ஞாயிறு, அக்டோபர் 23, 2011

திமுகவை சுவீகரிக்கும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள்.


திமுக என்ற ஆலமரத்தின் கீழ் வந்து என்னற்ற பறவைகள் சரணடையும். வுந்தவர்களை வராதே என திமுக என்றும் சொன்னது கிடையாது. போகிறவர்களை தடுத்ததும் கிடையாது. எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு பிரிந்து அதிமுகவை தொடங்கியபோது, தமிழக அரசியல் களம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்ல தொடங்கியது.

கொள்கையென்று எதுவும்மில்லாமல் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவுக்கு பலமே திமுக எதிர்ப்பு வாக்குகளும், எம்.ஜி.ஆர்ரின் சினிமா பிரபலமே. சினிமாவுக்காக எப்படி நடிப்பார்களோ அப்படியோ  எம்.ஜி.ஆர்ரும் நிஜ வாழ்வில் அரசியலில் நடிக்க தொடங்கினார். மக்களை ஏமாற்றி பிழைக்கும் கும்பலுக்கு தலைவரானார். அதாவது முதல்வரானார்.

கருணாநிதி தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பார்கள். தவறு ஊழலை ஊக்குவித்து அதை அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை பரப்பியது எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தின் சாதனை. இன்று கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்க வைத்து, சிறைக்கு அனுப்பிய லோக் ஆயுக்தா நீதிமன்ற அமைப்பை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டு வந்து சட்டம்மியற்றியவர் கருணாநிதி. அந்த சட்டத்தை முதல் முறையாக ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் ரத்து செய்தார். அவர் செய்த தவறு இன்று தமிழகம் ஊழலில் மலிந்து போய்விட்டது. கேட்பாரில்லாமல் ஊழல் நடக்கிறது.

14 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் அரசாண்டார். இறந்தபின் அதிமுக உடைந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2 ஆண்டில் அது கலைக்கப்பட்டது. இராஜிவ்காந்தி கொல்லப்படுகிறார். அந்த அனுதாபத்தில் 1991ல்p ஜெ தமிழக முதல்வராகிறார். 96 வரை கொடுங்கோல் ஆட்சி. ஜெவுக்கு எதிரானவர்கள் திமுக கூடாரத்திற்க்கு வந்து தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டனர். மீண்டும் 2001-2006வரை சர்வாதிகார ஆட்சி செய்தார் ஜெ. 2006க்கு பின் திமுக கூடாரத்திற்க்கு அதிமுகவினர் பலர் வந்துள்ளனர்.

இன்றைய தேதியில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், ரகுபதி, ஜெகத்ரட்சகன், வேலு, செல்வகணபதி, சேகர்பாபு போன்ற எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் என அழைக்கப்படும் ஸ்டாலினின் வீக்னஸ்களை தெரிந்துக்கொண்டு அவரை கவிழ்த்தார்கள். அதன்படி கட்சி பதவி, அமைச்சர் பதவியென கலக்குகிறார்கள்.


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திமுகவை காக்க அடிப்பட்டு, மிதிப்பட்டு, சிறைச்சென்று பதவியில்லாமல் இருந்தபோதும் கட்சிக்காக விசுவாசமாக இருந்தவர்கள் கழகத்தில் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், பணம் சம்பாதிக்க, கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக்கொள்ள திமுகவுக்குள் வந்த எம்.ஜி.ஆர் விசுவாசிகள் திமுகவை சுவீகரம் செய்துள்ளனர். அவர்கள் சொல்வது தான் ஸ்டாலினின் வார்த்தைகளாக உள்ளன.

இதனால் தான் பல ஆண்டுகளாக திமுகவின் நம்பகமானவர்களாக இருந்த சேலம் வீரபாண்டி ஆறுமுகம், கடலூர் பன்னீர்செல்வம், முரட்டு பக்தர் பெரியசாமி போன்ற பலர் கழகத்தில் கலவரம் செய்யவே காத்திருக்கும் அழகிரியை பவர்க்கு கொண்டு வர துடித்தனர். அவரும் அதை உணர்ந்து பதவிகளை மிரட்டி மிரட்டி வாங்கினார். தனக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டார். இதற்கெல்லாம் காரணம், ஸ்டாலின் கட்சியினரை கையாண்ட விதம். அரசியல் என்பது சாணக்கியத்தனத்தை பயன்படுத்தும்மிடம் என்பதை தெரிந்தே கோட்டைவிட்டார்.

இந்த விவகாரத்தில் ஜெ வை பர்த்து ஸ்டாலின் கற்றுக்கொள்ளவேண்டும், என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் அந்த கட்சிக்குள் போனால் விசுவாசமாக சில ஆண்டுகள் இருந்தால் மட்டும்மே பதவிகள் பெற முடியும். ஆனால் திமுகவில் மட்டும் தான் வந்த வேகத்தில் கட்சி பதவிகள், சீட்கள், அமைச்சர் பதவிகள் பெற முடிகின்றன. அதற்க்கு காரணம், ஸ்டாலினிடம் உள்ள வீக்னஸ். இது பாராம்பரிய திமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திமுகவை மறைமுகமாக எம்.ஜி.ஆர்ரின் விசுவாசிகள் சுவீகரிக்க தொடங்கியுள்ளனர். என்றாவது ஒருநாள் இவர்கள் ஒன்றிணைந்து திமுகவை பிளக்கும் வேலையில் ஈடுபடுவார்கள் அதற்க்கு முன் இவர்கள் விவகாரத்தில் திமுக தலைமை மட்டுமல்ல ஸ்டாலினும் கவனமாக இருப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக