நடிகர் ரஜினிகாந்த் 62வது பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டார். நானும் அவரது பிறந்தநாளன்னு ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். ரஜினி அவர்கள், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கை விடுவார் என்று. ஆனால் ஒன்றையும் காணோம். (மதுரையில் அவரது ரசிகர் மன்றம் கண்டித்துள்ளது). சினிமா நடிகனிடம் அரசியல் எதிர்பார்க்ககூடாது என நடுநிலையாளர்கள் என்பவர்கள் கூறிக்கொள்ளலாம்.
கேரளாவில் சினிமா உலகம் உள்ளது. முல்லை பெரியார் பிரச்சனை ஆரம்பமானதும் மெழுகு வர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை ஒட்டு மொத்த சினிமா உலகமே திரண்டு வந்து காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தந்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழர்களில் ஒருவனான நான் தமிழனுக்கு ஆதரவு வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமே.
தமிழகத்தில் வாழ வந்த கன்னடர் ரஜினி. ரஜினியின் வாலிப வயதில் கன்னட அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து தமிழகத்திற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர் என்ற விவகாரம் வந்த போது தமிழகத்தில் ரஜினி பெரிய நடிகர். முக்கள் அவரை புறக்கணிக்கவில்லை. அவரை தமிழராகவே ஏற்றுக்கொண்டாடி வருகின்றனர்.
இன்று தமிழகமே கொதித்துக்கொண்டுள்ளது. தென்தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கேரளா ‘கை’ வைக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதையொல்லாம் அறிந்தும் மவுனசாமியராக உள்ளார் ரஜினி. தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியபோது ஏற்றுக்கொண்ட ரஜினியால் கேரளா அரசியல்வாதிகளை கண்டித்து ஒரு சின்ன அறிக்கை கூட தரமுடியவில்லையே ஏன்?.
இது ரஜினிக்கு மட்டுமான கேள்வியல்ல. தமிழ் சினிமாத்துறையை பார்த்து கேட்கப்படும் கேள்வி கேட்கறோம். தமிழ் திரையுலகில் தமிழனை மட்டுமல்ல கன்னடர், தெலுங்கர், மலையாளி, பெங்காலி, இந்திக்காரர் என யார் வந்தாலும் அந்த மாநிலத்துடன் எந்த பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை இவர்கள் நம்மை நம்பி வந்தவர்கள் என கை தட்டி வரவேற்று கொண்டாடுகிறோம். அப்படி வரவேற்று உங்களை உச்சாணி கொம்பில் உட்கார வைக்கும் எங்க மண்ணுக்கு, எங்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள். சம்பாதிப்பதை கூட கொண்டும் போய் உங்கள் மாநிலத்தில் தான் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள். அதைப்பற்றி நாங்கள் இதுவரை கேட்டோமா?.
இன்று எங்களுக்கு ஒரு பிரச்சனை உங்களிடம்மிருந்து ஒரு தார்மீக ஆதரவை எதிர்பார்க்கிறோம். அதைக்கூட செய்ய மனம்மில்லாத நீங்கள் நன்றி கெட்டவர்கள் தானே. கோடி கோடியாய் சம்பாதிக்க தமிழன் வேண்டும், தன் படம் வேறு மாநிலத்தில் கல்லா கட்ட அவர்களின் ஆதரவு வேண்டும் என உங்களை வாழ வைக்கும் தமிழனின் முதுகில் குத்துகிறீர்களே இது நியாயமா?, நீங்கள் செய்வது துரோகமில்லையா?.
அவர்களை விடுங்கள் நான் தமிழன் என பீற்றிக்கெண்டு நாளைய முதல்வன் நானே என சினிமாவில் வசனம் பேசும், சரத்குமார், விஜய் உட்பட எந்த தமிழகத்தை சேர்ந்த நடிகரிடம்மிருந்தும் தமிழனுக்கு ஆதரவு வரவில்லை என்பது அதைவிட கேவலமாகயிருக்கிறது.
இந்த நடிகர்கள் அனைவருமே பணப்பொறுக்கிகள் என்பதை இன்று வரை நிருபித்துள்ளார்கள். என்று தமிழன் நடிகனின் பின்னாலும், நடிகையின் பின்னாலும் ஒடுவதை நிறுத்துகிறானோ அன்று தான் தமிழகம் உருப்படும்.






