செவ்வாய், ஏப்ரல் 19, 2016

ஜெவின் ஆணவபுத்தி............


ஜெ வின் பிரச்சார மேடை அமைப்பை பிரபலமான கருத்து கந்தசாமிகள் ( அரசியல்விமர்சகர்கள், சமூகநீதி பேசுபவர்கள், மனித உரிமை போராளிகள், நடுநிலை தவறாத தமிழக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் ) யாராவது விமர்சிப்பார்கள், கருத்து சொல்வார்கள் என நானும் பார்த்து பார்த்து ஏங்கியதே மிச்சம். காத்திருந்தது போதும் நாமளாவது மனதில் உள்ளதை சொல்லிவிடுவோம் என்பதாலே இந்த கட்டுரை.......

ஒவ்வொரு முறையும் தேர்தல் களம் சில கட்சிகளுக்கு வித்தியாசப்படுத்தி காட்டிக்கொண்டே வருகிறது. ஒருக்காலத்தில் ஆட்சிக்கட்டில் அமர்ந்திருக்கும் போதே ஏழை மக்களை பார்த்தால் ஓடிப்போய் கட்டிப்பிடித்து போட்டோ பிடித்து பப்ளிசிட்டி தேடிய அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்தார் நடிகர் எம்.ஜி.ஆர். அதன்பின் அந்த கட்சியை வழிநடத்தும் ஜெ தான் இப்போது மேடையில் தன் கட்சி நிர்வாகிகளையே அருகில் உட்கார வைக்காமல் ஓரு ஸ்டெப் கீழே இறக்கி உட்கார வைத்துள்ளார்.

இளம் வயதில் சாதி தெரியாது, 40 வயதுக்கு பின் சாதி பாசம் வரும், 50 வயதுக்கு பின் சாதிவெறியாக அது மாறிவிடும் என கிராமத்தில் சொல்வார்கள். அது நிகழ்காலத்தில் நாம் கண்டு வரும் நிஜம். ( இப்போது 15 வயதிலேயே சாதி வெறியை ஊட்டுகிறார்கள் ). ஜெ வுக்கு சாதி வெறி உச்சத்தில் உள்ளது. மக்கள் முன் அது இல்லாதது போல் காட்டுகிறார்.

கடந்த காலங்களில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, கட்சியினருடன் சரிசமமாக தான் மேடையில் உட்கார்ந்திருந்தார். ஏன் மிகவும் கொடுங்கோல் ஆட்சியை நடத்திய 91-96 காலக்கட்டத்தில் கூட தனது அடிமைக்கூட்டத்தை மேடையில் உட்கார வைத்து படம் காட்டினார். அதன்பிறகான காலக்கட்டத்தில் தன் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை மேடையில் கொஞ்சம் தள்ளி உட்காரவைத்தார், பின்பு அந்த இடைவெளி அதிகரித்து அதிகரித்து இப்போது 2016 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒருபடி இறக்கி கீழே உட்கார வைத்துள்ளார்.

இது ஆணவபுத்தி மட்டும்மல்ல, குறிப்பிட்ட சாதிக்கே உள்ள ஆணவம். இதைத்தான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சமாக ஜெயலலிதா காட்டியுள்ளார். கடந்த காலத்திலும் மக்கள் உட்பட அனைவரும் என் காலுக்கு கீழே என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிரூபித்து வருகிறார் ஜெ.

கீழ்சாதிக்காரன் என ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு வரவைத்து நீயும், நானும் சமம் தான் என சொல்ல வைத்த பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் இப்படியொரு அசிங்கம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் சுயமரியாதை இழந்து வாடலாம் என்பதை அரசியல்வாதிகள் அதிலும் அதிமுகவினர் மக்களுக்கு காட்டுகிறார்கள். 

ஜெவின் அடிமைகள் தான் அப்படி உள்ளார்கள் என்றால், அவர்கள் தரும் 200 ரூபாய் பணத்துக்காகவும், ஒரு குவாட்டர்க்காக 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயிலில் மக்களும் உட்காருகிறார்கள். ஒத்த தலைவியை சுற்றி 9 ஏசிகள் ஓட, இந்த நாட்டின் எஜமானர்கள் எனச்சொல்லப்படும் மக்கள் வெளியில் காய்கிறார்கள். இந்த அநியாயம் வேறு எந்த மாநிலத்திலும் நிச்சயம் நடந்ததில்லை, இனி நடக்கவும் நடக்காது.

ஆனால் இதற்கும் தமிழ் சமூகத்தில் வக்காலத்து வாங்கவும் பலர் நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு உள்ளார்கள் பல அடிமைகள். அந்த பொம்பளை அப்படித்தான்பா என சகஜமாக புறம்தள்ளிவிட்டு அவரை புனிதராக்க முயல்கிறார்கள். இதையே ஒரு கருணாநிதியோ, ராமதாஸ்சோ செய்திருந்தால் இந்த அடிமை புத்தியுள்ளவர்கள் சும்மா விட்டுயிருப்பார்களா ?.

2 கருத்துகள்:

  1. சிந்திக்க வேண்டும் ஊடகத்தில் இருப்போர் மட்டுமல்ல வாக்காளர்களும் தான்!

    பதிலளிநீக்கு
  2. மக்கள் வாக்கு மாற்றம் தருமா?
    காலம் பதில் சொல்லுமே!

    http://tebooks.friendhood.net/

    பதிலளிநீக்கு