ஞாயிறு, ஜனவரி 06, 2013

ஸ்டாலின்க்கு வந்தது வாரிசு பதவியல்ல.


திமுகவில் கலைஞர்க்கு பின் மு.க.ஸ்டாலின் தான் திமுகவின் அடுத்த தலைவர் என்பது 15 ஆண்டுகளாவே மக்கள் மனதில் பதிந்துவிட்ட தகவல். அதற்கு காரணம் கலைஞரின் மகன் என்பது மட்டுமல்ல திமுகவிற்காக அவர் உழைத்த உழைப்பு அதிகம் என்பதாலே. அதோடு, அவர் தலைவராக உருவாக்கப்பட்டார் என தற்போது பேசுகிறார்கள். அது விதாண்டவாதம். நிச்சயம் ஸ்டாலின் தலைவராக உருவாக்கப்படவில்லை. தலைவர் தகுதிக்கு தன்னை உருவாக்கிக்கொள்ள உழைத்தார். அதற்கு கலைஞரின் மகன் என்ற நிலை உதவிகரமாக இருந்தது.

மிசா சட்டத்தில் சிறைக்கு போனது முதல் திமுகவின் போராட்டங்களில் முன்னணி தளபதியாக களத்தில் நின்றது கலைஞரின் மகன் என்ற ஸ்தானத்தில் இல்லை. கட்சி தொண்டன் என்ற ஸ்தானத்திலேயே கலந்துக்கொண்டார். இதனால் தான் அவர் தொண்டர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர முடிந்தது. கட்சியில் ஸ்டாலின் பொறுமையின் சிகரமாக விளங்குகிறார். படிப்படியாக தான் சிம்மாசனத்தின் அருகே வந்துள்ளார். 

1967ல் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை 14 வயதில் தொடங்கி முடிவெட்டும் கடையில் இருந்து சமூக பணியை தொடங்கினார் ஸ்டாலின். 1980ல் தான் இளைஞரணி அமைப்பை திமுக தலைமை அங்கீகரித்தது. 1984 தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர் ஸ்டாலின். முதல் முறை போட்டி அதிலேயே தோல்வியை சந்தித்தார்.

1988 தேர்தலில் அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஸ்டாலின். 1991 தேர்தலில் தோல்வி. 1996ல் தேர்தலில் அதே தொகுதியில் போட்டி வெற்றி பெற்றார். அதோடு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் முதல் முறையாக பொதுமக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மேயர் ஸ்டாலின் தான். இரண்டு பதவி வகித்தார்.

2001ல் தேர்தலில் எம்.எல்.ஏவாக வெற்றி, உள்ளாட்சி தேர்தலில் இரண்டாவது முறையாக மேயராக வெற்றி. இரண்டு பதவி வகிக்ககூடாது என்றபோது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாக தொடர்ந்தார். 2006ல் எம்.எல்.ஏவாக தேர்வானபின் திமுக ஆட்சியில் நீண்ட விவாதத்துக்கு பின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. 2011ல் தேர்தலில் போட்டி வெற்றி.

இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராக, பின் மாநில இளைஞரணி செயலாளராக, அதன்பின் கட்சியின் துணை செயலாளர்களில் ஒருவராக, தற்போது கட்சியின் பொருளாளராக பதவிக்கு வந்தார்.

தேர்தலில் சீட் பெற 18 வயது பூர்த்தியான பின்பு 14 ஆண்டுகள் கழக பணியாற்றியுள்ளார். அதன்பின்பே எம்.எல்.ஏ சீட், 98, 1996 கழக ஆட்சியின் போது ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இருந்தார். அப்போது கூட அவருக்கு அமைச்சர் பதவி தரவில்லை. 2006 ஆட்சியின் போதுதான் அமைச்சர் பதவி தரப்பட்டது. இப்படி பொறுமைசாலியாக பதவிக்காக காத்திருந்து வந்தார்.

நிலைமை இப்படியிருக்க பேஸ்புக்கில் தோழர் ஒருவர் காங்கிரஸ்சில் வாரிசு உருவாகுவதற்க்கு முன்பே திமுகவில் வாரிசை உருவாக்கியவர் கருணாநிதி என்றார். அரசியல் அறிந்த அவரே திமுக மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த பழியை போடுகிறார். மோதிலால் நேரு தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். அவரது மகன் காங்கிரஸ்சில் இணைந்து பதவிக்கு வந்தார். பிரதமராகவும் மாறினார். அவர் பிரதமராக இருக்கும் போதே இந்திராகாந்தியை அரசியல் வாரிசாக உருவாக்கினார். இந்திராகாந்தி சஞ்ஜய்காந்தியை உருவாக்கினார். சஞ்ஜய்காந்தியின் மரணம் ராஜிவ்காந்தியை அந்த இடத்துக்கு வரவைத்தது. அதன்பின் சோனியாகாந்தி, தற்போது ராகுல்காந்தியில் வந்து நிற்கிறது.

தமிழகத்தில் ஈ.வி.கே சம்பத், அவரது மகன் இளங்கோவன் என வாரிசு அரசியல் உள்ளது, அங்கு மட்டுமல்ல மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். பல அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளை களத்தில் இறக்கி வைத்துள்ளார்கள். இப்படி தேசிய – மாநில அரசியலில் பலரை சுட்டிக்காட்டலாம். இதைப்பற்றி பேச இங்கு யாரும்மேயில்லை. ஆனால், கலைஞர் மீது மட்டும் குற்றம் சாட்டுவது திராவிடத்தின் மீதும், கலைஞர் மீதும்முள்ள பகையே காரணம்.


மு.க.முத்துவை எம்.ஜீ.ஆர்க்கு எதிராக உருவாக்கினார் கருணாநிதி என குறிப்பிடுகின்றனர். எம்.ஜீ.ஆர் என்ற துரோகி திமுகவை உள்ளிருந்தே அழிக்க முற்பட்டவர். தன் கள்ள பணத்தை காப்பாற்றிக்கொள்ள தனிகட்சி ஆரம்பித்தவர். எம்.ஜீ.ஆர் எண்ணத்தை புரிந்துக்கொண்டே முத்துவை சினிமாவுக்கு கொண்டு வந்தார். சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் நடித்து, அரசியலிலும் நடித்து நாட்டை ஆண்டுவிட்டு போய்விட்டார் எம்.ஜீ.ஆர்.

வை.கோபால்சாமி, எனக்கு எதிராக தன் மகன் ஸ்டாலினை கலைஞர் வளர்க்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். வை.கோ கட்சியை, நிர்வாகத்தை நடத்தும் பக்குவம்மற்றவர் பொறுமைசாலியல்ல, என்பதை உணர்ந்தே வை.கோபால்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டார். வை.கோவை விட ஸ்டாலின் மேல் என புரிந்துக்கொண்டே கட்சியினர் பலர் அவர் பின்னால் திரண்டார்கள். அதை உணராமல் வை.கோ திமுகவை உடைத்துக்கொண்டு வெளியே பெரும் இளைஞர் பட்டாளத்துடன் வெளியே சென்றார். அவருடன் சென்றவர்கள் சென்ற வேகத்திலேயே திரும்பி திமுகவை நோக்கியே வந்தார்கள். அதற்கு காரணம் அவரிடம் பக்கவம்மில்லாததே. இன்றும் அதே நிலைதான்.


வை.கோ போனபின் திமுகவுக்கு இளைஞர் சக்தியை இழுத்தவர் ஸ்டாலின். இளவு காத்த கிளியாக தமிழக மக்களால் அடுத்த திமுகவின் தலைவர் என அறியப்பட்ட ஸ்டாலின் காத்திருக்க கலைஞரின் மற்றொரு மகன் மத்தியமைச்சர் அழகிரி தலைவர் பதவி போட்டியில் குதிப்பதால் தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். கட்சியில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவு உள்ளது. கழக தேர்தலில் தலைவர் பதவிக்கு நின்றால் ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆனால் கலைஞர் இருக்கும் போது அந்தயிடத்துக்கு அவர் வரவிரும்பவில்லை. ஆனால் தனக்காக ‘ரூட்டை’ கிளியர் செய்துக்கொள்ள விரும்புகிறார். அதனை தான் நீண்ட ‘போராட்டத்துக்கு’ பின் தனக்கு பின் ஸ்டாலின் என கலைஞர் அறிவித்துள்ளார்.

இப்படி அறிவித்தால் பிரச்சனை வரும் என எதிர்பார்த்தவர்கள் வேண்டுமானால் பிரச்சனை வரவில்லையே என எண்ணலாம். எதிர்பார்த்த ஒன்று தற்போது அறிவிப்பாக வந்துள்ளது. இதை விமர்சனம் செய்ய ஒன்றும்மேயில்லை. உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ண வேண்டும்.

6 கருத்துகள்:

  1. ஸ்டாலின் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சம்மந்தப்பட்டிருந்தார். அப்போ ஸ்டாலினை நடத்தை சரியில்லாதவர் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  2. அன்பு மணியின் ஒழுக்கத்தில் நீங்கள் ஒரு குறை கண்டுபிடிக்க முடியாது. ஸ்டாலின் அப்படியா? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்டாலின் சம்மந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பங்களுக்கு என்ன பதில்? வெறும் புரளி என்று மட்டும் சொல்லாதீர்கள். குற்றத்தை செய்பவனை விட அதனை நியாயப்படுத்துபவன் மோசமான அயோக்கியன் ஸ்டாலின் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சம்மந்தப்பட்டிருந்தார். அப்போ ஸ்டாலினை நடத்தை சரியில்லாதவர் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  3. ஸ்டாலின் தவிர வேறுயாரும் தலைவர்களே இல்லையா திமுகாவில்?. மட்டவர்களெல்லாம் இரண்டாம் அல்லது முன்றாம் கட்ட தலைவர்களாகத்தான் இருக்கமுடியுமா?

    பதிலளிநீக்கு
  4. கருணாநிதியின் திமுகவில் இசுடாலினைவிட மற்றவர்கள் திறமையற்றவர்கள்.

    ரொம்ப நன்றி!

    இதைவிட கேவலமான செய்தி ஒன்று இருக்காது.

    பதிலளிநீக்கு
  5. உண்மையிலேயே என் மனச்சாட்சி என்ன நினைத்ததோ அதையே நீங்களும் எழுதியுள்ளீர்கள். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு ஒரு சிறந்த தலைமை என்றால் அது திரு. ஸ்டாலின் அவர்கள்தான் என்பது தான் என் எண்ணம். பொருமைசாலி, அனுபவசாலி, திறமைசாலி என்றால் மிகையில்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாசனி, ஜூன் 28, 2014

    ஒன்றை நியாயப் படுத்த மற்றவை அனைத்தையும் தகுதியற்றதாக காட்டிக் கொள்வதிலிருந்தே ஒன்று உறுதியாகின்றது - தகுதியற்றவர்களுக்குத் தலைமையேற்க தகுதி ஒன்றும் அத்தியவசியமானதல்ல என்று. விசுவாசம் என்ற ஒற்றை இழையின் பிணைப்பில் ஊசலாடும் கட்சியே திமுக. இழையின் பிணைப்பு அறுபடும் பொழுது திமுக உடைபடும். திராவிட சக்திகள் தங்களை மறுபரிசீலித்துக் கொள்ள அக்கணம் ஒரு நல்வாய்ப்பாகலாம் அல்லது முற்றிலுமாக தங்களை அழித்துக் கொள்ளும் காலமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு