ஞாயிறு, நவம்பர் 10, 2013

முற்றம் அரசியல். ஈழத்தாயை காக்கும் ‘ஈழ’ தளபதிகள்.



அம்மா ஆட்சியில் அமர்ந்தால் ஈழத்தை தான் முதலில் பெற்று தருவார் என ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தனர் பழ.நெடுமாறன், சீமான், வை.கோ, தமிழருவிமணியன் உட்பட பலர். முதல்வாரன ஜெ இன்று முள்ளிவாய்க்கால் நினைவாக தஞ்சை அருகே அமைக்கப்பட்ட முற்றத்தை திறக்க தடை விதிக்க நீதிமன்றத்தை நாடி தோல்வியை தழுவினார். ஈழ துயத்தின் வரலாறு என பிரச்சாரம் செய்யப்பட்ட முற்றத்தை திறக்க தடை விதிக்க முயலும் ஜெவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச துணிவில்லாமல் உள்ளார்கள் ஈழத்துக்காக துடிக்கும் இந்த தமிழ்தேசியவாதிகள். 
இன்றும் ஈழத்தாய் என போற்றி புகழ்கிறார்கள். உண்மையில் ஈழ நலனுக்காக சிறிதளவாவுது உழைத்துள்ளாரா என கேட்டால் இல்லை என வார்த்தைகளில் சொல்வதை விட ஜெ வின் கடந்த கால, நிகழ்கால நடவடிக்கைகளை பார்த்தால் புரியும். 

எம்.ஜீ.ஆர் இறப்பதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த ஜெவுக்கு ஆரம்பம் முதலே விடுதலைப்புலிகளை பிடிக்காது. ஏன் பிடிக்காது?. இராஜிவ்காந்திக்கு பிடிக்காது, சோ, இந்து ராம், சுப்பிரமணியசாமி போன்ற அவா வகையறாக்களுக்கு பிடிக்காது. அதிமுகவை புரமோட் பண்ணிய உளவு அமைப்புகள், ஆங்கில பத்திரிக்கைகளுக்கு பிடிக்காது. அதனால் அவரது மனதில் விடுதலை புலிகள், ஈழம் பற்றிய நெகட்டிவ் தகவல்களே அவரது மனதில் பதிவாகின. இதனால் புலிகளை கண்டால் பிடிக்காது. 

1989 தமிழகத்தை ஆண்ட திமுக ஆட்சியை கலைக்க விரும்பினார் ராஜிவ்காந்தி. காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்திய சந்திரசேகர், அப்போது அமைச்சராக இருந்த தரகர் சுப்பிரமணியசாமி போன்றோர் பெரும் பங்காற்றினர். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக விடுதலைபுலிகளின் நண்பர் கருணாநிதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட காரணம் விடுதலைபுலிகளுக்கு கருணாநிதி செய்யும் உதவிகள் தான் என ஜெ அறிக்கைகளாக விட்டார். 

ஆட்சி பொறுப்புக்கே வராத எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜெ, தன்னை விடுதலைப்புலிகள் கொல்ல பார்க்கிறார்கள் என பீதியை கிளப்பினார். தன் கட்சி தொண்டனையே விடுதலைபுலிகள் என காவல்துறையினரிடம் பிடித்து தந்தார். ஜெ ஆட்சி பொறுப்பில் இல்லாத போதும், முதல்வராக இருந்தபோது விடுதலை புலிகள் மீது அவதூறு பரப்பிய தகவல்களை தொகுத்தால் தனி புத்தகமே போடலாம் அந்தளவுக்கு தகவல்கள் உள்ளது. அதில் சில……

திமுக ஆட்சியை கலைப்பதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. தமிழகத்திற்க்கு பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என குரல் கொடுத்தார் ஜெ. 

இராஜிவ்காந்தி கொலையால் அனுதாப அலையில் வெற்றி பெற்ற ஜெ ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், தமிழகத்தில் ஈழ ஆதரவு மாநாடு, கூட்டம், நோட்டீஸ் அடிச்சடிப்பது உட்பட அனைத்துக்கும் தடை போட்டார். ஈழ பகுதி மீது பொருளாதார தடையை சிங்கள அரசு விதித்த போது பசி பட்டினியால் வாடிய மக்களுக்கு தமிழகத்தில் இருந்து மறைமுகமாக பொருட்கள் செல்ல தடை ஏற்படுத்தினார். ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்கு தரப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். அவர்கள் படிக்க முடியாமல் செய்தார். ஈழ அகதிகள் அனைவரையும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கினார். ஈழ அகதிகளை வலுகட்டாயமாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி கப்பலில் அனுப்பி வைத்தார். 

இதனை கண்டித்தும், ஈழ மக்களுக்கு ஆதரவாக மாணவர் அமைப்புகள் தமிழகத்தின் சில பகுதிகளில் ஈழ ஆதரவு மாநாடு, கூட்டங்கள் நடத்த முயன்ற போது அவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார் ஜெ. 

முதல்வாரன என்னை புலிகள் கொல்லப்பார்க்கிறார்கள், தற்கொலை படை வீரர்கள் தமிழகத்தில் புகுந்துள்ளார்கள் என சட்டமன்றத்தில் கூறினார் ஜெ. விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும்மென மத்திய டெல்லி காங்கிரஸ் அரசை நிர்பதித்து வெற்றி பெற்றவர் ஜெ. ( இந்த தடையை நீக்கத்தான் அம்மா விசுவாசிகள் நீதிமன்றத்தில் 21 ஆண்டுகளாக போராடுகிறார்களாம் ). 


திமுக ஆட்சி கலைக்க காரணமாக இருந்த பத்மநாபா கொலை வழக்கை விசாரிக்கிறோம் என கிளம்பிய ஜெ அரசு, திமுக ஆட்சியின் போது உள்துறை செயலாளராக இருந்தவர், விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக திமுக செயல்பட்டது. பத்மநாபாவை கொன்ற புலிகளை திமுக அரசுதான் கைது செய்ய வேண்டாம் என்றது என அரசு சாட்சியாக இருந்து பதிவு செய்ததால் திமுக முக்கிய பிரமுகர் சுப்புலட்சுமி அவரது கணவர் ஜெகதீசன், திக வழக்கறிஞர் ஒருவர் என 3 பேரை தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

அவர்கள் மட்டுமல்ல நெடுமாறன், ராமதாஸ், கொளத்தூர்மணி, ராமகிருஷ்ணன், பெருஞ்சித்தனார், சுப.வீரபாண்டியன், மணியரசன், தியாகு போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு ஜெ வந்தபோது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியா கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்து பாஸ் செய்தார். சென்னையில் சிகிச்சை பெற விரும்பிய ஆன்டன்பாலசிங்கத்துக்கு அனுமதி தரக்கூடாது என அதிமுக மத்தியரசுக்கு கடிதம் எழுதி வெற்றி பெற்றது. 

வை.கோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் உட்பட பலர் ஈழத்தை, விடுதலை புலிகளை ஆதரித்து பேசினார்கள் என பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒராண்டுக்கு மேல் சிறை வைக்கப்பட்டார்கள். 


விடுதலைபுலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து துரோகியாகி இன்றைய அவலத்துக்கு காரணமான கருணாவை கேரளாவில் தங்க வைத்துள்ளது பாதுகாத்த மத்திய புலனாய்வு பிரிவு. கருணா தமிழகம் மறைமுகமாக வந்தபோது ஆதரித்தார் ஜெ என்றும் கூறப்படுகிறது. 

திமுக ஆட்சியின் போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான தமிழ்செல்வன் விமான தாக்குதலில் பலியான போது, கலைஞர் இரங்கற்பா எழுதினார். ஒரு முதல்வர் எப்படி எழுதலாம் ஆட்சியை கலைத்து கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என்றார். 

2008ல் ஈழ போரை தடுக்க வேண்டும்மென வை.கோ, நெடுமாறன், சினிமா அமைப்பில் சீமான், அமீர் போன்றோர் ரோட்டில் இறங்கி மறியல், போராட்டம் என போராடிய போது, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, ஒரு நாட்டின் இளையான்மைக்கு எதிராக போராயடிவர்களை ஏன் கைது செய்யவில்லை என ஜெ விட்ட தொடர் அறிக்கையால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார் கலைஞர். அதே ஜெ, 2009ல் ஈழம் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என தன் ஈழ பாசத்தை காட்டியவா தான் ஜெ. 

2011ல் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெ முன் நின்றது ராஜிவ்கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்ற ஆணையை அனுப்பியது மத்திய காங்கிரஸ் அரசு. முதல்வாரன ஜெவும் தலையசைத்தார். எல்லா தரப்பும் போராடியது. சுட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில் உச்சநீதி மன்ற தீர்ப்பு, மத்திய உள்துறை உத்தரவு, ஜனாதிபதி கருணை நிரகாரிப்பு போன்றவற்றால் இந்த முடிவு எனச்சொல்லி தன் ஈழ பாசத்தை காட்டினார் இந்த ஈழத்தாய். பின் காஞ்சிபுரம் செங்கொடி தீ குளிப்பு வேண்டா வெறுப்பாக தூக்கு எதிரான கருத்தை சொன்னார். இதன்பின் தான் ‘அம்மா’வுக்கு ஈழத்தாய் என்ற பட்டத்தை சீமான் தந்து நாடு போற்ற ஈழத்தாய் என்ற பதத்தை தமிழகம் முழுவதும் பரப்ப தொடங்கினார். 

அந்த ஈழத்தாய் தான் தற்போது தஞ்சை அருகே அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சியை நீதிமன்றம் மூலம் தடுக்கிறார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளகூடாது என தமிழக இயக்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்க பலர் அதில் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமானவர் கொளத்தூர் மணி. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் போட்ட பேனர் வைக்க தடை, நோட்டீஸ் தர தடை, பேச தடை மீறினால் வழக்கு பாய்கிறது.

ஆனால் இதனை ‘ஈழத்தாய்’ பட்டம் தந்த சீமான் அவரது தம்பிகள், உள்நாட்டு -  வெளிநாட்டு தமிழர்களின் ‘தலைவராக’ புரமோட் செய்யப்படும் நெடுமாறன், பேச்சுப்புலி வை.கோ போன்ற பலர் இதனை கண்டிக்காமல் செலக்ட்டிவ் அம்னிஷியா தாக்கியவர்களாக ஆட்சி பொறுப்பிலே இல்லாத திமுக தலைவரை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஈழ நலனுக்கு எதிராக ஜெ அப்போதும் செயல்பட்டார். இப்போதும் செயல்படுகிறார். எப்போதும் செயல்படுவார். அது அவரது சுபாவம்.

இதை ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் மறக்கலாம். வரலாற்றின் பக்கத்தில் பதிவானதை மறைக்க பார்க்கலாமா ? 

3 கருத்துகள்:

  1. Oozhal raani Tamil naatin Hitler'ai edithrthu paesa yaarum illai enbathae unmai.

    பதிலளிநீக்கு
  2. தகவல்களை நினைவூட்டியதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. தமிழன் எப்போது ஒன்றாக சிந்திப்பான் ...தன் இனம் அழியும் போதா ? ⇾வேதனை ..

    பதிலளிநீக்கு