செவ்வாய், ஜனவரி 04, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 4 - பதஞ்சலி சாஸ்திரியை அறிவோம்.


 ஜனவரி 4 - பதஞ்சலி சாஸ்திரியை அறிவோம்.

இந்தியாவின் இரண்டாவது உச்சநீதிமன்ற நீதிபதி யார் என்றால் பலருக்கு தெரியாது. அவர் பதஞ்சலி சாஸ்திரி. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முதன்முதலாக உச்சநீதிமன்ற நீதிபதியானவர் அவர் தான். அவரது பிறந்தநாள் இன்று. அந்நாளில் அவரைப்பற்றி அறிவோம்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அடுத்த மண்டைக்கொளத்தூர் கிராமத்தில் 1889 ஜனவரி 4ந்தேதி பிறந்தவர் பதஞ்சலி. காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதன்மை சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றிய கிருஷ்ணன் சாஸ்திரியின் மகன் தான் பதஞ்சலி.

சென்னை பல்கலைகழகத்தில் பி.ஏ படித்தவர் பின்னர் சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். வரி தொடர்பான சட்டத்தில் புலியாக இருந்தார். அந்த காலத்திலும் பெரும் பணக்காரர்களாக திகழும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வழக்குகளை இவர் தான் கவனித்துவந்தார்.

1922ல் வருமானவரித்துறை குழு ஒன்றின் சேர்மனாக நியமிக்கப்பட்டு அந்த பணியை செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக 1939 மார்ச் 15ந்தேதி பணியில் சேர்ந்தார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக 1947ல் பதவி உயர்வு பெற்று சென்று டெல்லியில் பணியாற்றினார்.

ஹரிலால் கண்ணையா என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி இறந்ததால் அப்போது சீனியர் நீதிபதியாக இருந்த பதஞ்சலி அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். 1951 நவம்பர் 7ந்தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1954 ஜனவரி 3ந்தேதி வரை பணியாற்றினார். 1953ல் டெல்லி பல்கலைகழகத்தின் இணைவேந்தராக நியமிக்கப்பட்டார் பதஞ்சலி. அதேபோல் பல பல்கலைகழகங்களின் ஆலோசகராக, விமான போக்குவரத்து துறையின் சட்டப்பிரிவிலும் பணியாற்றினார்.

இவரது மனைவி காமாட்சி. வேதகிரி, நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரேசன், சங்கரன், மகள்கள் ராஜம், ஜெயலட்சுமி, சரஸ்வதி என பிள்ளைகள் இருந்தனர். பதஞ்சலியின் குடும்பத்தார் பலர் நீதித்துறையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது தனது 74வது வயதில் 1963 மார்ச் 16ந்தேதி பதஞ்சலி மறைந்தார். அவரது உடல் சென்னையில் வைத்து எரியூட்டப்பட்டது.

1 கருத்து:

  1. மிக்க நன்றி சார்.
    தினமும் இப்படி ஒரு ஆளுமை குறித்து எங்களை அறியச் செய்யுங்கள்.
    பயனுள்ள பதிவுகள் இவை.
    தங்களின் நூலிலும் இது உள்ளது என னினைக்கிறேன்.
    கிண்டிலில் வாங்கி வைத்துள்ளேன்.
    வாசிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு