வியாழன், ஜூன் 20, 2013

லாலிபப் சாப்பிடத்தான் லாயக்கு ‘நடுநிலைவாதிகள்’ ?.



தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடத்துக்கு ஏழு பேர் போட்டியிடுகிறார்கள். அதில் ஆளும் கட்சியான அதிமுக 4 இடங்களை பெற்று விடும், அதிமுக ஆதரவில் நிற்கும் சி.பி.ஐ டி.ராஜா வெற்றி பெற்றுவிடுவார். மீதியுள்ள ஒருயிடத்துக்கு தான் போட்டி. அந்த ஒருயிடத்துக்கு திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற இரண்டு கட்சிகளுக்கும்மே தனிப்பட்ட பலம்மில்லை. திமுகவிடம் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். தேமுதிகவிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போக மீதி 22 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். வெற்றி பெற தேவை 34. இந்த இடத்தில் தான் சிறு கட்சிகளான காங்கிரஸ், பாமக, மமக, புத போன்ற கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்கு வலிமை பெறுகின்றன. 

இரண்டு கட்சிகளும் தங்களுக்கு தேவையான பலத்தை பெற ஆதரவை திரட்டுகிறார்கள். இதில் என்ன தவறுயிருக்கிறது. இதனையெல்லாம் ஏன் நடுநிலை முகமுடி போட்டவர்கள் மாய்ந்து மாய்ந்து விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. இவர்கள் விமர்சனம் திமுகவை நோக்கியே இருக்கிறது. பணம் தந்து வெற்றி பெற போகிறார்கள் என விமர்சனம் செய்கிறார்கள். தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் பார்க்க நேரிட்டது. மாற்றி மாற்றி கூட்டணி வைக்கிறார்களே இவர்களுக்கு கொள்கையே கிடையாதா என கேட்கிறார் விவாதத்தை நடத்தியவர். தேவையற்ற கேள்வியிது. 

எம்.எல்.ஏ, எம்.பி, கவுன்சிலர் தேர்தலில் நிற்பவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகிறான், பணத்தை செலவு செய்கிறான், வாக்களிக்க விரும்புபவன் கேட்பதை, கேட்காததை செய்து தருகிறான். அதேதான் மாநிலங்களவை தேர்தலிலும் நடக்கிறது. இங்கு வாக்களிக்க போகிறவர்கள் எம்.எல்.ஏக்கள். அந்த எம்.எல்.ஏக்கள் கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய போகிறார்கள். 

வாக்கு வைத்திருக்கும் கட்சிகளை நோக்கி தேர்தலில் நின்றுள்ள திமுக, தேமுதிக என்ற இரண்டு கட்சிகளும் போகின்றன. சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைப்பார்த்து திமுக பணத்தால் வாக்குகளை வாங்குகிறது என்கிறார்கள். இது அரசியல் தெரியாத அடிமுட்டாள் செல்லும் விமர்சனம். திமுக என்ற கட்சி ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கட்சி, தமிழகத்தில் முதல்வர் நாற்காலி ரேசில் உள்ள இரண்டு கட்சியில் அதுவும் ஒன்று. மத்திய கூட்டணி ஆட்சிகளில் பதவியில் இருந்த கட்சி. தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து வலிமையான வாக்கு வங்கியுள்ள கட்சி. தமிழகத்தில் எந்த கட்சி தோன்றினாலும், ஏற்கனவே இருக்கும் கட்சியாக இருந்தாலும் திமுக, அதிமுக என இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி வைத்தால் மட்டுமே ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை பெற முடியும். இதுதான் எதார்த்தம். 


எங்களுக்கு வாக்களியுங்கள் என திமுக, தேமுதிக என இரண்டு கட்சிகளும் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி கேட்கின்றனர். திமுகவா, தேமுதிகவா என்ற கேள்வி எழும் போது லாலி பப் சாப்பிடும் குழந்தைகளுக்கும் தெரியும் சின்ன கட்சிகள் திமுகவையே தேர்வு செய்யும் என்று. அதன்படியே திமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். இதில் என்ன குற்றம் இருக்கிறது. 

கனிமொழிக்காக வளைந்து கொடுக்கிறார், தன்மானம்மில்லை, சுயமரியாதையில்லை என மதிமுகவினர், நடுநிலை முகமுடி போட்டவர்கள் திருச்சி.சிவாவுக்கோ அல்லது டி.கே.எஸ். இளங்கோவன்க்கோ ஏன் சீட் தரல என கேட்கின்றனர். அடுத்தவன் வீட்ட ஏன் எட்டி பாக்கறிங்க. அது அவர்கள் கட்சி விவகாரம். யாரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பது அவர்கள் எடுக்கும் முடிவு. இதை எப்படி பார்வையாளராக உள்ள நாம் கேள்வி கேட்க முடியும். மகளுக்கு தருவது, மகனுக்கு தருவது, தெருவில் போறவனை அழைத்து வந்து தருவது என்பது கட்சி தலைமை எடுக்கும் முடிவு. இன்னார்க்கு தருவது எனக்கு புடிக்கவில்லை என்றால் அக்கட்சி தொண்டர்கள் தான் கேள்வி கேட்க முடியும். 

2ஜீ ஊழல் செய்தவருக்கு சீட் என கிண்டலோடு கேட்கிறிர்கள். ஊழல் வழக்குகள் அதிகம்முள்ள ஜெவை மக்கள் ஏற்றுக்கொண்டு இரண்டு முறை முதல்வராக்கியுள்ளனர். அப்படியிருக்கும் போது கனிமொழியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ன நிச்சயம். பல மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்த, அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதையெல்லாம் கேள்வி கேட்க தெம்பில்லாத, முதுகெலும்புயில்லாதவர்கள் திமுகவை பிராண்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக