புதன், ஆகஸ்ட் 20, 2014

அரசியலாக்கப்படும் நீதி.




இந்திராகாந்தி ஆட்சி காலத்துக்கு பி்ன் நீதிக்கு இப்போது நெருக்கடியான காலக்கட்டம். தற்போதைய பிரதமர் மோடி நீதிதுறையில் கை வைத்துள்ளார். அதை முழுமையாக அரசியல் மையப்படுத்த நினைக்கிறார். தன் அரசு செய்யும் தவறுகளுக்கு நீதியை துணைக்கு வைத்துக்கொள்ள நினைக்கிறார். அப்போது தான் தான் நினைத்ததை செய்ய முடியும் என்பதால் அப்படி செய்கிறார். இதற்கான செயல் யார் தந்துயிருப்பார்கள் என்பது வெளிப்படை. 
உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கெலிஜீயம் உள்ளது. நீதிபதிகள் மட்டுமே உள்ள இந்த குழு தான் நீதிபதிகளை தேர்வுசெய்து பட்டியல் தரும். அந்த பட்டியலை மைய சட்டத்துறை குடியரசு தலைவருக்கு அனுப்பி பதவி தரவைக்கும் இந்த நடைமுறையை தான் மாற்றியுள்ளது பி.ஜே.பி அரசு. அதற்கான சட்ட மசோதாவை பாராளமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இனி கெலிஜியம் அமைப்பு கிடையாது. அதற்கு பதில் 6 பேர் கொண்ட கமிட்டி இருக்கும். அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள், சட்டதுறை அமைச்சர் மற்றும் சட்டம் பற்றி அறிந்த வெளிநபர்கள் இருவர் என 6 பேர் கொண்ட கமிட்டியது. இனி இந்த கமிட்டி தான் நீதிபதிகளை தேர்வு செய்யும். கமிட்டியில் இரண்டு பேர் நியமனத்தை எதிர்த்தால் அவர் நீதிபதியாக முடியாது என்கிறது புதிய மசோதா. இதனை எதிர்கட்சிகள் அவ்வளவும் “அமைதியாக“ ஏற்றுக்கொண்டன.
இங்கிருந்து தான் சதுரங்க ஆட்டம் நீதித்துறைக்கும் – அரசுக்கும் ஆரம்பமாகிறது. அரசு தரப்பில் உள்ளதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நீதித்துறை இருக்கும். தனக்கு வேண்டப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் படி மறைமுகமாக மிரட்டும் அரசாங்கம். தனக்கு வேண்டப்பட்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கும் போது, விரும்பியபடி தீர்ப்புகளை வாங்க முடியும்.

நீதிபதி பதவி பெற உள்ளுக்குள் அரசியல் செய்தவர்கள் இப்போது வெளிப்படையாக அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரசியல் செய்வார்கள். அரசாங்கம், எதிர்கட்சிகளை மீறி கொண்டு வரும் அபத்தமான சட்டங்கள் கூட நீதித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும்.

உச்சநீதிமன்றத்தில் நாட்டில் பாலும், தேனும் ஒடுகிறது என அரசாங்க வண்டு முருகன்கள் வாதம் வைத்தால் என்னது இப்படி சொல்றிங்க. நம்ம மக்கள் டாடா பிர்லாவா மாறிட்டதா கேள்விப்பட்டோம்மே என சொல்லும் நீதிபதிகள் தான் வேணும் என்பதற்காகவே சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளன அரசாங்கம்.

நீதித்துறை சிறப்பாக செயல்படவும், அதன்மீதும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பணியில் உள்ள பணியில் இருந்து ஓய்வு பெற்ற, கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீதான பிரச்சனைகளை தீர்க்க, அவர்கள் மீது சமீபமாக வரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்க, குற்றச்சாட்டுகள் எழா வண்ணம் அவர்கள் தங்களது பணியை செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் சட்டம் கொண்டு வர அரசுக்கு எண்ணம்மில்லை. 

அல்லது பழைய சட்டங்கள் மாற்றப்பட்டு நிகழ்காலத்துக்கு ஏற்றாற்போன்ற சட்டங்கள் புகுத்தப்பட்டால் பிரச்சனையில்லை. பழைய பஞ்சாங்கம் போல பல இஸ்லாமிய நாடுகளில் மக்கி மண்ணுக்கு போன சட்டங்களை தோண்டி எடுத்து பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, மத உரிமைககளில் வேட்டு வைத்தால் என்ன செய்வது மக்களுக்குள் பிளவுகளும், மோதலும் தான் வரும்.

இந்துத்துவா அமைப்புகள் நீதித்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் அதில் பிரச்சனையில்லாமல் இருந்தது. இப்போது அவர்களது மிருக பலம் நீதித்துறையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வர தடைகளை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீதித்துறை - அரசு - பாராளமன்றம் தனித்தனியாக இயங்க வேண்டும் என்கிறது சட்டம். அதற்கான தனித்தனி அதிகார எல்லைகள் உள்ளன. அதை சிதைக்க வேண்டாம் என மைய சட்ட அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என மைய சட்ட அமைச்சர் பதில் கூறினார்.

உண்மை தான் நீதித்துறை சுதந்திரத்தில் அரசு தலையிடவில்லை......... சுதந்திரத்தையே பறிக்க தொடங்கியுள்ளது............

வாழ்க மோடி சர்கார்...........

1 கருத்து: