வெள்ளி, ஜூலை 06, 2012

இந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.




இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி ஈழத்தமிழர்களை கொன்றபோது, அதற்கு உதவியாக, ஆயுதங்களை, தார்மீக ஆதரவை வழங்கிய நாடு இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசு. அப்போது, இலங்கை எப்போதும் இந்தியாவை முதுகில் குத்தியே பழக்கம் உடையது. அதனால் இலங்கையை ஆதரிக்காதீர்கள் என தமிழகத்தில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. இந்தியா உதவவில்லை என்றால் சீனா அதிகமாக உதவி செய்யும் அது வருங்காலத்தில் நமக்கு ஆபத்தில் முடியும் என்றார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள். அதனைச்சொல்லி சொல்லியே இலங்கைக்கான உதவிகளை வாரி வழங்கியது, பிற நாடுகள் போர் நிறுத்தத்துக்கு முயன்றபோது இந்தியா தான் தடுப்பனையாக இருந்து அதை தடுத்தது. இவையெல்லாம் புலிகள் மீதான கோபத்தில் செய்தார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் சீனாவின் பிடியில் இலங்கை சிக்கிவிடக்கூடாது என்பதாலே அதிக உதவிகளை செய்தது. 

ஆனால், தமிழக ஈழ ஆதரவாளர்கள் எச்சரித்தது போல தற்போது இலங்கை இந்தியாவின் முதுகில் குத்த தொடங்கிவிட்டது. அதன் வலியை வாய் விட்டு கத்தி சொல்லவும் முடியாமல் தவிக்கிறது. போரின் போது, இந்தியாவுடன் பிண்ணி பினைந்திருந்த இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் போர் முடிந்ததும் இந்தியாவுக்கு கைமாறு செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் முதலீடு செய்ய இந்தியாவை அனுமதித்தது. 

அதன்படி 
1. சம்பூர், காங்கேசன் துறை, வடபகுதி இரயில் பாதை புனரமைப்பு. 
2. காங்கேசன் துறை அபிவிருத்தி திட்டம். 
3. மன்னார் கடல் பகுதியில் கடல் எண்ணெய் எடுக்கும் திட்டம்.
4. திருகோணமலையில் உள்ள எண்ணெய் நிறுத்தை மேம்படுத்தும் திட்டம்.
5. பலாலி விமானநிலையம் புனரமைப்பு போன்றவை இந்தியா இலங்கையில் செயல்படுத்த இலங்கை தந்த அனுமதி. 

அதேநேரம் சீனாவுக்கும் முதலீடுகள் செய்ய அனுமதி தந்தது. 

அதன்படி 
1. அம்பாந்தோட்டத்தில் விமான நிலையம்.
2. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுமானம்.
3. கொழும்பு துறைமுக விரிவாக்கம்.
4. கொழும்பு இரயில்பாதை அமைப்பு. 
5. நுரைச்சோலையில் அனல்மின்நிலையம் கட்டுதல்.
6. மொறகந்த என்னும்மிடத்தில் டேம் கட்ட அனுமதி என சொல்லிக்கொண்டே போகாலம். இப்படி பல பெரிய அனுமதிகளை சீனாவுக்கு இலங்கை தந்துள்ளது. 


தற்போது இந்தியாவுக்கு தந்த காங்கேசன் துறைமுகம் அபிவிருத்திதிட்டம், மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் ஆய்வு திட்டம் திட்டம் போன்றவற்றையும் சீனாவுக்கே தர இலங்கை இராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்கள். இதனால் தான் கடந்தவாரம் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர்மேனன் இலங்கை பயணமானார். இந்தியாவை பகைத்துக்கொள்ளாதீர்கள் என பேசிப்பார்த்தார் ஆனால் இராஜபக்சே சகோதரர்கள் எதற்கும் அசைந்துக்கொடுப்பதாக தெரியவில்லை. சீனாவே உற்ற நண்பன் என்றும் இந்தியாவை இலங்கை மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என எண்ணுகிறது. 


சீனாவை இலங்கையில் அதிகமாக கால் ஊன்றிவிட்டது இது பெரும் ஆபத்து இனி இந்தியா இலங்கையை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முடியாது என்ற உறுதியான முடிவுக்கு தற்போது வந்துள்ள அமெரிக்கா இலங்கையில் நேரடியாக தன் பொருளாதார ரீதியாக தன் முதலீடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கிய வேகத்தில் அமெரிக்காவிடம் பணிந்து போக தொடங்கியுள்ளது இலங்கை. அமெரிக்காவின் ஆசைப்படியே முன்னால் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவை விடுதலை செய்தார் இராஜபக்சே. அதோடு இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட சில திட்டங்களை அமெரிக்காவிடம் தாரை வார்த்துள்ளார். அதைப்பெற்றால் இந்தியாவின் நட்பை இழந்துவிடுவோம்மோ என தயங்கிய அமெரிக்க அரசு தற்போது சீனாவை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் இல்லை என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு ஒதுக்கிய திட்டங்களை இலங்கை கைமாற்றி விட முடிவு செய்ய அதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. 

இலங்கை இந்தியாவை முதுகில் குத்தும் என எச்சரித்ததை கண்டுக்காத இந்திய அரசின் மூகத்தின் மேலேயே இலங்கை ………….. அடித்துள்ளது. இதன் பின்னும் திருந்தவில்லையென்றால் இந்தியாவின் தென் பகுதி பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். 

1 கருத்து: