செவ்வாய், ஏப்ரல் 10, 2012

நடிக்க தெரிந்தால் காதலிக்கலாம்.




நண்பர் ஒருவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். அந்த பெண் எப்போ வேண்டுமானாலும் கல்யாணம் என்றது. திடீரென நண்பரின் நண்பரை திருமணம் செய்துக்கொண்டு கழுத்தில் தாலியோடு வந்து நிற்க அதிர்ந்து போய்விட்டார். 3 வருஷமா அவரை காதலிக்கிறேன் என்றுள்ளார். அவர்கள் இருவரை பிரிக்க பஞ்சாயத்து நடந்தபோது, அந்தபெண் இன்னோருவனுக்கு அவன் செல்போனிலிருந்தே கால் செய்து நடந்ததை கூறி நான் வந்துடறன் ஏத்துக்கறியா என கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போய் நண்பர் புலம்ப இதை கேட்ட மற்றொரு நண்பர், பொண்ணுங்க, பசங்கயெல்லாம் இப்ப இப்படித்தான். ஒருத்தரை காதலிக்கும்போதே இன்னோருத்தரை ஸ்டெப்னி மாதிரி வச்சிக்கறாங்க. காதலனோ காதலியோ சரியில்லன்னா உடனே மாத்திக்கறாங்க. 10 வருஷத்துக்கு முன்ன நான் காதலிக்கும் போது இப்படியில்ல என்றவர் தன் காதல் வாழ்க்கை பகிர்ந்து கொள்ள தொடங்கினார்.

 நான் அப்ப ஊரை சுத்திக்கிட்டு இருந்தன். எங்க தெருவுல இருந்த அந்த பொண்ண புடிச்சிடுச்சிப்போச்சி. அவுங்க வசதிக்கும் என் வசதிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. இருந்தும் மனசு கேட்கல. அதுங்கிட்ட நாசுக்கா என் காதலை சொன்னன். அது ஏத்துக்கவேயில்ல. 1 வருஷம் அலைஞ்சி திரிஞ்சியும் சின்னதா ஒரு புன்னகை கூட அதுங்கிட்டயில்ல. 

அதோட பிறந்தநாள்க்கு முன்னால நாம தான் முதல்ல வாழ்த்து சொல்லனம்னு நைட் 12 மணிக்கு அவுங்க வீட்டு மாடிக்கு மரத்து வழியா ஏறிபோனன். என்னைப்பாத்து பயந்துட்டாங்க. கைல இருந்த ரோஜாப்பூவ தந்தப்ப மிரண்டுட்டாங்க. அந்த நேரம் பாத்து சத்தம் கேட்டு அவுங்க வீட்ல எழுந்து மாடிக்கு வரத்தொடங்கனாங்க. எங்க இரண்டு பேரையும் ஒன்னா பாத்தா அவுங்களுக்கு அசிங்கமாயிடுமேன்னு பயந்து போயிட்டன். தப்பு பண்ணது நான் ஆனா அசிங்கப்படறது அவுங்களா இருப்பாங்களேன்னு யோசிச்சி ரூம்ம விட்டு வெளிய ஓடிவந்து அவுங்க வீட்டு மாடியிலயிருந்து கீழ குதிச்சிட்டன். 

அந்த வீட்டுக்கு கீழ முழுக்க முள் செடிங்க. முள் செடிங்க மேலயே விழுந்து எழுந்து ஓடனன். கை, கால் எல்லாம் முள்ளு கிழிச்சியிருந்தது. கை உடைச்சிடுஞ்சி. அது சரியாக ஆறுமாசமாச்சி. அவுங்க என்ன நினைச்சாங்கன்னு தெரியல. புத்து நாள் பொருத்து வந்து காதலுக்கு ஓ.கேன்னு சொன்னாங்க. அவுங்க சொன்னப்ப சந்தோஷம் ஒருபக்கம், பயம் ஒருபக்கம். அவுங்க படிச்சவங்க, நானோ அவ்வளவா படிக்காத தற்குறி. எப்படி வாழ்க்கை ஓட்டப்போறன்னு நினைச்சன். ஆட்டோ ஓட்ட தொடங்கனன். வேற வேற வேலைப்பாத்தன். பொண்ணு தரல என்னையும், என் அன்பையும் புரிஞ்சிக்கிட்டு வந்தாங்க. இன்னைக்கு இரண்டு பசங்க அமைதியா சந்தோஷமா வாழ்க்கை போய்க்கிட்டுயிருக்கு என்றவர். அப்போ இருந்த மாதிரி இன்னைக்கு காதலிக்கறவங்கக்கிட்ட உண்மையான காதலும் கிடையாது, அன்பும் கிடையாது என்றார். 

அவர் சொல்வது ஒரு விதத்தில் உண்மை தான். காதல் என்றாள் என்னவென்றே தெரியாத வயதில் காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் இன்றைய பிள்ளைகள். இன்றைய விஞ்ஞான யுகத்தில் எல்லாவற்றையும் வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். முன்பு போல் காதலனோ அ காதலியோ விலகினால் கவலைப்படாமல் அடுத்து இன்னோன்றை பார்க்க துவங்கிவிடுகிறார்கள். இப்போது ‘தேவதாஸ்களை’ 90 சதவிதம் காண முடிவதில்லை. 

அதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் காதல் நாடகம் இல்லை என நினைத்துவிடாதிர்கள். நான் பத்திரிக்கை துறைக்கு வருவதற்கு முன் ஒரு நண்பரின் கணிப்பொறி நிலையத்தில் வகுப்பு எடுத்து வந்தேன். அந்த பில்டிங்கின் ஓனர் பெண் என்னிடம் கணிப்பொறி வகுப்புக்கு வந்து படித்தது. என்னுடன் நட்பு பாராட்ட தொடங்கியது. அந்த பெண் நான் ஒருத்தரை காதலிக்கறன் என்றார். அஞ்சல் வழியில் டிகிரி சேர்ந்த அந்த பெண், 100 கி.மீ தூரத்தில் உள்ள தன் காதலனை வரவைத்து அவரோடு வலம் வரும். ஒருநாள் என்னிடம் உங்கக்கிட்ட முதல்ல பழகியிருந்தா நான் உன்னை காதலிச்சியிருப்பன் என்றவர். உங்கள காதலிக்கட்டுமா என கேட்டார். ஆஹா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்படுதே இந்த பெண் என நினைத்தேன். 

இப்படி இரண்டு குதிரையில் சவாரி செய்ய விரும்பும் பெண்கள் அப்போதும் இருந்தார்கள். அவர்களுக்கு காதல் ஒரு பொழுது போக்கு. காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள். இன்றைய காலக்கட்டத்தில் உண்மை காதல் என்பது அத்திபூத்தார் போல் உள்ளது. பாதிக்கு மேற்பட்ட காதல்கள் டைம்பாஸ்க்கும், உடல் கவர்ச்சிக்குமே உள்ளது. இளைஞர்கள், இளைஞிகள் இரண்டு தரப்புமே காதல் என்ற வார்த்தையை கெட்ட வார்த்தையாக மாற்றி வருகிறார்கள். சுருக்கமாக நடிக்க தெரிந்தவர்கள் மட்டுமே இப்போது காதலிக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக