செவ்வாய், டிசம்பர் 30, 2014

மோடி : குனிவார் - குனிவார் - குனிந்துக்கொண்டே இருப்பார்.

இதற்கு மேல் குனிய முடியவில்லை இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இல்லையென்றால் இன்னும் குனிந்திருப்பார். ஒரு நாட்டின் பிரதமர் குனிந்து வணங்குகிறார் என்றால் வணக்கத்துக்குரியவர் எவ்வளவு பெரிய நபராக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மை தான் அந்த பெண்மணி மோடிக்கு மிக உயர்ந்த நபர் தான். மோடியை பிரதமராக்க ஓடி ஓடி உழைத்த ஒரு பெரும் நிறுவன தலைவரின் மனைவியாச்சே அவர்.

ஒரு அடிமை போல் மோடி வளைந்து வணக்கம் வைக்கப்பட்ட நபர் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மனைவி ப்ரித்தி. அதானி இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இன்றைய நிலையில் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் யார் என்றால் அது கவுதம் அதானி தான். அதன்பின் தான் காவி கும்பலே வரும். மோடியுடன் நிழல் போல் இருக்கும் அதானி, மோடி குஜராத்தின் முதல்வரானது முதல் அவருடன் நெருக்கமாக உள்ளார். நெருக்கம் ஏற்பட்டது முதல் அதானியின் வளர்ச்சி அதிவேக ரயில் வேகத்தில் தொடங்கியது.

ஷேர் மார்க்கெட்டில் விளையாடிக்கொண்டு இருந்த அதானி, படிப்படியாக நிலக்கரி இறக்குமதி, மின் உற்பத்தி என களம்மிறங்கியது. அதானி குழுமம் குஜராத்தின் முந்த்ரா பகுதியில் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்த்து. அதனால் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது.

குஜராத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, மோடி அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு வாரிக் கொடுக்கிறார். தொழில் தொடங்கப் போவதாகக் கூறி இந்த நிலத்தைப் பெற்ற அதானி குழுமம், அந்த நிலத்தின் பெரும்பகுதியை பிளாட்டு போட்டு விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை இலாபமாகச் சுருட்டிக் கொண்டது.

அதானி மட்டுமல்ல, மேற்குவங்கம் சிங்கூரில் விவசாயிகளால் அடித்து துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, தனது மாநிலத்தில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க விவசாய நிலங்களை அபகரித்துக் கொடுத்தார். வாசிங் பவுடர் தயாரிக்கும் நிர்மா கம்பெனிக்கு சிறப்பு பொருளாதார மண்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் பறித்து தந்தார். மாருதி தனது புதிய கார் தொழிற்சாலைக்கான  இடத்தை குஜராத் விவசாயிகளிடம் இருந்து பறித்து தந்தது மோடி தான். இதேபோன்று எஸ்ஸார், எல் அண்ட் டி., போர்டு இந்தியா, ஏ.பி.எல், டொரண்ட் பவர் ஜெனரேஷன், ரிலையன்ஸ் உள்ளிட்டுப் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளின் நிலங்கள் சகாய விலையில் மோடி அரசால் தரப்பட்டன. நிலத்தை சகாய விலைக்கு பெற்ற நிறுவனங்கள் அதில் பாதியை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாற்றி ஆயிரக்கணக்கான கோடி லாபமடைந்துள்ளார்கள். இந்த கார்ப்பரேட் கம்பெனிகளை குஜராத்துக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்கு வகித்தவர் கவுதம் அதானி.குஜராத் அரசுக்கு பலாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி ள்ளார்கள் என அறிக்கை தந்து ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இந்திய தணிக்கை துறை.

இதே குஜராத்தில் விவசாயிகள் தமது நிலத்தில் 45 மீட்டர் ஆழத்திற்கு மேல் கிணறு தோண்டினாலோ, ஆழ்துளை கிணற்றில் போர்வெல் போட அரசின் அனுமதி பெற வேண்டும். எடுக்கப்படும் நிலத்தடி நீரை எப்படி எடுத்தோம் என அரசுக்குக் கணக்கு காட்ட வேண்டும். தவறினால், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் அளிக்க வகை செய்யும் சட்டமொன்றை நிறைவேற்றியது மோடி அரசு. இதே மோடி அரசு தான் பெரும் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்ச தங்கு தடையில்லை என ஒப்பந்தம் போட்டுள்ளது.

குஜராத்தில் மட்டும் இவ்வளவு சுரண்டிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சுலபமாக சுரண்ட வேண்டுமானால் மோடி நினைத்தால் முடியும் என்பதாலே மோடியை பிரதமராக்க துடித்தன. கார்ப்பரேட் கும்பல்கள் காவிகளோடு கைகோர்த்து மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என “கோயாபல்ஸ்“ வகை பிரச்சாரம் செய்யப்பட்டு பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து மோடி பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

மோடி இந்தியா தூய்மையாக வேண்டும், லஞ்சம் லாவண்யம் ஒழிய வேண்டும் என பேசுகிறாறே தவிர அதற்காக கண் துடைப்பு திட்டங்களை தான் செய்கிறார் அதை உற்று நோக்கினால், ஆய்வு செய்தால் தெரியும்.




பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக வெளிநாட்டு பயணம் செய்ததை விட கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பயணம் செல்வது அதிகரித்து வருகிறது. சமீபத்திய பயணம், ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் ஜீ8 மாநாட்டுக்கு செல்வதாக பயணம் மேற்க்கொண்டார். அவரோடு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தலைமையில் வர்த்தக குழுவும் சென்றது. பயணத்தின் இடையே குயின்ஸ்லாந்து மாகாண அரசின் பிரதமர் கேம்ப்பெல் நியூமேனை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவின் கர்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தோண்டிடும் நிலக்கரியில் மூன்றில் இரண்டுபங்கினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதாகக் கூறுகிறது அதானிகுழுமம். இதற்கான நிதியாதாரத்தை இந்திய பாரத வங்கி வழங்கவுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல 62 ஆயிரம் கோடியை தூக்கி தரவுள்ளது இந்த பொதுத்துறை வங்கி. வர்த்தக ரீதியாக இந்த திட்டம் லாபகரமானதல்ல, வெற்றி பெறும் சாத்தியம் குறைவு என சிட்டி குழுமம், மார்கன் ஸ்டேன்லி, ஜே.பி. மார்கன், எச்எஸ்பிசி, பார்க்லேய்ஸ், சேஸ்-மன்ஹாட்டன், கோல்ட்மேன் சாச்சே, டட்ச் வங்கி, ஸ்காட்லாந்து ராயல்வங்கி, கிரெடிட் அக்ரிகோல் ஆகிய சர்வதேச பெரும் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இத்திட்டத்திற்காக கடன் அளிக்க மறுத்துள்ளன.  ஆஸ்திரேலியாவின் எரிசக்தித் துறை அமைச்சரும் இந்தியாவின் எரிசக்தியை தீர்க்கும் அளவுக்கு சிறந்த திட்டமல்ல எனக்குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல தரப்பும் ஜகா வாங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்துக்கு, ஏற்கனவே 72,732 கோடி ரூபாய் பல வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் வாங்கி கட்டாமல் உள்ள ஒரு குழுமத்துக்கு மேலும் 6,200 கோடி ரூபாய் கடன் தர ஒப்பந்தம் போட்டுள்ளது எஸ்.பி.ஐ என்கிற பொதுத்துறை வங்கி. வெளிநாட்டில் செயல்படுத்தப்படவுள்ள ஓர் திட்டத்திற்கு இதற்கு முன்னெப்போதும் எந்த ஒரு இந்திய வங்கியாலும் இவ்வளவு பெரிய அளவில் தொகை கடன் வழங்கப்பட்டதில்லை. இதுப்பற்றி கேள்வி கேட்டால் குதர்க்கமாக பதில் சொல்கிறார்கள் எஸ்.பி.ஐ தலைமை நிர்வாகமும், இந்திய நிதி அமைச்சரும்.

அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனத்துக்கும் அவசர சட்டங்கள் மூலம் சலுகைகள் வழங்குகிறார். 

கவுதம்அதானி

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு அவசர சட்டம் மூலம் அனுமதி. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நிலக்கரி சுரங்கள் ஏலமுறையில் விடவேண்டும் என்பதை அவசர சட்டம் இயற்றி தடை செய்து பெரும் நிறுவனங்களுக்க சாதகமாக விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.  

2014 ஜனவரியில் பெரும் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது, 80 சதவித விவசாயிகளின் அனுமதி பெற வேண்டும், நகர்புறங்களுக்கு மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கும், கிராமப்புறங்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக விலை உயர்த்தி வாங்க என்ற சட்டம் அமலுக்கு வந்தது. அதனை மோடி அரசாங்கம் டிசம்பரில் அவசர சட்டம் மூலம் மாற்றி அமைத்துள்ளது. விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்கிறது புதிய சட்டம்.

இதேவரிசையில் அடுத்ததாக இரும்புதாது உள்ள பகுதிகள், பாக்சைட் உள்ள பகுதிகளை ஏலம் விடாமல் விரும்பியவர்களுக்கு தரும் வகையில் விதிமுறைகளில் அவசர சட்டம் மூலம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது மோடி சர்க்கார். தமிழகத்தில் 110 விதியின் கீழ் ஆட்சி என்றால், மத்தியில் அவசர சட்டம் மூலம் ஆட்சி நடக்கிறது.

மோடி வந்தால் இந்தியாவில் பொன்மழை பெய்யும், வறுமை ஒழியும், ஒவ்வொரு இந்தியனும் பணக்காரனாக்கி விடுவான், அமெரிக்காவே அவரிடம் மண்டியிடும் என பேசியவர்கள் இதற்கு நேர்மையாக பதில் சொல்வீர்களா ?.

மோடி இன்னும் குனிவார், கும்பிடுவார் அவரின் ஒவ்வொரு செய்கையும் கார்ப்பரேட்களுக்காக தானே தவிர ஏழை மக்களுக்காக அல்ல என்பது போகப்போக புரியும்.

1 கருத்து: