வியாழன், ஆகஸ்ட் 21, 2014

சினிமாவை அழிப்பது சினிமாக்காரர்கள் தான்.........


கடந்த 10 ஆண்டுகளில் நான் திரையரங்கில் போய் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். டிவிடி மற்றும் இணைய தளம் வழியாக பார்த்த படங்கள் கொஞ்சம் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல படங்கள் முதல் ஷோவே பார்த்த அனுபவம் எனக்குண்டு. கடந்த 10 ஆண்டுகளாக தான் சினிமாவுக்கு நண்பர்கள் கெஞ்சி கேட்டால் கூட போவதில்லை. காரணம், மொக்கை படத்துக்கு கூட டிக்கட் விலை 80 ரூபாய் என விற்கிறார்கள் இந்த தியேட்டர்காரர்கள்.

கமல், ரஜினி, விஜய், அஜித் சமீப ஆண்டுகலாக சூர்யா படங்களுக்கு நடுத்தர நகரங்களில் கூட டிக்கட் விலை 100 முதல் 200 வரை விற்கிறார்கள். ஏதோ கிடைக்காத அத்தியாவசிய பொருள் போல தமிழகத்தில் மட்டும் 300, 400 தியேட்டர்களில் ஓரே நேரத்தில் ரிலிஸ் செய்கிறார்கள். பல நகரங்களில் 3 முதல் 5 தியேட்டர்கள் வரை திரையிடப்பட்டுகின்றன. 

அஞ்சான் என்ற படமும் அப்படித்தான். உலகத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கதையம்சம் கொண்ட படம் எடுப்பதை போல அத்தனை பில்டப் விளம்பரம். படம் வந்த அன்றே மொக்கையோ மொக்கையென இணைய தள விமர்சனங்கள் படத்தை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அதைப்பார்த்து அதிர்ச்சியான அப்படத்தின் நாயகர் சூர்யா, படக்குழுவோடு வந்து ரசிர்கள் ஏமாந்து போககூடாது என்பதற்காக 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸ் செய்தோம். படம் நன்றாக உள்ளது. ஆனால் இணைய  தளங்களில் படம் பார்க்காதவர்கள் கூட படம் நன்றாகயில்லை என்ற விமர்சனத்தை பரப்புகிறார்கள் என வேதனைப்பட்டார். ( படம் நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதி பலர் அதை பரப்பியபோது நல்லாயிருந்ததா சார்……….) அதோடு, தனது சிங்கம்2 படம் 45 லட்சம் திருட்டு டிவிடி விற்கப்பட்டுள்ளது இதை தடுக்க வேண்டும் என்றார். இது ஏதோ சூர்யா மட்டும் சொல்வதில்லை. எனக்கு தெரிந்து கமலை தவிர சினிமா துறையே சொல்வது தான்.

திருட்டி டிவிடியை ஏன் மக்கள் வாங்குகிறார்கள் என யோசித்து பாருங்கள். இன்றைய தேதியில் ஒருவர் சினிமாவுக்கு போனால் டிக்கட் செலவு தவிர்த்து 200 ரூபாய் வரை செலவாகிறது. டூவீலர் பார்க்கிங் கட்டணம், 20 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் 60 ரூபாய், 10 ரூபாய் பாப்கார்ன் பாக்கெட் 50 ரூபாய், 40 ரூபாய் ஐஸ்கிரிம் 100 ரூபாய் என கொள்ளையோ கொள்ளை. இது மட்டுமல்ல ஏசி தியேட்டர் என டிக்கட் விற்று விட்டு உள்ளே ஏசியையும் போடுவதில்லை. இதை எந்த சினிமாக்காரனும் கேட்பதில்லை. பின் எப்படி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்.

40 ரூபாய் தந்து நல்ல பிரிண்ட் கொண்ட ஒரு டிவிடி, 200 ரூபாய்க்கு நொறுக்கு தீனி வாங்கினால் வீட்டில் அமர்ந்து குடும்பம்மே சாப்பிட்டுக்கொண்டு 2 படம் தெளிவாக பார்க்கலாம். பார்த்து முடித்து விட்டு பக்கத்து வீட்டுக்கும் தரலாம். இல்லையேல் தேயும் வரை திரும்ப திரும்ப போட்டு பார்க்கலாம். 250 ரூபாயில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்கு போனால் குறைந்த பட்சம் 1000 ரூபாய் தேவை.

மக்களுக்கு திருட்டி டிவிடியில் படம் பார்க்க வேண்டும் என்பது ஆசையல்ல. சினிமா தியேட்டரில் நடக்கும் கொள்ளையை தடுக்க முடியாததால் தான் மக்கள் விலையை குறையுங்கள் என கேட்கிறார்கள். நீங்கள் முடியாது என்பதால் தான் டிவிடியை நோக்கி போகிறார்கள்.

விலைவாசி உயர்ந்து விட்டது, படத்திள் விலை உயர்ந்து விட்டது, மின்சார கட்டணம், அரசாங்க வரி, வட்டி என பல லொட்டு லொஸ்க்குகளை நீங்கள் கூறி அதனால் விலை குறைப்பு சாத்தியம்மல்ல என கூறலாம். நியாயமான வாதம் ஒப்புக்கொள்கிறேன்.

6 மாதத்தில் ஒரு படம் எடுத்து முடிக்கப்படுகிறது. விஜய், அஜித் போன்றவர்கள் 20 கோடி, கமல் 30 கோடி, ரஜினி 25 கோடி சம்பளம் மற்றும் ஏரியா ரைட்ஸ் வாங்குவதாக தகவல்கள் கூறுகின்றன. வளரும் நடிகர்களான தனுஷ், சிம்பு போன்றவர்கள் கூட 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்களாம். இப்படி கோடிகளில் சம்பளம் வாங்குவதால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம் கூடுதல் விலைக்கு படத்தை விற்கிறார். அவர் போட்ட பணத்தை எடுக்க கூடுதலாக தியேட்டர்காரர்களுக்கு விற்பனை செய்கிறார். ஆக குறைக்க வேண்டியது நடிகர், நடிகை, இயக்குநர்களின் சம்பளத்தை தான். 


அதேபோல் தியேட்டர்களில் அநியாயமாக விற்கப்படும் பொருட்களின் விலையை குறையுங்கள் மக்கள் நிச்சயம் திரையரங்கை நோக்கி வருவார்கள். மக்களை திரையரங்கை நோக்கி வராமல் தடுப்பது பலரின் பேராசை தான்.

டெக்னாலஜி, விலைவாசி உயர்வு, சம்பள பிரச்சனை போன்றவற்றை தடுக்க முடியாது, தீர்க்க முடியாது என்பதால் தான் கமல் டிஷ் மூலம் காசு கட்டி வீட்டில் இருந்தபடியே ரிலீஸ் படங்களை பார்க்கும் முறையை கொண்டுவந்தார். இந்த முறை பயன்பாட்டுக்கு வரவிட்டுயிருந்தால் நிச்சயம் 50 சதவிதத்துக்கு மேல் டிவிடியில் படம் பார்ப்பது குறைந்து போயிருக்கும். இதனை எந்த சினிமாக்காரனும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அதை கொஞ்சம் மாற்றி இயக்குநர் சேரன் ஒர்ஜினல் டிவிடி விற்பனை என்பதை தொடங்கியுள்ளார். தரத்தில் இருந்தால் நிச்சயம் இது பெரும் வெற்றி பெரும் என்பது என் நம்பிக்கை.

அதனால் டெக்னாலஜி யுகத்தில் இணையத்தில் புது படங்கள் வருவதையோ, டிவிடி விற்பனையோ தடுக்க முடியாது. அதற்கு ஏற்றாற்போல் மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இருக்கும் தியேட்டர்கள் அப்படியே இருக்க வேண்டுமானால், டிக்கட், தின்பண்ட பொருட்கள் விற்பனையில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும் இல்லையேல் தியேட்டர்கள் காம்ப்ளஸ்களாக, மண்டபங்களாக மாறுவதை தடுக்க முடியாது.

சினிமாவை அழிப்பது சினிமா துறைக்குள் இருப்பவர்கள் தான் வெளிநபர்களல்ல என்பதை முதலில் சினிமாக்காரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக