திங்கள், மே 14, 2012

மமதையில் முதல்வர் மம்தா.


மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சியை கீழிறக்கி அரியாணை ஏறியுள்ளார் மம்தாபானர்ஜி. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து 20 ஆண்டுகளுக்கு முன் தனிக்கட்சி தொடங்கி படிப்படியாக மாநிலத்தில் கட்சியை வளர்ந்து ஆட்சியை பிடித்து சில மாதங்கள் முடிந்துவிட்டது. ஆட்சிக்கு வரும் முன்னர் அவரைப்போல யாரு மச்சான் என மீடியாக்கள், அரசியல் விமர்சகர்கள், இடதுசாரிகளை பிடிக்காதவர்கள் மம்தாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் ஆளும் கம்யூனிஸ்ட்டுகள் தான் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக மாவோய்ஸ்ட்டுகள் போராட்ட களத்திற்க்கு வந்தபோது, அவர்களோடு கைகோர்த்தார் மம்தா. அதையும் தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டனர்.

மம்தா ஆட்சிக்கு வந்தார். நல்லது செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் செயல்பாடுகள் கேலிக்குரியதாக மாறியுள்ளன.

மம்தா ஆட்சிக்கு வர உதவிய மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்கள் மம்தா ஆதரவோடு ரகசியமாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நாட்டை துண்டாட நினைக்கற மாவோக்களை சுட்டது தவறில்லை என்றார்கள் தேசியவாதிகளும், மீடியாக்களும். கொல்கத்தாவில் ஒரு மருத்துவமனை தீ பிடித்தபோது, ஓடிப்போய் சம்பவயிடத்தில் நின்றார். ஆஹா இவரல்லவா முதல்வர் என பாராட்டினார்கள்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவில் கிளை பரப்ப முயன்றபோது, மம்தா எதிர்த்து நின்றார். பலே பலே என பாராட்டினார்கள். இரயில்வே கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டபோது, தன் கட்சியின் ரயில்வே அமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்து அவரை பதவியில் இருந்து இறக்கினார். இவரல்லவோ மக்கள் தலைவி என கொண்டாடினார்கள்.

யார் யார் முதல்வர் மம்தாவை கொண்டாடினார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது எதிர்த்து நின்று கூப்பாடு போடுகிறார்கள்.

மாநிலத்தில் பால்விலை உட்பட சில அத்தியாவாசிய பொருட்களின் விலையை உயர்த்தியவுடன் அய்யோ என குதிக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஏடுகளை தவிர வேறு எதையும் நூலகங்கள் வாங்கக்கூடாது என முதல்வர் மம்தா அறிவித்தபோது அரண்டு விட்டார்கள் மீடியா முதலாளிகள். கம்யூனிஸ்ட்டு ஒருவரின் குடும்பத்தோடு திரிணாமுல் தொண்டர்கள் யாரும் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் நமது எதிரிகள் என பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

கனவில் முதல்வர் மம்தாவை எதிர்த்தால் கூட இனி சிறையில் மிச்ச சொச்ச நாளை கழிக்க வேண்டி வரும் என்பதை கார்டூன் போட்ட ஒரு பேராசிரியரை கைது செய்து காட்டியுள்ளது அரசு.

இப்போது, தவறு என தெரிந்தும் முன்பு ஆதரித்தவர்கள் தற்போது அவர்களது அடிமடிக்கே ஆபத்து என்றதும் மம்தாவை எதிர்க்க களமிறங்கிவிட்டார்கள்.

முதல்வர் மம்தா மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் உள்ள பல மாநிலங்களில் பெண்கள் தலைமை பொறுப்புக்கு வரும்போது, தங்களது நிழலை கூட மறந்து தன் போக்கில் நடந்துக்கொள்கிறார்கள். அதுக்காக ஆண் அரசியல்வாதிகள் யோக்கியவான்கள், சரியானவர்கள் என்பதல்ல அர்த்தம்.

மூன்றாவது முறை தமிழகத்தின் முதல்வராக அமர்ந்துள்ள ஜெ, தமிழகத்தில் ஆடாத ஆட்டமா?.

91-95ல் முதல்வர் பதவியை கொண்டு ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்தார். அதிகார துஸ்பிரயோகம். 2001 – 2006ல், அமைச்சர்கள் வயது வித்தியாசம்மில்லாமல் பதவிக்காக சாஸ்டாங்கமாக காலில் விழ வைத்தார். தவறான முடிவுகள் எடுத்தார். அதிகார ஆட்டம் உச்சத்துக்கு போனது. இதே 2011ல் மீண்டும் அதே ஆணவத்தோடு ஆட்டம் போடுகிறார்.

உத்தரபிரதேச முன்னால் முதல்வர் மாயாவதி, கடந்த 5 ஆண்டில் அவர் செய்த தில்லாலங்கடிகள் சொல்லி மலாது. ஆதிகாரிகள் முதல் தன் கட்சியினர் வரை அனைவரையும் அதட்டி உருட்டினார்கள். கோடிகளில் யானை சிலை, தன் சிலைகளை மாநிலத்தில் நிறுவி விளையாட்டு காட்டினார்.

இராஜஸ்தான் முன்னால் முதல்வர் வசுந்தரே, தன் இன மக்களையும், தன் மத மக்களை தவிர அவர் மற்றவர்களை படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தன் உடலை நம்பிய அளவுக்கு தன் சகாக்களை நம்பவில்லை அவர். டெல்லி முதல்வர் ஷீலாதிட்ஷீத்தும் அப்படியே. இருந்தும் ஒரளவுக்கு மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்கிறார். செயல்படுத்துகிறார்.

இப்படி இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களை ஆண்ட, ஆளும் பெண் தலைவிகள், மற்றவர்களை நம்பாமல் பல தவறான முடிவுகளை எடுத்து தங்களது வளர்ச்சிக்கு தாங்களே முட்டுக்கட்டை போட்டுக்கொள்கிறார்கள். தங்கள் அருகில் உள்ள ஆண் அதிகாரிகள், சக அமைச்சரவை சகாக்களை கூட நம்ப மறுக்கிறார்கள்.

பெண்கள் மற்றவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம் தான். அதற்காக அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்ககூடாது, பேசக்கூடாது. அரசியல், அதிகாரத்தில் இருக்கும்போது மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் தவறுகள் என்ன செய்துள்ளோம் என்பதை அறியமுடியும். மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இதை கேட்கத்தான் ஆள்யில்லை.

(என்னப்பா இவன் சோனியாகாந்தி பற்றி கட்டுரையில குறிப்பிடலேயேன்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது, அந்த மானம் கெட்ட கட்சியைப்பத்தி எதுக்கு பேசனும்ன்னு தான் குறிப்பிடல சகாக்களே).

1 கருத்து: