சனி, டிசம்பர் 29, 2012

என் தேச பெண்ணே உன்னை வணங்குகிறேன்.


சுதந்தரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்து விட்டது. என் தேசத்தில் பாலியல் பலாத்காரம் மட்டும் நின்ற பாடில்லை. ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தபோது நடந்த பாலியல் குற்றங்களை விட சுதந்தரத்துக்கு பின் தான் எம் தேச பெண்கள் பாலியல் வன்முறைக்கு அதிகம் பலியாகியுள்ளார்கள், இறையாகியுள்ளார்கள். சுதந்திரமாக கற்பழிக்கவும் சுதந்திரம் பெற்று தந்தார்கள் என எண்ணிவிட்டார்கள் போல.

பல ஆண்டுகளாக எம் தேசத்தின் மலைகிராமங்களில் உள்ள பழங்குடி பெண்களை பெரு நிறுவனங்களை சேர்ந்த பணியாட்களும், சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களும், காஷ்மீர் – வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையும், இந்தியாவின் ‘கண்ணியம்மிக்க’ ராணுவத்தினரும் நடத்திய பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகம். தங்களது இச்சைகள் தீர்ந்ததும் எம் தேச பெண்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டும், அதிகார வர்கத்தினரின் துப்பாக்கிகளுக்கு இறையாகி கிடந்தது அதிகம். மானத்துக்கு பயந்து வெளியே சொல்லாமல் மனதில் பாரத்தோடு வாழ்பவர்கள் அதை விட அநேகம்.

எம் தேச பெண்கள் பாலியல்க்கு பலியாவதை எதிர்த்து எத்தனை எத்தனையோ சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். அது பத்தோடு பதினோரு செய்தியாக செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் பதிவாகின. போராடியவர்களாலும் சாதிக்க முடியவில்லை. சட்டமன்றங்களிலும், பாராளமன்றத்திலும் அமர்ந்துள்ள பெண் பிரதிநிதிகளாளும் உரிமைகளை, பாதுகாப்பை உருவாக்கி தர முடியவில்லை. அவர்கள் எல்லோரும் சாதிக்க முடியாததை நீ சாதித்துவிட்டாய்.

இன்று பாலியல் பிரச்சனை எத்தனை பெரியது என்பதை என் தேசத்துக்கு புரிய வைத்தது உன் மீதான பாலியல் வன்முறையும், உன் இறப்பும்மே. இந்த உலகத்தில் நீ சந்தோஷமாக வாழ எவ்வளவோ கனவுகள் கண்டுயிருப்பாய். உன் கனவுகள் அந்த பேருந்தில் வைத்து பொசுக்கிவிட்டார்கள். அந்த மிருகங்கள் உன் உறுப்பை சிதைக்கும்போதே உன் கனவுகளை  சிதைந்துவிட்டார்கள் என்பதை இயற்கை அறிந்திருந்தது.

ஆனாலும் நீ மரணிக்கவில்லை. உன் நிலை இது நாள் வரை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், இணையத்திலும் மூழ்கி வீர வசனம் பேசிக்கொண்டுயிருந்த இளைய சமுதாயத்தை தட்டி எழுப்ப வைத்துவிட்டது. நடு சாமத்தில் நாட்டை ஆள்பவர்களை வீதிக்கு வர வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தது.


பன்னிரெண்டு நாள் உயிருக்கு போராடி இறுதியில் உன் சுவாசத்தை நிறுத்திக்கொண்ட என் தோழியே, சகோதரியே உன் உறுப்பை சிதைத்தவன்களின் உறுப்பை சிதைக்க வேண்டும். அவன்கள் அதைக்கண்டு தன் வாழ்நாள் முழுக்க அழ வேண்டும். அதுவே அவர்களுக்கு தரும் தண்டனை. இனி பாலியல் வன்முறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாக அமையும்.

இந்த கனவு நீ காணாததாக இருக்கலாம் ஆனால் என் தேசம் அந்த கனவை நனவாக்க வேண்டும் என்கிறது. அந்த கனவை உன் உயிரை தந்து உருவாக்கியுள்ளாய் அதற்காக உன்னை வணங்குகிறேன்.

2 கருத்துகள்:

  1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

    -இந்தியன் குரல்

    பதிலளிநீக்கு