ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

சுகமான சுமைகள் …………. 25.




ஏய் நானும் ஆறு மாசமா கேட்டுக்கிட்டு இருக்கறன். கொஞ்சம் கூட கருணை காட்டமாட்டேன்கிறியே நியாயமா?. நான் என்ன ஊர் உலகத்தல நடக்காததயா கேட்டன். அங்கப்பாரு அவுங்க எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. அவளைப்பாரு அவனை ஏதோ கடிச்சி முழுங்கற மாதிரி பாக்கறா?. நீயும் இருக்கியே…. 

நீ உதை வாங்கப்போற. 

எதுக்கு.

எங்கக்கா நீ ரொம்ப நல்லவன்னு சொன்னதால தான் உன்னை லவ் பண்றன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ண கட் பண்ணிடுவன். 

ஓவ்வொருத்தனும் நாலஞ்சி கரெக்ட் பண்ணி வச்சிக்கிட்டு லவ்வுங்கற பேர்ல லூட்டி அடிக்கறான். நான் எவ்வளவு ஒழுக்கமா நீ கிழிக்கற கேட்ட தாண்டாம நல்ல பிள்ளையா இருக்கன். நாம காதலிக்க ஆரம்பிச்சி ஒரு வருஷமாகப்போகுது. என்னைக்காவுது உன்னை தப்பா பாத்துயிருக்கனா. 

பாத்தாக்கூட பரவாயில்ல. நீ கேட்கறயே.

என்னத்த பெருசா கேட்டுட்டாங்க. ஒரே ஒரு கிஸ் கேட்டன் அதுவும் கன்னத்தல. அவ அவ காதலன் கேட்கமாட்டாலான்னு ஏங்கறாளுங்க. நீ என்னடான்னா………

இங்கப்பாரு முடியாதுன்னா முடியாது தான். நான் உன்கூட வெளியில வந்ததே தப்பு. நீ அமிர்தி போகலாம்மான்னு கேட்கும் போதே யோசிச்சியிருக்கனும். இப்ப வந்து மாட்டிக்கிட்டன் என்றவள் அவள் தோள் மேல் சாய்ந்திருந்த என்னை பிடித்து தள்ளினால். 

அவள் அப்படி தள்ளியதும் கோபமாகி ஏய் இப்ப என்ன கேட்டுட்டன்னு தள்ளிவிடற. நான் கேட்டது தப்பு தான். உன்ன அழைச்சி வந்ததும் தப்பு தான் போதும்மா.

இப்ப எதுக்கு கோப்படற. 

நான் ஏன் உன் மேலப்போய் கோபப்பட போறன். 

எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னா விடேன். 

ஏய் என்ன இப்படி சொல்ற. கல்யாணத்துக்கு அப்பறம் கூட கிடையாதா?. 

நம்ம காதலை வீட்ல ஏத்துக்கிட்டு கல்யாண ஏற்பாடு பண்ணட்டும் அதுக்கப்பறம் நீ போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு நீ விரும்பறப்படி தர்றன். 

அதுக்கு எப்படியும் இன்னும் இரண்டு வருஷத்துக்கு மேலாகுமே. 

ஏன் ஏன் அவ்ளோ நாள் என படப்படத்தாள். 

லூசா நீ. நமக்கு இந்த வருஷம் தான் காலேஜ் முடியுது. அதுக்கப்பறம் வேலைக்கு போய் ஒரு வருஷமாவுது சம்பாதிக்கனும். அதோட முக்கியம் நமக்கு நடக்கறதுக்கு முன்னாடி ப்ரியாவுக்கு கல்யாணமாகனும். 

ஆமாம்யில்ல. 

அதுக்கு தான் சொல்றன். நீ கொஞ்சம் கருணை காட்டனா நல்லாயிருக்கும். 

கோபமாக முகத்தை திருப்பி திரும்ப அந்த நினைப்புக்கு போகாத. 

சரி சரி. அதப்பத்தி பேசல. 

சரி அக்காக்கிட்ட என்ன சொல்லிட்டு வந்த. 

நீ வேற இப்பவெல்லாம் ப்ரியாக்கிட்ட நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டன். 

ஏன்?. 

எல்லாம் காதலிக்க ஆரம்பிச்ச பிறகு தான். உன்ன சந்திக்க வர்றப்பயெல்லாம் ஏதாவது பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஜான்கிட்டயும் அடிக்கடி சமாளிக்கச்சொல்றன். அவன் நீயேப்போய் இப்பவே ப்ரியாக்கிட்ட சொல்லிடு. அதுக்கா தெரியவந்துச்சின்னா பிரச்சனையாகிடும்னு பயமுறுத்தறான். எனக்கும் அவளை ஏமாத்தறனேன்னு கஸ்டமாயிருக்கு. 

அதுக்கு.

அவ நல்ல மூடுல இருக்கறப்ப நம்ம லவ் மேட்டர சொல்லிடலாம்னு இருக்கன். 

எதுவும் சொல்லாதுயில்ல என கேட்டவள் நான் பதில் சொல்லதைப்பார்த்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். 

மாம்ஸ் என மெல்லிய குரலில் அழைத்தவளின் முகத்தை உற்று நோக்கியதும் ஒ.கோயாகிடும்முள்ள என கேட்கும்போதே அவளின் குரல் உடைந்து போனது. 

ச்சீ விடு. அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டா. அவளை நான் சம்மதிக்க வைக்கறன் என்றேன். அவளிடம் தான் அப்படி சொன்னேனே தவிர மனதோ குழப்பமாத்தான் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவியிடம் சகஜமாக பேசிக்கொண்டு மாலை அவளை வீட்டின் அருகே கொண்டும் போய்விட்டுவிட்டு வந்தேன். 

ஃபைக்கை தருவதற்காக ஜான் வீட்டுக்கு செல்லும் வழியில் எல்லாம் மனம் த்தளித்தது. லவ் மேட்டர ப்ரியாக்கிட்ட சொன்னா எப்படி எடுத்துக்குவா. நண்பனா பழகிட்டு இப்படி என் தங்கச்சியையே லவ் பண்றியே நியாயமான்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது. அது கேட்கலன்னாலும் அதோட அப்பவும், அம்மாவும் கேட்பாங்களே?. இதனால ப்ரியா பேசாமலே போய்ட்டா என நினைக்கும்போதே நெஞ்சி வெடித்துவிடும் போல் இருந்தது. ப்ரியா பிரச்சனையில்ல நான் தான் காதலிக்கறன்னு தெரிஞ்சா சந்தோஷத்தோடு ஏத்துக்கும் என சிறிது நேரத்தில் மனம் நம்பிக்கை தெரிவித்தது. 

ஜான் வீட்டில் இல்லை வண்டியை பார்க் செய்துவிட்டு சாவியை தந்துவிட்டு ரூம்க்கு வந்துவிட்டேன். 

மறுநாள் காலை எப்போதும் போல் கல்லூரிக்கு நானும் அகிலனும் போகும்போது, எப்போதும் நாங்கள் அமரும் புங்கமரத்தின் கீழ் ப்ரியா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள்.

தூரத்தில் இருந்து வரும்போதே தெரிந்தது. டைம் 9 தானே ஆகுது. அதுக்குள்ள ப்ரியா காலேஜ் வந்திருக்கா, ஏதாவது பிரச்சனையா என யோசித்தபடி நடக்க அகிலன் என்னடா சீக்கிரம் வந்துயிருக்கு என கேட்டபடியே வந்தான். வேகமாக ப்ரியாவிடம் சென்றதும் என்னை பார்த்ததும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. பொறுக்கி நாயே, உன்ன செருப்பால அடிக்கறன் என எழுந்து வந்து கன்னத்தில் பளார், பளார் என அறைய நிலை குலைந்து போனேன். அவள் அடிப்பது ஒன்னும் புதியதல்ல. அவள் பேசிய வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியைய் சொருகியது போல் இருந்தது. உன்னயெல்லாம் நம்பனன் பாரு. என்னையும் தான் அடிச்சிக்கனும் என அழுதுக்கொண்டே சூடாக பேசப்பேச கல்லூரிக்குள் வந்த சக மாணவ-மாணவிகள் நின்று இதனை வேடிக்கை பார்த்தனர். அருகில் இருந்த அகிலன் ப்ரியாவுக்கு பயந்து தூரவே நின்றான். 

என்னை ஏமாத்திட்ட நீ. உன்ன எவ்வளவு நம்பனன். என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சி, பொய் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கற என அழுதவள் இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காத என்றபடி அழுதுக்கொண்டே க்ளாஸ்க்கு போனால். அவள் பேசிய பேச்சின் அதிர்ச்சியில் இருந்து மீள 5 நிமிடமானது. 

மச்சான் என்னை மன்னிச்சிடுடா என்ற ஜானின் குரலை கேட்டதும் தான் சுய நினைவுக்கு வந்தேன். நேத்து மதியம் நானும் தேவியும் சினிமாவுக்கு போறதப்பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ப்ரியாவும் கூடயிருந்தது. ப்ரியா அடிக்கடி எங்களை கிண்டல் செஞ்சதா அந்த டென்ஷன்ல அதுங்கக்கிட்ட உன் லவ் மேட்டர சொல்ல வேண்டியதாகிடுச்சி என இழுத்தான். 

அது என்னை அடிச்சிட்டு திட்டும்போதே புரிஞ்சது. லேட்டா தெரிய வேண்டியது இப்ப தெரிஞ்சிடுச்சி. நானா சொல்லியிருந்தா பிரச்சனை சின்னதா இருந்திருக்கும். நீ சொன்னதால பெருசாகிடுச்சி. விடு இனிமே அடுத்து என்ன பண்றதுங்கறத்தான் யோசிக்கனும் என அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். நேத்து சொன்னன்ங்கற அப்ப கவிதாக்கிட்ட ஏதாவது கேட்டுயிருக்குமா?. 

டேய், அதுக்கூட பரவாயில்ல. அவுங்க அப்பா-அம்மாக்கிட்ட சொல்லயிருந்தா? 

அதெல்லாம் அது சொல்லாது என்றதும் அமைதியானான். 

வகுப்புக்கு போகவே பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்திருந்தேன். ஜானும் க்ளாஸ்க்கு போகவில்லை. அகிலனும் கூடவேயிருந்தான். மதியம் லஞ்ச் டைமில் எங்களை க்ராஸ் செய்துக்கொண்டு போன ப்ரியா நாங்கள் இருந்த அந்த சிமெண்ட் பெஞ்ச் பக்கம் திரும்பவேயில்லை. எனக்கும் சாப்பிட பிடிக்காவில்லை. அங்கு வந்த தயா, ரமேஷ் இருவரும் என்னடாச்சி என கேட்க ஜான் தான் சொன்னான். 

ஒழுங்கா உண்மைய சொல்லு. உன் லவ்வப்பத்தி ப்ரியா இவன்கிட்ட சொன்னதுக்கு பழிக்கு பழி வாங்க இவன் லவ்வப்பத்தி அதுங்கிட்ட போட்டு தந்துட்டியா என்றதும் சத்தியமா இல்லடா என்றான். மாலை எல்லோரும் காலேஜ் விட்டு போகும்போதும் அங்கேயே அமர்ந்திருந்தேன். அப்போதும் ப்ரியா என்னை உதாசீனப்படுத்தி விட்டுபோனால். அவள் என்னை உதாசீனப்படுத்தியது தான் என் நெஞ்சில் நெருப்பாய் சுட்டது. 

இரவு சாப்பிட பிடிக்கவில்லை இருந்தும் அகிலன் தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தான். அதற்கடுத்த மூன்று நாட்கள் ப்ரியாவை பார்க்கவே முடியவில்லை. மனம் வெறுத்துப்போய் சைக்கிள் ஸ்டான்டீல் அமர்ந்திருந்தபோது, ஜான் தேவியோடு அருகே வந்து எதிரே நின்றார்கள். ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக இருந்ததும் தேவியே, அன்னைக்கு தெரியாமத்தான் சொல்லிட்டான் என்றதும் அவனை முறைத்தப்படி இங்கப்பாரு தேவி யார் சொன்னாங்கங்கறது பிரச்சiயில்ல. சொல்லிட்டான். வேணும்னே சொன்னான்னு நான் சொல்லல. எனக்கு அந்த நினைப்பும் வரல. பசங்க அவனை கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான்ங்க. நான் அத பெருசா எடுத்துக்கல. சொல்றதாயிருந்தா அவன் எப்பவோ சொல்லியிருக்கலாம். அதவிட்டுட்டு இப்ப சொல்லியிருக்கான்னா ஏதோ டென்ஷன்ல சொல்லியிருப்பான். அதனால அது இப்ப பிரச்சனையில்ல. இத எப்படி சால்வ் பண்றதுங்கறது தான். 

அவக்கிட்ட பேசிப்பாத்தன். நீ அவளை ஏமாத்திட்டன்னே சொல்லிக்கிட்டு இருக்கறா. கவிதாக்கிட்டயும் பேசறதில்ல என்ற தேவியிடம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே கோயிலுக்கு ஒரு ஏழு மணிக்கா அழைச்சிக்கிட்டு வா நான் பேசிப்பாக்கறன். 

ம் என தலையாட்டிவிட்டு கிளம்பி சென்றது. 

6:30க்கே கோயில் உள் பிரகராத்தில் உள்ள விநாயகர் சந்நதியில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் தேவியும் ப்ரியாவும் வந்தனர். 

ப்ரியா என்னைப்பார்த்தும் கோபமாகி தேவியை முறைத்தாள். 

ஏதோ பேசனும்ன்னான் அதான் என இழுத்தவள் என்னன்னு தான் கேளேன் என்ற தேவி நான் ப்ரியாவின் அருகே போனதும் தேவி எங்களை தனியே விட்டுவிட்டு போனது. நான் அவள் முன் தலை குனிந்து நின்றபடி நான் பண்ணது தப்பு தான் ஸாரி என்றதும் கோயில் என பார்க்காமல் பளார் என அறைந்தாள். 

அவள் முகம் முழுக்கவே கோபமாகயிருந்தது. ஒரு நிமிடம் தயங்கி அவ உன் தங்கச்சின்னு தெரியாமத்தான் ஒயிட் கலர்ன்னு சொல்லுவேனே அது கவிதாத்தான். அன்னைக்கு நீ அறிமுகப்படுத்தனப்ப தான் அது உன் தங்கச்சின்னு தெரியும். இருந்தும் மனசு கேட்கல. அதான் லவ் பண்றன்னு சொன்னன். அவுங்களும் ஏத்துக்கிட்டாங்க. நான் உங்கிட்ட சொல்லிடலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள அவன் சொல்லிட்டான். 

ஒரு வருஷமா உங்களுக்கு தோணலையோ.

இல்ல……… அது வந்து என தடுமாறியதும் 

திரும்பவும் பொய் சொல்ல முயற்சி பண்ணாத என்றவளிடம். 

காலேஜ் வரலியா அதான் கோயிலுக்கு வந்தன். 

நான் காலேஜ் வந்தன். உன் மூஞ்சியிலயே முழிக்ககூடாதுன்னு தான் நீ இருக்கற பக்கமே வரல.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியாகி கண்ணீல் நீர் தளும்பியது. எங்கே மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் அருவியாய் கொட்டிவிடுமோ என பயந்து அiதியாக அழுகையை அடக்கிக்கொண்டு இருந்தேன். அமைதியை பயன்படுத்திக்கொண்டு ப்ரியா என்னை விட்டுவிட்டு நடந்து போய்க்கொண்டிருந்தாள். 

கோயிலின் உயரமான மதில் சுவர் மீது சாய்ந்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நின்றிருந்தேன் என நினைவில்லை. மழை தூரல் விழும்போது தான் நினைவுக்கு வந்து மழையிலேயே நனைந்தப்படி ரூம்மை நோக்கி நடந்தபோது, என் மூகத்தையே பாக்ககூடாதுங்கற அளவுக்கு என் மேல வெறுப்பா என கண்ணீர் மழை நீரில் கலந்து போனது. 

மறுநாள் கவிதா காலேஜ் போகும்முன் பேருந்து நிலையத்தில் அவளை பார்த்தபோது, உங்கக்குக்கு லவ் மேட்டர் தெரிஞ்சிடுச்சி என்றதும் அதிர்ச்சியாகி அதான் பேசறதில்ல போல என்றவள் வீட்ல யார்க்கிட்டயும் சொல்லல என்றாள். தனியா வந்து சந்திக்காத வெள்ளிக்கிழமை கோயில்ல சந்திப்போம், அவசரம்ன்னா தேவிக்கிட்ட சொல்லிவிடு இல்ல ரூம்க்கு வா எனச்சொல்லிவிட்டு வந்தேன். 

அடுத்தடுத்து வந்த நாட்களில் காலேஜ் வளாகத்தில் அவளை சந்திக்கும் நிமிடங்களில் என்னை தவிர்த்துவிட்டு போக தொடங்கினால். நித்தம் நித்தம் சந்தித்துக்கொண்ட எங்களது பொழுதுகள் இப்போது வீணாககிடந்தன. 

மச்சான். காலேஜ் முடிய இன்னும் 3 மாசம் தான் இருக்கு. எப்படியாவது இப்பவே சமாதானப்படுத்திடு. இல்லன்னா அப்பறம் கஸ்டமாயிடும் என்ற ஜான். கவி உன்ன பாக்கனும்மாம் ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணச்சொல்லுச்சாம். 

ம். எனச்சொல்லிவிட்டு அவனிடமே ஃபைக் வாங்கிக்கொண்டு ரூம்க்கு வந்துடு எனச்சொல்லிவிட்டு கிளம்பினேன். மனம் ப்ரியாவை எப்படி சமாதானம் செய்வது என்ற நினைப்பிலேயே போக ஃபைக் பொய்கையை தாண்டி போய்க்கொண்டுயிருந்தது. திடீரென விழிப்பு வர ஹய்யோ ரொம்ப தூரம் வந்துட்டமே என யூ டர்ன் அடிக்க திரும்பிய போது தான் அது நடந்தது. எதிரே வந்த ஒரு கார் அப்செட்டாகி மரத்தின் மீது மோதியது. டிரைவர்க்கு பலத்த காயமாக இருக்க காரில் இருந்த ஒருவர் தூக்கி வெளியே வீசப்பட்டார். 

இதனை பார்த்து வண்டியை நிறுத்தவிட்டு ஓடியபோது கல் தடுக்கி கீழே விழுந்து எழுந்து ஓடிப்போய் பார்த்தபோது அவரின் தலை, முகம்மெல்லாம் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டுயிருந்தார். அவரை தூக்கி சார் சார் என அழைத்தபோது உம் கொட்டினார். 

கூட்டம் கூட சிலர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தந்தனர். இவருக்கு பிளட் ரொம்ப லீக்காகுது. இவரை இப்படியே விட்ட ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள இறந்துடுவாரு. யாராவது ஹெல்ப் பண்ணா இவரை ஆஸ்பத்திரியில சேர்த்துடலாம் என்றபோது, இது போலிஸ் கேஸ் என பயந்து ஒதுங்கினர். யாராவது இவரை புடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரி வரை வந்தா போதும்ங்க என்றதும் ஒரு இளைஞர் மட்டும் முன் வந்து நான் வர்றன்ங்க என்றார். நான் டூவீலரை கொண்டு வந்து அவரை தூக்கி உட்கார வைத்துவிட்டு சி.எம்.சி போறன் போலிஸ்காவுது தகவல் சொல்லிடுங்க, ஆம்புலன்ஸ் வந்தா டிரைவரை அதல ஏத்தி அனுப்புங்க எனச்சொல்லிவிட்டு வேகவேகமாக வந்து சி.எம்.சியில் அவரை சேர்த்தேன். கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வர அதிலிருந்து அந்த டிரைவரை இறக்கி கொண்டும் போனார்கள். 

ஆஸ்பத்திரியில் பெயர் கேட்க எதுவும் தெரியாது சார் வர்ற பொய்கையாண்ட கார் ஆக்சிடன்ட்டாகி தூக்கி வெளிய வீசப்பட்டாரு. உயிருக்கு போராடனதால கொண்டு வந்தோம் என்றதும் அவர் சிகிச்சைக்கு தர தொடங்கினர். போலிஸ் வந்து கேட்டதும் பார்த்ததை சொன்னதும் ஆக்சிடன்ட் நடந்த இடத்தை குறித்துக்கொண்டு கிளம்பினார்கள். 

மறுநாள் விடியற்காலம் அவர் கண் விழித்ததும், உங்க டிரைவர் பரவாயில்ல சார் பக்கத்து வார்டுல தான் இருக்கார். அவர் உங்க வீட்டு தொலைபேசி எண் தந்தாரு. வாங்கி தகவல் சொல்லிட்டன். உடம்ப பாத்துக்குங்க நான் கிளம்பறன் என்றதும் கையை பிடித்து தேங்க்ஸ் என்றவர் நான் பெங்களுர், என் பேர் இராஜேஷ்கவுடா என பேச தொடங்க அவரை பேச விடாமல் தடுத்து சார் நீங்க தூங்குங்க. நான் முடிஞ்சா அப்பறம் வந்து உங்கள சந்திக்கறன் எனச்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். 

ரூம்க்கு போகும்போது கவிய சந்திச்சிடலாம் என பஸ் ஸ்டாப்பில் நின்றபோது சரியாக அதே நேரம் அவளும் வர நேத்து வரச்சொன்னதுக்கு இப்ப வர்ற. பாக்கத்தான் வந்தன். வண்டி ரிப்பேர் அதவிடு. என்ன விஷயம். 

அக்காவுக்கு மாப்பிளை பாக்கறாங்க. 

மாப்பிளையா அதுக்குள்ள என்ன அவசரம். தேரியல. சோந்தக்காரங்க மூலமா வந்தது நல்லயிடம்ன்னு சொன்னதால ஜாதகம் பாக்க ஆரம்பிச்சியிருக்காங்க அதச்சொல்லத்தான் வரச்சொன்னன். 

நல்ல விஷயம் தான். இப்ப என்ன உங்கிட்ட பேசுதா. 

ம். எப்பவாவுது பேசது எனும்போதே பஸ் வந்துவிட்டது. 

நானும் ரூம்க்கு போய் குளித்துவிட்டு காலேஜ் போனதும் எங்கடா போன, நைட்டெல்லாம் உன்ன தேடிக்கிட்டுயிருந்தோம் தெரியுமா. 

ஒன்னும்மில்லடா எ னநடந்தை சுருக்கமாக சொன்னதும் பொதுசேவை உனக்கு எதுக்குடா என ஜான் முறைத்தான். 

அத விடு ப்ரியாவுக்கு மாப்பிளை பாக்கறாங்களாம். 

அதுக்குள்ளவா யார் சொன்னது. 

கவிதா தான். 

சரி விடு. உனக்கு ரூட் கிளியர் ஆனா சரிதான் என்றான். 

நாட்கள் போனதே தெரியவில்லை. ப்ரியா சிலமுறை நான் இருக்கும் பக்கம் வருவாளே தவிர பார்க்கவே, பேச முயற்சிப்பதில்லை. நான் முயன்றும் தோல்வியிலேயே இருந்தது. 

தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் ப்ரியாவிடம் கேட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்க கோபம். மன்னிப்பு கேட்டா அடிக்கற. தப்பு பண்ணிட்டன்னு நான் தான் ஒத்துக்கறன்யில்ல அப்பறம்மென்ன என்றதும் சைலண்டாக இருந்தவளிடம், வாழ்த்துக்கள் என்றதும் தலையை நிமிர்ந்து பார்த்தாள். 

தொடரும்………………




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக