாவை பார்த்து சாப்பிட்டியாம்மா ?.

இல்லப்பா.

டைம்மாச்சி இன்னும் சாப்பிடாம என்ன பண்ற. முகம் கழுவிக்கிட்டு வர்றன். நீ உட்காரு சாப்பிடலாம் என்றபடி பாத்ரூம் சென்றவர் முகத்தை துடைத்தபடி வாடாம்மா சாப்பிடலாம் என மகளை தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார். சாப்பிட்டு முடித்தவர் சுதாவிடம் பக்கத்து வீட்டு பொண்ணுக்கூட பழகாதம்மா.

நீங்க கொஞ்சம் சும்மாயிருக்கிங்களா. அவுங்க கூட சேராத, இவுங்க கூட சேராதன்னு சொல்றிங்க. இவளும் யார் கூடயும் பழகறதில்ல. அவளுக்கு ப்ரண்ட்ஸ்ன்னு யாராவது இருக்காங்களா?. பக்கத்து வீட்ல இருக்கறவங்களோடவாவுது பழக்கட்டும். நாலு பேரோட பழகனாதான் அவளுக்கும் நல்லது கெட்டது தெரியும்.

நாம சொல்றதவிடவா மத்தவங்க சொல்லப்போறாங்க.

நாம எப்பவும் கூடவே இருக்க முடியாது. அடுத்த வீட்டுக்கு வாழ போறவங்கறத மனசுல வச்சிக்குங்க.

என் தாய்டீ என் பொண்ணு. அவளுக்கப்பறம் தான் எல்லாம்மே. வீட்டோட மாப்பிள்ளைய தான் பாப்பன்.

வீட்ல பையன் ஒருத்தன் இருக்கான். கடைசி வரைக்கும் அவன் தான் நம்மள காப்பாத்த போறவன்ங்கறத மனசுல வச்சிக்குங்க.

காப்பாத்திட போறான் என சுதா கிண்டல் செய்யவும் ரமேஷ்சின் பைக் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

உள்ளே நுழையும் போதே எங்கடா போய்ட்டு வர்ற?

ஆபிஸ்ல தான் இருந்தன்.

நான் வரும்போது இல்லையே?

11 மணிக்கு வந்தன். நீங்க பில்டிங் ஓர்க்க பாக்க போயிருக்கறதா சொன்னாங்க. அதனால நான் ஆபிஸ்ல இருந்தன் என்றவனை பார்த்து பசியோட வர்றவன்கிட்ட உள்ள நுழைஞ்சதும்மே கேள்வி கேட்காதிங்க சாப்பிட்டு முடிக்கட்டும் அப்பறம் கேட்டுக்குங்க எனச்சொல்லியபடி ரமேஷ்சை இழுத்து சென்றாள் காவேரி.

அவனை எதுவும் கேட்ககூடாதுங்கறா என முனுமுனுத்தவரிடம் அப்பா நான் எம்.பில் பண்றம்பா?.

யோசனையில் ஆழ்ந்தார்.

அப்பா?.

எதுக்குடாம்மா நீ படிக்கனும். படிச்சது போதும். உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கறண்டா?.
என்னப்பா திடீர்ன்னு கல்யாணம்.

நான் எம்.பில் முடிச்சதும் பண்ணிக்கறன்ப்பா.

நீ படிச்சது போதும் அப்பா சொல்றத கேளுடாம்மா.

ப்ளீஸ்ப்பா.

மகள் முகத்தை பார்த்தவர் யோசிச்சி சொல்றம்மா என எழுந்து சென்றார்.

தொடரும்………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக