வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வரூபத்துக்கு அரசு தடை. தேவையா சென்ஸார் போர்டு?.



இந்திய மைய அரசாங்க துறையான தகவல் - தொழில் நுட்பத்துறையால் அமைக்கப்பட்ட துறை இந்திய திரைப்பட தணிக்கை துறை செயல்படுகிறது. இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், கொல்கத்தா, ஹதராபாத் என 9 இடங்களில் இந்த துறையின் அலுவலகங்கள் உள்ளன. ஒரு தலைவர், 19 உறுப்பினர்கள் மைய திரைப்பட தணிக்கை துறையில் உள்ளனர். 

கலாச்சாரம், கலை, மத துவேஷம், சாதி துவேஷம் காட்சியமைப்புகள் இல்லாத வகையில், அதிக வன்முறை, பாலியல் காட்சிகள் இருந்தால் கட் செய்து அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு 1952 இந்திய திரைப்பட தணிக்கை சட்ட திட்டத்தின்டி நான்கு வகையில் ஏதாவது ஒரு வகையில் அனுமதி சான்றிதழ் தந்து படத்தை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதியளிக்கும். இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே படம் திரைக்கு வரும். 

ஒரு படத்தை மண்டல அளவில் உள்ள தணிக்கை அலுவலகங்கள் தடை செய்தால் மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் சென்று முறையிட்டு வெளியிட அனுமதி வாங்கலாம். படத்தை பார்த்து அனுமதி தரும் உறுப்பினர்கள் குழு சாதாரணமானதல்ல. அவர்கள் கற்றறிந்தவர்கள், சமூக பார்வை உடையவர்கள், திரைப்படத்துறையில் உள்ளவர்கள், அரசு அலுவலர்கள். இவர்கள் விதிமுறைக்குட்பட்டு அனுமதி தந்தபின் உச்சநீதிமன்றம் ஒரு படத்தை தடை செய்ய அதிகம் யோசிக்கும். தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை திரையிட யாரும் தடை போடக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சட்டம் இப்படியிருக்க. கமல்ஹாசன் நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை முடக்க பல தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளை கண்டு வேறு யாராக இருந்தாலும் முடங்கியிருப்பார்கள். கமல்ஹாசனாக இருப்பதால் தாக்கு பிடிக்கிறார். 

உலகில் முதல்முறையாக திரையரங்குகளில் வெளியிடுவதற்க்கு முன்பே டி.டி.எச் வழியாக டிவியில் ஒளிப்பரப்ப முயற்சி செய்தார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். கடைசியில் படம் வெளிவந்த ஒரு வாரம் கடந்து டி.டி.எச்சில் ஒளிப்பரப்ப ஒப்புதல் தரப்பட்டு படம் வெளிவரும் தேதியாக ஜனவரி 25ந்தேதியாக குறிக்கப்பட்டது. 

இப்போது இதிலும் சிக்கலை கொண்டு வந்துள்ளது சில இஸ்லாமிய இயக்கங்கள். அவர்கள், விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளார் கமல். படம் வெளிவர இரண்டு மாதம் இருக்கும்போதே விஸ்வரூபத்துக்கு இப்படி கூறி எதிர்ப்பு காட்டினர். படத்தின் கதை என்னவென்று தெரியாது, படம் வெளிவரவில்லை அப்படியிருக்க இவர்களாக கற்பனை செய்துக்கொண்டு எதிர்ப்பு காட்டுகிறார்கள். கமல் எத்தனையோ விளக்கங்கள் தந்தார். அவர்களை அழைத்தும் பேசினார். ஆனாலும் பயனில்லை. 

இந்தப்படம் இஸ்லாமிய தீவிரவாதம் பேசுகிறது என போர்க்கொடி தூக்கிய சில இஸ்லாமிய இயக்கங்கள் உச்சமாக விஸ்வரூபம் திரைப்படத்தை எங்கும் ஓடவிடமாட்டோம் என அறிவித்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. சில அமைப்புகள் தமிழக உள்துறை செயலாளரை சந்தித்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்க அதன்படி படம் வெளிவர இரண்டு நாட்கள் இருக்கும்போது அரசாங்கமும் 15 நாட்களுக்கு படம் வெளியிட தடை விதித்துள்ளது. 

அரசாங்கத்தின் அமைப்பான இந்திய தணிக்கை துறை குழு படத்தை பார்த்துவிட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு படத்தை வெளியிட அனுமதி தந்துள்ளது.  படத்தில் உள்ள காட்சியால் பிரச்சனை வரும் என்ற நிலையிருந்தால் குழுவே அந்தகாட்சியை கட் செய்துயிருப்பார்கள். அவர்கள் பார்த்து ஒப்புதல் தந்தப்பின் படத்தை பார்க்காத சில அமைப்பினர் தடை கேட்டால் அரசாங்கம் தந்துவிடும் என்றால் பின் அந்த குழு எதற்கு. கலைத்துவிடலாமே. 


தணிக்கை துறை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் இதில் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. 
சட்டமறிந்தவர்கள் கூட ஒரு திரைப்படத்தை பார்க்காமலே தடை விதித்து விடுகிறார்கள். அல்லது விசாரணை செய்யும் நீதிபதிகள் குழு படத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என கேட்கிறார்கள். அதான் தணிக்கை துறை பார்த்துவிட்டதே. சந்தேகம்மிருந்தால் அவர்களை அழைத்து உடனடியாக விசாரணை செய்து படத்தை வெளியிட அனுமதிக்கலாம்மே. அதைவிட்டுவிட்டு தடை கேட்டால் உடனே தந்துவிடுவது எந்த விதத்தில் நியாயம். அரசாங்கத்தை அவர்கள் கண்டித்தால் மட்டுமே இந்தநிலை மாறும். 

இங்கே கவனிக்கப்பட வேண்டிய மற்றொன்று இஸ்லாமிய நாடான மலேசியாவில் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் படம் வெளிவரும் நிலையில் தமிழகம் போன்ற மாநிலங்களில் தடை செய்வதால் ஒரு தயாரிப்பாளராக அவருக்கு எத்தனை இழப்பு. 

படத்தை ஓடவிட மறுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது. இவர்கள் என்ன மத காவலர்களா?. இந்தியாவில் தீவிரவாதம் இல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என இவர்கள் ஒப்புதல் தர முடியுமா?. தர முடியாதவர்கள் தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும். 

இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்ல இந்து அமைப்பினை சார்ந்தவர்கள், கிருஸ்த்துவ அமைப்பை சார்ந்தவர்கள், சாதி அமைப்புகளை சார்ந்தவர்கள் கூட எதிர்ப்பு காட்டுகிறார்கள். எங்கள் மதத்தை, மத நூல்களை, சாதி பற்றி பேசுகிறார்கள் அதனால் படத்தை வெளியிடக்கூடாது என தடை கேட்கிறார்கள். இப்படி இவர்கள் கேட்கும்போது அரசாங்கமும், நீதிமன்றமும் தலையாட்டுவதால் தான் இவர்கள் துளிர்கிறார்கள். 

இதனை மாற்ற வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் திரைப்படம் எடுப்பது, வெளிவருவது என்பது சர்ச்கைக்குரியதாகிவிடும். 

6 கருத்துகள்:

  1. பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

    முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

    இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

    சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

    இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

    பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

    இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி தான் படம் வருகிறது மறுக்கவில்லை. ஆனால் எந்த படத்திலும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என காட்டப்பட்டதாக தெரியவில்லை. இஸ்லாமியர்களை பற்றி நன்றாகவும் படம் வந்துள்ளன.

    துப்பாக்கி படம் பற்றி குறிப்பிட்டுயிருந்தீர்கள். ஸ்லீப்பர் செல் விவகாரம் தான் படத்தின் மைய கரு. சில ஆண்டுக்கு முன் உளவுத்துறை அதனைப்பற்றி கண்டறிந்தது. அதற்கான ஃபைல்கள் உள்துறையில் உள்ளன.

    திரைப்படங்கள் தீவிரவாதம் பற்றி பேசுகிறது. குண்டு வைப்பவர்கள் எல்லை கடந்து வந்த இஸ்லாமியர்களாகவும், அவர்களுக்கு உதவுபவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை சார்ந்தவர்கள் என்பதால் தான் திரைப்படத்தில் அப்படி காட்டப்படுகிறது. எல்லா இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என காட்டப்படவில்லை என்பதே எனது கருத்து.

    அதேபோல் குண்டு வெடித்தாலே இஸ்லாமியர்களை நோக்கி காவல்துறையின் பார்வை செல்கிறது. இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். காவி பயங்கரவாதிகள் தான் குண்டு வைத்தார்கள் என்பது நிருபனமாகிறது. அதன்பின் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அப்பாவிகள் என வெளியே விடப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் உளவுத்துறைகள் எடுத்த தவறான முடிவுகள்.

    காவி பயங்கரவாதம் இன்று நாட்டில் வேகமாக வளர்க்கிறது. மறுப்பதற்க்கில்லை அதனை அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. அதனை ஓடுக்க வேண்டும். ஆனால் அதற்காக இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படவில்லை என வாதாடாதீர்கள்?.

    இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளை அறிந்துக்கொள்ள முடிகிறது. தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டிய விஷயத்தை இஸ்லாமிய சமூக மக்கள் கவலைப்படகூடாது.

    தீவிரவாதம் பற்றி படம் வந்தால் அந்த சமூகத்தை குற்றம் சாட்டினால் எதிர்ப்பதில் நியாயம் இருக்கும். தீவிரவாதிகளை எதிர்ப்பது பற்றி படம் எடுத்தால் அதனை எதிர்ப்பது என்பது அவர்களுக்கு சாதகமாக இருப்பது போன்று தான் அர்த்தாகிவிடும்.

    படத்தை பாருங்கள் அதன்பின் எதிர்ப்பு கருத்துகள் இருந்தால் எதிர்க்கலாம். நானும் உங்களுடன் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் அறிந்தவர் போல் பேசும் (admin) சகோதரர் அவர்களே..படம் வெளிவருவதற்க்கு 2மாதங்களுக்கு முன்னாடியே சர்ச்சை கிளம்பியது உண்மை தான். ஆனால் வெறும் யூகத்தை வைத்து யாரும் இங்கே முடிவு செய்யவில்லை.
    படம் வெளிவருவதற்க்கு முன்னதாகவே 19 இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுக்கு அந்த படம் கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் போட்டு காண்பிக்கப்பட்டது.அதை பார்த்த பின்னரே இவ்வாறு முடிவு செய்யப்பட்டது..

    பதிலளிநீக்கு
  4. ஒரு சினிமாவில் மத துவேஷம், சாதி துவேஷம், அதிக ஆபாசங்கள் போன்ற காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு தான் படத்தை வெளியிட வேண்டுமென்பது 1952-ம் அண்டு இயற்றப்பட்ட சினிமா தனிக்கை குழுவின் சட்டம் என்பதை நீங்களே மேலே குறிப்பிட்டுள்ளீர்கள்....அப்படி பார்த்தால் விஸரூபம் படத்தில் அந்த சட்டத்தை மீறிய மத துவேஷ காட்சிகள் இருந்தும் அதை நீக்காமலே வெளியிட அனுமதியளித்தது தனிக்கை குழுவின் தவறு என தெளிவா தெரியிது. எனவே தனிக்கை குழு அதிகாரிகள் இது மாறி தவறு செய்யும்போது அந்த அதிகரிகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பத் சிறந்தது..

    பதிலளிநீக்கு
  5. 1. ShaikDawood Avargaley padam varuvatharku munbey eathirpukan athigamaga vantha penpu than Kamal padam pottu kaatinar eanpathai maranthu vidathirgal. tharpothu padam vanthuvitathu athil eangu Muslim makkali pattri thavaraga sitharithu ullar eanpathi sollungal....

    2. thanikai kuzu sariyaga than siethu ullathu eanpathai pada thanikai kuzuvil iruntha islamiya samugathai charnthavar Article eazuthi ullar padikavum......

    பதிலளிநீக்கு
  6. Raj priyan sir, i read the article by Asan Jinna, in that article he told that Kamal, first get the censor certificate for Hindi version, then to Telugu at last for Tamil. Even though he raise voice against the film, board will consider the majority opinion. He told I cannot do anything in this matter.
    We cannot oppose the court as per our Constitution, but we can appeal.

    We not oppose the movie bcoz of he is mentioning us as a terrorist, but he shows terrorists did every wrong after the prayer or reading the quran. This thing is not only insulting us & it will spread wrong messages to the common people.

    பதிலளிநீக்கு