செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

ஆர்.எஸ்.எஸ்சா ? மோடியா ? வெற்றி யாருக்கு ?




கடந்த ஜீலை மாதம் வரை மோடி மோடி என பெரும் கூப்பாடு போட்டது மீடியாக்கள். மீடியாக்களை அப்படி கூப்பாடு போட வைத்தது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்துத்துவா அமைப்புகள். மோடிக்காக பலரை பலிக்கொடுத்தது இந்த அமைப்புகள். தங்கள் பேச்சை மீறுவதால் இப்போது மோடியவே பலி கொடுக்க தயாராகிவிட்டது இந்துத்துவா சக்திகள். 

ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு மோடி. ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் அனைத்தும் அத்துப்படி. இந்துத்துவா வெறி தான் பிரதமர் பதவி வரை மோடியை கொண்டு வந்து நிறுத்தியது. அதனாலயே ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பில் பிரதமர் கனவில் இருந்த அத்வானியை பலி கொடுத்துவிட்டு மோடி புகழ் பாட தொடங்கியது இந்துத்துவா கும்பல்கள். 

மோடி நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், யூரின் போனால் கூட அது தலைப்பு செய்திகளாக்கினர். தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு பின்னர் மோடியின் போக்கு மாறியது. தாங்களே வெற்றியின் நாயகர்கள் என நம்பினார்கள் சிலர். அது பி.ஜே.பி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சில் உள்ளே விவகாரமாக வெடித்தது. தலைவர்கள் வருவார்கள், போவார்கள். கொள்கை மாறாதது. வெற்றிக்காக ஒருவரை பலி கொடுக்கலாம்........ வெற்றிக்காக கொள்கையை பலி கொடுக்க முடியாது என விவகாரம் போனது.

அமைச்சரவை அமைப்பு மற்றும் ஆட்சி நடத்துவதில் பிரச்சனை உருவானது. மோடி ஆட்சிக்கு வந்தபின், குஜராத் மாடலில் ( புரியாதவர்களுக்கு தமிழகத்துக்கு “அம்மா“ மாடலில் ) ஆட்சி நடத்த முயல்கிறார் மோடி. இது ஒத்துவராது. மாநில கொள்கை என்பது வேறு, மத்திய கொள்கை என்பது வேறு. மாநிலத்தில் ஆட்சி நடத்தும் போது என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்துவிடலாம். மத்தியில் ஆட்சி நடத்துவது சுலபமான விஷயமல்ல. அதேபோல் மத்தியில் எல்லா விவகாரத்தையும் எந்திரன் ரஜினி போல் தனி ஒருவரால் செய்து விட முடியாது. அதிகாரிகளை நம்பியும் எல்லா விவகாரத்தையும் செய்ய முடியாது. மத்திய ஆட்சிப்பணி என்பது பெரும் சவாலுக்குரியது. சக அமைச்சர்களை நம்பித்தான் ஆக வேண்டும். இதை செய்ய மோடி தயாராகயில்லை. இங்கு தான் அமைச்சர்களுக்கும் மோடிக்கும் உரசல் உருவாகிறது.

மோடி அமைச்சர்களை கண்காணிப்புக்கு உள்ளாக்குகிறார். அதிகாரிகள் சொல்வதை செய் என்கிறார். துறை அமைச்சர்களிடம் பேசாமல் நேரடியாக அதிகாரிகளிடம் பிரதமரே பேசுகிறார். அல்லது பிரதம அலுவலக உயர் அதிகாரிகள் பேசுகிறார்கள். இதுதான் அமைச்சர்களை அதிக எரிச்சலுக்குள்ளாக்கியது. தங்களை மோடி நம்ப மறுக்கிறார். துறை அதிகாரிகளிடம் பிரதமரே பேசுவதால் அவர்கள் எங்களை மதிப்பதில்லை என கொதித்துக்கொண்டு இருந்தார்கள். அதோடு, சீனியர் அமைச்சர்களை தீவிரமாக உளவு பார்க்க வைக்கிறார். தன்னை விட கட்சியில் சீனியராக, பிரதமர் பதவி போட்டியில் இருந்தவர்களையும் கண்காணிக்க சொல்கிறார். இது வழக்கமானது தான் ஆனால் அதில் தீவிரம் காட்டுவதை தான் அவர்கள் விரும்பவில்லை.

சீனியர் அமைச்சர்களான சுஷ்மா, அருண்ஜெட்லி, வெங்கய்யாநாயுடு போன்ற சிலர் தங்களது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சிடம், பள்ளிக்கூடத்து பிள்ளைகள் போல் சார் சார் அந்த பையன் கிள்றான் சார், மோடிஜீ நம்பமாட்டேன்கிறார்.... அதிகாரிகள் மதிக்கமாட்டேன்கிறாங்க ஜீ என புகார் சொல்கிறார்கள்.  

தலைமை பீடம், இதை மறைமுகமாக சுட்டிக்காட்டியும் மோடி தன் பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. மோடி மட்டுமல்ல அமைச்சரவையில் உள்ள 99 சதவிதம் பேர் ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்தது. தன் பேச்சை மோடி மதிக்கவில்லை என்றதும் தான் மோடிக்கு மகுடி ஊதும் வேலையை நிறுத்தபோவதாக பாவ்லா காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

மோடி அமைச்சர்களை நம்பவில்லை என்பது ஒருபுறம்மிருந்தாலும், தனக்காக பணம் செலவு செய்த பெரும் முதலாளிகளுக்காக வேலை பார்க்க நினைக்கிறார். நினைக்கிறார் என்பதை விட வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகளின் லீடராக வேலை பார்த்த அதானி குழுமம் கடந்த ஆண்டு நிறுவனத்தின் வருமானத்தை நட்ட கணக்கை காட்டியது. இந்த ஆண்டு பெரும் லாப கணக்கை காட்டுகிறது. இது அதன் அறிக்கை வாயிலாகவே அறியமுடிகிறது. இப்படி தனக்காக பல்லாயிரம் கோடிகளை செலவு செய்த நிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார். அதில் யாரும் குறிக்கிட கூடாது என நினைக்கிறார். அதோடு, தனக்கு கட்சியில், ஆட்சியில் எதிர்ப்பே இருக்ககூடாது என்ற முடிவோடு செயல்படுகிறார். 

இதனால் மோடி அன் கோவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் யார் பெரிய ஆள் என்ற போட்டி நடக்கிறது. இந்த விவகாரம் நடந்துக்கொண்டு இருக்கும் போதே கடந்த வாரத்தில் விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்த மாபெரும் வெற்றிக்கு கேப்டனாக இருந்தவர் ராஜ்நாத்சிங், ஆட்டநாயகராக இருந்தவர் அமித்ஷா என பெருமைப்படுத்தி பேசினார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத், இந்த வெற்றி யாருடைய தனிமனித வெற்றியல்ல. மக்கள் மாற்றம் வேண்டும் என எண்ணியிருந்தார்கள். அந்த மாற்றம் வெற்றி பெற்றுள்ளது இது மக்களுக்கான வெற்றி என பதில் தந்தார். மோடி மேஜிக் என புகழ்ந்த பஜகோவிந்தா வாய்கள் மாபெரும் வெற்றிக்கு பின் இது மக்களின் வெற்றி என்கிறது. அதை அதிகாரபூர்வமாக வெளிப்படையாக பேசுபவர் ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன்பகவத். 

இது மோடி அன் கோ வுக்கு பெரும் அதிர்ச்சி. உள்ளுக்குள் விவாதித்த விஷயத்தை வீதிக்கு கொண்டு வந்து மோடியெல்லாம் ஒன்றும்மில்லை என்கிறாறே மோடியை எதிர்ப்பவர்களுக்கு இது அவல் போல் ஆகாதா என விழி புதுங்கி நிற்கின்றனர். 

இந்த சூடு ஆறுவதற்க்குள் சுதந்திரதினத்தன்று, அத்வானி தன் வீட்டில் தேசியகொடியை ஏற்றியவர், இந்த வெற்றி நாங்கள் எதிர்பாராத வெற்றி. இந்த வெற்றிக்கு காரணம் தனி மனிதரல்ல......... காங்கிரஸ்சில் பத்து ஆண்டுகால ஆட்சியே இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக காங்கிரஸ்க்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என இந்த வெற்றி மோடியால் வந்ததல்ல என்றார். 

இதையேத்தான் இப்போது, இந்துத்துவா கும்பல் செய்ய தொடங்கியுள்ளன. காரணம், பிரதமர் மோடி இந்த வெற்றி தனக்கான வெற்றியாக இதை நினைக்கிறார். இது தொடரவும், தனக்கான சக்தி வலிமை பெறவும் கட்சியில் பலரின் மறைமுக எதிர்ப்பை மீறி அமித்ஷாவை தேசிய தலைவராக்க துடித்து வெற்றி கண்டுள்ளார். 

மோடி - அமித்ஷா - ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கட்சியில் பெரும் மாற்றத்தை செய்துள்ளாாகள். இது வெற்றிக்கானது என்கிறார்கள். இதில் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் முடிவு ஓரளவு தான் உள்ளது என்பது தெரிகிறது. 

ஆர்.எஸ்.எஸ் என்கிற அமைப்பை பகைத்துக்கொண்டால் எப்படிப்பட்ட கொம்பனையும் சாய்த்து செல்லாக்காசாக்கி விடும். வெற்றிக்காக, கொள்கைக்காக எவ்வளவு பெரிய தனி மனிதரையும் பலிக்கொடுக்க தயங்காத இயக்கம். அதன் பால பாடம்மே அதுதான். இதை நன்றாக அறிந்தவர் மோடி. என்ன செய்ய போகிறார் ? 

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி குத்துசண்டையில் வெற்றி பெறுவது போல ஒரு கிராபிக்ஸ் வீடியோ உருவாக்கி வெளியிடப்பட்டது. அதில் சூப்பர்மேன் மோடி வெற்றி பெறுவார். இப்போது நிஜ சண்டை தொடங்கியுள்ளது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்............

( குறிப்பு. ஆர்.எஸ்.எஸ் - மோடி அன் கோ தகராறு கொள்கை்கானதல்ல. அதில் இருவரும் உறுதியாக உள்ளார்கள். இந்துத்துவா வெறியோடு தான் நடப்பார்கள். அதில் ஒற்றுமையாக தான் உள்ளார்கள். இப்போது நடப்பது அதிகாரம், பணத்துக்கான போட்டி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் )

1 கருத்து:

  1. ஆர் எஸ் எஸ் சும் மோடியும் அடித்துக்கொண்டு சண்டை மண்டை உடையும். நாமெல்லாம் கை கொட்டிச் சிரிக்கலாம். பகல் கனவு காணத் தடையா?

    பதிலளிநீக்கு