சனி, ஏப்ரல் 09, 2016

கட்சியை உடைத்து விஜயகாந்தை 'வெளுக்கும்' ரசிக தொண்டர்கள்.



தேமுதிக உடைந்துவிட்டதே என ஆச்சர்யப்படுகிறார்கள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும்மில்லை. கொள்கையை அடித்தளமாக கொண்டு அமைக்கப்பட்ட திமுகவே பலமுறை உடைப்புக்கு உள்ளாகியுள்ளது. கொள்கையே இல்லாத கட்சிகள் உடையாமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்.

தேமுதிக கொள்கையோடு உருவாக்கப்பட்ட கட்சியல்ல. அதற்கு என்ன கொள்கையிருக்கிறது. சினிமா கதநாயகன் என்கிற கவர்ச்சி அவரை கட்சி தொடங்க வைத்து எதிர்கட்சி தலைவர் என்கிற அதிகாரம் வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் மக்கள். 2006ல் அவர் கட்சி தொடங்கியபோது, அவரது நீண்ட கால ரசிகர்கள் தொண்டர்களாக மாறினார்கள். பிற கட்சிகளில் பதவி கிடைக்காத, அங்கீகாரம் கிடைக்காத துக்கடாக்கள் அந்த கட்சியில் போய் இணைந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் கொண்டது தான் அந்த கட்சி.

சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தலில் தனித்து நின்று தன் பலத்தை பார்த்துக்கொண்டவர் 2006ல் தனியாக சட்டமன்றம் சென்றார், 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 29 எம்.எல்.ஏக்களுடன் எதிர்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தோடு சட்டமன்றம் சென்றார். இதற்கு மேல் அவர் உயரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு. 29ல் 8 எம்.எல்.ஏக்கள் அதிமுகவின் வலையில் விழுந்தார்கள்.

சரி இவர்கள் ஏன் கட்சியை விட்டு போனார்கள்?, போகிறார்கள். (போன பெரும்பாலானவர்கள் விஜயகாந்த் மன்றமாக இருந்தபோதே மாநில நிர்வாகியாக இருந்தவர்கள், கட்சியாக மாறியபின் கட்சியின் மாநில நிர்வாகிகளாக இருந்தவர்கள்). ஏன் எனில் கொள்கையில்லாத விஜயாந்த், தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக போனதால் வந்த பிரச்சனை. சிறு கட்சிகள் எப்போதும் தங்களை வளர்த்துக்கொள்ள, மக்களிடத்தில் தங்களை தக்கவைத்துக்கொள்ள பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள். தங்களது கட்சி பலம் அறிந்து சீட் பெறுவார்கள், செலவுக்கு பணம் பெறுவார்கள்.

முதல்வர் நாற்காலி தனக்கு இனி கிடைக்காது என்றதும் விஜயகாந்த்தும் 2011ல் அப்படித்தான் முடிவு எடுத்தார். 2014 நாடாளமன்ற தேர்தலில் விஜயகாந்த் எடுத்தது கண் திறந்துக்கொண்டே போய் கிணற்றில் விழுந்தது போல. பொருந்தா கட்சிகள் மற்றும் தமிழகத்தில் தன் கட்சிக்கு இருக்கும் பலத்தில் 10 சதவிதம் கூடயில்லாத பாஜக கூட்டணியில் தன் கட்சியை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

அப்போதே தேமுதிக நிர்வாகிகளை, தொண்டர்களை சோர்வடைய வைத்தது. 2016லும் அப்படி ஒரு முடிவு எடுத்ததால் தான் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக, பாஜகவுடன் பெரும் பேரம் பேசினார். திமுகவுடன் போகிறோம் என கட்சி தொண்டர்களை நம்ப வைத்தபடி பேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளது விஜயகாந்த் குடும்ப குழு. அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருந்தபோது தான் மநகூ அணி கேப்டன் அணியாக மாறியது. விஜயகாந்த் கண்ணை திறந்துக்கொண்டு கிணற்றில் விழும் முட்டாளல்ல. அப்படியும் விழுந்தார் என்றால் லாபம்மில்லாமல் இல்லை.

விஜயகாந்த் முன்பு கட்சியை வளர்த்து முதல்வராக ஆசைப்பட்டார். அது முடியாது என தெரிந்ததும் இப்போது கட்சியை வைத்து பணம் பார்க்க தொடங்கியுள்ளார். அவருக்கு அந்த ஆசையில்லை எனச்சொல்லலாம், கட்சியை கட்டுப்படுத்தும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதிஷ் நடவடிக்கைகளை பார்க்கிறபோது விஜயகாந்த்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

லாபத்தோடு அவர் போய் கிணற்றில் விழுவதால் தான், எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என இரண்டாம் கட்ட தலைவர்கள் கேட்கிறார்கள். பதில்யில்லை என்றதும் வெதும்புபவர்களை குறி வைக்கின்றன பெரும் கட்சிகள். பணம், பதவி ஆசைக்காட்ட கட்சியில் இருந்து விலகுகிறார்கள் அல்லது பெரும் கட்சிகளால் உடைக்கப்படுகிறார்கள். தேமுதிகவை நேற்று அதிமுக உடைத்தது, இன்று திமுக உடைக்கிறது அவ்வளவு தான். 


திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளில் பெரும்பாலானவரிடம் பதவி மோகமும், பண ஆசையும் நீக்க மற நிறைந்துள்ளது. கொள்கை என்பது அவர்களின் மனதில் வெகு ஆழத்தில் உள்ளது. அதனால் தான் அதிகாரத்துக்கு வர முடியாது என தெரிந்ததும் அதுவரை சுகம் அனுபவித்த கட்சிகளில் இருந்து அடுத்து அதிகாரத்துக்கு வரும் என நினைக்கும் கட்சிக்கு ஓடுகிறார்கள். இது இன்று நேற்றல்ல மனித சமூகம் தோன்றியது முதலே அதிகார ஆசை கொண்டவர்கள் ஓடுவது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இன்று கட்சியை விட்டு ஓடுபவர்களுக்கு மக்களிடம் வாக்குயில்லை. கட்சிகளுக்கே வாக்கு என்கிற நிலை உள்ளது. அதை எப்போதே உணர்ந்தவர் ஜெயலலிதா. அதிமுக என்பது, திமுக எதிர்ப்பு என்கிற ஒத்தை கொள்கையோடு தொடங்கப்பட்ட கட்சி, நடிகர் என்கிற பிம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்தபின்பு நடிகர் என்கிற பிம்பம் உதவாது என்பதால் தான் பதவி ஆசை என்கிற பார்முலாவை ஜெயலலிதா கொண்டு வந்தார். தமிழகத்தில் 80 சதவிதம் தனக்கு அதிகாரம் வேண்டும் என்கிற ஆசை கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள். அவர்களுக்கு பதவி ஆசையை காட்டிவிட்டால் எவனும் கட்சியை விட்டு போகமாட்டான் என அறிந்தே யாருக்கு வேண்டுமானாலும் அதிகாரம் தருவேன், பதவியில் தருவேன், எப்போது வேண்டுமானாலும் புடுங்குவேன் என்கிற பார்முலாவை செயல்படுத்துகிறார். நமக்கு அதிஷ்டம் அடிக்கும் என்கிற கனவுலயே அதிமுகவுக்கு ஓடுகிறார்கள். அதனால் தான் பலமுறை அதிமுக உடைந்த பின்பும் அந்த கட்சி வலிமையாக இயங்குகிறது.

திமுகவுக்கு நிரந்தர கொள்கையும், அதிமுகவுக்கு திமுக எதிர்ப்பு என்கிற கொள்கையும், பாமகவுக்கு தன் சாதி மக்கள் வளர்ச்சி என்கிற கொள்கையும் உள்ளது. தேமுதிகவுக்கு அப்படி எந்த நிரந்தர கொள்கையும் கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். லாபத்துக்காக கட்சி ஆரம்பித்தார். அதில் பங்கு பார்த்தவர்கள் இப்போது இல்லை என்றதும் பிரிகிறார்கள். கொள்கையில்லாத கட்சிகளில் அது இயல்பானதே.............

2 கருத்துகள்:

  1. சிறந்த திறனாய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  2. ஊர் பேர் தெரியாதாவனுங்களை வளர்த்தா இது தான்!

    பதிலளிநீக்கு