செவ்வாய், ஏப்ரல் 17, 2012

அடுத்த ரப்பர் ஸ்டாம்ப் (ஜனாதிபதி) யார் ?.



இந்திய ஒன்றியத்தின் முதல் பெண் ஜனாதிபதியும், 12வது ஜனாதிபதியுமான பிரதீபாபட்டேலின் பதவிகாலம் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதி யார்?. அரசியல் வட்டாரத்திலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி. இந்த தேர்தல் ஜனாதிபதியை மட்டும் தேர்வு செய்யப்போவதில்லை. 2014ல் நடக்கும் பாராளமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம். இந்த தேர்தலில் ஏற்படும் கூட்டணி பாராமன்ற தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமைய வாய்ப்புண்டு. அதனால் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

ஜனாதிபதியை தனித்து தேர்ந்தெடுக்கும் பலம் இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் கிடையாது. அதேநேரத்தில் முக்கிய எதிர்கட்சியான பி.ஜே.பிக்கும் கிடையாது அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடையாது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒருவேளை ஜனாதிபதியை தேர்வு செய்யலாம். அதற்கும் வாய்ப்பு கிடையாது. காரணம் பி.ஜே.பி முன்னிறுத்தும் வேட்பாளரை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மாநிலத்தை ஆளும் கட்சிகளிடம் தான் உள்ளது ஜனாதிபதி யார் என்ற முடிவு. அதிலும் காங்கிரஸ், பிஜே.பி என்ற இரண்டு மத்திய கட்சியுடனுடன் கூட்டணியில் இல்லாத உத்தரபிரதேசம், தமிழகம் தான் ஜனாதிபதி தேர்வில் முக்கிய பங்காற்றும். அதற்கடுத்து மேற்குவங்க முதல்வராக உள்ள மம்தா எடுக்கும் முடிவும் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும். இவர்கள் மூவரும் ஆளுக்கொரு திசை நோக்கி வருகின்றனர். இவர்களை ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தும் கட்சி வேட்பாளருக்கு வெற்றி நிச்சயம். ஆனால் அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளரை இவர்கள் விரும்ப வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு.

காரணம், ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தாலும் தேர்தல் காலங்களில், தேர்தல் முடிவுக்கு பின் தொங்கு பாராளமன்றம் போன்றவை ஏற்பட்டால் ஜனாதிபதி விரும்பும் கட்சி ஆட்சியமைக்க அழைக்கலாம் இப்படி அவரை கொண்டு பலவற்றை சாதிக்கலாம் என்பதால் அப்பதியை அரசியல் கட்சிகள் விரும்பும். அதனாலயே அரசியல்வாதிகளையே அப்பதவிக்கு முன்னிறுத்தும். இதுவரை பதவியில் அமர்ந்துள்ள டாக்டர் இராஜேந்திரபிரசாத் முதல் தற்போதைய பிரதீபாபட்டேல் வரையிலான 12 ஜனாதிபதிகளில் ஜாகீர்உசேன், முகமது இதயதுல்லா, டாக்டர் அப்துல்கலாம் தவிர்த்து மற்ற அனைவரும் அரசியல்வாதிகளே.

ஜனாதிபதி பதவிக்கு இவர் போட்டியிடுகிறார், அவர் போட்டியிட போகிறார் என பட்டியல் வாசிக்கப்படுகிறது. ஆதில் தற்;போதைய துணை குடியரசு தலைவர் அமீத்ஹன்சாரி, இந்திய ஒன்றியத்தின் பிரதமர் டாக்டர்மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி, முன்னால் நாடாளமன்றவாதி நஜ்மா, பிரதமருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிராண்டோ, நாடாளமன்ற சபாநாயகர் மீராகுமார், காந்தியின் பேரன் கிருஷ்ணகுமார் என பட்டியல் நீள்கிறது. இதில் பி.ஜே.பியில் யார் என்பதும், கம்யூனிஸ்ட்டுகள் யார் நிறுத்தப்போகிறார்கள் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளராகட்டும், பி.ஜே.பி வேட்பாளராகட்டும், இடதுசாரிகள் அல்லது மாநில கட்சிகள் இணைந்து நிறுத்தும் வேட்பாளராகட்டும் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் அதற்கு பிறரின் வாக்குயிருந்தால் மட்டுமே தங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியும் என்றநிலை. ஒருவேளை மும்முனை போட்டி நிகழ்ந்தால் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். இருமுனை போட்டியென்றால் இரண்டு கூட்டணியிலும் இல்லாத மாநில கட்சிகள் கைகளில் தான் உள்ளது அடுத்த குடியரசு தலைவர் யார் என்கிற லகான்.

குடியரசுத்தலைவர் தேர்வு நடைபெறும் போது ஒரு புதிய கூட்டணி உருவாகியிருக்கும். இந்த கூட்டணி தான் அடுத்து வரப்போகும் பாராளமன்ற தேர்தலிலும் தொடரும். ஆக இந்த குடியரசுத்தலைவர் தேர்தல் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க காத்திருக்கிறது. இந்த தேர்தல் மூலம், காங்கிரஸ் தனது இரண்டாவது பங்காளியான திமுகவை கழட்டி விடுமா என்பதே தமிழக களத்தில் பலரின் எதிர்பார்ப்பு. காரணம், காங்கிரஸ்சின் பார்வை ஆளும்கட்சியான அதிமுக பக்கம் அதிகமாகவே வீசுகிறது.

என்ன யோசித்தாலும் விடை தெரியல. அதாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலின் போது அம்மா வாக்களிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பாரா ? எதிர்த்து வாக்களிப்பாரா?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக